Saturday, June 5, 2010

அன்பளிப்பு!

இந்த க்ராஃப்ட் நான் ஒருவருக்கு அன்பளிப்பாக கொடுப்பதற்கு செய்தேன். யாருக்கு என்றெல்லாம் கேட்க கூடாது.





வானதி

Thursday, June 3, 2010

ரம்யாவின் 10 கட்டளைகள்

ரம்யா, இன்று உன்னை பெண் பார்க்க வருகிறார்கள். 4 மணிக்கு வந்திடு சரியா? - இது ரம்யாவின் அம்மா பார்வதி.

அம்மா, அதெல்லாம் இருக்கட்டும். நான் சொன்ன லிஸ்ட் ஞாபகம் இருக்கில்லை. என்றாள் ரம்யா.

" என்ன லிஸ்ட் ? "

" சரி திரும்ப சொல்றேன். எனக்கு பார்க்கும் மாப்பிள்ளை எப்படி இருக்க வேண்டும் என்று நான் சொன்ன 10 கண்டிஷன்ஸ்", என்றாள் ரம்யா.

ரம்யா ஒரே பெண். மிகவும் செல்லமாக வளர்ந்தவள். நிறையப் படித்து, பெயருக்குப் பின்னால் அனுமார் வால் போல டிகிரிகள். தனக்கு கணவனாக வரப்போறவன் தன்னைப் போலவே அறப் படித்தவனாக இருக்க வேண்டும் என்று விரும்பினாள். அவளுக்கு 28 வயதாகிறது. அவளின் லிஸ்டைப் பார்ப்போமா.

மாப்பிள்ளை
1. நிறமாக இருக்க வேண்டும்
2. நிறைய படித்திருக்க வேண்டும்
3. மதுவை கையால்/ மனதால் கூட தொடக்கூடாது
4. வீட்டிற்கு ஒரே பிள்ளையாக இருக்க வேண்டும்
5. புகைப்பிடிக்க கூடாது
6. சொந்தமாக கார் வைத்திருக்க வேண்டும்
7. உயரமாக இருக்கணும்
8. தாடி, மீசை கூடவே கூடாது
9. சமைக்கத் தெரியணும்
10. அவர் பரம்பரையில் யாருக்குமே வழுக்கைத் தலை இருக்க கூடாது.

இது தான் ரம்யாவின் 10 கட்டளைகள்.

" ரம்யா, மற்றதெல்லாம் அட்ஜட்ஸ் பண்ணிக்கலாம். ஆனால், இந்த தலை வழுக்கை தான் கஷ்டம். மாப்பிள்ளையின் பரம்பரையை நான் எங்கே போய் தேடுவேன். உன் அப்பாவுக்கே தலை வழுக்கை தான். அதற்காக அவர் அழகில்லையா?" என்றார் பார்வதி.

" அதனால் தான் சொல்றேன் மொட்டைப் பரம்பரை மாப்பிள்ளை வேண்டாம்." என்றாள் ரம்யா.

முதன் முதலில் மாப்பிள்ளை பார்க்க வந்தவரின் ஒன்று விட்ட சித்தப்பாவுக்கு லேசாக வழுக்கை இருந்தபடியால் ரம்யா அந்த மாப்பிள்ளை வேண்டாம் என்றாள்.
இரண்டாவது கொஞ்சம் நிறம் கம்மி, மூன்றாவது கொஞ்சம் குள்ளம், நான்காவது வீட்டில் கடைக்குட்டி.

அப்பாவின் வேண்டுகோளுக்கிணங்க அந்த லிஸ்டில் 2 கண்டிஷன்களை நீக்க முடிவு செய்தாள் ரம்யா.

8 மற்றும் 9 வது கண்டிஷன்களை நீக்கினாள். இதன் பிறகும் 5 வரன்களை ஏதேதோ காரணம் சொல்லி தட்டிக் கழித்தாள்.

இவளின் பிடிவாத குணத்தால் பல நல்ல வரன்களும் தட்டிப் போயின.
ரம்யாவை விட வயது குறைந்த பக்கத்து வீட்டு ராஜிக்கு திருமணமாகி 2 குழந்தைகள். ரம்யாவின் தாயார் அடிக்கடி ஏக்க பெருமூச்சு விட்டுக் கொள்வார்.

