Sunday, August 5, 2012

என்ன கொலைக் குற்றமா?


மகளிடம் இருந்து கடிதம் வந்ததிலிருந்து மனதே சரியில்லை ராமசாமிக்கு. என்னவாக இருக்கும் என்று பலவாறாக யோசனை செய்ததில் தலைவலி வந்தது தான் மிச்சம். மகள் வசந்தி, திருச்சியில் ஒரு பெண்கள் பள்ளியில் 11 வகுப்பு படிக்கிறாள். படிப்பில் ஆகா ஓகோ என்று இல்லாவிட்டாலும் குறை சொல்லும் அளவுக்கு மட்டம் இல்லை. அதோடு ராமசாமி பெரிய கலக்டரோ, இஞ்சினியரோ அல்ல. விவசாயம் தான் அவர் தொழில். மகளுக்கு எழுதப் படிக்க தெரிந்தால் போதும் என்று நினைத்து பள்ளிக்கு அனுப்பினார். அவள் 10ம் வகுப்பில் ஓரளவு நல்ல மதிப்பெண்கள் பெற்றதும் சந்தோஷப்பட்டு இன்னும் கொஞ்ச நாட்கள் படிக்கட்டும் என்று திருச்சி டவுனில் இருக்கும் பள்ளியில் சேர்த்துவிட்டார். மகள் பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்தாள். நேரம் கிடைத்தால் மகளைப் பார்க்க கிளம்பிவிடுவார். நேற்று மகளிடம் இருந்து ஒரு கடிதம் வந்தது.
அப்பா, உடனே வந்து என் வகுப்பாசிரியை சாரதாவை சந்திக்கவும். மிகவும் அவசரம், என்று குறிப்பிட்டிருந்தாள்.
" என்ன, யோசனை பலமா இருக்கு?", என்றபடி வந்தார் மனைவி.
" இல்லை. மகளிடம் இருந்து கடிதம் வந்ததிலிருந்து மனது பதறுது", என்றார் ராமசாமி.
" ஒரு எட்டு போய் பார்த்துட்டு வந்தா முடிஞ்சுது", என்றார் மனைவி.
"சுட்டெறிக்கும் வெய்யிலில் பஸ்ஸில் ஏறி இறங்குவதை நினைச்சா வெறுப்பா இருக்கு", என்றார் ராமசாமி.
பிறகு ஒருவாறு மனதை தேற்றிக் கொண்டு கிளம்ப ஆயத்தமானார். இப்பவே போனால் தான் பள்ளி விடும் நேரத்துக்கு முன்னர் போய்ச் சேரலாம் என்று நினைத்தபடி அதற்கான வேலைகளில் மும்முரமாக இருந்தார்.
ஒரு வேளை மகள் யாரையோ காதலிக்கிறாளோ என்று யோசனை வரவே மனைவியிடம் யோசனை கேட்டார்.
" காதலா? அதெல்லாம் இருக்காது.", என்றார் மனைவி.
பலவற்றையும் கற்பனை செய்து கொண்டே, மனைவி கொடுத்த பொதியுடன், மறக்காமல் தண்ணீர் பாட்டில்களையும் எடுத்துக் கொண்டு பேருந்து நிலையம் நோக்கி நடந்தார். கடையில் தண்ணீர் வாங்கினால் கொள்ளை விலை சொல்வார்கள். அதோடு வீட்டில் எப்பவும் சுட்டாறிய தண்ணீர் குடித்தே பழகிவிட்டார் ராமசாமி.


கிட்டத்தட்ட 2 மணி நேரங்களின் பின்னர் மகளின் பள்ளி போய்ச் சேர்ந்தார்.
வகுப்பறையின் வெளியே காவல் இருந்தார். இவருடன் மூன்று மாணவிகள் சேர்ந்து கொண்டார்கள்.
மெதுவாக பேச்சுக் கொடுத்தார்.
" கண்ணுகளா, என்ன வீட்டுப் பாடம் செய்யலையா?", என்றார்.
"அதெல்லாம் இல்லை. டீச்சர் பாடம் நடத்தும் போது தண்ணீர் குடிச்சோம் அதான் வெளியே விரட்டி விட்டாங்க", என்றார்கள் கிசு கிசுப்பான குரலில்.
" என்னது?. தண்ணீர் குடிச்சதுக்கா", என்று மேலும் என்ன கேட்பது என்று தெரியாமல்  திகைத்துப் போனார் ராமசாமி.
மெதுவாக வகுப்பறையின் உள்ளே எட்டிப் பார்த்தார். மகளின் முகத்தில் திடீரென்று ஒரு சந்தோஷக் களை வந்து ஒட்டிக் கொண்டது இவரைக் கண்டதும். காதல் கத்தரிக்காய் எதுவும் இருக்காது என்று நினைத்துக் கொண்டார். 
ஆசிரியை ஒரு பெரிய அண்டா போன்ற ஒரு பாட்டிலில் இருந்து தண்ணீரை மொண்டு குடித்துக் கொண்டிருந்தார். 


