Friday, May 28, 2010

நாங்களும் அகதிகள் தான்..

காலை 7 மணி இருக்கும் முற்றத்தில் பேச்சுக் குரல்கள் கேட்டன. வெளியே வந்து பார்த்தேன். ஊர்ப் பெரியவர் தாமு அண்ணா நின்றார். அவருடன் ஒரு கும்பல். தாமு அண்ணா சொன்னார், " பூங்கோதை, இவர்களெல்லாம் இங்கே உன் வீட்டில் தங்கப் போகிறார்கள். இவர்களின் வீடு வாசல் எல்லாமே குண்டு வீச்சினால் தரை மட்டமாகி விட்டது. தங்க இடம் இல்லாமல் அலைந்து கொண்டிருந்தார்கள். நான் தான் இங்கே கூட்டி வந்தேன். இரவு பகலாக நடந்து வந்திருக்கின்றார்கள். "

நான் அந்த கும்பலை கலக்கத்துடன் பார்த்தேன். ஆண்கள், பெண்கள், வாண்டுகள் என்று ஒரு 30 பேராவது தேறுவார்கள். என் பதிலை எதிர்பாராமல் அந்த கும்பல் வீட்டினுள் சென்றார்கள்.

தாமு அண்ணா அங்கேயே நின்று கொண்டிருந்தவர் கேட்டார், " சொப்பனாங்குட்டி எங்கே? " என்றார்.

" அவனுக்கு கல்யாணம். அதான் ஊருக்கு போய் விட்டான். இந்த வாரம் வந்து விடுவதாக சொன்னான். காணோம்.", என்றேன் நான்.
" ம்ம்... அவனுக்கு கல்யாணமா? கலிகாலம் " , என்று முணுமுணுத்து விட்டு போய் விட்டார்.

நான் வீட்டிற்குள் போனேன். இந்த வீடு என்னுடையதல்ல. 50, 60 வருடங்களின் முன்பு இந்த காணி வாங்கி, பெரிய வீடு கட்டியவர் சொக்கான் சாமியார். பின்னாளில் ஆன்மீகத்தில் நாட்டம் ஏற்பட இந்த வீட்டை ஆசிரமம் ஆக்கி விட்டார்.

நானும் கணவரும் இங்கே அண்டிப் பிழைக்க 15 வருடங்களின் முன்பு வந்தவர்கள். சாமியார் உயிரோடு இருந்த வரைக்கும் பூசை, அன்னதானம் என்று ஒரே அமர்களமாக இருந்தது. அவர் இறந்த பின்னர் அவரின் இறுதி ஆசைப்படி இங்கேயே அவரை அடக்கம் பண்ணிவிட்டார்கள்.

என் கணவரும் 5 வருடங்களின் முன்பு இறந்துவிட்டார். நானும் வேறு போக்கிடம் இல்லாதபடியால் இங்கேயே தங்கி விட்டேன். காலப் போக்கில் ஆசிரமத்திற்கு மக்கள் வருவது அறவே நின்று விட்டது. சாமியாருக்கு வாரிசு என்று சொல்ல யாருமே இல்லை. நானே எல்லாவற்றையும் அனுபவித்து வருகிறேன். சொப்பனாங்குட்டி என் உதவியாள்.

பரந்து விரிந்த இந்த நிலத்தில் மா, வாழை, தென்னை, பலா, கத்தரி என்று பல விதமான மரஞ்செடிகள் இருக்கின்றன. அவற்றை எல்லாம் பொறுப்பாக பார்த்துக் கொள்வது சொப்பனாங்குட்டியின் ( சுருக்கமாக சொப்பு ) வேலை.