ஆரம்பத்தில் லிஸ்டோடு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்த ரம்யாவின் அப்பா வாழ்க்கையே வெறுத்துப் போய் இருந்தார். ரம்யாக்கு மாப்பிள்ளை பார்ப்பதை தரகரின் கையில் ஒப்படைத்து விட்டு, சிவனே என்று இருந்து விட்டார். தரகர் கொண்டு வந்த சில வரன்களையும் இவரே பார்த்து வேறு பெண்களை பரிந்துரைத்தார். அவருக்கு தெரியும் ரம்யா அந்த வரன்களை கட்டாயம் தட்டிக் கழித்து விடுவாள் என்பது.

ரம்யாவிற்கு 32 வயதானதும் அவள் லிஸ்ட் 8 லிருந்து ஆறாகியது. 34 வயதில் 4 ஆக சுருங்கியது. 36 வயதில் 2 ஆக குறைந்தது. நாற்பது வயதில் அப்படி ஒரு லிஸ்ட் இருந்ததே ரம்யாவிற்கு மறந்து போய் விட்டது.


ரம்யாவின் அம்மாவும் ராஜியின் குழந்தைகளை தூக்கி கொஞ்சி தன் ஏக்கத்தை போக்கி கொண்டார். அப்பாவும் ரம்யாவிற்கு மாப்பிள்ளை பார்ப்பதை அறவே நிப்பாட்டி விட்டார். இனிமேல் என்னை யார் திருமணம் செய்யப் போகிறார்கள் என்று ரம்யாவும் தன்னுடைய ஏக்கம், கனவு எல்லாவற்றையும் அடக்கி வாழப்பழகிவிட்டாள்.

ரம்யாவின் அம்மா முன்பு அடிக்கடி சொல்வார், " என் பொண்ணு கிளி மாதிரி எவ்வளவு அழகு. யாராவது வந்து கொத்திண்டு போயிடுவாங்கள் " . கிளி இன்னும் காத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் கொத்திக் கொண்டு போகத் தான் யாரும் வரவில்லை.

Wednesday, June 2, 2010

இணைய நட்பு

எனக்கு இணைய தளம் மூலம் ஒரு நட்பு கிடைத்தது. அந்த நட்பு ஆணா, பெண்ணா என்ற விபரங்கள் வேண்டாம். அவரின் பெயர் மேகம் என்று வைத்துக்கொள்வோம். இந்த பெயர் உங்களுக்குப் பிடிக்காவிட்டால் நீங்களே வேறு பெயர் சூட்டிக் கொள்ளுங்கள். என் பெயர் தான் உங்களுக்கு தெரியுமே. என் புராண காலப் பெயரைப் பார்த்ததும் மேகம் எனக்கு மெயில் அனுப்பினார். அதில் என் பெயரை புகழ்ந்து எழுதி இருந்தார். அதுவரை என் பெயரைக் கேட்டாலே வெறுப்பின் உச்சிக்குப் போன நான் மிகவும் மகிழ்ந்து போனேன். என் அப்பாவை மனதார பாராட்டினேன்.

மேகம் எனக்கு அனுப்பும் மின்னஞ்சல்கள் பெரும் பாலும் உலகப் பிரச்சினை பற்றியதாகவே இருக்கும். நானும் எனக்குத் தெரிந்த அல்லாவிட்டால் எங்காவது தகவல்கள் பொறுக்கி எடுத்து பதில் அனுப்புவேன். அவர் திருமணமானவரா என்று எனக்குத் தெரிந்து கொள்வதில் ஆர்வம் இருந்ததில்லை. அவரும் என்னைக் கேட்டதில்லை. எங்கள் நட்பு தொடங்கிய ஒரு வருடத்தின் பின்னர் தான் என் மண்டையில் சில கேள்விகள் தோன்றியது. அவரின் குடும்பம் பற்றிக் கேட்டேன். இரண்டு வளர்ந்த மகன்கள் இருப்பதாக எழுதினார். அவரின் வேலை பற்றி எப்போதும் ரகசியம் காத்தார். சில நேரங்களில் மறைமுகமாக சில விடயங்கள் எழுதுவார்.