இவரை கண்டதும் அண்டாவை கீழே வைத்துவிட்டு வெளியே வந்தார்.
" நீங்க வசந்தியின் அப்பாதானே?", என்றார்.
ம்ம்ம்.. என்று தலையாட்டினார்.
" டீச்சர், ஏதாவது பிரச்சினையா?", என்று கேட்டார்.
" இருங்க சொல்றேன். கொஞ்ச நாட்களுக்கு முன்பு எங்கள் முதல்வர் இந்தப் பக்கம் வந்தார்கள் தெரியுமா?", என்றார்.
" ஏனுங்கம்மா பள்ளிக்கூடம்  வந்தாங்களா? ", என்றார் வெள்ளாந்தியாக.
" அட. இந்த தெரு வழியா போனார்கள். அப்போது எங்க ஸ்கூல் பிள்ளைகளை ரோட்டோரம் நிற்பாட்டி வைத்திருந்தோம்...", என்றார் ஆசிரியை.
" எதுக்குங்க இந்த வேகாத வெய்யிலில் பிள்ளைகளை ரோட்டில் நிற்பாட்டி வைச்சீங்க?", என்று அப்பாவியாக கேள்வி கேட்டார் ராமசாமி.
"முதல்வர் வரும்போது கை காட்ட, அவர்களை வரவேற்க ...", என்று தொடர்ந்தவரை எரிச்சலுடன் பார்த்தார் ராமசாமி.
"சரி. இருக்கட்டும். அதுக்கு எதுக்கு என்னை இந்த வேகாத வெய்யிலில் வரச் சொன்னீங்க?", என்று கேள்வி எழுப்பினார்.
" அதுவா. எல்லோரையும் வரிசையில் நிற்க வைக்க நாங்கள் எவ்வளவு பாடுபட்டோம். ஆனால், உங்கள் மகள் ... எல்லாம் திமிர்த்தனம்", என்று ஏதோ முணுமுணுத்தார்.
ராமசாமி விளங்காமல் பார்த்தார்.
" எல்லோரையும் வரிசையா நிற்கச் சொல்லிட்டு, அந்தப் பக்கம் போய்ட்டு திரும்ப வந்து பார்த்தா உங்க மகளைக் காணவில்லை", என்றார் ஆசிரியை.

"ஐயயோ! பிறகு என்னம்மா ஆச்சு?. காதலனுடன் போயிட்டாளா என் மகள்", என்றார் பதறிக் கொண்டே.

பள்ளி விடும் நேரமாகையால் கூட்டம் சேர ஆரம்பித்து இருந்தது.

" அட அப்படி இல்லைங்க. உங்க மகளும் வேறு சில மாணவிகளும் யாரோ தண்ணீர் கொடுப்பதாக அறிந்து அங்கு போய் வரிசையில் நின்று தண்ணீர் வாங்கி குடிச்சுட்டு இருந்தார்கள்", என்றார்.
" ஓ. ", என்றார் ராமசாமி எரிச்சலுடன். இப்ப அதுக்கு என்ன செய்யச் சொல்றீங்க? தண்ணீர் தாகம் எடுத்தால் குடிச்சா என்ன கொலைக் குற்றமா? இப்ப நீங்க பக்கத்தில் ஒரு அண்டா வைச்சு குடிக்கிறீங்க. ஆனால், தண்ணீர் குடித்த குற்றத்துக்கு இந்த மூன்று மாணவிகளை வெளியே நிற்க வைச்சு, நீங்க ஒரு சர்வாதிகாரி போல நடக்கிறீங்க. அவர்கள் தண்ணீர் குடித்தது குற்றம் எனில் நீங்கள் குடிச்சது குற்றம் இல்லையா?, என்று பொரிந்து தள்ளினார் ராமசாமி.

கூட்டம் சேர ஆரம்பித்தது. பெற்றோர்களும் ராமசாமிக்கு ஆதரவாக களத்தில் இறங்க ஆசிரியை வாயடைத்துப் போய் நின்றார்.


பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காக மாறி விட்டதை நினைத்து ஆசிரியை கூனிக் குறுகி நின்றார்.

தண்ணீர் குடித்ததுக்கு தண்டனையா?, என்று கூட்டத்தினரும் சேர்ந்து கொள்ள, யாரோ போய் தலைமை ஆசியருக்கு தகவல் சொல்ல, அவர் பறந்தோடி வந்தார். யாரோ போய் ஆசிரியையின் அண்டாவை எடுத்து வந்து, தலைமை ஆசிரியருக்கு காட்டி நியாயம் கேட்டார்கள்.
" ஏனுங்க அவங்க தாகம் எடுத்தா குடிக்கலாம். எங்க பிள்ளைகள் குடிச்சா தண்டனை குடுப்பாங்களாம். இந்த அநியாயத்தைக் கேட்க ஆள் இல்லையா?", என்று கோபத்துடன் கத்தினார்கள்.
இறுதியில் ஆசிரியை செய்தது பெருந்தவறு என்று தீர்ப்பு சொல்லப்பட்டது. அதோடு அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று ஒரு சாரார் சொல்ல, ஆசிரியை வேண்டா வெறுப்பாக மன்னிப்புக் கேட்டார்.

எய்தவன் இருக்க அம்பை நோவதேன், பழி ஓரிடம் பாவம் ஓரிடம் இந்தப் பழமொழிகள் எல்லாம் ஆசிரியைக்கு வரிசையாக ஞாபகம் வந்தன. ராமசாமியின் மகள் வசந்தி தண்ணீர் குடித்ததுக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்பது தலைமை ஆசிரியரின் முடிவே. இடைவேளை தவிர யாரும் வகுப்பில் தண்ணீர் அருந்தக் கூடாது என்பதும்  அவரின் உத்தரவே. இப்ப கூட்டத்தினைக் கண்டதும்  பழியை முழுக்க ஆசிரியை மீது போட்டு விட்டு நழுவிய தலைமை ஆசிரியரை கடுப்புடன் பார்த்துக் கொண்டே ராமசாமியிடம் மன்னிப்புக் கேட்டார் சாரதா.