Saturday, December 7, 2013

வாங்கோ டாக்கோ (Taco) செய்யலாம்





இதற்கு தேவையான பொருட்கள்:
டாக்கோ ஷெல்
சிக்கன் (ground chicken )
லெட்யூஸ்
ப்ளாக் பீன்ஸ்
தக்காளி
வெங்காயம்
சோளம்
டாக்கோ sauce
துறுவிய சீஸ்
நான் பாவித்த டாக்கோ ஷெல்ஸ் க்றிஸ்பி ஷெல்ஸ் வகையாகும். அதனை டோஸ்டர் அவனில் சில நிமிடங்கள் ( 3 நிமிடங்கள், 350 F இல் பேக் செய்து வைக்கவும்)
சட்டியில் எண்ணெய் விட்டு, பொடியாக வெட்டிய வெங்காயம், இஞ்சி, பூண்டு போட்டு வதங்கியதும், சிக்கனைப் போடவும். உப்பு, மிளகாய்ப் பொடி ( 1/2 டீஸ்பூன் ) போட்டு நன்கு வதக்கவும். சிக்கன் ப்ரவுன் கலரில் வரும்வரை வதக்கவும். அடுப்பை அணைத்த பின்னர் டாக்கோ சாஸ் விட்டு கிளறவும்.


எல்லாப் பொருட்களையும் ரெடியாக எடுத்து வைத்தால் போதும். அவரவர் விருப்பத்திற்கேற்ப பொருட்களை டாக்கோ ஷெல்களில் நிரப்பி சாப்பிடலாம். நான் இங்கு பாவித்த சாஸ் மெக்ஸிகன் சல்சா வகையாகும். இதற்காக என்று தனியாக சாஸ் கடைகளில் கிடைக்கும். சீஸூம் மெக்ஸிகன் டாக்கோ மிக்ஸ் என்று கிடைக்கும். அது கிடைக்காவிட்டால் சாதாரண சீஸ் பாவிக்கலாம். சிக்கன் வதக்கிய போது மிளகாய் தூள், இஞ்சி, பூண்டு, வெங்காயம் சேர்ப்பது என் ஐடியா. இதெல்லாம் சேர்க்காவிட்டால் மிகவும் plainஆக இருக்கும் என்பதால் கொஞ்சம் modify செய்து ரெசிப்பி போட்டுள்ளேன்.

Saturday, November 9, 2013

யாயாவா? சுறாவா?


"சாம்பு, நேரம் 8 மணி. இன்று உனக்கு நீச்சல் வகுப்பு இருக்கு", என்ற அம்மாவின் குரலுக்கு நான் வாரிச் சுருட்டிக் கொண்டு எழும்பவில்லை. ஞாயிற்றுக் கிழமை என்பது கூட எனக்கு நினைவில் வரவில்லை. எனக்கு அந்த நீச்சல் குளத்தினை நினைக்கவே கண்கள், மூக்கு, ஏன் மூளை கூட எரிந்தது. அந்தக் குளத்தில் குளோரினை கலக்கி, தண்ணீரினை மிதமான சூட்டில் வைத்திருப்பார்கள். அங்கே போனாலே எனக்கு மூச்சுத் திணறல் ஏற்படுவது போல இருக்கும். குளத்தில் இறங்கினால் கண்களை மூடுவதா?, மூக்கினை மூடுவதா? அல்லது காதினைப் பொத்துவதா என்ற குழப்பத்தில் அழுகை வரும். அம்மாவின் கோபமான பார்வையினால் கண்ணீர் கூட கண்களின் ஓரத்தில் எட்டிப் பார்த்துவிட்டு உள்ளே ஓடிவிடும். 

"அம்மா, இன்று எனக்கு  ஒரே அலுப்பாக இருக்கு. எனவே நான் நீச்சல் பழக போகவில்லை.", என்றேன்.
" ஏன் துரை இரவு என்னத்தை வெட்டி முறிச்சீங்கள்?", என்றார் அம்மா நக்கலாக.
" அம்மா,உங்களுக்கு நீச்சல் தெரியுமா?", என்றேன்.
" இப்ப அதுவா முக்கியம். நேரம் ஆகிறது", என்று ஏனோ மழுப்ப பார்த்தார் அம்மா. 
"இல்லை. எனக்கு இப்பவே சொல்லுங்கள்", என்றேன்.
" எனக்கு நீச்சல் தெரியாது. நான் ஊரில் வளர்ந்தபோது அங்கு நீச்சல் குளம் இல்லை. கடலில் போய் தான் நீந்தப் பழகணும். ஒரு நாள் என் அப்பா என்னை கூட்டிப் போனார். நானும் மெதுவா காலை அசைத்தேன். காலில் ஏதோ பிராண்டியது போல இருந்தது. அந்தப் பக்கம் திரும்பி பார்த்தால் ஒரு சுறா...."

" யூ மீன் சார்க்",  என்றேன்  நான்.

" சுறா என்னை செல்லமாக சுண்டு விரலில் கடித்துவிட்டு, தூரத்தில் நின்று நோட்டம் விட்டுக் கொண்டே நின்றது. அன்று முடிவெடுத்தேன். நீச்சல் பழகுவது எனில்... இல்லை நீச்சலே பழகப்போவதில்லை என்று", என்று அம்மா தொடரும் முன்பு நான் குறுக்கிட்டேன்.
" அப்ப என்னை மட்டும் ஏன்.... நீச்சல் குளத்தில் சுறா வந்தால்", என்றேன்.
" அதெல்லாம் வராது. வா போகலாம்", என்றார் அம்மா. 



அன்றும் வழக்கம் போலவே நீச்சல் குளத்தில் என் நண்பர்கள் கூட்டம். அதில் சிலரோடு நான் பேசுவதில்லை. யாயா, ஜோர்டன், அலெக்ஸ் இவர்கள் தான் என் வயதினை ஒத்தவர்கள். இவர்களோடு நீச்சல் குளத்தில் சுறாவும் நின்றது. 
அம்மா, அங்கே பாருங்கள் சார்க்", என்றேன் அம்மாவிடம்.
உனக்கு எப்ப பாரு விளையாட்டு  தான். போய் குளத்தில் இறங்கு, என்றார் அம்மா. 
இல்லை. நான் மாட்டேன், என்றேன்.
"சாம்பு, உன் ஜில் ஜில் ரமாமணியை கூப்பிடவா", என்றார் அம்மா.
என் ஆசிரியையின் பெயர் ஜில். ஏனோ தெரியவில்லை அம்மா ஜில் ஜில் ரமாமணி என்கிறார்கள். நான் உடனடியாக குளத்தில் இறங்கிவிட்டேன். அங்கேயே நின்றால் ஜில் பிடித்து தள்ளிவிட்டு விடுவார்கள். பிறகு நான் தான் அவஸ்தைப்பட வேண்டும். 
"சாம்பு, நீ  இந்த இடத்திலிருந்து அங்கே அந்தக் கொடிக் கம்பம் வரை நீந்திச் சென்று, பின்னர் திரும்பி வர வேண்டும் சரியா", என்றார் ஜில்.
" நோ ஜில். அங்கே பாருங்கள் சார்க் நிற்கின்றது", என்றேன்.
"You silly, funny boy ", என்றார்.

