Saturday, May 17, 2014

என் சோக கதையை கேளு


ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் இருப்பது போல ஒரு பிரச்சினை என்று வந்துவிட்டால் இரண்டு பக்க நியாயத்தையும் கேட்பது தான் நியாயம் அல்லவா?
என்னை இப்படி மரண அடி அடித்தது அந்தம்மாவுக்கு சரியாக இருந்தாலும் என் தரப்பு கதையினையும் உங்களுக்கு கட்டாயம் சொல்கிறேன். என் பெயர்.... ம்...எனக்கு யார் பெயர் வைச்சா? என் குலத்தினை ராட்டில் ஸ்நேக் என்பார்கள். அதாவது என் வாலில் சின்ன குழந்தைகள் கைகளில் இருக்கும் கிலு கிலுப்பான் போல சத்தம் எழுவதால் அந்தப் பெயர். எங்கள் இனம் வடமெரிக்காவில் பல காலமாக வாழ்ந்து வருகிறோம். பெரும்பாலும் நாங்கள் உண்டு, எங்கள் வேலை உண்டு என்று இருந்துவிடுவோம். யாராவது அருகில் வந்தால் ஸ்ஸ்ஸ்ஸ்..என்று சத்தம் மட்டும் எழுப்புவோம். மற்றும்படி அந்த நபரை தீண்ட, கொலை செய்ய கனவிலும் நினைப்பதில்லை.
நான், என் குடும்பம் இருப்பது ஒரு பார்க்கில். அதாவது எங்களுக்கு சொந்தமான இடம். அதில் கொஞ்ச இடத்தில் மரங்களை வெட்டி, அதில்  பிள்ளைகள் விளையாட்டு மைதானம் அமைத்து இருந்தார்கள். இது தவிர ஒரு பாதை. பைக் பாத் என்பார்கள். இந்த பைக்கில்/சைக்கிளில் போகும் ஆசாமிகளால் எந்த ஆபத்தும் வந்ததில்லை. ஆனால், பாருங்கள் இந்த குட்டிப்பட்டாளம் தான் எங்களுக்கு எமன்.

நான் பெரும்பாலும் எலி, பெருச்சாளி, முயல் இப்படி அகப்பட்டதை தின்றுவிட்டு படுத்துவிடுவேன். ஒரு நாள் ஒரு பெருச்சாளியை விரட்டிக் கொண்டு விளையாட்டு மைதானத்துக்கு போய் விட்டேன். எனக்கு இரை கிடைக்கவில்லை. அந்த நேரம் ஒரு குடும்பம்.. அதாவது ஆண், பெண், மூன்று பிள்ளைகள் வந்தார்கள். நான் தரையோடு தரையாக ஒன்றிக் கொண்டேன். அவர்கள் என்னைக் கவனிக்கவில்லை. நான் ஒளிந்திருந்த பக்கம் ஒரு குட்டி வர, நான் டென்ஷன் ஆனேன். என்கிலுகிலுப்பான் மூலம் ஒளி எழுப்பினேன். அந்தக் குட்டி இன்னும் கிட்ட வர, என் கோபம் தலைக்கேறியது. அப்ப தான் 'படார்" என்று ஒரு அடி என் தலையில் விழுந்தது. திரும்பி பார்த்தால் அந்தம்மா ஒரு தடியோடு நிற்கிறார். எனக்கு தலையினை தூக்க கூட முடியவில்லை. வாலில் இருந்து வரும் சத்தம் மட்டும் நிற்கவில்லை. அந்தம்மாவின் கோபம் இன்னும் அதிகமானது.
" உனக்கு என்ன திமிர்?", என்றார்.
"ஞே ஞே ...", இது நான்.
" இங்கே இருந்து ஓடிப் போயிரு", அந்தம்மா.
அசையவே முடியவில்லை. எங்கே ஓடிப் போறது. இந்த வால் சனியன் வேறு அனிச்சையாக ஆடி, சத்தம் எழுப்பி அந்தம்மாவின் கோபத்தினை அதிகரித்தது. வாலினை என் கட்டுக்குள் கொண்டு வர முயற்சித்து தோற்றுப் போனேன்.


