Friday, September 17, 2010

எங்கெங்கு காணிணும்...




நாங்கள் தற்போது இருக்கிற வீட்டிற்கு குடிவந்தபோது தோட்டத்தினை அழகா மாற்றி, சில பூச்செடிகள் வைத்து சீராக்கினார் ஒரு தோட்டக்காரன். பழைய மண்ணை தோண்டி எடுத்து, கற்களை நீக்கி, ஒரு லேயராக மக்கும் தன்மையுடைய ஒரு ஷீட் விரித்து, மேலே மண் பரவி, பார்க்க அழகாக இருந்தது. பழைய செடிகளைப் பிடுங்கி எறியும் போது ஒரு மின்ட் செடியும் இருப்பதைக் காட்டினார் தோட்ட வேலைகள் செய்தவர். எனக்கு தலைகால் புரியாத மகிழ்ச்சி. அதை அப்படியே விட்டுவிடுங்கள் என்று என் ஆ.காரரும் சொன்னார். தோட்டவேலைகள் செய்தவரும் அப்படியே அந்த மின்ட் செடியை விட்டு விட்டார். நான் தினமுன் போய் பார்ப்பேன். ஆனால், பெரிதாக வளர்ச்சி இல்லாமல் ஏனோ வாடிப்போய் காட்சி தந்தது.
வின்டர் காலம் வந்தது. நானும் இனிமேல் மின்ட் செடி வராது என்று நினைத்துக் கொண்டேன். வின்டர் முடிந்து, வசந்தகாலம் வர, மின்ட் செடியும் துளிர் விட்டு, அழகா குட்டிச் செடியாக வெளிவந்தது.

ஒரு இடத்தில் இருந்த செடி பரபரவென எல்லா இடமும் பரவ ஆரம்பித்தது. என் கணவருக்கு ஏனோ தெரியவில்லை இந்த மின்ட் செடிகள் பரவியதும் பிடிக்கவில்லை. பொழுது போகாத நேரம் தோட்டத்திற்குப் போய் ஒரு செடியை விட்டு, மீதி எல்லாவற்றையும் பிடுங்கி எறிந்து விடுவார். பிடுங்கிய செடிகளை அக்கம் பக்கம் இருப்பவர்கள் தொடக்கத்தில் எடுத்துச் சென்றார்கள். ஒவ்வொரு வருடமும் அதற்கு முந்திய வருடத்தை விட புதினா எங்கும் வேரோடி நிறையச் செடிகள் புதிது புதிதாக வளர ஆரம்பித்தன. மற்றச் செடிகளை வளர விடாமல் எங்கும் ஒரே புதினா மயம். என் கணவர் எரிச்சலுடன் எல்லாச் செடிகளையும் வேரோடு பிடுங்கி எறிந்து விட்டாதாக வெற்றிச் சிரிப்பு சிரித்தார். ஆனால், மீண்டும் எங்கும் புதினா மயம்.

என் ஆ.காரர் எவ்வளவு முயற்சி செய்தும் இந்த புதினா செடிகளை அழிக்க முடியாமல் திண்டாடிப் போனார். ஏஸியன் சூப்பர் மார்கெட்டில் சும்மா 5 இணுக்குகள் வைச்சு, 2 டாலர்களுக்கு விற்பார்கள். இப்படி கொள்ளை அடிக்கிறார்களே என்று நினைப்பேன்.
ஒரு முறை பிரியாணி செய்யும் போது புதினாவை நிறையச் சேர்த்து விட்டேன். என் கணவருக்கு இந்த புதினா டேஸ்ட் பிடிப்பதில்லை. எரிச்சல் ஒரு பக்கம் வந்தாலும், பிரியாணியை விட மனமில்லாம ல் சாப்பிட்டு முடித்தார். மீண்டும் புதினா செடிகளுக்கு கஷ்டகாலம் தொடங்கியது.

நான் ஒரு சூப்பர் ஐடியா சொன்னேன் என் ஆ.காரரிடம். அதாவது, இந்த புதினா இலைகளை மார்க்கெட்டில் கொண்டு போய் விற்பனை செய்தால் .... நான் முடிக்கும் முன்பே என் கணவர் சொன்னார்.

