Tuesday, January 21, 2014

டமால் டுமீல்


(Image: Google)
மனைவி சாந்தியுடன் பேச்சு வார்த்தை இல்லை. கடந்த ஒரு வாரமாக பாரா முகம் காட்டிவந்தான் சுந்தர். அவள் சமைப்பதை எடுத்து சாப்பிடுவது, வேலைக்குப் போய் வருவது, தொலைக்காட்சி பார்ப்பது இவை மட்டுமே அவன் அன்றாட நடவடிக்கைகள் என்று ஆகிப் போனது.
திருமணத்தின் போது எடுத்த உறுதி மொழி என்ன ஆனது என்று சுந்தருக்கு விளங்கவில்லை. உன் இன்பத்திலும், உன் துன்பத்திலும் பங்கு கொள்வேன் என்று அக்னி சாட்சியாக செய்த சத்தியத்தினை எப்படி மறந்தாள்.
ஏன் இப்படி சின்னப்பிள்ளைத் தனமாக இருக்கிறார் என்பது சாந்தியின் கூற்று. அந்த சின்னப்பிள்ளை தனத்தால் வந்த வினை தானே இவ்வளவும். எவ்வளவு அவமானம். வேலையில் எத்தனை பேருக்கு விளக்கம் சொல்லி, சொந்தக்காரர்கள் ஆறுதல் சொல்கிறேன் என்ற சாக்கில் நமுட்டுச் சிரிப்பு சிரித்தது அவரை மேலும் கோபம் கொள்ளச் செய்தது. எல்லா கோபமும் சாந்தியின் மீது திரும்பியது. இதற்காக சாந்தி பல முறை மன்னிப்பு கேட்டும் அவன் மன்னிக்க தயாராக இல்லை.


வெடி, பட்டாசு என்றால் சுந்தருக்கு உயிர். ஊரில் பொங்கல், தீபாவளிக்கு புது துணிகள் அணியா விட்டாலும் பரவாயில்லை கட்டாயம் வெடி இருக்க வேண்டும். அணுகுண்டு, சீறுவானம், பொட்டு வெடி, சங்கு சக்கரம் என்று எல்லாமே வாங்கி, அதனை வெடிக்கும் போது ஏற்படும் சந்தோஷத்திற்கு ஈடு இணை இல்லை சுந்தருக்கு.
ஒரு முறை தகர டப்பாவில் வெடியை வைத்து, திரியை கொழுத்தி விட, அது சர்ரென்று பாய்ந்து மேலே வானம் நோக்கிப் போகாமல் பக்கத்து வீட்டினுள் போய் வெடிக்க, பக்கத்து வீட்டம்மா வந்து இவனை அறையாத குறையாக திட்டி விட்டு போன பின்னரும் இவன் சளைக்காமல் வெடி வெடித்தான்.
 அணுகுண்டு வெடி வெடிக்காமல் இருக்க, இவன் ஏன் அது வெடிக்கவில்லை என்று கைகளில் எடுக்க, இவன் எடுத்த நொடி அந்த வெடி பெருஞ் சத்தத்துடன் வெடித்தது. கைகளில் தோல் கழன்று இரவு முழுவதும் தூக்கம் தொலைந்தது.  ஆனால், அடுத்த நாளே அதெல்லாம் மறந்து வெடியுடன் கிளம்பிய அவனை அம்மா எரிச்சலுடன் பார்த்தார்கள்.


வெளிநாடு வந்த பின்னரும் வெடியைக் கண்டால் பொடியனாக மாறிவிடுவான். ஊர் போல நினைத்த நேரத்தில் வெடி கொளுத்த முடியாது. நாட்டின் சட்ட திட்டங்களுக்கு உட்பட வேண்டும். ஒரு குறிப்பிட்ட வகை வெடிகள் மட்டுமே வாங்க முடியும். அவற்றையும் ஒரு குறிப்பிட்ட இடத்தில், குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே வெடிக்க முடியும். என்ன ஒரு சிறு பிள்ளைத் தனமான சட்டம் என்று நினைத்துக் கொண்டான்.