நான் மெதுவாக நீந்தி கொடிக் கம்பம் வரை சென்றேன். சுறாவைக் காணவில்லை. திரும்பி வரும்போது தான் சுறா என் பின்னே வருவது தெரிந்தது. என்னைத் தொடர்ந்து வந்த என் நண்பர்களை சுறா ஏதாவது செய்யும் முன்னர் நான் துரித கதியில் செயல்பட வேண்டும் என்று உள்மனம் சொன்னது. 
எட்டி சுறாவின் வயிற்றில் விட்டேன்  ஒரு உதை. 

****
வீட்டில் எனக்கு பாட்டு விழுந்து கொண்டிருந்தது.
" சாம்பு, நீ எதற்காக யாயாவை உதைத்தாய்?", என்றார் அம்மா.
நான் எப்ப உதைத்தேன். அவனைக் காப்பாற்றினேன் அல்லவா?, என்று எண்ணிக் கொண்டேன். ஆனால், வாயைத் திறக்கவில்லை. அம்மா குறுக்கும் நெடுக்குமாக நடந்தார்கள். அவர் கைகளில் இருந்த லேட்டஸ்ட் போனில் எதையோ தேடினார்கள். அது ஒரு வீடியோ.


அந்த வீடியோவில் தெரிவது நானா? ஆங்! நானே தான். என் பின்னாடி வருவது யாயாவே  தான். வீடியோவில் சுறாவைக் காணவில்லை. இப்ப நான் யாயா பக்கம் திரும்பி பலம் கொண்ட மட்டும் உதைப்பது பதிவாகி இருந்தது. அப்ப சுறா எங்கே? அம்மா தான் ஏதோ எடிட் பண்ணி சுறாவை யாயாவாக மாற்றிவிட்டார்களோ? இப்படி ஆயிரம் கேள்விகள் என் மனதில். 



அதனால் தான் யாயா வீறிட்டுக் கத்தினானோ?



என் ஹீரோயிசத்தினை யாரும் பாராட்டாமல் இப்படி கரிச்சுக் கொட்டுகிறார்களே என்று எண்ணம் வந்தது. சுறாவினை சுவிமிங் பூலில் உதைத்து துரத்திய பொடியன் என்று கொண்டாட வேண்டிய என்னை கொண்டாடமல்... என்ன உலகமோ என்று நினைத்தபடி அந்த வீடியோவை 29 தடவையாக பார்க்கத் தொடங்கினேன். நீங்களும் என்னோடு பாருங்கள்.  என்னைப் போல உங்கள் கண்களுக்கும்

சுறா தெரியும் அல்லவா? கட்டாயம் தெரியும்.  என் அம்மாவிடம் சொல்லுங்கள்.






Sunday, November 3, 2013

சோளப் பொரிக்கு சண்டை போடுவியா?





அன்று வழக்கத்தினை விட வேலை பிஸியாக இருந்தது எனக்கு. அஸிஸ்டென்ட் டீச்சராக இருக்கும் எனக்கு தலைக்கு மேல் பொறுப்புகள். ஆசிரியை லீசா யாயா என்ற பொடியனுடன் மல்லுக்கட்டிக் கொண்டு நின்றார். இன்று  ஹாலோவீன் என்பதால் மாணவர்கள் வண்ண உடைகளில்.  சிலந்தி மனிதன்,  இளவரசி, செஃப், ட்ராகன், மைக்கேல்  ஜாக்ஸன் ( சப்பாத்து அணிந்து, வெள்ளைக் கலரில் காலுறை அணிந்து, அந்தக் காலுறைகள் வெளியே தெரியுமாறு கறுப்பு கலரில் pants அணிந்து.) இப்படி பல கோலங்களில் மாணவர்கள்.
" யாயா, உன் அம்மாவிடம் நேற்று ஓராயிரம் தரம் சொன்னேன் அல்லவா? ஹாலோவீன் உடைகள் வீட்டில் அணிந்து வர வேண்டும் என்று", என்றார் லீசா.
யாயா எதையும் கேட்கும் மனநிலையில் இருக்கவில்லை. சிலந்தி மனிதன் ஆடையை தலைகீழாக அணிந்து கொண்டு, ட்ராகனின் வாலை பிடித்து இழுக்க, ட்ராகன் பொடியன் கீழே விழ, லீசா டென்ஷன் ஆக.
வாசலில், எக்ஸ்கியூஸ் மீ, என்ற குரலுக்கு திரும்பினோம்.

அங்கு ஒரு இளம் பெண் நின்றார்.
லீசா அவரிடம் போய் பேசிவிட்டு என்னிடம் வந்தார்.
" இவர் ஜோர்டனின் அம்மா. இங்கு வாலண்டியராக பணி செய்ய வந்திருக்கிறார்", என்று என்னிடம் அறிமுகம் செய்த பின்னர் அவருக்கான வேலையை விளக்கி சொல்ல ஆரம்பித்தார்.
எனக்கு அந்தப் பெண்மணியை எங்கேயோ பார்த்த ஞாபகம். ஆனால் நினைவில் வரவில்லை. அவரும் என்னை உற்றுப் பார்ப்பதும் பிறகு  எங்கோ பார்ப்பதுமாக இருந்தார்.
யாயா  ட்ராகன் பொடியனிடம் இருந்து விலகி சின்டரெல்லா பெண்ணிடம் வம்பு செய்ய ஆரம்பித்து இருந்தான். சின்டரெல்லா அழ ஆரம்பிக்க அவளின் மேக்கப் கலைந்து ஓட, லீசா யாயாவை வகுப்பறையின் மூலையில் இருக்க வைத்தார்.
எனக்கு இன்னும் அந்தப் பெண்மணியை பற்றிய நினைப்பே மனம் முழுவதும். முன்பே அறிமுகமான முகம். ஆனால், அது ஒரு சிறப்பான, மனதிற்கினிய அனுபவமாக இருக்க வாய்ப்பில்லை என்று உள்மனம் சொன்னது.  ஒரு வேளை பார்க்கிங் இடத்திற்காக சண்டை போட்டிருக்க வாய்ப்பு இருக்குமோ அல்லது...என்னதான் மூளையை கசக்கியபோதும் புலப்படவில்லை.

ஹாலோவீன் உடைகள் அணிந்தவர்கள் வரிசையாக அணி வகுத்து வரவும், என்ற இன்டர்காம் அழைப்புக்கு மாணவர்கள் செல்ல, நானும் அந்தப் பெண்மணியும் மட்டும் வகுப்பறையில்.
நீயும் என்னைப் போல தொண்டர் தானா?, என்று கேட்டவர், உன்னை எங்கேயோ பார்த்திருக்கிறேன் ஞாபகம் வரமாட்டேன் என்கிறது, என்றார்.