கொண்டு போய் விற்று, வரும் லாபத்தை நீங்கள் மூவரும்( என்னையும் என் பிள்ளைகளையும் ) பங்கு போட்டுக் கொள்ளுங்கள். எனக்கு ஒரு சதம் கூட வேணாம் என்று சொல்லி விட்டு, புதினா செடிகளைப் பிடுங்க சென்று விட்டார்.
புதினாக்கு கஸ்டமர் பிடிக்க கடை கடையா ஏறி இறங்கணும், சுத்தமா கழுவணும், அதற்குரிய தட்டுகளில் வைத்து, பாலித்தீன் கடதாசி சுற்றி, விலை நிர்ணயம் செய்து... இதெல்லாம் தேவையா என்று உள்மனம் சொன்னது.
கணவர் பிடுங்கி எறிந்த புதினா செடிகளை பக்கத்து வீட்டுக்காரருக்கு குடுக்கலாம் என்று போனேன். அவர் கதவினை திறந்து கூட பார்க்காமல் எனக்கு வேண்டவே வேண்டாம் என்று சவுன்ட் விட்டார். என் கணவர் ஆவேசமாக புதினா செடிகளை பிடுங்கி எறிந்ததை கவனித்து இருக்க வேண்டும் இந்த ஆசாமி. அல்லாத்தையும் நீயே வைச்சுக்க என்று பக்கத்து வீட்டு வாண்டு சொன்னது. ஓசியில் ஒரு பொருளைக் குடுத்தால் அதன் மதிப்பே தெரியாது அல்லவா!

என் பிஸினஸை இங்கு ப்ளாக்கில் இருந்தே ஆரம்பிக்கலாம் என்று ஒரு யோசனை தோன்றியது. புதினா வேண்டும் என்பவர்கள் கையை தூக்குங்க. அப்படியே செக் புத்தகத்தை எடுத்து, ஒரு 20 டாலர்களுக்கு ஒரு செக் எழுதி, என் அட்ரஸுக்கு அனுப்பி வைங்க. பாம்பு, கத்தரிக்காயெல்லாம் அனுப்ப வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

Sunday, September 12, 2010

பாம்பென்றால்...

பாம்பென்றால் படையும் நடுங்கும் என்பார்களே அது என்னைப் பொறுத்தவரை மிகவும் சரியானதே. எனக்கு உடம்பே நடு நடுங்கும்.
இப்ப கூட பாருங்க ஒரு பாம்பு படம் கூகிளாண்டவரிடம் கேட்டு, இங்கு போட பயம். அவ்வளவு ஏன் பாம்பு பற்றிய பதிவுகள், படங்கள் எதையுமே பார்க்கவே மாட்டேன்.
சமீபத்தில் ஒரு நண்பரின் வலைப்பூவில் பாம்பு படம் பார்த்தேன். படித்தது முழுக்க மறந்து விட்டேன். வேறு ஒருவரின் ப்ஃரொபைல் படம் இந்த ஊர்வன படம் தான். அதுவும் படமெடுத்து, ஆவேசமாக வரும் பாம்பு. நான் அவரிடம் கேட்டுக் கொண்டதற்கிணங்க படத்தை மாற்றி விட்டார். என் கஸின் ஒருவருக்கு பாம்பென்றால் பயமே இல்லை. ஏய்! இந்தா சூ சூ..போய்த் தொலை என்பார். பாம்பு ஓடிவிடும்.

ஏன் அவ்வாறு நடக்குது என்பது விளங்கவேயில்லை! சின்ன வயசில் ஊரில் வாய்க்காலில் படுத்துக் கிடந்த பாம்பு, வீட்டு ஹாலில் வழி மாறி ஓடி வந்த பாம்பு என்று பல சம்பவங்கள் கூட இருக்கலாம். கடற்கரை போன போது மீனவர்கள் பிடித்து கரையில் போட்ட தண்ணீர் பாம்பு. அது விரட்டியதால் நான் ஓடினேனா? அல்லது நான் ஓடியதால் அது விரட்டியதா என்பது இன்னும் விடை தெரியாத கேள்வி.

