Wednesday, February 8, 2012

நான் போகிறேன் மேலே


(Image: Thanks to google )


நிவேதாவை காணவில்லையாம் இது தான் அந்த வீட்டின் பரபரப்புக்கு காரணம்.
பக்கத்து வீட்டில் வரவில்லை என்றார்கள். ரோடு முழுக்க தேடியும் காணவில்லை. ஒரு வேளை நடக்க கூடாதது எதுவும் நடந்துவிட்டதோ என்ற யோசனை வர, நிவேதாவின் அம்மா அழத் தொடங்கினார்.
நான் அவளுக்கு என்ன குறை வைத்தேன். கேட்பது எல்லாமே கிடைக்கிற வசதி அவளுக்கு. கொழுப்பு ஏறிப் போச்சு, என்று அம்மா மூக்கினை உறிஞ்சிக் கொண்டார்.
அப்பா பொலீசுக்கு போவதற்கு ஆயத்தங்கள் செய்யத் தொடங்கினார்.
விமலா, காலையில் அவ என்ன கலர் சட்டை போட்டிருந்தா? என்ன கலர் செருப்பு? எப்படி தலை வாரியிருந்தா?, என்று கேள்விகள் கேட்ட அப்பா ஒரு கட்டத்தில் உடைந்து அழ ஆரம்பித்தார். பெரியப்பா அவரை சமாதானப்படுத்திக் கொண்டே விபரங்களை பேப்பரில் எழுதிக் கொண்டே இருந்தார்.
ஓடிப் போற வயசா அவளுக்கு? போன மாசம் தான் 10 வயசு ஆரம்பம் ஆச்சு? ஏதோ ஒரு பச்சைக்கலர் பட்டுப்பாவாடை, சட்டை வேணும் என்று கேட்டாள். அடுத்த மாசம் வாங்கித் தாறேன் என்று சொன்னேன். அதுக்குள்ளே கோபித்துக் கொண்டு போய்விட்டாளே, என்று அம்மா சொல்ல,

என்னது பாவாடை, சட்டை கேட்டாளா என் செல்ல மகள். நீ ஏன் என்னிடம் சொல்லவே இல்லை. இப்ப பார் எனக்கு மகள் இல்லை. எல்லாம் உன்னால் வந்த பிரச்சினை தான் என்று அப்பா அம்மாவோடு வரிந்து கட்டிக் கொண்டு சண்டை போடத் தொடங்கினார். உறவினர்கள் இருவரையும் சமாதானப்படுத்துவதா? அல்லது மகளைத் தேடுவதா என்று குழம்பி போய் நின்றார்கள்.

இதை எல்லாம் உயரமான இடத்தில் இருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் நிவேதா. உயரமான இடம் என்பது மேல் மாடி அல்ல. தென்னை மரம். நிவேதா எல்லா விதமான மரங்களிலும் உச்சி வரை ஏறுவதில் கெட்டிக்காரி. அம்மாவிடம் பட்டுப் பாவாடை கேட்க, அவர் மறுக்க. நிவேதாக்கு கோபம் வந்தது. விறுவிறுவென மரத்தில் ஏறிக் கொண்டாள். இது தான் முதல் தரம் தென்னை மரத்தில் ஏறியது. ஏதோ ஒரு வேகத்தில் ஏறி விட்டாள் ஆனால் இறங்கத் தெரியாமல் அங்கேயே இருக்க வேண்டியதாகிவிட்டது.

