Saturday, September 25, 2010

பதிவுலகில் நான்

மகியின் அழைப்பினை ஏற்று, என்னைப் பற்றிய சுயபுராணம்.




1. வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?
வானதி அல்லது வாணி இரண்டுமே என் பெயர்கள் தான். என் பெயரில் இருக்கும் இன்னொருவரை நான் இது வரை சந்தித்தது குறைவு. யுனீக் ஆக இருக்கட்டுமே என்று அப்படியே மெயின்டேன் பண்றேன்.



2. அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா?
என்னப்பா! நான் இவ்வளவு வெளிப்படையா சொன்ன பிறகு... .... உண்மைப் பெயரே தான்.


3. நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி..
காலடி எடுத்து வைத்தது...ம்ம்.. சும்மா பொழுது போக்கிற்கு தான் வலைப்பூ தொடங்கினேன். எப்போதும் பிள்ளைகள், கணவரின் வேலைகள் என்று இருந்ததால் கொஞ்சம் ஓய்வு தேவைப்பட்டது. பிள்ளைகள் படுத்த பின்னர் ஏதாவது கிறுக்கித் தள்ளுவேன். அதை அப்படியே வலைப்பூவில் போட்டேன். இது தான் நான் வலைப்பூவில் காலடி எடுத்து வைச்ச வரலாறு.


4. உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?
மற்றவர்களுக்கு கமென்ட் ( நேரம் கிடைக்கும் போது ) போடுவது, இன்ட்லியில் இணைந்தது இவை மூலம் கொஞ்சம் பிரபலமானேன் என்று நினைக்கிறேன். ஆனால், நேரம் குறைவாக இருப்பதால் எல்லா வலைப்பூக்களையும் பார்வையிட முடிவதில்லை.

5. வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா?
சொந்தக் கதை, கற்பனை என்று எல்லாமே இருக்கு என் வலைப்பூவில்.

6. நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா? அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?
இருங்க சொல்றேன்.
இந்த வலைப்பூ வருமானத்தில் என் கணவரை கண்கலங்காமல் வைச்சு காப்பாத்தறேன்.
வெள்ளை மாளிகை ( அதாங்க நம்ம ஓபாமா வீடு ) போல் ஒரு( கொஞ்சம் மங்கலான கலரில்) வீடு வாங்க முற்பணம் செலுத்தி விட்டேன்.
இன்னும் இருக்கு அப்புறம் இன்கம்டாக்ஸ் பிரச்சினை வந்தா. அதான் கொஞ்சம் அடக்கி வாசிக்கிறேன்.

எல்லாம் சும்மா பொழுது போக்கிற்காக தான் எழுதுகிறேன்.



7. நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?
இதை வச்சு சமாளிக்கவே நேரம் பத்தவில்லை. இதில் இன்னொன்றா? தாங்காது.


8. மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம்..
கோபம், பொறாமை, ஆத்திரம் எல்லாம் கடந்தவள் நான். அதாவது ஒரு ஞானிக்குரிய மனப்பக்குவம் அடைந்து விட்டேன்.
வலைப்பூவில் சண்டை போடுபவர்கள், மற்றவர்களை மறைமுகமாக தாக்குபவர்களை பிடிக்காது.


9. உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்?
அண்ணாமலையான் தான் என்னை முதன் முதலாக பாராட்டியவர்.நிறைய தோழிகள், இனிமையான நட்புகள் என்று என் நட்பு வட்டம் பெருகியது. இமா, மகி இருவரும் தனிப்பட்ட முறையிலும் நிறைய ஊக்கம் கொடுத்தார்கள். அறுசுவைக்கு என் கதை அனுப்பியதில் இமாவின் பங்கு நிறைய உண்டு. மற்றவர்களுக்கு பின்னூட்டம் கொடுக்கவே ப்ளாக் தொடங்கினேன்.பிறகு சமையல் குறிப்புகள் கொடுக்க ஆரம்பித்தேன். பிறகு க்ராப்ஃட், கதைகள் என்று சாம்பாராக மாற்றி விட்டேன். என்னிடம் ப்ளாக் இருப்பதே பலருக்கு நீண்ட நாட்கள் கழித்தே தெரிய வந்த...( யாருப்பா அது கொட்டாவி விடுறது...) சரி இன்னும் சொல்லி போரடிக்க விரும்பவில்லை.


10. கடைசியாக, விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்..

அப்படியே 1 இலிருந்து 9 வரை கேள்விகளுக்கான விடைகளை மீண்டும் படித்துப் பாருங்க. அப்பவும் விளங்காவிடில் மீண்டும் 1....9 . ஸ்ஸ்ஸ் அப்பா முடியலை.

Monday, September 20, 2010

நானும் டீயும்




தேநீர்- ஒரு மயக்கம் தரும் வார்த்தை. ஆங்கிலேயர்கள் நம்மை ஆண்ட போது, அவர்களைப் பார்த்து நாமும் பழகிய பழக்கம். ஊரில் இருக்கும் வரை அதிகாலை ஒரு டீ, ப்ரேக்ஃபாஸ்ட் முடிய ஒன்று, மாலை நேரம் ஒரு டீ, சில வேளைகளில் இடைபட்ட நேரத்திலும் டீ குடிப்பேன். காலை எழுந்து இதைக் குடிக்காவிட்டால் ஏதோ ஏர்வாடிக்கு போக வேண்டும் போன்ற உணர்வு ஏற்பட்டு, பாடாய் படுத்தி எடுக்கும். கனடா வந்த பிறகு டீ குடிக்க பெரிதாக விருப்பம் ஏற்படவில்லை. ஏதோ கடமைக்கு 2 தேநீர்கள் காலையும், மாலையும் அவ்வளவு தான். காலப்போக்கில் காலை நேரம் மட்டும் டீ குடிப்பது என்று மாற்றிக் கொண்டேன்.

