Wednesday, December 15, 2010

தேவதையில் நான்.

என் எழுத்துக்களுக்கு தொடர்ந்து ஆதரவு தரும் எல்லோருக்கும் என் இனிய நன்றிகள்.
தேவதை இதழின் திரு. நவநீதகிருஷ்ணன் அவர்களுக்கும் என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த லிங்க் கிளிக் செய்யுங்கள். பொறுமை மிகவும் அவசியம். சில நிமிடங்களில் ஒரு பிரபலமான, அழகான (!!!!) வலைப்பதிவர் திரையில் தோன்றுவார்;


சில மாதங்களின் முன்பு தேவதை இதழின் ஆசிரியரிடம் இருந்து ஒரு மின்னஞ்சல். என் வலைப்பூவினை வெளியிட அனுமதி கேட்டிருந்தார்கள். விருப்பம் இருந்தாலும் ஒரு தயக்கம். தயக்கத்தின் காரணம் என் புகைப்படம் இணைத்து, வலைப்பூவினை வெளியிட இருப்பதாக சொன்னார்கள்.
உலகம் முழுவதும் இல்லாவிட்டாலும், இந்தியா முழுவதும் இல்லாவிட்டாலும் தமிழகத்தில் என் முகத்தினை எல்லோரும் பார்க்கப் போகிறார்கள் அதற்கு ஏற்றாற்ப்போல என்னிடம் அழகான புகைப்படங்கள் இல்லை. என் மூஞ்சையும் அப்படி ஒன்றும் போட்டோ ஜெனிக் அல்ல. படுத்திருந்து யோசித்து, தூங்கி எழுந்தது தான் மிச்சம். என் இனிய தோழி ஸாதிகா அக்காவிடம் கேள்விகள் கேட்டு மின்னஞ்சல் அனுப்பினேன். அவரும் ஏன் போட்டோ அனுப்பினா என்னவாம் என்று பதிலுக்கு மெயில் அனுப்ப, நானும் என் கணவரை நச்சரித்து, குறைந்தது 20 படங்களில் தேறிய 2 மட்டும் அனுப்பி வைத்தேன்.

அன்புடன்
வானதி

Monday, December 13, 2010

உள்ளங்கை அரிப்பு.

காலையில் எழுந்தபோது இடது உள்ளங்கை லேசாக அரித்தது. அரித்தால் சொறிந்து கொள்ள வேண்டியது தானே என்று குதர்க்கமாக பேசக்கூடாது. பெண்களுக்கு இடது உள்ளங்கை அரித்தால் பணம் வரும் என்று ஊரில் சொல்வார்கள். எனக்கு எங்கிருந்து பணம் வரும்.

பிறந்த நாள் ( வாய் நிறைய வாழ்த்து மட்டுமே கிடைத்தது )போன மாதம், திருமண நாள் அடுத்த மாசம் ..கை அரிப்பு இன்னும் அதிகமாகியது. ஏதாவது வியாதியாக இருக்கப் போவுது - இது என் கணவர்.
மகனை பள்ளிக்கு கூட்டிச் சென்ற போதும் இதே யோசனை.
ரோட்டினை கடக்க நின்ற போது கை மீண்டும் லேசாக அரிப்பு எடுத்தது.
அடடா! இங்கு தான் எங்கேயோ எனக்கு உரிய பணம் இருக்கு என்று மனசாட்சி அலறியது.
10 டாலர்கள் கிடைச்சா என்ன செய்வது... 20 டாலர்கள் கிடைச்சா ஒரு ப்ளான், 100 டாலர்கள் கிடைச்சா .. 100 டாலர்களை இழந்தவன் எப்படிக் கவலைப் படுவானோ என்று அவனுக்காக இரக்கம் உண்டானது.

ஸ்கூல் கார்ட் வாகனங்களை நிறுத்தி, ரோட்டினை கடக்க உதவி செய்தார். அவருக்கு நன்றி சொல்லி மறு கரையினை அடைந்தோம்.


ஸ்கூலினை நெருங்கிய போது கீழே ஏதோ கடதாசி தென்பட்டது. நடை பாதையோரம் செடிகளின் மத்தியில் தென்பட்டது. உடனே பணம் தான் என்று என் மனசாட்சி சொல்லியது.
அது பணமே தான். தமிழ் சினிமாவில் கீழே கிடந்த பணத்தினை எடுக்க நம்ம ஹீரோக்கள் கஷ்டப்படுவதைப் பார்த்திருக்கிறேன். சும்மா சொல்லக் கூடாது அது அத்தனையும் உண்மையே தான்.
எங்கள் பின்னாடி, முன்னாடி, பக்க வாட்டில் எல்லா இடமும் மக்கள் வெள்ளம். சிலர் ஒட்டினாற் போல பின்னாடியே வருவார்கள்.
ஷூ காலினை மேலே வைத்துக் கொண்டேன். கீழே லேஸ் கட்டுவது போல அமர்ந்து, மெதுவா காசை எடுத்து விட்டேன்.

அம்மா! எவ்வளவு பணம் கிடைச்சுது? என் மகனின் கேள்வி.
தெரியலையே ராசா?- இது நான்.
மெதுவாக பிரித்துப் பார்த்தேன். 5 டாலர் நோட்டு.

இதை என்ன செய்வது? பின்னாடி வந்த ஆசாமி என்னை முறைப்பது போல இருந்தது.
இவரும் பங்கு கேட்பாரோ தெரியவில்லை.
வேகமாக நடந்தேன்.

அம்மா! எம்பூட்டு பணம் இருக்கு - இது மீண்டும் மகனே தான்.
5 டாலர்கள் இருக்கு என்று 5 விரல்களை காட்டினேன்.

அதை இப்படிக் குடுங்க என்ற மகனிடம் மறுப்பு சொல்லாமல் குடுத்தேன்.


மகன் பணத்துடன் பள்ளியை நோக்கி வேகமாக ஓட, நானும் பின்னாடியே ஓடினேன்.

பள்ளியில் அலுவலக அறையில், இது யாருடைய பணம் என்று தெரியவில்லை? ரோட்டில் இருந்திச்சு. யாராவது அவர்களின் லன்ஞ் பணத்தினை தொலைத்து இருப்பார்கள். அவங்க இன்று சாப்பாட்டிற்கு என்ன செய்வார்கள்? என்று என் மகன் மழலையில் சொல்ல, அதிபர் திறந்த வாய் மூட மறந்து நின்றார்.

ஒலி பெருக்கியில் அறிவிக்கப்பட்டது. பணத்தினை தவற விட்ட பொடியன் ஓடி வந்து, நன்றி சொல்லி பணத்தினைப் பெற்றுக் கொண்டான்.

தேசிய கீதம் பாடல் தொடங்க எங்கும் அமைதி நிலவியது.
நான் வீட்டினை நோக்கி நடக்கத் தொடங்கினேன்.
கீழே கிடந்த பணத்தினை பொறுப்பாக கொண்டு வந்து கொடுத்த என் மகனின் பெயரினை ஒலி பெருக்கியில் அறிவித்தார்கள்.
அங்கிருந்த மரங்களில், செடிகளில் பட்டு மீண்டும் மீண்டும் எதிரொலித்தது.