சொப்பனாங்குட்டி - கறுத்த, தடித்த உருவம். காலை இழுத்து இழுத்து நடப்பான். கட்டைக் குரலில் அவன் கத்தினால் இந்த ஏரியாவே நடுநடுங்கும். அண்டை அயலாரின் வாண்டுகளிடமிருந்து பழங்கள், பூக்களை பாதுகாப்பது இவனின் வேலை. பொருட்களை சந்தைக்கு கொண்டு போய் விற்று, நிறைய இலாபம் கொண்டு வருவான். அவனுக்கு 40% பங்கு கொடுப்பேன்.

வந்த கும்பல் வீட்டின் பெரிய ஹாலை ஆக்கிரமித்து இருந்தார்கள். நடந்து வந்த களைப்பினால் எல்லோரும் படுத்திருந்தார்கள். நான் எல்லோரையும் வெறித்துப் பார்த்தபடி உள்ளே போனேன். மதியம் சாப்பிட்டு விட்டு, ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும்போது ஏதோ சத்தங்கள் கேட்டன.


எழுந்து பார்த்தேன் 7, 8 வாண்டுகள் சமையல் அறையில் ஏதோ ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தார்கள். " ஏய் குட்டிச் சாத்தான்களே... ஓடிப் போங்கள்", என்று விரட்டினேன். அவர்கள் இரைந்தபடி தோட்டத்திற்கு ஓடினார்கள். நானும் பதறியபடி பின்னே ஓடினேன். ஒரு பிரிவினர் மாமரத்தில் ஏறிக் கொண்டிருந்தார்கள். மற்ற பிரிவினர் தோட்டமெங்கும் ஓடிக் கொண்டிருந்தார்கள். சொப்பனாங்குட்டி இல்லாமல் சமாளிக்க முடியாது போலிருந்தது. நானும் சளைக்காமல் ஓடி, எல்லோரையும் பிடித்து ஓரிடத்தில் நிப்பாட்டினேன். மிரட்டும் குரலில் எச்சரிக்கை செய்து அனுப்பினேன்.

அன்றைய பகல் பொழுது ஒரு வழியாக முடிந்தது. இரவு வாண்டுகளின் கூச்சல், குழப்பம் எனக்கு பழக்கமில்லாத ஒன்றாக இருந்தது. முடிந்தவரை விளக்கை அணைத்து விட்டு, ஆசிரமத்தை இருட்டினில் மூழ்கடித்தேன். வாண்டுகளின் கூச்சல் ஒரு வழியாக ஓய்ந்தது.

காலையில் மீண்டும் அவர்களின் அலறல். தோட்டத்திற்கு ஓடினேன். பலாமரத்தை சுற்றி நின்று, நன்கு கனிந்த பழத்தை நோக்கி கம்பை வீசியெறிந்தார்கள். பழம் கீழே விழுந்தது. அவர்கள் எடுத்துக் கொண்டு வந்த பழத்தை வலுக்கட்டாயமாக பிடுங்கிக் கொண்டேன்.

சொப்பனாங்குட்டி மீது எரிச்சல் வந்தது. இவன் திருமணம் செய்யவில்லை என்று யார் அழுதார்கள் என்று மனதினுள் திட்டித் தீர்த்தேன்.

தோட்டத்திலிருந்து பறித்த காய்கறிவகைகள், தேங்காய் என்று வந்திருந்த கும்பல் எந்த பொருட்களையும் விட்டு வைக்கவில்லை. முற்றத்தில் அடுப்பு மூட்டி ஆனந்தமாக சமையல் செய்து சாப்பிட்டார்கள்.

வாண்டுகள் கொய்யா மரத்தில் ஏற, நான் விரட்டிக் கொண்டு போனேன். அவர்கள் ஆசிரம வாசலை நோக்கி ஒடினார்கள். ஒடிப்போனவர்கள் எதையோ பார்த்து விட்டு மீண்டும் அலறி அடித்துக் கொண்டு எதிர் திசையில் ஓடினார்கள். அட சொப்பனாங்குட்டி வந்து விட்டான். மிகவும் ஆறுதலாக இருந்தது.