" நீ அந்த குடும்பத்தின் ஏஜன்ட்டா?", என்றார் அந்தம்மா.
எந்தக் குடும்பம்? எனக்கு எதுவும் விளங்கவில்லை. இப்போதைக்கு செத்த பாம்பு போல கிடப்பது தான் விவேகம் என்று முடிவுக்கு வந்தேன். செத்த பாம்பினை அடிக்க அந்தம்மா என்ன லூஸா? அந்தம்மா ஒரு பத்தடி தள்ளி நின்றது மங்கலாகத் தெரிந்தது.. அப்ப தான் அந்தம்மா சொன்னார்கள், அவர் இந்தியாவில் இருந்த போது அவர் அப்பா ஒரு நாக பாம்பினை அடித்துக் கொன்றுவிட்டார்களாம். பக்கத்து வீட்டில் சொன்னார்களாம், உங்க குடும்பமே நாக தோஷத்திற்கு உள்ளாகியுள்ளது ஏதாவது பரிகாரம் செய்ய வேண்டும், என்று. என் அப்பா செய்யவில்லை. அதனால் தான் அந்த தோஷம் அமெரிக்கா வந்தும் கழியவில்லை என்று.
அட! பதர்களா,  அது தான் ஏஜன்ட் என்று சொன்னார்களா?. இப்ப என் நினைவு மங்கத் தொடங்கியது. என் கணவர், பிள்ளைகள் நினைவில் வந்து போனார்கள். என் மகள் மாசமாக இருக்கிறாள். அவளின் பிள்ளையை பார்க்காமல் என் கட்டை வேகாது. அந்தம்மா இப்ப வீர வசனம் பேசி முடிந்து காரில் ஏறி போனது மங்கலாக தெரிந்தது.
நீங்கள் என் தரப்பு கதையினை கேட்டு விட்டீர்கள் அல்லவா? இப்ப யார் பக்கம் நியாயம் என்று.. இருங்கள் நீங்கள் உங்கள் மனிதர்களை தான் ஆதரிப்பீர்கள். இது கூட  தெரியாத வெங்காயமாக இருக்கிறேன்.  ஏதோ சத்தம் கேட்கிறது. சிறுவர்கள் இந்தப் பக்கம் வருகிறார்கள் போல. நான் போய் ஒளிந்து கொள்கிறேன்.





Sunday, May 11, 2014

என் அம்மா


அன்னையர் தினம். இந்த தினத்தில் என் அம்மாவை பற்றி கட்டாயம் எழுதியே ஆக வேண்டும் என்று நினைத்தேன். என் அம்மா மிகவும் மன உறுதி மிக்கவர். மன உறுதி என்றால் மலையே பெயர்ந்து வந்தாலும் கவலைப்படமாட்டார். என்ன மலை தானே, என்று சொல்வார். மலை மீது ஏறிச் செல்லும் மன தைரியம் மிக்கவர். இரண்டு சம்பவங்கள் இங்கே கட்டாயம் சொல்கிறேன்.

1984, ஜூலை மாதம், இலங்கையில் நடைபெற்ற கலவரத்தில், 24 மணி நேரத்தில் எங்கள் உடைமைகள் எல்லாவற்றையும் இழந்து நடுத்தெருவுக்கு வந்துவிட்டோம். அதாவது மாற்றுத்துணி கூட இருக்கவில்லை. என் அம்மா அழுது புலம்பவில்லை. போன பொருட்கள் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. அக்கம் பக்கம் கொடுத்த துணிகள், சாப்பாடுகள் தான் எங்கள் உயிர்காத்தன. அதன் பிறகு யாழ்பாணம் சென்றோம். என் தந்தை எதிர்பாராத விதமாக அரசாங்க வேலையை விடும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார்.

அம்மா அப்பாவிடம் சொன்னார், நீங்கள் வேலையை விட்டு விட்டேன் என்று ஒரு நாளும் கவலைப்படத் தேவையில்லை. கடவுள் கொடுத்த கைகள், கால்கள் இருக்கின்றன. நாங்கள் இருவரும் எங்கள் தோட்டத்தில் கஷ்டப்படுவோம். வரும் வருமானத்தில் குடும்பம் நடத்த பழகுவோம். ஆடம்பரம், படாடோபம் எதுவும் வேண்டாம், என்று சொன்னவர் ஆடுகள், மாடுகள், கோழி, காய்கறி தோட்டம், தென்னை, மா, வாழை, கீரை என்று தோட்டம் அமைத்து, இரவும் பகலும் பாடுபட்டார்கள். தோட்டத்தில் வரும் வருமானத்தில் சிக்கனமாக செலவு செய்வார். பட்டுப் புடவை, நகை என்று ஒரு நாளும் வாங்கியதில்லை.


