இந்த வருடம் நான் ஸ்கூல் போகப்போகிறேன். ஒரே சந்தோஷமாக இருக்கு. அம்மா எனக்கு A, B, C மற்றும் 1,2, 3 என்று நிறைய சொல்லிக் கொடுத்தார்கள். ஆரம்பத்தில் சிரமமாக இருந்தாலும் பிறகு நல்லாவே தேறி விட்டேன். அம்மா எப்ப பார்த்தாலும் படி படி என்று ஒரே தொண தொணப்பு.
" சாம்பு, ஆறுதலாக படிக்கலாம் வா ராசா ", என்று அப்பா என்னைத் தூக்கிக் கொள்வார்.
" அந்தக் காலத்தில் நான் 6 வயசில் தான் பள்ளிக்கே போனேன். இங்கு 4 வயதிலேயே பள்ளிக்கு அனுப்புறார்களே ", என்று என்னிடம் தனிமையில் புலம்பித் தீர்த்து விட்டார்.
எனக்கு இந்த 4 , 6 கணக்கெல்லாம் விளங்கவேயில்லை.
என்னை பள்ளியில் சேர்க்கும் நாளும் வந்தது. அம்மாவின் முகத்தில் கலகலப்பே இல்லை. ஏதோ பறி குடுத்தாப்போல இருந்தார்.
" சாம்பு, குட்டிப் பயலாகவே இருந்திருக்கலாமே. ஏன் இப்படி வளர்ந்தாய்? நீ பள்ளி போன பின் நான் எப்படி உன்னைப் பிரிந்து இருப்பேன் ", என்று அம்மா புலம்பிக் கொண்டே இருந்தார்.

( அம்மாவின் புலம்பலைக் கேட்ட பின்னர் எனக்கும் மூட் சரியில்லை. படத்தை பாருங்கள். உங்களுக்கே விளங்கும். )
எனக்கு என்ன பதில் சொல்வதென்றே விளங்கவில்லை. இதெல்லாம் என் கையிலா இருக்கு. நீங்களே சொல்லுங்கள்!? நான் படித்து வேலைக்குப் போனால் தானே நான் விரும்பும் விளையாட்டுப் பொருள்கள், சாப்பாடுகள், எல்லாவற்றிக்கும் மேலாக சாக்லேட் ஐஸ்கிரீம் எல்லாமே வாங்கலாம்.
எனக்குள் ஒரு இனம் புரியாத உணர்வு. காலை 8 மணிக்கே பள்ளிக்கு போய் விட்டோம். பெரிய ஹாலின் நடுவே நிறைய விளையாட்டுப் பொருட்கள் பரப்பி வைத்திருந்தார்கள். என்னைப் போல நிறையக் குழந்தைகள் அங்கு விளையாடிக் கொண்டிருந்தார்கள். நானும் போய் சேர்ந்து கொண்டேன். அம்மாவும், அப்பாவும் நாற்காலிகளில் எங்களின் முறைக்காக காத்திருந்தார்கள்.
பல விதமான கலர்களில், வடிவங்களில் இருந்த பில்டிங் ப்ளாக்ஸை வைத்து பெரிய டவர் கட்டினேன். பக்கத்தில் ட்ரெயின் வைத்து விளையாடிக் கொண்டிருந்த ஒரு வாண்டு என் டவர் மீது ட்ரெயினால் மோதி உடைத்தான். எனக்கு அழுகை வந்தது. அம்மாவிடம் ஓடினேன். என் டவரை மோதி உடைத்த பொடியன் வாயினால் புர் புர்.... என்று சத்தம் எழுப்பியபடி குறுக்கும் நெடுக்குமா ஓடினான். ஹாலின் இந்த மூலையிலிருந்து அந்த மூலைக்கு ஓடினான். தரையில் விழுந்து புரண்டான்.
என் அம்மா அவனை மிரட்சியுடன் பார்த்தார்.
" சாம்பு, இந்தப் பொடியனுக்கு அருகில் போகாதே. இவன் ஒருத்தன் போதுமே. பாருங்கள் வாயிலிருந்து என்னமா எச்சில் ஸ்பிரே பண்ணுகிறான். இவன் அம்மா எங்கே? ", என்றபடி சுற்றும் முற்றும் பார்வையை ஓட விட்டார் அம்மா.
அப்பா எதைப் பற்றியும் கவலைப்படாமல் பேப்பர் படித்துக் கொண்டிருந்தார். அம்மாவின் தொண தொணப்பு தாங்காமல் நிமிர்ந்து அந்தப் பொடியனைப் பார்த்து விட்டு, மீண்டும் பேப்பரில் மூழ்கி விட்டார்.
எங்கள் முறை வந்தது. டீச்சர் மிகவும் பொறுமையாக சிரித்த முகத்துடன் பேசினார். நம்பர் 10 ஐக் காட்டி இது என்ன என்றார்? நான் டென் என்றேன். வெரிகுட் என்று பாராட்டினார் ஆசிரியை. பிறகு அம்மா, அப்பாவிடம் நிறைய ஏதோ பேசினார்.
" நீங்கள் வீட்டிற்கு போகலாம். பள்ளியிலிருந்து கடிதம் வரும் ", என்றார்.
அம்மாவின் முகத்தில் ஒரே பெருமை.
" அடடா! என் பிள்ளை 10 என்று சொல்லி டீச்சர் வாயை அடைச்சிட்டான் " , என்றார் அம்மா.
" ஏதோ நாசாவில் இன்டர்வியூ வைச்சு வேலை குடுத்தாப் போல ..", என்று அப்பா அலுத்துக் கொண்டார். அப்பாவின் முகத்திலும் பெருமை வெளிப்படையாகத் தெரிந்தது.
அங்கிருந்து ஐஸ்கிரீம் கடைக்குப் போனோம்.
எனக்கு மிகவும் பிடித்தமான சாக்லேட் ஐஸ்கிரீம் வாங்கித் தந்தார் அப்பா. பெரிய ஐஸ்கிரீம் கோனின் மீது சாக்லேட் கலவை பூசி, மேலே நட்ஸ் தூவி அலங்கரித்து இருந்தார்கள். வாங்கிய கொஞ்ச நேரத்தில் ஐஸ்கிரீம் எல்லாம் உருகி வழிந்தோடி நான் போட்டிருந்த ட்ரஸ் எல்லாமே நாசமாகி விட்டது.
இனிமேல் அம்மாவின் அர்ச்சனை ஆரம்பமாகி... நான் சொல்லி முடிப்பதற்குள் அம்மா ஆரம்பித்து விட்டார். என் ட்ரெஸ் எல்லாமே நச நசவென உடம்போடு ஒட்டி அருவருப்பாக இருக்கு. மீண்டும் சந்திப்போம். வரட்டா!