நாங்கள் தற்போது இருக்கிற வீட்டிற்கு குடிவந்தபோது தோட்டத்தினை அழகா மாற்றி, சில பூச்செடிகள் வைத்து சீராக்கினார் ஒரு தோட்டக்காரன். பழைய மண்ணை தோண்டி எடுத்து, கற்களை நீக்கி, ஒரு லேயராக மக்கும் தன்மையுடைய ஒரு ஷீட் விரித்து, மேலே மண் பரவி, பார்க்க அழகாக இருந்தது. பழைய செடிகளைப் பிடுங்கி எறியும் போது ஒரு மின்ட் செடியும் இருப்பதைக் காட்டினார் தோட்ட வேலைகள் செய்தவர். எனக்கு தலைகால் புரியாத மகிழ்ச்சி. அதை அப்படியே விட்டுவிடுங்கள் என்று என் ஆ.காரரும் சொன்னார். தோட்டவேலைகள் செய்தவரும் அப்படியே அந்த மின்ட் செடியை விட்டு விட்டார். நான் தினமுன் போய் பார்ப்பேன். ஆனால், பெரிதாக வளர்ச்சி இல்லாமல் ஏனோ வாடிப்போய் காட்சி தந்தது.
வின்டர் காலம் வந்தது. நானும் இனிமேல் மின்ட் செடி வராது என்று நினைத்துக் கொண்டேன். வின்டர் முடிந்து, வசந்தகாலம் வர, மின்ட் செடியும் துளிர் விட்டு, அழகா குட்டிச் செடியாக வெளிவந்தது.
ஒரு இடத்தில் இருந்த செடி பரபரவென எல்லா இடமும் பரவ ஆரம்பித்தது. என் கணவருக்கு ஏனோ தெரியவில்லை இந்த மின்ட் செடிகள் பரவியதும் பிடிக்கவில்லை. பொழுது போகாத நேரம் தோட்டத்திற்குப் போய் ஒரு செடியை விட்டு, மீதி எல்லாவற்றையும் பிடுங்கி எறிந்து விடுவார். பிடுங்கிய செடிகளை அக்கம் பக்கம் இருப்பவர்கள் தொடக்கத்தில் எடுத்துச் சென்றார்கள். ஒவ்வொரு வருடமும் அதற்கு முந்திய வருடத்தை விட புதினா எங்கும் வேரோடி நிறையச் செடிகள் புதிது புதிதாக வளர ஆரம்பித்தன. மற்றச் செடிகளை வளர விடாமல் எங்கும் ஒரே புதினா மயம். என் கணவர் எரிச்சலுடன் எல்லாச் செடிகளையும் வேரோடு பிடுங்கி எறிந்து விட்டாதாக வெற்றிச் சிரிப்பு சிரித்தார். ஆனால், மீண்டும் எங்கும் புதினா மயம்.
என் ஆ.காரர் எவ்வளவு முயற்சி செய்தும் இந்த புதினா செடிகளை அழிக்க முடியாமல் திண்டாடிப் போனார். ஏஸியன் சூப்பர் மார்கெட்டில் சும்மா 5 இணுக்குகள் வைச்சு, 2 டாலர்களுக்கு விற்பார்கள். இப்படி கொள்ளை அடிக்கிறார்களே என்று நினைப்பேன்.
ஒரு முறை பிரியாணி செய்யும் போது புதினாவை நிறையச் சேர்த்து விட்டேன். என் கணவருக்கு இந்த புதினா டேஸ்ட் பிடிப்பதில்லை. எரிச்சல் ஒரு பக்கம் வந்தாலும், பிரியாணியை விட மனமில்லாம ல் சாப்பிட்டு முடித்தார். மீண்டும் புதினா செடிகளுக்கு கஷ்டகாலம் தொடங்கியது.
நான் ஒரு சூப்பர் ஐடியா சொன்னேன் என் ஆ.காரரிடம். அதாவது, இந்த புதினா இலைகளை மார்க்கெட்டில் கொண்டு போய் விற்பனை செய்தால் .... நான் முடிக்கும் முன்பே என் கணவர் சொன்னார்.
கொண்டு போய் விற்று, வரும் லாபத்தை நீங்கள் மூவரும்( என்னையும் என் பிள்ளைகளையும் ) பங்கு போட்டுக் கொள்ளுங்கள். எனக்கு ஒரு சதம் கூட வேணாம் என்று சொல்லி விட்டு, புதினா செடிகளைப் பிடுங்க சென்று விட்டார்.
புதினாக்கு கஸ்டமர் பிடிக்க கடை கடையா ஏறி இறங்கணும், சுத்தமா கழுவணும், அதற்குரிய தட்டுகளில் வைத்து, பாலித்தீன் கடதாசி சுற்றி, விலை நிர்ணயம் செய்து... இதெல்லாம் தேவையா என்று உள்மனம் சொன்னது.
கணவர் பிடுங்கி எறிந்த புதினா செடிகளை பக்கத்து வீட்டுக்காரருக்கு குடுக்கலாம் என்று போனேன். அவர் கதவினை திறந்து கூட பார்க்காமல் எனக்கு வேண்டவே வேண்டாம் என்று சவுன்ட் விட்டார். என் கணவர் ஆவேசமாக புதினா செடிகளை பிடுங்கி எறிந்ததை கவனித்து இருக்க வேண்டும் இந்த ஆசாமி. அல்லாத்தையும் நீயே வைச்சுக்க என்று பக்கத்து வீட்டு வாண்டு சொன்னது. ஓசியில் ஒரு பொருளைக் குடுத்தால் அதன் மதிப்பே தெரியாது அல்லவா!
என் பிஸினஸை இங்கு ப்ளாக்கில் இருந்தே ஆரம்பிக்கலாம் என்று ஒரு யோசனை தோன்றியது. புதினா வேண்டும் என்பவர்கள் கையை தூக்குங்க. அப்படியே செக் புத்தகத்தை எடுத்து, ஒரு 20 டாலர்களுக்கு ஒரு செக் எழுதி, என் அட்ரஸுக்கு அனுப்பி வைங்க. பாம்பு, கத்தரிக்காயெல்லாம் அனுப்ப வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.