இப்படியே நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாக இருந்த எங்கள் நட்பில் கமலால் விரிசல் வந்தது. அட! நம்ம நடிகர் கலம்ஹாசனே தான்.

மேகம் எப்போதும் ஏதாவது படங்கள் பார்த்தால் அது பற்றி எழுதுவார். அவர் படங்கள் பார்ப்பது குறைவு என்றாலும் நல்ல படங்கள் எனில் விரும்பி பார்ப்பாராம். நான் இருக்கும் இந்த நடுக்காட்டில் தமிழ் படங்கள் தியேட்டரில் போடுவது குறைவு. அப்படியே போட்டாலும் என் பிள்ளைகளோடு படம் பார்க்க போக எனக்கு விருப்பம் இல்லை. அவர்களை விட்டுட்டு போகவும் எண்ணுவதில்லை.

கமலின் தசாவதாரம் படம் பற்றி விமர்சனம் எழுதி, என்னையும் பார்க்கும் படி எழுதினார். படம் பார்த்த பின்னர் என் கருத்துக்களை எதிர்பார்ப்பதாக எழுதினார். திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடி முடிந்து யுடியூப்பில் வந்த பின் பார்க்கும் என்னை புதிதாக வந்த படத்தை பார்க்கச் சொன்னால் நான் என்ன செய்வேன்.

நான் அவருக்கு பின்வருமாறு மெயில் அனுப்பினேன். என் விமர்சனம் படிக்க வேண்டும் எனில் நீங்கள் என்னிடமிருந்து 1 அல்லது 2 வருடங்களின் பின்னரே மின்னஞ்சல் பெறுவீர்கள். அட இது மட்டும் தான் எழுதினேன். நலம் விசாரித்தும் எழுதினேன். மேகத்திற்கு கோபம் வந்து விட்டது. அவரின் அடுத்த மின்னஞ்சலில் கோபத்தை வெளிப்படையாக கொட்டி ஒரு பெரிய மடல் அனுப்பியிருந்தார். அவரிம் மெயில் முழுவதையும் ஒரு வரியில் சொல்லப் போனால், " ஏன் 1 அல்லது 2 வருடங்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும். இப்பவே இந்த நிமிடமே உன் நட்பை தலை முழுகியாச்சு."
மனசு வலித்தது. முகம் தெரியாத நட்பு எனினும் நட்பு நட்பு தானே.

அவருக்கு ஏன் கோபம் வந்தது என்பது இன்று வரை எனக்கு புரியாத புதிர். நான் அவரின் கடிதத்தை படித்து முடித்ததும் குப்பைத் தொட்டியில் எறிந்து விட்டேன்.

எங்கள் நட்பு முறிந்து போய் பல வருடங்கள் ஆகி விட்டது. ஆனால் மேகம் இன்னும் எனக்கு வேறு பெயரில் பொங்கல், தீபாவளி, புது வருடத்திற்கு மின் வாழ்த்து அட்டைகள் அனுப்புவார். எப்படி தெரியும் என்கிறீர்களா? அவரின் மின்னஞ்சல் முகவரி. அவரின் வேலை பற்றி அவர் மறைமுகமாக சொன்ன போது நிறைய தகவல்கள் அவர் அறிந்தோ/அறியாமலோ சொல்லியிருந்தார். அந்த வேலை தான் எனக்கு அவரை அடையாளம் காட்டியது.
நான் பதிலுக்கு எதுவுமே அனுப்புவதில்லை. கோபமா, வறட்டுப் பிடிவாதமா, சோம்பல் தனமா என்று தெரியவில்லை.

Monday, May 31, 2010

அதே மணம்!

மீண்டும் அதே மணம் எங்கிருந்தோ வந்து நாசியைத் தாக்கியது. ரதி வெறுப்புடன் அனைத்து அறைகளையும் திறந்து பார்த்தாள். " பெரியம்மா, அதே மணம். எனக்கு தலை வலிக்குது." , என்றாள் கலவரமான முகத்துடன். பெரியம்மா ஆதரவுடன் தலையை தடவிக் கொடுத்தார்.