எங்களுக்கும் தேவையான உணவுகள் செய்து கொடுப்பார்கள். ஆனால், உடை விடயத்தில் வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு தான் எடுத்து கொடுப்பார்கள். பெரும்பாலும் அம்மாவே துணி எடுத்து தைத்துவிடுவார்கள். மற்ற மாணவிகள் போல ஸ்டைலாக அணிய வேண்டும் என்று ஒரு நாளும் நினைத்ததில்லை. ஏதோ கிடைத்ததை உடுத்தப் பழகிக் கொண்டோம்.
1987ல் மீண்டும் பிரச்சினைகள். வட்டமிட்ட குண்டு வீச்சு விமானங்களால் இடம்பெயர வேண்டிய சூழ்நிலை. ஆடுகள், மாடுகள் எல்லாவற்றினையும் கட்டிப் போட்டால் அவை இறந்து விடும் என்பதால் கட்டுக்களை அவிழ்த்து விட்டோம். எங்கள் வீட்டில் தொடர்ச்சியாக விழுந்த 4 குண்டுகளால் சில இறந்து போயின. கிட்டத்தட்ட ஒரு மாதம் கழித்து வீடு திரும்பிய போது ஒரு சுடுகாடு போல காட்சி தந்தது. எங்கும் குண்டு துளைத்த அடையாளங்கள். என் அம்மாவின் முகத்தினை பார்க்கிறேன். எந்த விதமான மாற்றமும் இல்லை.

என் அம்மா சொன்னார்கள், எங்கள் வீட்டினை மட்டும் இவர்களால் அழிக்க முடிந்தது. எங்களை, எங்கள் மன உறுதியினை இவர்களால் அழிக்க முடியாது. நாங்கள்  மீண்டு வருவோம், என்றார். எனக்கு அப்போது விளங்கவில்லை. எப்படி மீளப் போகிறோம். மீளவே முடியாத அடி அல்லவா?. காய்கறி தோட்டம் எல்லாமே நாசமாகி இருந்தது. ஆடுகள், மாடுகள் எல்லாமே இறந்து போய்விட்டன அல்லது காணாமல் போய்விட்டன.
ஒரு நாள் நாங்கள் எங்கள் உறவினர் வீட்டுக்கு போகும் வழியில், ஒரு மாடு எங்களை உற்றுப் பார்த்த வண்ணம் நின்றது. பின்னர் பெருங்குரலில் அம்மா, அம்மா என்று கத்தியவாறு எங்களை நோக்கி ஓடி வந்தது. கூடவே ஒரு கன்றும். அது நாங்கள் வளர்த்த கமலம் என்ற பசு. அதன் கண்களில் இருந்து கண்ணீர் சொறிகின்றது. என் அம்மா அழுகிறார். அதனை கட்டிப் பிடித்து ஆரத் தழுவுகிறார். இரண்டு தடவை வீடு, உடமைகள் இழந்த போது கலங்காதவர் இப்ப பாசமாக வளர்த்த பசுவைக் கண்டதும் கண்ணீர் விட்டு தேம்பி அழுதார். எனக்கு எதுவும் விளங்கவில்லை. அதன் பிறகு அந்த பசுவும், கன்றும் அம்மாவை ஒட்டியபடியே  நடந்து வீடு வந்து சேர்ந்தார்கள். வரும் வழி நெடுகவும் அம்மா பசு, கன்று பற்றியே பெருமை பேசிய வண்ணம் வந்தார். ஊர் பூராவும் சொல்லிவிட்டார்கள் என்றே நினைக்கிறேன். அவ்வளவு மகிழ்ச்சி அவர்கள் முகத்தில். மீண்டும் அந்த பசு மூலம் கொஞ்சம் வாழ்க்கை சுமாராக போனது. எங்கள் மன உறுதியை இவர்களால் அழிக்க முடியாது என்று சொன்னதன் அர்த்தம் இது தானோ?

அதன் பிறகு இந்தியா, கனடா என்று இடம்பெயர்ந்து விட்டாலும் என் அம்மாவின் மன உறுதி இன்னும் கொஞ்சம் கூட குறையாமல் இருக்கிறது. அறுபது வயதிலும் உடற்பயிற்சிகள் செய்வார் என் அம்மா. ஒரு நாளும் மனம் உடைந்து போய் இருந்ததில்லை. அந்த மன உறுதியில் பாதியாவது எனக்கு இருந்தால் இமய மலையினையே தாவி குதித்து விடுவேன். என் அம்மாவைப் பற்றி என் பிள்ளைகளுக்கு அடிக்கடி சொல்வேன். அவர்களாவது என் அம்மா போல் வளரட்டும் என்பது என் ஆசை.