Thursday, November 18, 2010

என் கேள்விகென்ன பதில்?

எனக்கு 7, 8 வயசாக இருந்த போது இந்த சம்பவம் நடந்தது. வேகமாக ஓடிய போது கீழே விழுந்து, காலில் நல்ல சிராய்ப்பு. பாய்ந்து ஓடிய இரத்தத்தினை கட்டுப்படுத்த அம்மா பிளாஸ்டர் போட்டு விட்டார். போட்ட நாளிலிருந்து நானும் பிளாஸ்டரும் உடன் பிறப்புகள் போலாகிப் போனோம். அதைக் கழட்ட வேண்டும் என்ற எண்ணம் எனக்கோ அல்லது தானகவே விழுந்து தொலைக்க வேண்டும் என்ற நினைப்பு அதற்கோ இருந்தது போல தெரியவில்லை. என் அம்மாவும் எவ்வளவோ சொல்லியும் நான் கேட்கவில்லை. பிளாஸ்திரியை உரிக்கும் போது ஒரு வலி வருமே அந்த வலிக்கு இணையாக வேறு எந்த வலியும் உலகில் இல்லை என்று நம்பினேன்.

பிளாஸ்டர் என் காலில் தங்கிவிட்டது. என்ன பசை போட்டு செய்தார்களோ தெரியவில்லை என்று என் அம்மா பக்கத்து வீட்டு மாமியிடம் புலம்பியது என் காதுகளில் விழுந்தது. பக்கத்து வீட்டு மாமி, எதிர் வீட்டு ஆன்டி என்று ஆளாளுக்கு ஒரு ஐடியா சொன்னார்கள். ஆனால், எந்த பாச்சாவும் என்னிடம் பலிக்கவில்லை. கிட்டத்தட்ட 5 நாட்களின் பின்னர் ஒரு வித நெடி வந்த பின்னர் இந்த கருமத்தை எப்படியாவது கழட்டிவிட வேண்டும் என்று எண்ணம் ஏற்பட்டது.


மெதுவா இழுத்தா வந்திட்டு போவுது - இது அப்பா.

கண்னை மூடிட்டு இழுத்திடும்மா - இது அம்மா.

முடியவே முடியாது - இது நான்.

என்னவோ பண்ணுங்க என்று சொல்லிட்டு அப்பா வெளியே கிளம்பி விட்டார்.

அம்மாவும் எவ்வளவு நேரம் தான் எனக்கு ஆறுதல், தேறுதல் சொல்வது. பழைய இத்துப்போன பிளாஷ்டிக் வாளியில் தண்ணீர் கொண்டு வந்து வைத்து விட்டு, அம்மாவும் எங்கோ கண் காணாத இடத்தில் போய் மறைந்து கொண்டார்.

என் அலறல் சத்தம் கேட்டு ரசிக்க என் உடன் பிறப்புகள் சூழ்ந்து கொண்டார்கள்.

நான் வாளியிலிருந்த தண்ணீரில் ப்ளாஸ்டர் போட்ட காலினை மூழ்கும்படி வைத்துக் கொண்டேன். இடையில் ப்ளாஸ்டர் மீது தண்ணீரை கைகளால் ஊற்றிக் கொண்டே இருந்தேன். ப்ளாஸ்டர் கொஞ்சம் நெகிழ்ந்து, மேல் ஓரத்தில் லேசாக பசைத் தன்மை குறைந்து இருந்தது போல ஒரு மாயை உண்டானது. பிடித்து இழுத்த போது ஒரு அதிசயமும் நடக்கவில்லை என்று விளங்கியது.
என் உடன்பிறப்புகளும் எவ்வளவு நேரம் தான் பொறுமை காப்பார்கள். எல்லோரும் விளையாட்டில் மூழ்கிவிட, நான் மட்டும் தனித்து விடப்பட்டேன். மிகவும் வெறுத்துப் போன என் 4 வயசு சகோதரி மட்டும் வாளியின் பக்கம் படுத்து குட்டித் தூக்கம் போட ஆரம்பித்து விட்டார்.

ஒரு அரை மணிநேரம் கடந்து, திடுக்கிட்டு எழும்பிய என் தங்கை வாளியினையும் என்னையும் மாறி மாறி பார்த்தார்.
பிறகு ஏதோ தோன்றியவராக என் பிளாஸ்டரை பிடித்து ஒரு இழுவை இழுத்தார். இதெல்லாம் சில நொடிகளில் நடந்து முடிந்து போனது.
நான் அலறிய அலறலில் வீட்டில் எல்லோரும் கூடி விட்டார்கள். வெற்றிச் சிரிப்பு சிரித்த தங்கையை அம்மா தூக்கி முத்தங்கள் கொடுத்தார்.