" ரதி, எங்கையாவது பக்கத்து வீட்டிலிருந்து வந்திருக்கும். நான் வீட்டில் ஊதுபத்தி, சாம்பிராணி புகை போட்டே வருடக்கணக்காகின்றது. நான் என்னம்மா செய்ய? வா காலாற எங்காவது நடந்து விட்டு வரலாம்.", என்றார்.

சிறிது சிறிதாக தொடங்கிய தலைவலி அதிகமாகியது. ரதிக்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது. தெருவில் இறங்கி விறு விறுவென நடக்க ஆரம்பித்தாள். நுரையீரல் முழுவதும் சுத்தமான காற்றை இழுத்து நிரப்பிக் கொண்டாள். இப்போது அந்த மணம் காற்றில் கரைந்து, காணமல் போய் இருந்தது. ரதி நிம்மதிப் பெருமூச்சு விட்டாள்.

ரதி அவள் முன்பு குடியிருந்த வீட்டைக் கடந்து போனாள். வெளியில் நின்று வீட்டை நோட்டமிட்டாள். பாழடைந்து போய் இருந்தது. செடிகளும், புதர்களும் மண்டிப் போய் காடு போன்று காட்சி தந்தது.

2 1/2 வருடங்களுக்கு முன்பு எவ்வளவு கலகலப்பாக இருந்த வீடு. அப்பா, அம்மா, தங்கை என்று சிறிய அழகிய குடும்பம். 1985 ஜூலை அதிகாலை நடந்த சம்பவங்களால் ரதியின் வாழ்வே அடியோடு மாறிவிட்டது.

அதிகாலையில் வந்த குண்டு வீச்சு விமானங்களும், ஹெலிகாப்டர்களும் வானில் சுற்றி குண்டுகளை பொழிந்த வண்ணம் இருந்தன. இது அடிக்கடி நடக்கும் நிகழ்ச்சிதான். எல்லோரும் பதுங்கு குழியினுள் இருந்து விட்டு, விமானங்கள் போனதும் வெளியே வருவார்கள். ஆனால், இந்த முறை நாட்கணக்காக தாக்குதல் தொடர்ந்தது. வெளியே போகவே முடியாதபடி குண்டுகள் வந்து விழுந்த வண்ணம் இருந்தன.

ரதியின் குடும்பம் பதுங்கு குழியில் நாட்கணக்கில் இருந்தது. அப்பாவும், அம்மாவும் கிடைத்த இடைவெளியில் வீட்டினுள் போய் கையில் அகப்பட்டதை எடுத்துக் கொண்டு வந்தார்கள்.

மூன்றாம் நாள் மதியம் பதுங்கு குழி வாசலில் பூட்ஸ் சத்தங்கள் கேட்டன.

யாரும் சுதாகரிப்பதற்குள் இராணுவத்தின் இயந்திர துப்பாக்கிகள் அதிர்ந்து ஓய்ந்தன.

ரதி எவ்வளவு நாட்கள் சுயநினைவில்லாமல் கிடந்தாளோ அவளுக்கே தெரியாது. அவள் பெரியம்மா குடும்பம் வந்து பதுங்குகுழியில் இருந்த அவள் குடும்பத்தினரை கண்டு பிடித்தார்கள். ரதிக்கு கனவா நனவா என்று தெளிவில்லாமல் இருந்தது. அவள் அப்பா, அம்மா, தங்கை மூவரையும் மூட்டை போல குவியலாக அள்ளி குப்பை கொண்டு செல்லும் வண்டியில் கட்டிப் போட்டிருந்தார்கள். எழுந்த துர்நாற்றத்தை போக்க ஊதுபத்தி எரிந்து கொண்டிருந்தது. துர்நாற்றம், ஊதுபத்தியின் மணமும் சேர்ந்து ஒரு கலவையான வெறுக்கத் தக்க மணம் எங்கும் வீசியது. அழக் கூட முடியாமல் சூனியத்தை வெறித்தபடி இருந்தாள். அந்த மணம் மட்டுமே மனதில் தங்கி விட்டது.