இல்லை. நான் இங்கு வேலை பார்க்கிறேன். உன்னை எங்கேயோ.... ஆகா! ஞாபகம் வந்துவிட்டது.
கோடை காலத்தில் ஒரு நாள். நச நசவென வியர்வை. பள்ளியில் ஏதோ ஒரு கொண்டாட்டம். நான் அப்போது வேலை செய்யாமல் வீட்டில் இருந்த நாட்கள். பள்ளியில் நடக்கும் விழாக்களுக்கு தவறாமல் செல்லும் பழக்கம் எபோதும் உண்டு.

பள்ளியில் கோடை கொண்டாட்டம். வெளியில் மழை வருவதற்கான அறிகுறிகள் இருந்தமையால் ஜிம்மில் கொண்டாட்டம் என்று மாற்றினார்கள்.
ஜிம்மில் மாஜிக் ஷோ, ஃபேஸ் பெயின்டிங் என்று மாணவர்களை குஷிப்படுத்தும் பலவிடயங்கள். இடப் பற்றாக்குறை தான் பெருங்குறை. 50 பேர் மட்டும் கொள்ளக் கூடிய அறையில் 100 பேருக்கு மேல். 4 வாத்துக்கள். அவை மனிதரைக் கண்டதும் டென்ஷனாகி ஆய் போக, அதை க்ளீன் பண்ண 4 ஆசிரியைகள். எனக்கு டென்ஷன் எகிறியது. ஏற்கனவே டோக்கன் வாங்கியபடியால் வீணாக்க விருப்பம் வரவில்லை. என்ன செய்யலாம் என்று சுற்றும் முற்றும் பார்த்தபோது சோளப் பொரி ஸ்டான்ட் கண்களில் பட்டது.
கிட்டத்தட்ட 10 டாலருக்கான டோக்கன் மிச்சம் இருந்தது. சோளப் பொரி வாங்க கூட்டம் அலைமோதியது.
வரிசை நகரவே மாட்டேன் என்று அடம் பிடித்தது. கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் காத்திருந்தும் பெரிய முன்னேற்றம் இல்லை. அப்போது தான் அந்த சம்பவம் நடந்தது. ஒரு ஜோடி, இரண்டு பிள்ளைகளுடன் வந்தார்கள். வந்தவர்கள் வரிசையில் காத்திருக்கவில்லை. அவர்களாகவே ஒரு வரிசையினையை உருவாக்க, அவர்களின் பின்னே மக்கள் கூட்டம் மளமளவென சேர ஆரம்பித்தது. அந்த வரிசை நாங்கள் நின்ற வரிசையை விட வேகமாக நகர்ந்து, கிட்டத்தட்ட சோளப் பொரி கடைப்பக்கம் சென்றுவிட்டது. எனக்கு வந்த கோபத்தில் வரிசையினை உருவாக்கிய ஜோடியிடம் சென்றேன். ஆங்கிலத்தில் பயங்கர வாக்குவாதம் நடந்தது. வாத்து மேய்ச்ச டீச்சர்களும் அங்கு வர, நான் கோபத்தில் எகிற, அவர்கள் சோளப் பொரி வாங்காமல் சென்றுவிட்டார்கள்.


அந்த வரிசை உருவாக்கிய பெண்மணி தான் இவர்.

அந்த பெண்மணியை ஓரக் கண்களால் பார்த்துக் கொண்டே ஹாலோவீனுக்கு நான் வாங்கிய முகமூடியினை எடுத்து வேகமாக  மாட்டிக் கொண்டேன். அவர் கண்டுபிடிக்கும் முன்னர் என் முகத்தினை மறைத்த என் கெட்டிக்காரதனத்தினை பாராட்டிக் கொண்டேன். இனிமேல் சோளப் பொரிக்கு சண்டை போடுவியா, என்று என்னை நானே திட்டியபடியே மாணவர்கள் மத்தியில் நுழைந்து காணாமல் போனேன்.



( இது 100% கற்பனைக் கதையே )




Sunday, October 20, 2013

இனிமேல் ஒட்டும் இல்லை உறவும் இல்லை



குளிர்சாதனப் பெட்டியின் மீது ஒட்டப்பட்டிருந்த புகைப்படத்தில் என் அருமை மகளும், அதுவும் பின்னிப் பிணைந்து கிடந்தார்கள். கோபம் வந்தது.
" இதை யார் இங்கே ஒட்டினார்கள்? ", என்றாள் கோபத்துடன் சாந்தி. பதில் வரவில்லை. " சே! என்ன வாழ்க்கை, என்ன மகள்? யார் சொல்லும் கேட்பதில்லை. இந்த புகைப்படத்தினை தொடக் கூட அருவெறுப்பாக இருக்கே! ", என்று மனதினுள் முணு முணுத்தாள்.
கணவன் நந்து சிரித்துக் கொண்டே சமையல் அறையினுள் வந்தான்.
" சாந்தி டார்லிங், என்ன டென்ஷன்? ", என்றவன் சாந்தியின் முறைப்பினை பொருட்படுத்தாமல், அந்தப் புகைப்படத்தினை கைகளில் எடுத்துக் கொண்டான்.
" என் மகளைப் பார்! எவ்வளவு வீரமான பெண்ணாக இருக்கிறாள்.", என்றான் பெருமையுடன்.
" நீங்க இரண்டு பேரும் என்ன லூஸா? இன்று இரவு நான் எதுவும் சமைக்க போவதில்லை. இந்த சமையல் அறையில் ஒன்று நான் இருக்கணும் இல்லை இந்தப் புகைப்படம்... இல்லை இல்லை ", என்றவள் எரிச்சலுடன் பெட்ரூம் நோக்கிச் சென்றாள்.
அம்மாவிடம் போய் பசி என்று கேட்டால் முதுகில் சாத்திவிடுவாரோ என்ற பயத்தினால் தன் அறையினுள்ளே முடங்கி கிடந்தாள் நிலா.
நான் என்ன பெரிய கொலைக் குற்றமா செய்துவிட்டேன். ஏதோ ஒரு ஆர்வக் கோளாறில் நடந்துவிட்டது. ஏற்கனவே 18 தரம் மன்னிப்பு கேட்டாச்சு, என்று மனதினுள் நினைத்துக் கொண்டாள் நிலா. அப்பா எங்கேயோ வெளியில் கிளம்ப ஆயத்தம் செய்வதை அறிந்து கொண்டவள் ஓடிப்போய் காரினுள் ஏறிக் கொண்டாள். அப்பா ஆதரவாக அணைத்துக் கொண்டார்.
" நிலா, அம்மா இப்படி கோபப்படுவார் என்று நான் நினைக்கவில்லை", என்றார் அப்பா.
" நான் என்னத்தைக் கண்டேன் அப்பா. நீங்கள் ஏன் அந்தப் புகைப்படத்தினை குளிர்சாதனப் பெட்டியில் ஒட்டி, அவரின் டென்ஷனை அதிகமாக்கி... போங்கப்பா எல்லாம் உங்களால் வந்த பிரச்சினை", என்றாள் மகள் சினத்துடன்.
" நான் அங்கு ஒட்டவில்லை. உன் நண்பி லீசா தான் ஒட்டியிருப்பாள். சரி அதை விடு", என்றார் அப்பா.
" என்னத்தை விட அப்பா? லீசாவினால் தான் இந்த பிரச்சினை. அவள் காலையில் வந்தது, கார்னிவெல் போக வேண்டும் என்று அடம் பிடித்தது, அங்கு போய் சும்மா ரோலர் கோஸ்டரில் ஏறினோமா, இறங்கினோமா என்றிருக்காமல்... ", என்றவள் அந்த நிமிடத்திற்கே சென்றாள்.
புதிதாக முளைத்திருந்த பஞ்சு மிட்டாய் கடையில் பிங்க் கலரில் பஞ்சு மிட்டாய் வாங்கிவிட்டு நிமிர்ந்தவர்களின் கண்களில் அந்தக் காட்சி விழுந்தது. ஒரு வரிசை பாம்பு போல நெளிந்து வளைந்து ஓடியது. வரிசையின் ஆரம்பத்தில் உண்மையிலேயே ஒரு பாம்பு. மஞ்சள் நிறத்தில், நாக்கினை அடிக்கடி வெளியே நீட்டியபடி, இரண்டு கைகளால் கட்டிப் பிடிக்க முடியாத ஒரு ராட்சத உருவத்தில், பாம்பின் சொந்தக்காரன் கைகளில் தவழ்ந்து விளையாடியது. அதை அவன் வரிசையாக நின்ற சிறுவர்கள் மீது படர வி, அவர்கள் சிரித்தபடி போஸ் கொடுக்க, அதனை புகைப்படமாக க்ளிக் பண்ணி கையில் தந்தார்கள்.