இந்த சம்பவத்தின் பிறகு வீட்டில் ப்ளாஸ்டர் போடவே எனக்கு யோசனை. ப்ளாஸ்டர் போட்டாலும் என் சகோதரியிடமிருந்து அதை கட்டிக் காப்பதற்குள் தாவு தீர்ந்து விடும்.

இப்ப என் பிள்ளைகளின் முறை போலும். அவர்களுக்கு கை, கால்களில் சிராய்ப்பு வந்தால் இதே கதை தான். சும்மாவா சொன்னார்கள் தாய் எட்டடி பாய்ஞ்சா குட்டி 16 பாயும் என்று.
ஆனால், நான் ஒரு சூப்பர் டெக்னிக் புத்தகத்தில் அறிந்து கொண்டேன். அது என்னவா?

யாராச்சும் சரியான பதில் சொன்னா அவர்களுக்கு ஒரு ப்ளாஸ்டர் பெட்டி பரிசாக வழங்கப்படும்.

Wednesday, November 17, 2010

தப்புக்கணக்கு

அறியாப் பருவத்தில் நடந்த தவறா அல்லது தெரிந்தே நடந்த தவறா என்று விளங்கவில்லை மோகனுக்கு. எல்லோரைப் போலவும் இனிமையான குழந்தைப் பருவத்தை அவனும் கடந்து வந்தான். 4 சகோதரிகள், 3 சகோதரர்கள் என்று பெரிய குடும்பம் அவனுடையது. அப்பா விவசாயி. ஏக்கர் கணக்கான தோட்டத்தை உழுது, விதை விதைத்து, ஆயிரக்கணக்கில் இலாபம் சம்பாதித்தவர். வீட்டில் எப்போதும் தேவைக்கதிகமாகவே பணம், சாப்பாடு எல்லாமே இருக்கும். வீட்டில் மோகன் தான் கடைக்குட்டி. மற்றவர்கள் படிப்பை தொடராமல் அப்பாவுடன் விவசாயத்தில் ஈடுபட, மோகன் மட்டுமே பள்ளி போய் வந்தான். நல்ல உயரமும், சிவந்த நிறமும் கொண்டவன்.

ஒரு நாள் இவன் பள்ளி சென்று விட, வீட்டின் மீது குண்டுகள் விழுந்து, எல்லோரின் உயிரையும் பறித்துக் கொண்டது. பள்ளியால் வந்தவன் அழக் கூட முடியாமல் ஸ்தம்பித்து நின்று விட்டான். ஆதரவற்று நின்றவனை அணைத்துக் கொண்டார் செல்லாயி பாட்டி. பாட்டி இவனுக்கு தூரத்து உறவு. பாட்டிக்கு ஒரு மகள். மகளுக்கு 4 பிள்ளைகள். வருமானத்திற்கு பெரிதாக வழியிருக்கவில்லை. அன்றாடம் காய்ச்சி குடும்பம்.


பாட்டி அப்படி ஒன்றும் அன்னை தெரசா அல்ல. மோகனிடம் இருந்த சொத்துக்களே பாட்டியின் குறியாக இருந்தது. மோகன் இன்னும் மேஜராகவில்லை. அவனிடமிருந்த சொத்துக்களுக்காகவே அவனை அணைத்துக் கொண்டார். இதெல்லாம் விளங்கிக் கொள்ளும் வயசில்லை மோகனுக்கு.
பாட்டியின் பேத்தி பெயர் சுனிதா. பருவத்தின் வாசலில் நின்றாள். சுமாரன அழகி. மிகவும் கர்வம் கொண்டவள். எல்லோரையும் எடுத்தெறிந்தே பேசுவாள். மோகன் பாட்டியின் வீட்டிற்கே குடிவந்தான். வெளி வராந்தாவில் படுத்துக் கொள்வான்.

மோகனின் வீடு குண்டு வீச்சினால் சேதமடைந்து கிடந்தது. அதோடு விவசாயத்தை கவனிக்க வேறு ஆள் இல்லாமல் வயல் வறண்டு போனது. இந்த சொத்துக்களை விற்றாலே பல இலட்சக்கணக்கில் இலாபம் பார்க்கலாம். செல்லாயி பாட்டி தொலை நோக்கு பார்வையுடன் செயல்பட்டார். நெடு நெடுவென, சிவந்த நிறத்தில் இருந்தவனை பேத்தி சுனிதாவுக்கே பேசி முடித்து விட்டால் அவளின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்று என்ணினார் பாட்டி.

