
பிளாஸ்டர் என் காலில் தங்கிவிட்டது. என்ன பசை போட்டு செய்தார்களோ தெரியவில்லை என்று என் அம்மா பக்கத்து வீட்டு மாமியிடம் புலம்பியது என் காதுகளில் விழுந்தது. பக்கத்து வீட்டு மாமி, எதிர் வீட்டு ஆன்டி என்று ஆளாளுக்கு ஒரு ஐடியா சொன்னார்கள். ஆனால், எந்த பாச்சாவும் என்னிடம் பலிக்கவில்லை. கிட்டத்தட்ட 5 நாட்களின் பின்னர் ஒரு வித நெடி வந்த பின்னர் இந்த கருமத்தை எப்படியாவது கழட்டிவிட வேண்டும் என்று எண்ணம் ஏற்பட்டது.
மெதுவா இழுத்தா வந்திட்டு போவுது - இது அப்பா.
கண்னை மூடிட்டு இழுத்திடும்மா - இது அம்மா.
முடியவே முடியாது - இது நான்.
என்னவோ பண்ணுங்க என்று சொல்லிட்டு அப்பா வெளியே கிளம்பி விட்டார்.
அம்மாவும் எவ்வளவு நேரம் தான் எனக்கு ஆறுதல், தேறுதல் சொல்வது. பழைய இத்துப்போன பிளாஷ்டிக் வாளியில் தண்ணீர் கொண்டு வந்து வைத்து விட்டு, அம்மாவும் எங்கோ கண் காணாத இடத்தில் போய் மறைந்து கொண்டார்.
என் அலறல் சத்தம் கேட்டு ரசிக்க என் உடன் பிறப்புகள் சூழ்ந்து கொண்டார்கள்.
நான் வாளியிலிருந்த தண்ணீரில் ப்ளாஸ்டர் போட்ட காலினை மூழ்கும்படி வைத்துக் கொண்டேன். இடையில் ப்ளாஸ்டர் மீது தண்ணீரை கைகளால் ஊற்றிக் கொண்டே இருந்தேன். ப்ளாஸ்டர் கொஞ்சம் நெகிழ்ந்து, மேல் ஓரத்தில் லேசாக பசைத் தன்மை குறைந்து இருந்தது போல ஒரு மாயை உண்டானது. பிடித்து இழுத்த போது ஒரு அதிசயமும் நடக்கவில்லை என்று விளங்கியது.
என் உடன்பிறப்புகளும் எவ்வளவு நேரம் தான் பொறுமை காப்பார்கள். எல்லோரும் விளையாட்டில் மூழ்கிவிட, நான் மட்டும் தனித்து விடப்பட்டேன். மிகவும் வெறுத்துப் போன என் 4 வயசு சகோதரி மட்டும் வாளியின் பக்கம் படுத்து குட்டித் தூக்கம் போட ஆரம்பித்து விட்டார்.
ஒரு அரை மணிநேரம் கடந்து, திடுக்கிட்டு எழும்பிய என் தங்கை வாளியினையும் என்னையும் மாறி மாறி பார்த்தார்.
பிறகு ஏதோ தோன்றியவராக என் பிளாஸ்டரை பிடித்து ஒரு இழுவை இழுத்தார். இதெல்லாம் சில நொடிகளில் நடந்து முடிந்து போனது.
நான் அலறிய அலறலில் வீட்டில் எல்லோரும் கூடி விட்டார்கள். வெற்றிச் சிரிப்பு சிரித்த தங்கையை அம்மா தூக்கி முத்தங்கள் கொடுத்தார்.
இந்த சம்பவத்தின் பிறகு வீட்டில் ப்ளாஸ்டர் போடவே எனக்கு யோசனை. ப்ளாஸ்டர் போட்டாலும் என் சகோதரியிடமிருந்து அதை கட்டிக் காப்பதற்குள் தாவு தீர்ந்து விடும்.
இப்ப என் பிள்ளைகளின் முறை போலும். அவர்களுக்கு கை, கால்களில் சிராய்ப்பு வந்தால் இதே கதை தான். சும்மாவா சொன்னார்கள் தாய் எட்டடி பாய்ஞ்சா குட்டி 16 பாயும் என்று.
ஆனால், நான் ஒரு சூப்பர் டெக்னிக் புத்தகத்தில் அறிந்து கொண்டேன். அது என்னவா?
யாராச்சும் சரியான பதில் சொன்னா அவர்களுக்கு ஒரு ப்ளாஸ்டர் பெட்டி பரிசாக வழங்கப்படும்.