நானும் பாம்பினை வைத்து படம் எடுக்கப் போகிறேன், என்று சொன்னபோது நிலாவின் அம்மா சாந்தியின் கண்களில் அனல் பறந்தது.
"நிலா, வா வீட்டுக்குப் போகலாம்.", என்றார். மகள் தன் சொல் கேளாமல் தோழியுடன் போய் வரிசையில் நின்று கொள்ள, அப்பாவும் சேர்ந்து கொண்டார்.
பாம்பினை இவளின் மேலே விட, அது மெதுவாக ஊர்ந்து, கழுத்தினை சுற்றி... நாக்கினை வேறு பழிப்பு காட்டுவது போல அடிக்கடி செய்தது பாம்பு, அப்படியே மகளுடன் பின்னிப் பிணைந்து, கால்களை சுற்றிக் கொள்ள, புகைப்படக்காரன் அதை ரசித்து க்ளிக் செய்ய... சாந்திக்கு குமட்டிக் கொண்டு வந்தது. அழுகையும் ஆத்திரமும் சேர்ந்து கொண்டது. கணவன் புகைப்படத்தினை வாங்கிக் கொண்டு தான் நகர்வேன் என்று அலம்பல் செய்ய, மகளை முறைத்தபடி, அழுகையை அடக்கியபடி நின்றாள் சாந்தி.
வீட்டுக்கு சென்ற பின்னர் அவளின் கோபம் பல மடங்கானது. மகளை குறைந்து 2 தரம் குளிக்க வைத்து, அவளின் பக்கம் போவதையே அறவே தவிர்த்தாள் சாந்தி.

" அப்பா, அம்மா ஏன் பாம்பு என்றால் இப்படி பயப்படுகிறார்கள்? ", என்றாள் நிலா.
" தெரியவில்லையே. நானும் இது வரை கேட்டதில்லையே", என்றார் யோசனையுடன்.
" ஏன் நாங்கள் அவரை ஒரு மனநல மருத்துவரிடம் அழைத்து செல்ல கூடாது? ", என்றாள் மகள்.
" நல்ல யோசனை", என்று அப்பாவும் ஒத்துக் கொண்டார்.
படுக்கை அறையில் கட்டிலில் படுத்திருந்த சாந்திக்கு கண்களை மூடினால் அந்தப் பாம்பு பழிப்பு காட்டுவதே நினைவில் வந்தது.
மகளை நல்ல ஒரு மனநல மருத்துவரிடம் கூட்டிச் செல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள். கூடவே கணவனின் மூளையினையும் சோதித்து பார்க்க வேண்டும் என்று நினைத்தபடி தொலைபேசி புத்தகத்தில் மனநலமருத்துவர்களின் எண்களை தேட ஆரம்பித்தாள்.


Saturday, July 27, 2013

வானதியின் ஆக்கங்கள்


இந்த டிசைன்கள் எல்லாமே இணைய தளங்களில் இலவசமாக எடுக்கப்பட்டவையே.




நான் தைத்த எம்ப்ராய்டரி வேலைகள். உங்களுக்காக. முதலாவது சங்கிலித் தையல். மிகவும் இலகுவான, அழகான தையல் வகை இதுவாகும். நூலினை துணியின் கீழிலிருந்து மேலாக குத்தி எடுக்கவும். படத்தில் காட்டியபடி. பின்னர் ஊசியினை நூலின் பக்கத்தில் நெருக்கமாக குத்தி சிறிது இடைவெளி தூரத்தில் ஊசியினை துணியின் மேல் கொண்டு வரவும். இப்போது முன்பே துணியின் கீழிலிருந்து மேல் கொண்டு வந்த நூலினை ஊசியினை சுற்றி மாலை போல் ( அப்பாடா விளக்கிட்டோமில்லை ) போட்டு, மெதுவாக இழுக்கவும். இங்கு மெதுவாக என்பது மிகவும் மெதுவாக என்று எடுக்கவும். பலம் கொண்ட மட்டும் நூலை இழுத்தால் சங்கிலித் தையல் கன்றாவியாக இருக்கும்.


  
 
 



அடுத்து மொட்டுக்கள் தைக்க இந்த தையல்
அழகாக இருக்கும். இது ஒரு ஸ்பானிஷ் அக்கா யூட்யூப்பில் தைத்தார்கள். ஏதோ ஒரு பெயர் சொன்னார்கள். ஞாபகம் இல்லை. முதலில் மொட்டு டிசைன் வரைந்து கொள்ளவும். டார்க் கலர் நூலினை இப்படி இந்த முனையில் இருந்து அந்த முனை வரை நேர்கோடு போல தைத்துக் கொள்ளவும்.