நான் விரும்பும் வெடியை வாங்கி, நான் விரும்பும் இடத்தில், நான் விரும்பும் நேரத்தில் வெடிப்பேன் என்று நண்பர்களிடம் சவால் விட்டான்.
நீ மட்டும் அப்படி செய்தால் நாங்கள் உனக்கு 100 டாலர்கள் அன்பளிப்பாக கொடுப்போம், என்று நண்பர்கள் சொல்ல, துணிந்து செயலில் இறங்கினான் சுந்தர்.
 மனைவியின் அறிவுரை எடுபடவில்லை.
ஆள் அரவமற்ற இடம், குறிப்பாக சிறுவர்கள் இல்லாத இடம் பார்த்து தேர்வு செய்து, மாலை 7 மணி தான் சரியான நேரம் என்று நண்பர்களுக்கு தெரிவித்தான்.
குறிப்பிட்ட நாளில் சுந்தர்,  மனைவி, நண்பர்கள் புடை சூழ பார்க்கில் ஒன்று கூடினார்கள்.
நண்பர்கள், மனைவி ஆகியோர் பாதுகாப்பான தூரத்தில் மரங்களின் பின்னால் மறைந்து கொள்ள, இவன் கீழே தரையில் அமர்ந்து வெடியினை வரிசையாக அடுக்கி, திரியில் நெருப்பினை வைத்துக் கொண்டே வந்தவன் இரண்டு ஜோடி பூட்ஸ் கால்களைக் கண்டதும் திடுக்கிட்டு நிமிர்ந்தான். இரண்டு காவல் துறை அதிகாரிகள், அவர்களின் துப்பாக்கிகள் இவனை நோக்கி இருக்க.
இவன் செய்வது அறியாது நிற்க. அவர்கள் இவனை தர தரவென இழுத்துப் போய் பாதுகாப்பான தூரத்தில் நிற்க வைத்து, வெடியின் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்தனர்.
மனைவி, நண்பர்கள் என்று யாரையும் காணவில்லை.
அதன் பிறகு இவனை காவல் நிலையம் அழைத்துச் சென்று, ஏகப்பட்ட அறிவுரைகள் வழங்கி, கிட்டத்தட்ட 6 மணி நேரங்கள் அங்கேயே இருந்து அவஸ்தைப் பட்டு, வீடு வந்து சேர கிட்டத்தட்ட  அதிகாலை 3 மணி ஆகிவிட்டது.
வீட்டில் மனைவி, நண்பர்கள் காத்திருந்தார்கள். 
" சே! தூ நீங்கள் எல்லாம் ஒரு நண்பர்கள். நீயெல்லாம் ஒரு மனைவி", என்று காறித்துப்பினான். 
" அட்லீஸ்ட் எனக்கு போலீஸ் வருவதையாவது சொல்லியிருக்கலாமே அல்லது ஓடு என்றாவது ஒரு சிக்னல்..", என்றான்.
" டேய், நாங்களே போலீஸ் வந்ததை கவனிக்கவில்லை. உன் பக்கத்தில் அவர்கள் வந்த பிறகு தான் பார்த்தோம். தயவு செய்து மன்னிச்சு விடுடா. அதோடு நீ பந்தயத்தில் ஜெயிச்ச படியால் இந்தா 100 டாலர்கள்", என்று சொல்லி பணத்தினை மேசையில் வைத்துவிட்டு எஸ்கேப் ஆனார்கள்.
100 டாலர்களை எடுத்து தூள் தூளாக கிழித்து எறிந்தான். இப்ப கோபம் முழுவதும் மனைவியின் மீது திரும்பியது.
உங்களை கைது செய்தால் வழக்கறிஞ்சரை ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதால் தான் நான் மறைவில் இருந்து வரவில்லை, என்றாள் மனைவி.

துன்பத்தில் கைவிட்ட நீயெல்லாம் ஒரு மனைவி, என்று கண்கள் சிவக்க கத்தியவன் அதன் பிறகு பேசுவதை நிறுத்திக் கொண்டான். 
கைகளில் டிவி ரிமோட்டை எடுத்தவன் ஒரு சானலிலும் நிப்பாட்டாமல் பொத்தானை அழுத்திக் கொண்டே இருந்தான். ஏதோ ஒரு சானலில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் அறிகுறியாக பல வண்னங்களில் வெடித்த வான வேடிக்கைகளைக் கண்டு தன்னை மறந்து பார்க்க ஆரம்பித்தான்.