Saturday, March 5, 2011

ஆபிரகாம் லிங்கன் வீட்டுக்கு வருகிறார்


Abraham Lincoln Comes Home

சில வாரங்களின் முன்பு நூலகத்தில் சில புத்தகங்கள் பிள்ளைகளுக்காக எடுத்தேன். அதில் ஒன்று தான் ஆபிரகாம் லிங்கன் வீட்டுக்கு வருகிறார் என்ற புத்தகம். என் மகனுக்கு ஆபிரகாம் லிங்கனை மிகவும் பிடிக்கும். புத்தகத்தை கண்ட உடனே படிக்க ஆரம்பித்து விட்டார். முதலில் எனக்கு அந்தப் புத்தகத்தின் மீது பெரிய ஈர்ப்பு ஏற்படவில்லை. படங்கள் அழகா இருந்தமையால் புரட்ட ஆரம்பித்தேன்.

ஒரு பொடியன், அவன் தந்தை இருவரும் குதிரை வண்டியில் போகிறார்கள். கும்மிருட்டு. வண்டியில் கொழுவப்பட்டிருந்த லாந்தர் மட்டுமே ஒரே ஒரு வெளிச்சம். வானம் எங்கே தொடங்குகிறது நிலம் எங்கே முடிகிறது என்று தெரியாத இருள். அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கனை பார்க்க சென்று கொண்டிருந்தனர் இருவரும். சிறுவனுக்கு லிங்கனை மிகவும் பிடிக்கும். அவரோடு பேச விருப்பம்.

சிறிது நேரத்தில் புகையிரத நிலையத்தினை அடைகிறார்கள். அங்கே வேறு பல மக்களும் காத்திருக்கிறார்கள். தூரத்தில் வயல் வெளிகளுக்கு மத்தியில் புகையிரத வண்டி வருவது தெரிகிறது. கூடியிருந்த மக்கள் நெருப்பு மூட்டி, தீப்பந்தங்கள் ஏந்தியபடி காத்திருக்கின்றார்கள். புகையிரத வண்டி அருகில் வருகிறது. தீயின் ஜுவாலையினால் அந்த இடம் ஜொலிக்கிறது.

லிங்கன் கடைசி பெட்டிக்கு முன்னாடி இருக்கும் பெட்டியில் வருவதாக ஊரார் பேசிக் கொண்டார்கள். புகையிரத வண்டியின் முன்பு ஜனாதிபதியின் படம் மாட்டியிருந்தார்கள். பொடியன் ஆவலாக காத்திருந்தான். புகையிரத வண்டி சில நொடிகள் நின்று, கடந்து செல்கிறது. பொடியனின் அப்பாவின் கன்னங்களில் கண்ணீரினை முதன் முறையாக காண்கிறான். ஆபிரகாம் லிங்கனின் உடல் அடங்கிய பேழையினை சுமந்து சென்ற அந்த வண்டி பல ஊர்கள் வழியாக சென்று இறுதியில் அவரின் சொந்த ஊருக்கு சென்றடைகிறது.

கதை தொடங்கும் போது அந்தச் சிறுவன் ஆபிரகாம் லிங்கனை சந்திக்க போவது போல தொடங்கி இறுதியில் அவரின் இறுதி ஊர்வலம் என்று முடித்திருந்தார்கள். படித்து முடித்த பின்னர் கொஞ்ச நேரம் கவலையாக இருந்தது.

என் மகன் படித்து முடித்த பின்னர் ஒரு பேப்பர் எடுத்து லிங்கனை வரைய ஆரம்பித்து விட்டார். வரைந்து முடித்த பின்னர் என் கண்களை என்னால் நம்பவே முடியவில்லை. முறையான வரைதல் பயிற்சி இல்லாமல் என் மகன் வரைந்த ஓவியம் இது தான்.

என் மகனை ( 7 வயது ) திரும்ப வரைய வைத்து, வீடியோ எடுத்து, YouTube இல் போட்டேன். முதல் முறை வரைந்த படத்திற்கும் இதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருந்தாலும் இரண்டுமே அழகு தான்.

Tuesday, March 1, 2011

சில ஆச்சரியங்கள் ( பாகம் 3 )

நேபாளத்தில் குளிர் மிகவும் அதிகமாக இருக்கும் காலங்களில் போக்குவரத்து ஸ்தம்பித்து விடும். மலைப் பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு அடிப்படை தேவையான உணவுப் பொருட்களை சப்ளை செய்வது பெரிய சவாலான வேலை. இதற்காக அமெரிக்காவிலிருந்து 3 ட்ரக் ( லாரி ) டிரைவர்கள் சென்று, அங்கு மலை மீது இருக்கும் மக்களுக்கு உணவுப் பொருட்கள், மற்றும் அத்தியாவசியமான பொருட்களை கொண்டு போய் கொடுப்பதை தொலைக்காட்சியில் காட்டினார்கள். மிகவும் கரடு முரடான பாதைகள், திடீரென்று வெள்ளம் வரும் இடங்கள், ரோடு போட்டார்களா இல்லையா என்று தெரியாத அளவிற்கு பாறைகள் நிறைந்த இடங்களில் இவர்கள் லாரி ஓட்டுகிறார்கள். இவர்களின் உதவியாளர்கள் ஆம், இல்லை என்பது போன்ற அடிப்படை ஆங்கில அறிவுடன் காணப்பட்டார்கள்.