வேறு கலர் நூலினை அடைப்பு தையல் மூலம் மொட்டினை நிரப்பிக் கொள்ளவும்.


இப்போது படத்தில் உள்ளது போல ஊசியினை குத்தி துணியின் மேல் இழுக்கவும். பின்னர் அடைப்பு தையல் நூலினை 3 அல்லது 4 பிரிவாக பிரித்து, முதல் பிரிவின் கீழாக அதாவது முன்பு தைத்த கறுப்பு நூலின் கீழாக ஊசியினை நுழைத்து, V ஷேப்பில் மேல் நோக்கி இழுத்து மறுமுனையில் ஊசியை துணியின் கீழ் கொண்டு போனால் இந்த வகை டிசைன் கிடைக்கும்.



பிறகு ஊசியினை மறுபக்கம் குத்தி இதே போல கறுப்பு நூலின் கீழாக கொண்டு சென்று எதிர் முனையில் V ஷேப் கிடைக்குமாறு நூலினை இழுத்து துணியின் கீழாக முடிச்சுப் போட்டுக் கொள்ளவும்.






முடிச்சு தையல் ( Knot stitch )



ஊசியினை துணியின் கீழ் இருந்து மேலாக குத்தி இழுக்கவும். திரும்பவும் ஊசியினை குத்தி, சிறிது இடைவெளியில் மீண்டும் எடுக்கவும், இப்போது நூலினை எடுத்து உங்கள் விருப்பபடி 2, 3, 4... ஊசியினை சுற்றிக் கொள்ளவும். பின்னர் ஊசியினை மெதுவாக இழுக்கவும். முடிச்சு போல தையல் வரும். இப்போது ஊசியினை எதிர் பக்கமாக ( உங்களை நோக்கி ) இழுத்து துணியின் கீழே குத்தி இழுக்கவும். இந்தச் சிறுமியின் தொப்பியில் இருப்பது முடிச்சு தையல் தான். சிறுமியின் பாவாடை, தொப்பி சங்கிலித் தையலும், Bee க்கு அடைப்பு தையலும் பயன்படுத்தினேன். இதில் பயன்படுத்தியுள்ள  cross stitch , ஹெர்ரிங் போன், நரம்பு தையல், ரன்னிங் ஸ்டிச் போன்ற தையல் வகைகள்..... ( தொடரும் )








Saturday, April 20, 2013

One Way Ticket to Mars!


நான் படிக்கும் பள்ளியில் கட்டுரைப் போட்டி. தலைப்பு "  One Way ticket to Mars   ". இதெல்லாம் ஒரு தலைப்பா? என்று நினைத்து மலைத்துப்போனேன். புதன் கிரகத்துக்கு போக மட்டும் டிக்கெட். திரும்பி வரமுடியாதாம். அங்கே நீங்க அனுப்ப நினைக்கிறவர்கள் உங்கள் அப்பா, அம்மா, பாட்டி, மாமி... உங்கள் வீட்டு நாய், பேய் இப்படி எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், அவர்கள் அங்கே போவதால் புதன் கிரகத்துக்கு நன்மை அல்லது பூமிக்கு நன்மை இப்படி இரண்டில் ஒன்று பற்றி கட்டாயம் குறிப்பிட்டாக வேண்டுமாம். சும்மா சல்லிக்காசு பெறாத காரணங்கள் எல்லாம் குறிப்பிடாமல் ஏதாவது சுவாரஸ்யம் கலந்து எழுதுபவர்களுக்கு முதல் பரிசு உண்டு. அதாவது என் அம்மா அங்கே போனால் நல்ல ஒரு உணவகம் ஆரம்பித்து ஓகோ என்று வருவார்கள் என்றெல்லாம் தமாஷாக எழுத கூடாதாம். எனக்கும் அம்மாவை கற்பனைக்கு கூட அப்படி அனுப்ப மனம் ஒப்பவில்லை. அப்பா கண்டிப்பானவர் தான். ஆனால், புதன் கிரகத்துக்கு அனுப்பும் அளவுக்கு அப்படி ஒன்றும் குரூரம் நிறைந்தவர் இல்லை. அதோடு அவருக்கு அம்மா பக்கத்தில் இல்லாவிட்டால் கையும் ஓடாது, காலும் ஓடாது. புதன் கிரகத்தில் போய் அவர் சாப்பாட்டுக்கு என்ன செய்வார், என்று நினைப்பு வர அவரையும் என் லிஸ்டில் நீக்கிவிட்டேன். அடுத்து நான். என்னால் வீட்டுக்கே ஒரு பிரயோசனமும் இல்லை, இதில் புதன் கிரகத்தில் என்னத்தை கிழிக்கப் போகிறேன் என்று நினைத்து என்னை நானே எலிமினேட் செய்து கொண்டேன். எங்கள் வீட்டு நாய் ஜிம்மி. சே! அது அங்கே போய் கண்ட, நின்ற இடமெல்லாம் மூச்சா மட்டுமே போகும். ஜிம்மியால் ஒரு நன்மையும் விளையப்போவதில்லை.

என் மாமி, சித்தி, பெரியம்மா இப்படி எல்லோரையும் எலிமினேட் செய்து கொண்டே வந்ததில் எனக்கு யாரை அனுப்புவது என்ற குழப்பம் மட்டுமே மிச்சம் இருந்தது. முக்கியமான ஒரு ஆளை எப்படி மறந்து போனேன் என்று எனக்கு அன்று மதியம் வரை விளங்கவேயில்லை. என் அப்பா என்னை முடி திருத்தகம் அழைத்துப் போனார். அங்கிருக்கும் பார்பரை அனுப்பலாமா, என்ற யோசனையும் வந்தது. அவர் தான் புதன் கிரகம் போக சரியான ஆள் என்று நினைத்துக் கொண்டேன். இவர் அங்கே போய் எல்லோருடைய முடிகளையும் வெட்டி, திருத்தி, ஷேவிங் செய்து... அப்பாடா எழுத எவ்வளவு இருக்கு என்று மகிழ்ந்து போனேன். அப்ப தான் 'படார்' என்று யாரோ கதவினை தள்ளிக் கொண்டு உள்ளே வந்தார்கள். வந்தவர் என் சித்தப்பா. எப்பவும் மப்பில் இருப்பவர்.


உள்ளே வந்த என் சித்தப்பா பயங்கர மப்பில் இருந்தார். என் சித்தப்பாவும், பார்பரும் ஏதோ ஒரே தட்டில் சாப்பிட்டு வளர்ந்தவர்கள் போல கட்டி அணைத்து குசலம் விசாரித்துக் கொண்டார்கள். இருவரும் சேர்ந்து குடிப்பவர்கள் என்ற உண்மை எனக்குத் தெரியாது அல்லது அந்த உண்மை இது வரை யாருக்கும் தெரியாதோ, என்பதும் விளங்கவில்லை. என் சித்தப்பரையும் சேர்த்து கிட்டத்தட்ட 12 பேர் இருந்தார்கள். நேரம் ஆக ஆக என் சித்தப்பா பொறுமை இழந்து,  டைனோசர் போல உறுமிக் கொண்டே இருந்தார். கட்டாயம் முடி திருத்தகம் வந்து தான் அவரின் முடியை வெட்ட வேண்டும் என்ற கட்டாயம் அவருக்கில்லை. இருந்தாலும் பாதி சொட்டைத் தலையுடன் நானும் சலூன் போகிறேன் ஆக்கும் என்ற வெட்டி பந்தாவுக்காக வந்திருந்த அவரை நினைக்க எனக்கு கோபம் வந்தது.