" என்ன நடக்குது இங்கே ?" , என்று அதட்டினான். நான் அவனை உள்ளே கூட்டிக் கொண்டு போய் எல்லாவற்றையும் சொன்னேன்.

" இவர்களை விரட்ட வேண்டும் ஆனால் எப்படி என்று தெரியவில்லை " , என்றேன்.

" இரவு வரட்டும் அது வரை பொறு ", என்றான் சொப்பு.

அன்று அமாவாசை இரவு. பூட்டியிருந்த சாமியாரின் சமாதி அறை கதவைத் திறந்து, நான் தலைவிரி கோலமாக ஏறி அமர்ந்து கொண்டேன். வாயில் எனக்கு தெரிந்த மந்திரங்களை எல்லாம் வேகமாக முணுமுணுத்தேன். அறை நெடுநாட்கள் பூட்டி இருந்தமையால் வௌவால்கள் சடசடத்துப் பறந்தன. சொப்பு சமாதியின் மறுபக்கம் ஒளிந்திருந்து வித்யாசமாக சத்தங்கள் எழுப்பினான். என் முன்னே ஒரு விளக்கு எரிந்து கொண்டிருந்தது

அந்த வழியாக வந்த வாண்டுகள் என் கெட்டப், விசித்திரமான சத்தங்களை கேட்டதும் அலறி அடித்துக் கொண்டு ஓடிவிட்டார்கள். பெற்றோர்களும் வந்து பார்த்து விட்டு போனார்கள்.

காலையில் வாண்டுகள் எல்லோரும் அடங்கி ஒடுங்கியே இருந்தார்கள். பெற்றோர்கள் மிரட்சியுடன் என்னைப் பார்த்தார்கள்.

" ஆகா! நல்லா வேலை செய்யுதே" , என்று நானும் சொப்பும் பேசிக் கொண்டோம். சொப்புவின் சம்பளத்தை அதிகரித்தேன்.

ஒவ்வொரு நாளும் இந்த கூத்து தொடர்ந்தது.

ஒரு நாள் காலை எழுந்து பார்த்த போது அந்த கும்பல் பெட்டி படுக்கைகளுடன் கிளம்பி போய் விட்டார்கள்.

ஏதோ இரையும் சத்தம் கேட்டது. " சொப்பு, அது என்ன சத்தம் " , என்றேன்.

" அக்கா, குண்டு வீச்சு விமானம் வருது ஓடுக்கா " , என்றான் சொப்பு.

வேகமாக வந்த விமானம் தொடர்ந்து குண்டுகளைத் தள்ளி விட்டு, பறந்து சென்று விட்டது. எங்கும் ஒரே புகை மண்டலம். ஆசிரமம், தோட்டத்தின் பெரும் பகுதி சேதமாகியிருந்தது.
சமாதி அறை மட்டும் சேதமில்லாமல் தப்பியது. குழந்தைகளை மிகவும் நேசித்த சொக்கன் சாமியார் எங்களை தண்டித்து விட்டது போல உணர்ந்தேன். என்ன உணர்ந்து என்ன பயன். எல்லாமே காலம் கடந்த ஞானோதயம்.

நாங்களும் புறப்பட்டாச்சு. எங்கே என்கிறீர்களா? இனிமேல் நாங்களும் அகதிகள் தான்.

Monday, May 24, 2010

என்ன எழுதலாம்..

ஜெய்லானி ( மனதிற்குள் ) கொசு வளர்ப்பது எப்படி? சுடுதண்ணீர் வைப்பது எப்படி ? என்றெல்லாம் நிறைய பயனுள்ள பதிவுகள் போட்டாச்சு. இனிமேல் என்ன எழுதுவது? நான் என்ன செய்வேன்.

வானதி வருகிறார்.

வானதி : ஜெய்லானி, என்ன யோசனை பலமா இருக்கு?