நேரம் ஆக ஆக பயம் சூழ்ந்து கொண்டது. கீழே நடக்கும் பரபரப்பில் நான் இப்ப மாட்டிக் கொண்டால் அவ்வளவு தான் அம்மா அடிச்சே கொலை பண்ணி விடுவார்கள். அப்பா - எந்த நேரத்தில் என்ன செய்வார் என்று சொல்வதற்கில்லை. கீழே அப்பாவை எல்லோரும் சமாதானப்படுத்துவதை பார்க்க அழுகை வந்தது நிவேதாக்கு.
அப்பா, என்று அழுகையின் ஊடே குரால் கொடுத்தாள். ஆனால், யாருக்கும் அவள் குரல் கேட்கவில்லை.
பக்கத்தில் ஏதோ மினுமினுப்பாக தெரிந்தது. இளநீர் குலைகளுக்கு மத்தியில் என்னவாக இருக்கும் என்று குனிந்து பார்த்தாள். அது பாம்பு. பெருங்குரலில் அழ ஆரம்பித்தாள். பாம்பு தீண்டாமல் காலினை காய்ந்து போன தென்னம் ஓலையில் வைக்க, அது கீழே விழ, ஓலையோடு சேர்ந்து இரண்டு தேங்காய்கள், பாம்பும் கீழே விழுந்தன.

கீழே விழுந்த ஓலை, தேங்காய்களைப் பார்த்ததும் அப்பாவுக்கு மின்னல் வெட்டியது. மேலே நிமிர்ந்து பார்த்தார். சிவப்பு நிற சட்டை தெரிந்ததும் அவருக்கு உயிர் வந்தது. ஏணி வைத்து மேலே ஏறி வந்து, மகளை அணைத்துக் கொண்டார்.

அம்மாவுக்கு கோபம் வந்தது. மகளுடன் இனிமேல் பேச்சு வார்த்தை இல்லை என்று முகத்தினை திருப்பிக் கொண்டார். ஆத்திரத்துடன் மகளின் முதுகில் இரண்டு போடு போட்டார்.
அம்மாவின் கோபம் ஒரு வாரம் கழித்தும் போகவில்லை.
அம்மாச்சி வந்ததும் நிவேதா அழுது கொண்டே அம்மா தன்னிடம் மிகவும் கோபமாக இருப்பதை சொன்னாள்.

கமலா, ஏன் இப்படி மகளை கோபித்துக் கொள்கிறாய்? நீ சின்ன வயசில் செய்த அதே கூத்தை தான் உன் மகளும் செய்கிறாள். நீ ஒரு முறை தெனை மரத்தில் ஏறி 4 மணி நேரம் மறைந்து இருந்தாயே ஞாபகம் இல்லையா? உன்னை கீழே இறக்க நான் பட்டபாடு இருக்கே. கடைசியில் நீ கேட்ட பொருளை வாங்கி வந்த பின்னர் தான் இறங்கி வந்தாயே.

ஏதோ வேலையாக உள்ளே வந்த அப்பா புன்சிரிப்புடன் கேட்டு கொண்டு நின்றார். ஓ! அப்ப இது பரம்பரைப் பழக்கமா? நானும் எங்கே இருந்து இந்தப் பழக்கம் வந்தது என்று நினைச்சுக் கொண்டே இருக்கிறேன். இது தெரியாமல் நான் அன்று ஏணி வைச்சு, கஷ்டப்பட்டு ஏறி...

நல்ல அம்மாவும், மகளும் தான் போங்கள் , என்றார் அப்பா.

தோட்டத்தினை நோக்கிப் போன அப்பாவை பின் தொடர்ந்தார்கள் அம்மாவும், மகளும்.
அப்பா, என்ன செய்கிறீங்க?, என்றாள் நிவேதா.
தென்னை மரம் ஏறப் பழகிக் கொள்கிறேன். ஒரே நேரத்தில் அம்மாவும் மகளும் மரத்தில் ஏறி ஒளிந்து கொண்டாள் ஏறி மீட்க வேண்டாமா, என்று சொன்ன கணவரை செல்லக் கோபத்துடன் முறைத்துக் கொண்டே நின்றாள் கமலா.

அதெல்லாம் பிறவியில் வரும் பழக்கம். இடையில் வரவே வராது, என்றார் அம்மா புன்சிரிப்போடு.