நான் வந்து எவ்வளவு நேரம் ஆச்சு?, இப்ப எனக்கு ஒரு பதில் சொல்லிட்டு அவன் தலையில் கை வை, என்று எகிறினார் சித்தப்பர்.
இப்ப தானே வந்தீங்கள். உங்கள் முறைக்கு காத்திருக்க வேண்டாமா?, என்று பார்பர் பொறுமையாக சொன்னார். 
பொறுமையை பற்றி நீ எனக்கு பாடம் நடத்தியது போதும். வந்து எனக்கு ஒரு தீர்வு சொல், என்றார் சித்தப்பா. 
முடி திருத்தகத்தில் மற்றவர்கள் இருக்கிறார்கள் என்ற  யோசனை கூட இல்லாமல் சித்தப்பா ஏக வசனத்தில் கத்த தொடங்கினார். டேய்! நேற்று நீயும் நானும் சேர்ந்து குடிச்சோமே நினைவிருக்கா? நீ எனக்கு தெரியாமல் மேலதிகமாக ஒரு கப் திருட்டுத்தனமாக குடிச்சு, என்னிடம் மாட்டி, செருப்பு கூட இல்லாமல் நீ ஓட, நான் விரட்ட, நீயெல்லாம் ஒரு ஆள். உனக்கெல்லாம் ஒரு கடை என்று காறித் துப்பினார் சித்தப்பா. 
" போடா வெளியே", என்று வெளியே தள்ளி கதவை சாத்தினார்கள் அங்கிருந்தவர்கள்.
இந்த லட்சணத்தில் என் சித்தப்பாவுக்கு திருமண ஏற்பாடுகள் செய்கிறார்கள். இப்ப நான் ஒரு முடிவுக்கு வந்துவிட்டேன். புதன் கிரகத்துக்கு அனுப்ப ஏற்ற ஆள் என் சித்தப்பாவே தான். 

நான் என் சித்தப்பாவை புதன் கிரகத்துக்கு அனுப்ப ஆவலாக இருக்கிறேன். அவர் போவதால் புதன் கிரகத்துக்கு எதுவும் நன்மை நடக்குமா என்று காலம் தான் பதில் சொல்ல வேண்டும். ஆனால், பூமியில் அவர் இல்லாவிட்டால் ஒரு அப்பாவி பெண்ணின் வாழ்வு காப்பாற்றப்படும். அவரின் வருங்கால சந்ததி காப்பாற்றப்படும். எனவே என் சார்பில், என் குடும்ப உறுப்பினர்கள் சார்பில் என் சித்தப்பாவை நாங்கள் புதன் கிரகத்துக்கு அனுப்ப ஆவலாக இருக்கிறோம். நீங்கள் கட்டாயம் அவர் திரும்பிவராமல் இருக்க உறுதி அளிக்க வேண்டும்..... இப்படியே விரிந்தது என் கட்டுரை.


இப்ப சொல்லுங்கள் முதல் பரிசு எனக்கு கட்டாயம் கிடைக்கும் அல்லவா?









Saturday, February 9, 2013

என் பொருட்கள் ( தொடர்பதிவு )


என் நண்பி ஆசியா அக்கா எழுத அழைத்த தொடர்பதிவு. இப்பெல்லாம் நான் மிகவும் பிஸியோ பிஸி. வேலை, வீட்டு வேலையென்று பம்பரமாக சுழல்வதால் எழுத நேரம் கிடைப்பது குறைவு. ஆனால், ஆசியா அக்கா தேர்ந்தெடுத்த  தலைப்பு மிகவும் வித்யாசமாக இருப்பதால் எழுதியே ஆகவேண்டும் என்று எழுதுகிறேன். சரி இப்ப என்னிடம் இருக்கும், என்னைவிட்டு பிரியாத பொருட்களைப் பார்ப்போம். நிறைய பொருட்கள் இருந்தாலும் எல்லாவற்றையும் இங்கே பட்டியல் இடமுடியாது அல்லவா. படிப்பவர்களுக்கும் இதென்னடா சோதனை என்று நினைச்சாலும்...நீங்க அப்படி நினைத்தாலும் பரவாயில்லை. வாங்கோ.. வந்து பார்த்துவிட்டு கட்டாயம் இரண்டு வார்த்தை சொல்லிட்டு போகவேண்டும்.
முதலாவது இருக்கும் கை கடிகாரம் என் கணவர் எனக்கு 1999 மாசி மாதம், 14ந் திகதி அன்பளிப்பாக கொடுத்தது. அதாவது திருமணத்திற்கு முன்பு. அதை நான் விட்டுப் பிரிவதில்லை. தங்க கலரில் அழகா மின்னும் எந்தப் பொருட்களுக்கும் எப்போதும் மதிப்பு அதிகம் தான் அல்லவா!

அடுத்து இருப்பது ஸ்கார்வ்ஸ். அதுவும் என் கணவர் கொடுத்தது தான். வருடம், திகதி எல்லாம் மேலே கைகடிகாரம் கொடுத்த அதே நாள், திகதி தான். ஒரு நாள் கூட அணிந்ததில்லை. அந்தக் கலர், டிசைன் மிகவும் பிடிக்கும்.


அடுத்து இருப்பது என் மகன். 3 வயதில் எடுத்த படம். இந்த  படம் Hersheyஇல் அவர் வேலை செய்த போது எடுத்த படம். சீ! தூ! நீயெல்லாம் ஒரு அம்மாவா? என்று யாரும் காறித்துப்ப வேண்டாம். அவர் வேலைக்குப் போய் சம்பளமாக பெற்றது ஒரு பை நிறைய ஹேர்ஸி சாக்லேட்டுக்கள் தான். கோகோ பீன்ஸ் வறுத்து, அரைத்து, பட்டர் மிக்ஸ் செய்து, ஒரு மெஸினில் ஊற்றினால் என்று ஏதெதோ செய்யச் சொன்னார்கள் அங்கிருந்தவர்கள். வேலை தொடங்கும் முன்னர் அணிவிக்கப்பட்ட அடையாள அட்டை தான் இது. வேறு ஒரு மெஸின் வழியாக அலுமினிய பேப்பர் சுற்றப்பட்ட சாக்லேட்டுக்கள் வர  அதை பொதியாக கட்டிக் கொடுத்தார்கள்.