ஜெய்லானி : ( மனதிற்குள் ) இப்படி மூஞ்சியை வைத்துக் கொண்டிருந்தால் வர்றவன்போறவன் எல்லாம் விசாரிப்பானுங்க.
( சத்தமாக ) இல்லை சும்மா ரெஸ்ட் எடுக்கிறேன்.

வானதி : ஏன் நீங்கள் தவளை வளர்ப்பது எப்படி என்று ஒரு பதிவு போடக் கூடாது?

ஜெய்லானி : இந்த வறண்ட பூமியில் மனுசன் குளிப்பதே பெரும்பாடு. தவளை வளர்க்க குளம் வேணும், அந்த குளத்தில் தண்ணீர் வேணும்..

வானதி: அப்ப நீங்களெல்லாம் குளிக்கவே மாட்டீர்களா?
( மனதிற்குள் ) எதற்கும் ஒரு நாலடி தள்ளி நின்று கதைப்போம்.
( சத்தமாக ) சரி நான் போறேன்.

ஜெய்லானி : சரி போங்க.

*****

இமா வருகிறார்.

இமா : ஜெய், என்ன யோசனை?
வண்ணத்துப்பூச்சி வளர்ப்பது எப்படி என்று ஒரு பதிவு போடலாமே?

ஜெய்லானி : நான் எங்கே போவேன் வண்ணத்துப்பூச்சிக்கு..

இமா : அந்தக் கவலையே வேண்டாம். நானே உங்களுக்கு போட்டோ எடுத்து தருகிறேன்.

ஜெய்லானி : சரி. ஆனால் வண்ணத்துப்பூச்சி பற்றி எனக்கென்ன தெரியும்.

இமா : அதெல்லாம் நானே எழுதி, போட்டோ எடுத்து தந்துடுவேன். நீங்கள் உங்கள் வலைப்பூவில் போடுங்கள் சரியா?

ஜெய்லானி : பார்க்கலாம்.


இமா : ஹையோ ! ஜெய்லானி சரின்னு சொல்லி விட்டார். என் காமரா எங்கே? இந்த சந்தனா, அதிரா கண்ணிலே படாமல் எஸ்கேப் ஆகணும்.

சந்தனா : இமா, நில்லுங்கோ. எங்கே போறீங்க?
இமா : போகும் போது இப்படி அபசகுனமாக கேட்க கூடாது. எனக்கு ஆயிரம் வேலைகள் இருக்கும். வரட்டா.

சந்தனா : சரி. வரும்போது எங்கேயிருந்து வருவீங்க? இது எப்பூடி இருக்கு?

இமா : ம்ம்ம்.. அதிராவோடு சேர்ந்து எல்லோருமே நல்லா கதைக்கிறாங்கள். நான் போறேன்.

சந்தனா : அதீஸ், அதீஸ்...

அதிரா : என்னது?

சந்தனா : இமா எங்கேயோ போறாங்க. ஆனால் கேட்டால் குதர்க்கமாகவே பதில் சொல்றாங்க.

அதிரா : இருங்கள். காமரா இருக்கா என்று பார்த்து வரேன். கடவுளே... காமராவையும் காணேல்லை.

சந்தனா : என்னது காமராவும் மிஸ்ஸிங்கா?

இருவரும் வெளியே ஓடுகிறார்கள். அதற்குள் இமா மிஸ்ஸிங்.

அதிரா : சந்தனா, அதான் நான் எப்போதும் சொல்றது இமாவிலை ஒரு கண் வையுங்கோ என்று. இப்ப கோட்டை விட்டுட்டு நிற்கிறீங்க..

நான் எங்கே போய் தேடுவேன். அடுத்து என்ன படங்கள், பதிவு என்று தெரிந்தால் தானே நாங்களும் பதிவுகள் போடலாம்.

************************

ஜெய்லானி: எல்கே, ஏதாவது ஐடியா குடுங்களேன்?

எல்கே : என்னுடைய கோந்து ரெசிப்பி தரவா?