அமெரிக்கா வந்த பிறகு ஒரு நாளைக்கு ஒரு டீ தான் குடிப்பது என்று ஒரு கொள்கை வைத்துக் கொண்டேன். தண்ணீரைக் கொதிக்க வைத்து, டீ தூளை போட்டு, வடி கட்டி, பாலை அடுப்பில் வைத்து, சுண்டக் காய்ச்சி.... இங்கு ஒரு முக்கியமான விடயம் சொல்ல வேண்டும். பால், தண்ணீர் விகிதம்( ratio ) என்பது மிகவும் முக்கியம். பால் அரைக் கப் எனில் தண்ணீர் 1/4 கப் தான் விடுவேன். இரண்டையும் கலந்து, அளவாக சீனி போட்டு, இந்த டீயை குடித்தால் சொர்க்கம் தான் போங்கள். இந்த டீயின் பிறகு நான் காலைச் சாப்பாடு சாப்பிட நேரமாகும், அல்லது சாப்பிடவே மாட்டேன்.

மைக்ரோவேவில் டீ போடுவது, பால் சுட வைப்பது எனக்குப் பிடிக்காது. அப்படி டீ குடிப்பதற்கு குடிக்காமல் இருந்து தொலைக்கலாம். தண்ணீரில் டீ பைகளைப் போட்டு, சும்மா ஒரு கடமைக்கு 1 டேபிள்ஸ்பூன் குளிர்ந்த பால் ஊற்றி டீ என்ற பெயரில் யாராவது குடுத்தால் மனசை கல்லாக்கி கொண்டு குடித்து விடுவேன். ஆனால், மீண்டும் அவர்கள் வீட்டீற்கு போனால் டீ வேண்டாம் என்று முன்பே சொல்லி விடுவேன்.

வெளியே கடைகளில் டீ வாங்கி குடிப்பது எனக்கு பிடிக்காத விடயம். அந்த டீக்கு குடுக்கும் பணத்திற்கு ஒரு 2 லிட்டர் பால் வாங்கி, ஒரு வாரத்திற்கு டீ குடிக்கலாம்.

அதோடு கடையில் வேலை செய்பவர்களுக்கு டீ போடத் தெரியாது என்று நினைத்துக் கொள்வேன். அவ்வளவு மட்டமா இருக்கும் அந்த டீ.
ஒரு முறை கனடா போகும் போது வழியில் ஒரு கடையில் ( தலைவலி காரணமாக) டீ வாங்கித் தந்தார் என் ஆ.காரர். நானும் பல விதமாக பகல் கனவு கண்டபடி டீ குடிக்க காத்திருந்தேன். ஒரு பெரிய கப்பில் சுடுதண்ணீர், 2 டீ பைகள் மிதந்து கொண்டிருந்தன.

பால் எங்கே என்று தேடினேன். என் கணவர் அவரின் காஃபியோடு பிஸியாகி விட, நான் போய் அந்தப் பெண்ணிடம் பால்/கிரீம் வேணும் என்று கெட்டேன். இரண்டு சிறிய குப்பிகள் ( 4 டேபிள்ஸ்பூன்கள் பால் இருக்கும் என்று நினைக்கிறேன் ) எடுத்து நீட்டினார். 1/2 கப் பால் எங்கே இந்த 4 ஸ்பூன் பால் எங்கே என்று மனம் பழசை அசை போட்டது. இந்த 1/2 லிட்டர் தண்ணீரில் 4 டேபிள் ஸ்பூன் பாலை விட்டால்...நினைக்கவே வெறுப்பாக வந்தது. மீண்டும் போய் அந்தப் பெண்ணிடம் பல்லைக் காட்டினேன். என்னை முறைத்துப் பார்த்து விட்டு, மேலும் ஒரு குப்பியை எடுத்து வேண்டா வெறுப்பாக குடுத்தார்.

பக்கத்தில் இருந்த வயசான அமெரிக்கர் அவரிடம் இருந்த 2 குப்பிகளை என்னிடம் நீட்டினார். இப்போது 5 குப்பிகள் சேர்த்து விட்டேன். ஆனால், இன்னும் பால் வேணும் என்று தோன்றியது. சீனிக்கும் இப்படி அலைபாய வேண்டி இருந்தது. பால் இனிமேல் கேட்கவே முடியாது.

அந்த அமெரிக்கர் அவரின் 1/2 லிட்டர் பால் கலக்காத டீயை குப்பைத் தொட்டிக்கு கொண்டு சென்று ஊற்றி 1/4 லிட்டர் ஆக்கினார். அடடா! சுப்பர் ஐடியா! இது நம்மளுக்கு தோன்றவே இல்லையே என்று நினைத்துக் கொண்டே நானும் ஓடிப்போய் அது போல செய்து விட்டு வந்தேன்.

பால் குப்பிகளை உடைத்து, டீ யில் ஊற்றி, ஆசையோடு குடித்தால் சப்பென்றிருந்தது. ஆறிப்போன தண்ணீரைக் குடிப்பது போல உணர்வு. அன்று சபதம் எடுத்தேன் இனிமேல் கடையில் டீ குடிப்பதில்லை என்று.




இது நான் போட்ட டீ தான். இருங்க குடிச்சு முடிச்சிட்டு ஆறுதலா வருகிறேன்.