பல நாட்கள் பித்து பிடித்தவள் போல இருந்தாள். பெரியம்மா குடும்பம் அன்புடன் பார்த்துக் கொண்டது. ஊதுபத்தி மணம் அவளின் பழைய நினைவுகளை கிளறிவிடும்.
முன்பு குடியிருந்த வீட்டின் வாசலில் நின்று பார்த்து விட்டு வருவாள். உள்ளே போக ஒரு வித தயக்கம், பயம். பதுங்குகுழியை எப்போதோ மூடிவிட்டார்கள். வீட்டினை விற்கவும் மனமில்லாமல் இருந்தது. அந்த வீட்டில் அந்த மணம் அப்படியே நிரந்தரமாக தங்கி விட்டதாக ரதி எண்ணினாள்.


பெரியம்மா கண்டிப்பாக சொல்லி விட்டார் ரதியின் வீட்டை விற்பனை செய்ய வேண்டும் என்று. அவரே ஆட்களை வைத்து வளர்ந்திருந்த செடி, கொடிகளை வெட்டி சுத்தம் செய்யச் சொன்னார். ரதிக்கு உள்ளூர விருப்பம் இல்லாவிட்டாலும் வெளியே சொல்ல ஒரு வித தயக்கம். பெரியம்மாவுக்கும் ரதியை அங்கே அனுப்ப விருப்பம் இல்லை. ஆனால் உள்ளூரில் அந்த வீட்டினை வாங்க யாரும் முன்வரவில்லை. அவர்களுக்கும் ஒரு வித தயக்கம்.

ரதி எவ்வளவோ மறுத்தும் பெரியம்மா மாப்பிள்ளை பார்த்து, நிச்சயம் செய்து விட்டார்.

கல்யாண நாளும் வந்தது. மிகவும் எளிமையாகவே திருமணம் நடந்தது. கல்யாணம் ஆகி ஒரு வருடத்திலே ரதிக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. தன் தங்கையின் சாயலில் இருந்த குழந்தையை பார்க்க ரதிக்கு பழைய நினைவுகள் மீண்டும் வந்து போனது. கண்களில் இருந்து கண்ணீர் ஆறாக ஓடியது. ஒரு முடிவுடன் எழுந்தாள். குழந்தையை தூக்கிக் கொண்டு தெருவில் ஓடினாள். ரதியின் கணவர் ஒரு நிமிடம் ஸ்தம்பித்து நின்று, பிறகு பின் தொடர்ந்தார்.

ரதி நான்கு வருடங்களின் பின்னர் பூட்டியிருந்த வீட்டினை திறந்து உள்ளே ஓடினாள். எங்கும் தூசி மண்டிக் கிடந்தது. ரதி எதையும் பொருட்படுத்தாமல் தன் பெற்றோரின் படங்களின் முன்னால் குழந்தையை படுக்க வைத்தாள். பின்னாடியே வந்த கணவன் அறையில் ஜன்னல்களை திறந்து விட சூரிய ஒளி எங்கும் பரவியது. ரதியின் மனதில் ஏதோ ஒரு வித தெளிவு. வீட்டினை சுத்தம் செய்ய ஆரம்பித்த கணவனின் கைகளை வாஞ்சையுடன் பற்றிக் கொண்டாள். இது வரை அழுது கொண்டிருந்த குழந்தை அழுகையை நிறுத்தி விட்டிருந்தது. இனிமேல் இது தான் எங்கள் வீடு என்று சொன்ன அம்மாவை புரியாமல் பார்த்தது குழந்தை.

விருது!

விருது!

எனக்கு மேலும் ஒரு விருது. மனோ அக்கா குடுத்த வருது. என் சிறுகதைகளைப் பாராட்டி கொடுத்த விருது,
மனோ அக்கா, மிக்க நன்றி.

மேலும் ஒரு விருது. நம்ம ஜலீலா அக்கா கொடுத்தார்கள். மிக்க நன்றி அக்கா.