ஜெய்லானி : அது என்னது?

எல்கே : சரி விடுங்க. நேரமாகிறது நான் போகணும்.

ஜெய்லானி : நம்ம அப்பாவி தங்கமணியின் இட்லி படத்தை போட்டு கொஞ்சம் டெரர் குடுக்கலாம். ஆனால் தங்கமணியை ப்ளாக் பக்கமே காணவில்லை.

***********************

அதிரா : சந்து, நீங்கள் காரிலை இந்தப் பக்கம் போய் பாருங்கள். நான் மற்றப் பக்கம் போய் தேடுறேன். இமா இல்லாமல் இன்று வீடு போவதில்லை என்று சபதம் எடுங்கோ.

சந்தனா: ஹிஹி... நான் இன்னும் எல் போர்டு என்பதை மறந்தாச்சா?

அதிரா : ஓ! அது வேறா. சரி நடந்து போய் தேடுங்கோ. சந்து, பொந்து, மலை, காடு எல்லா இடமும் தேட வேண்டும். இந்த முறை கோட்டை விடப்படாது.

இருவரும் எதிர் எதிர் திசையில் ஓடுகிறார்கள்.


இது வரை ஒளிந்து நின்ற இமா வெளியே வருகிறார்.

இமா: அப்பாடா! இரண்டும் போயாச்சு. கொஞ்ச நேரம் நிம்மதியாக ப்ளாக் இல் பதிவுகள் போடலாம்.

ஜெய், எழும்புங்கோ. இந்தாங்கோ எல்லாமே டைப் பண்ணி, படங்கள் அப்லோட் பண்ணியாச்சு. உங்கள் ப்ளாக்கில் போடுங்கோ.

ஜெய்லானி : என்னது? நான் எங்கே இருக்கிறேன்?

இமா : விளையாட்டுப் போதும் எழுந்திருங்கள்.

1 மணி நேரம் கடந்த பின்னர்

இமா : ஜெய், ஏதாவது பின்னூட்டம் வந்திச்சா?

ஜெய்லானி : ம்ம்ம்.. வண்ணத்துப்பூச்சி என்ன சாப்பிடும் என்று யாரோ கேள்வி கேட்டிருந்தார்கள். நான் வாழைப்பழம் என்று பதில்....

இமா : ஜெய், நீங்கள் லூசா? வண்ணாத்துப் பூச்சி அதெல்லாம் சாப்பிடாது. நான் சொல்றதை டைப் பண்ணுங்கோ.

30 நிமிடங்களின் பின்..

இமா : ஜெய், ஏதாவது பின்னூட்டம்.

ஜெய்லானி : இல்லை.

45 நிமிடங்களின் பின்

இமா : ஜெய், ஏதாச்சும் ...

ஜெய்லானி : இல்லை

மறுநாள்
ஜெய்லானியின் ப்ளாக் - முக்கிய அறிவித்தல்.
நான் இனிமே என் ப்ளாக் பக்கமே வர மாட்டேன். என் ப்ளாக்- ஐ காலவரையின்றி மூடுகிறேன்.
நன்றி.

இந்தக் கதையில் வரும் பாத்திரங்கள் யாவும் கற்பனையே. யாரையும் குறிப்பிடுவன அல்ல.

ஆகா!!! மீண்டும் விருதுகள்



எல்கே,
LK கொடுத்த எழுத்தாளர் விருது. மிக்க நன்றி.




மேலும் ஒரு விருது.

ஆசியா அக்கா கொடுத்த விருது. மிக்க நன்றி அக்கா.
இந்த முறை பார்ட்டி எல்லாம் இல்லை. போன முறை ஆசியா அக்காவின் பிரியாணியை திருட நான் பட்ட பாடு. இந்த முறை முடிந்தால் ஜலீலா அக்காவின் பிரியாணி .... வேண்டாம். நினைக்கவே குலை நடுங்குது.