வீட்டிலே பெரியவர்கள் மட்டும் கூடிப்பேசி நிச்சயம் செய்து விட்டார்கள். மோகனின் பக்கம் யாருமே இல்லை. மோகனுக்கும் சுனிதாவை பிடித்துக் கொண்டது. ஆனால், சுனிதாவுக்கு மோகனைக் கண்டால் ஏனோ பிடிப்பதில்லை. எப்போதும் எரிந்து விழுவாள். எப்போதும் அடக்கமாக இருக்கும் மோகனை விட ரோட்டில் ஸ்டைலாக திரிந்த அரவிந்தை மிகவும் பிடித்துக் கொண்டது.

மோகன் கெஞ்சக் கெஞ்ச சுனிதா மிஞ்சினாள். இப்படியே காலம் கடந்தது. வீட்டில் பெரியவர்களுக்கு இந்த விடயம் தெரிந்தாலும் காலப் போக்கில் சரியாகி விடும் என்று நம்பினார்கள்.
சுனிதா மோகனை அறவே தவிர்த்தாள். மோகன் காரணம் தெரியாமல் தவித்துப் போனான். தானும் குண்டு வீச்சில் இறந்து போயிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று நினைத்துக் கொள்வான். பெற்றோருடன் இருந்த பசுமையான நாட்கள் மனதில் நிழலாடும். கண்களிலிருந்து அருவி கொட்டும்.

மழை காலம் தொடங்கியது. மழை சட சடவென விழுந்து, சில மணிநேரங்களில் முற்றத்தில் தண்ணீர் தேங்கி, குட்டி குளமாக மாறியது. சுனிதா அவளின் சகோதரர்களோடு மழை வெள்ளத்தில் இறங்கி விளையாடத் தொடங்கினாள். தண்ணீரை ஒருவர் மீது ஒருவர் வாரி இரைப்பதும், ஓடுவதுமாக மகிழ்ச்சியாக இருந்தார்கள். மோகனுக்கும் ஆசையாக இருந்தது. அவனும் போய் கலந்து கொண்டான். இவனைக் கணடதும் சுனிதா முறைத்தாள். தயவு செய்து இங்கிருந்து போய் விடு என்றாள். மோகன் அவளின் கையைப் பற்றினான். ஏன் உனக்கு என்னைப் பிடிக்கவில்லை என்று சொல் போய் விடுகிறேன் என்று கண்களால் கெஞ்சினான்.
அட! சீ போய்த் தொலை என்று சொன்னால் புரிந்து கொள்ள மாட்டாயா", என்று இவனின் கைகளை வெறுப்புடன் தட்டி விட்டாள். கண்ணீர் மழை நீருடன் சேர்ந்து கரைந்து ஓடியது. நடந்து போனவனின் கண்களில் பூச்சி கொல்லி பாட்டில் கண்களில் பட்டது. கைகளில் எடுத்துக் கொண்டான். பாட்டிலை வாயில் வைத்து கவிழ்த்தான். எரியும் நெருப்புக் குழம்பு உள்ளே இறங்கியது போல தவித்துப் போனான். குடல் எரிந்தது. ஓடிப் போய் தேங்கியிருந்த தண்ணீரில் விழுந்து புரண்டான். சுனிதா சிரித்து விட்டு, உள்ளே ஓடிப் போனாள்.

கண்கள் சிவப்பாக மாறியது. எழுந்து அலறிக் கொண்டே ஓடினான். கடைக்குப் போய் விட்டு வந்த பாட்டியும், சுனிதாவின் அம்மாவும் நடந்தது எதுவுமே தெரியாமல் திகைத்துப் போனார்கள். அவனைப் பிடிக்க ஓடினார்கள். எரிச்சல் தாங்காமல் ஓடியவன் கிணற்றினுள் பாய்ந்தான்.
பாட்டியின் கையிலிருந்த குடை காற்றில் மேலெழும்பி கீழே வந்து மல்லாக்காக விழுந்தது.

சில்லென்று ஏதோ உடல் மீது பட விழிப்பு வந்தது மோகனுக்கு. அடச்சே! இவ்வளவு நேரமும் கண்டது கனவா என்று யோசனையாகவும் அதே நேரம் நிம்மதியாகவும் இருந்தது. இந்தப் பெண்ணுக்காக போய் யாராவது உயிரை மாய்த்துக் கொள்வார்களா என்று நினைத்துக் கொண்டான். அறையினுள் போய் தன்னுடைய உடமைகளை எல்லாம் எடுத்து பெட்டியில் அடுக்கினான். பெட்டியை தலையில் வைத்துக் கொண்டே மழையில் இறங்கி நடக்கத்தொடங்கினான்.
தடுக்க ஓடி வந்த பாட்டி, சுனிதாவின் அம்மா எல்லோரையும் தவிர்த்தான். பெய்த மழையினால் அவன் மனம் போல தெருவும் சுத்தமாக இருந்தது.