திருச்சியில் இருந்த போது அழகான வீடு, பக்கத்தில் வயல், காவிரி ஆற்றுத் தண்ணீர் பாய்ந்து வரும் கால்வாய்கள் என்று மிகவும் அழகான இடத்தில் குடியிருந்தோம். எல்லாமே அழகாக தெரிந்தது அதாவது நான் நாகபாம்பினைக் காணும் வரை. வயலில் திரியும் எலிகளைப் பிடிக்க வரும் பாம்புகள் எங்கள் வீட்டிற்கும் வரும்.
படமெடுத்து ஆடிய பாம்பினைக் கண்ட பிறகு எனக்கு காய்ச்சல் வந்து விடும். என் அப்பா, பக்கத்து வீட்டினர், போவோர், வருவோர் எல்லாமே சேர்ந்து பாம்புகளை விரட்டுவார்கள்.
ஒரு முறை எங்கள் வீட்டு நாய் ஒரு பாம்பினை வாயில் பிடித்து, அடித்துக் கொன்றது. அதன் பிறகு நான் என் நாய் இல்லாமல் எங்கேயும் போவதில்லை. என் ஹீரோ என் நாய் டெனி தான்.

மக்களுக்கு இப்படியான பயங்களை போபியா(Phobia ) என்று சொல்வார்கள். இது கிரீக் ( Greek ) வார்த்தை.

பல வருடங்களுக்கு முன்னர் தொலைக்காட்சியில் இப்படி போபியா இருப்பவர்களைக் காட்டினார்கள். கோமாளிகள் (க்ளௌன் ), லிப்ட், உயரமான மாடிகள்/இடங்கள், பூனைகள், பலூன்கள், பாம்பு, பொய் மூக்கு/மீசை/கண்ணாடிகள், இப்படி இந்த லிஸ்டில் இருப்பவர்கள் சிலரைப்பற்றிய நிகழ்ச்சி அது. ஒரு மனோதத்துவ நிபுணர் இதற்கான காரணங்களை விளக்கமாக சொன்னார்.


இந்த மக்களின் பயங்களை நீக்கி விட்டுத் தான் மறுவேலை பார்ப்பேன் என்று அடம் பிடித்தார் நிகழ்ச்சி நடத்தியவர். இதில் ஹைலைட்டான விடயம், பாம்பு போபியா வந்தவரின் பயத்தை எப்படி நீக்கி, அவரை ஒரு சாதாரணமான குடிமகன்(ள்) ஆக்கினார்கள் என்பதே.

ஒருவர் மஞ்சள் கலரில் இருந்த பாம்பினைக் மேடைக்கு கொண்டு வர, இந்தப் பெண்மணி எடுத்தார் ஓட்டம். அரங்கத்தினை விட்டு, வீதிக்கு ஓடியவரை விடாமல் விரட்டிச் சென்று கூட்டி வந்தார்கள். அழுது கொண்டே வந்தவரை சமாதானம் செய்தார்கள்.

ஓடிய பெண்மணியிடம் பாம்பினைக் குடுத்தார்கள். முதலில் தெருவுக்கு ஓடியவர், பிறகு கொஞ்சம் பயம் தெளிந்து அரங்கத்தினுள் சுற்றி ஓடினார். பின்னர் மேடையில் மட்டும் அங்கும் இங்கும் ஓடினார். இதெல்லாம் எடிட் பண்ணி 1 மணி நேரத்தில் காட்டினாலும், இவரின் பயத்தினைப் போக்க குறைந்தது 1 வாரம் ஆவது ஆகியிருக்கலாம்.
இறுதியில் என்ன ஆச்சரியம்! பாம்பினைக் கண்டு பயந்த பெண், பிரிட்னி ஸ்பியர்ஸ் போல கழுத்தில் பாம்பினை மாலையாக போட்டுக் கொண்டு அழகாக நடந்து வந்தார். பாம்பினை தடவிக் கொடுத்தார்.
இந்த நிகழ்ச்சிக்கு போபியா பிரச்சினையுடன் வந்த எல்லோரும் பயம் தெளிந்து, வீர நடை போட்டார்கள்.

இப்படி ஏதாவது நிகழ்ச்சிகளுக்குப் போனாலாவது என் பயம் தீருமா என்று தீவிரமா யோசித்தும் இருக்கிறேன். இன்னும் செயல் வடிவம் குடுக்கவில்லை.