அடுத்து இருப்பது பிரேஸ்லட். எனக்கு மிகவும் பிடிக்கும் கலரில். இப்பெல்லாம் தங்க நகைகளை விட இப்படி விலைகுறைவான அணிகலன்கள் தான் மிகவும் பிடிக்கும்.


அடுத்து இருப்பவை என் பிள்ளைகள் வரைந்த ஓவியங்கள். முயல் என் மகளின் கை வண்ணம். என் மகளுக்கு கை வேலைகளில் ஆர்வம் அதிகம். மீதிப்படங்கள் என் மகன் வரைந்தவை. இது வரை பிள்ளைகள் வரைந்தவை நூற்றுக் கணக்கில் இருக்கு. எதையும் குப்பையில் எறிந்ததில்லை. எல்லாவற்றையும் பத்திரமாக வைத்திருக்கிறேன்.






சரி இவ்வளவு நேரமும் என்னிடம் இருந்த பொருட்களைப் பற்றிய சந்தோஷமான விஷயங்களைப் பார்த்தோம். இப்ப என்னிடம் இருக்கும் பொருள்... அதாவது கிட்டத்தட்ட 15 வருடங்களாக இருக்கும் ஒரு நறுமணக் குப்பி பற்றி சொல்லப் போகிறேன். இது என் உறவினர் பெண் அணியும் நறுமணப் பொருள். வாசனை சூப்பராக இருக்கும். அவர் இதை அணிந்து வந்தால் எனக்கு மிகவும் ஆசையாக இருக்கும். என் உறவினர் பெண் வந்தால் வீடு முழுவதும் இனிய நறுமணம் வீசும். அவர் என்னை ஒரு நாள் கடைக்கு கூட்டிச் சென்றார். கடையில் இந்த நறுமணக் குப்பியை வாங்கி என்னிடம் கொடுத்தார். நான் எங்காவது வெளியில் கிளம்பும் போது கொஞ்சமே கொஞ்சம் எடுத்து பூசிக் கொள்வேன். 2001இல் என் உறவினர் பெண் அகால மரணமாகிவிட்டார். 29 வயதில் மரணம். மிகவும் கவலையாக மனமுடைந்து போனேன். அதோடு இந்த வாசனை திரவியம் பூசுவதை நிறுத்திக் கொண்டேன். இந்தக் குப்பியை எறியவும் மனமில்லாமல் எங்கோ ஒரு மூலையில் வைத்துவிட்டேன். ஒரு நாள் அறையினுள் சென்றபோது இனிய மணம் வீசியது. கட்டிலில் என் மகள் இந்தக் குப்பியை எங்கேயோ கண்டுபிடித்து, மூடியினை திறந்து விளையாடிக் கொண்டிருந்தார். அவரிடம் நைஸாக பேச்சுக் கொடுத்தபடி மூடியினை மூடி கண்காணாத இடத்தில் வைத்தபின்னர் தான் நிம்மதியாக இருந்தது.



இவை தவிர என் அண்ணா, அப்பா, அம்மா, தங்கை, மாமா, மாமி கொடுத்த பொருட்கள் என்று என் லிஸ்டில் நிறைப் பொருட்கள் உள்ளன. என்னிடம் யார் எதை அன்பாக கொடுத்தாலும் அந்தப் பொருளை வருடக்கணக்கில் வைத்திருப்பேன்.
இந்த தொடர்பதிவை எழுத நான் அழைப்பது அஞ்சு, மகி, அதிரா, இமா, கிரி, ஸாதிகா அக்கா. நேரம் கிடைத்தால் எழுதுங்கள் எல்லோரும். எழுத நேரம் இல்லையென்றால் நான் கோபிக்க மாட்டேன்.












Monday, January 21, 2013

மீண்டும் சாம்பு


என்னை நினைவிருக்கா? நான் தான் சாம்பு என்கிற சாம்பசிவம். நான் பள்ளி போகத் தொடங்கியபிறகு பிஸியாகிவிட்டேன். இப்ப உங்கள் எல்லோருக்கும் பள்ளியில் நடந்த கதை ஒன்று சொல்லப் போகிறேன். இது ஒன்றும் பெரிய சாதனைக் கதை அல்ல என் வேதனைக் கதை. யாரிடமாவது என் பாரத்தை இறக்கி வைத்தால் நல்லது போல இருக்கு.
சரி இப்ப கதைக்கு வருவோம். என் ஆசிரியையின் பெயர் திருமதி. லீசா. நல்லவர் தான். குறையொன்றும் சொல்வதற்கில்லை. பள்ளிக்கு போகத் தொடங்கி ஒரு 3 நாட்கள் இருக்கும். எனக்கு ஒரு நாள் வயிறு  கொஞ்சம் சரியில்லை. வீட்டிலேயே அம்மாவிடம் சொன்னேன்.  நான் சொல்லி அவர் எப்ப கேட்டார். அதெல்லாம் ஒன்றும் இல்லை. நீ கிளம்பு, என்று என்னை பள்ளியில் இறக்கிவிட்டார்.

முதல் நாள் சாப்பிட்ட நண்டுக் கறி தன் வேலையை காட்ட ஆரம்பித்து இருந்தது. பள்ளி போய் சிறிது நேரத்தில் ஏதோ ஒரு மணம் என் பக்கம் இருந்து வருவதாக கூறி மாணவர்கள் ஓட்டம் பிடித்தார்கள். எனக்கும் ஏதோ ஒரு உணர்வு ஆனால் என்னவென்று விளங்கவேயில்லை. லீசா வந்தார். என்ன சாம், ஆய் போய்ட்டியா?, என்றார். நான் பாத்ரூம் போகாமல் அப்படியே நின்ற நிலையில் என் வேலையை முடித்து இருந்ததை அப்ப தான் உணர்ந்தேன். லீசா பள்ளி நேர்ஸிடம் என்னை அனுப்பினார்.

சாம், உன்னிடம் மாற்று துணிகள் ஏதாவது உன் லாக்கரில் இருக்கா?, என்று கேட்டார் நேர்ஸ். நான் என்னத்தைக் கண்டேன். அவமானம் ஒரு பக்கம். போட்டிருந்த துணிகளை அவிழ்த்து எறிந்துவிட்டு வேறு புது துணி அணிய வேண்டும் என்ற எண்ணம் தவிர எதுவும் வரவேயில்லை. என் லாக்கரில் மாற்று துணிகள் எதுவும் இல்லை என்று லீசா நேர்ஸூக்கு தகவல் அனுப்பினார். நேர்ஸ் தன்னிடம் இருந்த மூட்டையினை பிரித்து ஏதோ ஒரு செட் ஆடைகள் எடுத்தது கலங்கிய கண்கள் ஊடாக மங்கலாகத் தெரிந்தது. அதன் பிறகு அவர் என் ஆடைகளை களைந்து சுத்தம் செய்தார். அவருக்கு நல்ல பொறுமை தான். என் அம்மாவாக இருந்தால் முதுகில் 2 போட்டிருப்பார்கள். என்னை சுத்தம் செய்து, எனக்கு வேறு ஆடைகள் அணியச் செய்தார். என் கைகளை சுத்தமாக கழுவச் செய்தார்.