ஒரு முறை இந்த அமெரிக்கர் ஒருவரின் லாரியின் பக்கவாட்டுக் கண்ணாடியை ஒரு பேருந்து உடைத்து விட்டது. கண்ணாடியை உடைத்த பேருந்து நிற்காமல் சென்றது. கோபம் கொண்ட வெள்ளையர் பேருந்தை விரட்டிச் சென்றார். ஒரு கட்டத்தில் பிடித்தும் விட்டார். ஆனால் பேருந்து ஓட்டி தன் மீது தவறு இல்லவே இல்லை என்று சாதித்தார். இறுதியில் போலீஸ் ஸ்டேஷன் சென்றார்கள். போலீஸ் சமரசம் செய்து வைக்கிறேன் என்று சொல்லி வெள்ளையரிடம் சில நூறு ரூபாய்களை பிடுங்கிக் கொண்டது. நொந்து போய் நின்ற வெள்ளையரிடம் பேருந்து ஓட்டுநரும் சில நூறுகளை கறந்து விட்டார்.

போன மாசம் என் ட்ரக் ஒரு பேருந்தில் மோதிய போதும் நான் தான் அவனுக்கு பணம் அழுதேன். இன்று என் ட்ரக்கில் பேருந்து இடித்த போதும் நான் தான் பணம் குடுத்தேன். என்ன நாடோ போங்கள் என்று நொந்து போய் சொன்னார். இதுக்கே இப்படி நொந்து போய் விட்டார் லாரி ஓட்டுநர். தினமும் லஞ்சம் குடுத்தா தான் பல வேலைகள் நடக்கும் என்பது இவருக்கு தெரியாது பாவம்.

*************************************

பொழுது போகாமல் சானல் விட்டு சானல் தாவிக் கொண்டு இருந்தேன். எந்த நிகழ்ச்சியும் மனதில் ஒட்டவேயில்லை. ஏதோ ஒரு சானலில் விமானநிலையத்தில் நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்களைக் காட்டினார்கள். குடித்து விட்டு விமானத்தில் ஏற முற்பட்டவரை தடுத்து, அவரை வீட்டுக்கு அனுப்புவது, சண்டித்தனம் பண்ணுறவங்களை எப்படி அடக்குவது, பாஷை தெரியாத பாட்டிக்கு துரிய கதியில் யோசித்து, அவருக்கு வேண்டிய உதவிகள் செய்தது இப்படிப் பல சம்பவங்கள்.

ஒரு பெண்மணி ஆஃப்ரிக்கா கண்டத்திலிருந்து கருவாட்டுக் கூடையோடு வந்து இறங்கினார். கடுப்பான கஸ்டம்ஸ் அவரின் கூடையை சோதனை செய்ய, அதிலிருந்து பெரிய வண்டுகள் துள்ளிக் குதித்து, கும்மாளமிட்டன. ஏதோ ஒரு ஸ்ப்ரே அடித்து அவற்றைக் கொன்ற பிறகு கருவாட்டுக் கூடையினையும் கடாசி விட்டார்கள். அந்தப் பெண்மணி பரிதாபமாக பார்த்துக் கொண்டு நின்றார்.

வேறு ஒருவரை விமானத்திலிருந்து இறக்கி விட்டார்கள். காரணம்: அவர் பக்கத்தில் இருந்தாலே கப் அடிக்குதாம் என்று சக பயணிகள் புகார் கூறினார்களாம்.
அவர் ஒரு அப்பாவி போல விளக்கம் கேட்க, அங்கு வேலை பார்த்தவர் சொன்னார், " போய் குளிச்சு, அக்குள் பகுதியில் நல்லா ஸ்பிரே பண்ணிட்டு, திரும்ப வாங்க" என்றார்.
ப்ளேன் போய்டுமே என்றார் வெள்ளாந்தி.
பரவாயில்லை. நீங்க போய் குளிச்சுட்டு வாங்க என்றார் அதிகாரி. இப்படி ரூல்ஸ் பேசினா நம்ம நாடுகளில் பாதிப் பேர் விமான நிலையம் பக்கம் தலை வைச்சுக் கூட படுக்க மாட்டார்கள்.

************************
சமையல் வேலையில் பிஸியாக இருந்தேன்.
மகன் கேட்டார், " அம்மா, புது பாட்டரி தாங்கோ ரிமோட்டுக்கு போடணும் ", என்றார்.
பாட்டரிகளை குடுத்தால் +, - பார்த்து மகனே போட்டுக் கொள்வார்.
பழைய பாட்டரிகளை கழற்றி ஒரு கையில் வைச்சிருந்தது தெரியாமல் நான் 2 புது பாட்டரிகளைக் குடுத்தேன்.
உடனே சுதாகரித்துக் கொண்டேன், " ராசா! பழசு, புதுசு இரண்டும் மிக்ஸ் பண்ணினா கண்டு பிடிப்பது கஷ்டம்.", என்றேன்.
" அம்மா! அது மிகவும் சிம்பிள். இங்கை பாருங்க பழைய பாட்டரிகள் இன்னும் சூடாவே இருக்கு. புது பாட்டரிகள் அப்படி இல்லை", என்று பதில் வந்தது.
கையில் வைச்சிருந்த புது பாட்டரிகளை ரிமோட்டில் போட ரிமோட் வேலை செய்தது.
பல்பு தான் . இருந்தாலும் இப்படி அசடு போல இருப்பதா என்று நொந்து கொண்டேன்.