அதன் பிறகு என் அம்மாவை தொலைபேசியில் அழைத்தார் நேர்ஸ்.
"ஹலோ சாம்புவின் அம்மாங்களா? எப்படி இருக்கிறீங்க?, என்று நலம் விசாரிப்புகளுக்கு பிறகு தொடர்ந்தார். உங்க மகன் இன்று பள்ளியில் ஆய் போய்ட்டார். அவருக்கு மாற்று துணிகள் கொடுத்து, அவரை சுத்தம் செய்து... ஒன்று சொல்ல மறந்துட்டேன் என்னிடம் ஆண் குழந்தைகள் அணிவதற்கு ஏற்ற உள்ளாடைகள் கை வசம் இல்லை. எனவே பெண்கள் அணியும்....."
என்னது பெண்கள் அணியும் உள்ளாடையா? என்ன கொடுமை இது? மெதுவாக என் காற்சட்டையினை கிளப்பி பார்த்தேன். என் தங்கையின் உள்ளாடை போல பூக்கள், சின்டரெல்லா படம் அச்சிடப்பட்டிருந்தது. என்ன அவமானம்!
ஜிம்மில் கீழே விழுந்து மூக்கு அடிபட்டு இரத்தம் ஒழுக வந்து நின்ற ஒரு பொடியன் அவன் வேதனையை மறந்து கெக்கே பிக்கே என்று சிரித்தான். இவனுக்கு இன்னும் வேணும், என்று மனதினுள் சபித்துக் கொண்டேன்.

என் அம்மா என்ன சொன்னார்கள் என்று நான் கேட்கவில்லை. இன்று  வீடு போனதும்... வீடு போகவே நடுக்கமாக இருந்தது. என் அம்மாவுக்கு விளக்கம் சொல்ல என் நாக்குத் தள்ளி விடும். வேண்டாத தெய்வம் இல்லை. ஆனால், பாருங்கள் அன்று பள்ளி முடிந்து என்னை அழைக்க வந்தவர் என் அப்பா தான். அப்பா என்னிடம் எதுவும் கேட்கவில்லை. வீடு போனதும் அவரே என்னை குளிக்க வைத்து, வேறு ஆடைகள் மாற்றி, என் பழைய துணிகளை அலசி, என் உள்ளாடையை சிறிது நேரம் உற்று நோக்கினார், ஆனால் என்னிடம் எதுவுமே கேட்கவில்லை.
மாலை 5 மணி அளவில் அப்பா ஒரு பெட்டியினை எடுத்து, அதில் அவரின் துணிகளை அடுக்க ஆரம்பித்தார். அம்மா இன்னும் வேலையால் வரவில்லை.
" அப்பா, இனிமேல் இப்படி செய்யமாட்டேன். நீங்கள் அதுக்காக வீட்டை விட்டு போக வேண்டாம்", என்றேன்.
" இல்லடா செல்லம். அப்பா இன்று வேலை விடயமாக வெளியூர் போறேன். பள்ளியில் நடந்தது ஒரு விபத்து. அதைப் பற்றி நாங்கள் மறந்துவிடுவோம் சரியா?", என்றார் என்னை அணைத்தபடி.
நல்ல அப்பா தான். ஆனால், அம்மாவை நினைத்தால் குலை நடுக்கமாக இருந்தது. நான் ஒரு முடிவுக்கு வந்துவிட்டேன். என்ன என்கிறீர்களா? நானும் அப்பாவுடன் வெளிநாட்டுக்கு  போய்விட்டால் அம்மாவிடம் இருந்து தப்பிவிடலாம். நான் வெளிநாட்டில் இருந்து திரும்பி வரும்போது அம்மா அதைப் பற்றி மறந்து போயிருப்பார்கள்.
என் எண்ணத்தை செயலாக்க விரைந்தேன்.
"அப்பா,  நீங்கள் இந்தப் பையை விட கொஞ்சம் பெரிய பையாக எடுத்தால் நல்லது என்பது என் கருத்துப்பா", என்றேன்.
அப்பாவின் சிரிப்பு அடங்க சில நிமிடங்கள் ஆனது. நான் கடுப்புடன் நின்றேன்.
" பெரிய பை எதுக்கு சாம்பு?", என்றார் அப்பா.
" என் துணிகளையும் எடுத்து வைக்கிறேன். நானும் உங்களோடு வந்தே தீரூவேன்", என்றேன்.
அம்மா வரும் நேரம். அதற்குள் கிளம்பினால் நல்லது. ஆனால், அப்பா கணிணியில் பிஸியாகிவிட்டார். அடுத்தவர் வேதனை தெரிந்தால் தானே இவருக்கு என்று நினைத்தபடி, என் வசம் இருந்த சிறிய பையினுள் என் துணிகளை அடுக்கத் தொடங்கினேன். என் பையினை அப்பாவின் பையின் பக்கத்தில் வைத்துவிட்டு, சோஃபாவில் அமர்ந்து கொண்டேன். அப்பாவின் மீது ஒரு கண்ணும், டிவியில் ஒரு கண்ணும், அம்மா வருகிறார்களா என்று பதைபதைத்தபடி காத்திருந்தேன்.
காத்திருத்தல் சுகமானது என்று யாரோ ஒரு கவிஞர் பாடியிருக்கிறாராமே. என் விடயத்தில் மிகவும் கொடுமையாக இருந்தது.
" சாம்பு, எழுந்திரு. ஸ்கூல் போக வேணும்", என்ற குரலுக்கு எழும்பினேன்.
என் பை அங்கேயே இருந்தது. அப்பாவின் பையை காணவில்லை. அப்பா மீது கோபம் வந்தது.
என்ன அதிசயம்?! அம்மா என்னை எதுவும் கேட்கவில்லை. ஆனால், எனக்கு பள்ளிபோக தயக்கமாக இருந்தது.
அம்மாவிடம் மெதுவாக சொன்னேன்.
" சாம்பு, தவறு செய்வது மனித இயல்பு. அதுக்காக அதையே நினைத்து வருந்தி, அங்கேயே தேங்கி நின்றால்...", என்று அவரின் பிரசங்கத்தை ஆரம்பித்து இருந்தார்.
சரி. நான் பள்ளிக்கு போக நேரமாகிவிட்டது. நீங்களும் எல்லோரும் போய் வாருங்கள். மீண்டும் சந்திப்போம்.


( http://vanathys.blogspot.com/2010/06/blog-post_07.html
http://vanathys.blogspot.com/2010/07/blog-post_13.html )