Wednesday, December 26, 2012

மார்கஸ்


மார்கஸ் அந்த சிறைச் சாலைக்கு வந்து இரண்டு நாட்கள் தான் ஆகியிருந்தது. மார்கஸ் ஒரு வங்கி கொள்ளையன். இது வரை கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்ட வங்கிகளில் தன் கை வைரிசையை காட்டிவிட்டான். கொள்ளையடிக்க போகும் போது குறுக்கே யார் வந்தாலும் ஒரே போடாக போட்டுவிடுவான். இவன் செய்த கொலைகள் கிட்டத்தட்ட 5 இருக்கும். சிம்ம சொப்பனமாக இருந்தவனை அரும்பாடுபட்டுப் பிடித்தார்கள். ஒரு உள்ளூர் சிறையில் அடைத்தபோது இவன் தப்பி ஓடிவிட்டான். இவனுக்கு ஏற்ற சிறை இதுவாகத் தான் இருக்கும் என்று முடிவு செய்து, மேல் அதிகாரிகள் அனுமதியுடன் மார்கஸ் இந்த சிறையில் அடைக்கப்பட்டான். நான்கு பக்கமும் தண்ணீர் சூழப்பட்ட இடத்தில் இருந்தது இந்த சிறைச்சாலை. சிறையினை சுற்றி மூன்று பக்கமும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை வனாந்திரம். யாரும் தப்பி போக நினைத்து காட்டுக்குள் போனால் இரண்டு நாட்களில் மரணம் நிச்சயம் என்று சொல்லும் அளவுக்கு கொடிய மிருகங்கள் நிறைந்திருந்த காட்டுப்பகுதி அது. தப்பித்துப் போக நினைப்பவர்களுக்கு ஒரே வழி கடல் மட்டுமே. கடல் வழியாக நீந்தி மட்டுமே கரை சேர  முடியும். கிட்டத்தட்ட 100 மைல்கள் நீந்தினால் கரை சேரலாம் உயிரோடு இருந்தால். இந்த தகவல்கள் எல்லாம் ஜெயிலர் பீட்டர் சொன்ன தகவல்கள். அவர்  சொன்ன தகவல்கள் உண்மை தான் என்று சக கைதிகள் உறுதி செய்தார்கள். அந்த சிறைச் சாலையிலிருந்து உயிரோடு வெளியே போனவர்கள் யாருமே இல்லையாம். உள்ளேயே இருந்து மெதுவாக மரணத்தை தழுவிக் கொள்ள மார்க்கஸ்ஸூக்கு விருப்பம் இல்லை. எப்படியாவது தப்பி விட வேண்டும் என்று உறுதி எடுத்துக் கொண்டான். ஒவ்வொரு நாளும் சிறைச்சாலையின் கம்பிகள் சூழ்ந்த வளாகத்தில் நின்று அன்றாட நடவடிக்கைகளை கூர்ந்து கவனிக்கத் தொடங்கினான். அதை தன் வசம் இருந்த பேப்பரில் சங்கேத வார்த்தைகளினால் குறித்துக் கொண்டான். ஒரு கிழமைக்கு ஒரு தடவை வரும் கப்பல் தான் அவனின் ஒரே ஒரு நம்பிக்கை. அந்த கப்பலில் எப்படியாவது ஏறிக் கொண்டால் ஏறக்குறைய தப்பியது போலத் தான் என்று நினைத்துக் கொண்டான்.

ஒரு நாள் வேலியோரம் நின்று கடலை வெறித்துக் கொண்டிருந்தபோது பீட்டர் அருகில் வந்தார். என்ன மார்கஸ்,  யோசனை பலமா இருக்கே?", என்றார்.
பதில் சொல்லாது வெறித்தான்.
" இதோ பார் மார்கஸ்", என்று ஒரு செடியினைக் காட்டினார்.
அந்தச் செடியில் குழல் போல நீண்ட பூக்கள், அழகிய நீல நிறத்தில் பூத்துக் குலுங்கின.
" இந்த வகை பூக்கள் வேறு எங்கும் நீ பார்க்க முடியாது. ", என்றார்.
இப்ப அதுக்கென்ன என்பது போல பார்வையினை வேறு பக்கம் திருப்பிக் கொண்டான்.
" மார்கஸ், நீ இங்கிருந்து தப்பி போகலாம் என்று கனவிலும் நினைக்காதே. இங்கிருந்து போக வேண்டும் எனில் ஒன்று நீ இறக்க வேண்டும். அல்லது அரசாங்கம் இரக்கப்பட்டு உன்னை விடுதலை செய்தால் தான் உண்டு. எனவே இந்த வேலியோரம் நின்று சமுத்திரம், காடு இவற்றை வெறித்துப் பார்ப்பதை நிப்பாட்டு", என்று மிரட்டும் குரலில் சொல்லிவிட்டு நகர்ந்தார்.


பீட்டர் எல்லோரிடமும் அந்த நீண்ட குழாய் போன்ற பூக்களை மிகவும் சிலாகித்துப் பேசுவார். யாருமற்ற தீவில் அந்தப் பூக்கள் எல்லோர் கண்களுக்கும் விருந்து படைத்தன என்பது உண்மைதான். மார்கஸ் கூட தன்னை மறந்து பூக்களை ரசித்ததுண்டு. சிறையின் கம்பி வேலி மீது படர விடாமல் அடிக்கடி கத்தரித்து விடுவார்கள் அங்கிருப்பவர்கள். எங்கே அந்தச் செடி வேலி மீது படர்ந்து, முற்கம்பிகள் மீது அரணாக மூடி, சிறையில் இருப்பவர்கள் அதன் வழியாக தப்பித்து ஓடி விடாமல் இருக்க இந்த ஏற்பாடு.

 பீட்டர் அந்த இடத்தினை விட்டுச் சென்றதும் எப்படியாவது தப்பி விட வேண்டும் என்று மார்கஸூக்கு வெறி உண்டானது. பீட்டரின் திமிர் தனத்தை அடக்க வேண்டும் என்று மனதில் நினைத்துக் கொண்டான்.
மார்கஸ் அங்கு வந்து 4 மாதங்கள் ஓடிவிட்டன. ஒவ்வொரு கிழமையும் திங்கள் வரும் கப்பல், அதில் வரும் சாமன்களை ஏற்ற சிறையில் இருந்து செல்லும் ஊர்திகள், அந்த ஊர்திகளை கடுமையாக சோதனை செய்த பின்னர் அனுப்பும் அதிகாரிகள் என்று பலவற்றையும் அமைதியாக கிரகித்துக் கொண்டான். அந்த ஊர்திகள் வழியாக தப்பிச் செல்வது எளிதான காரியம் அல்ல. வேறு ஏதாவது யோசிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.

சிறையில் பல வருடங்களாக இருக்கும் கைதி மைக்கேல் தான் ஒரே ஒரு நம்பிக்கை. கிட்டத்தட்ட 60 வயதாவது இருக்கும் மைக்கேலுக்கு. அவர் ஏன் சிறை வந்தார் என்று யாருக்கும் தெரியவில்லை. மிகவும் அப்பாவி போல தெரிந்தார். சிறை அதிகாரிகளின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர். மார்கஸ் மைக்கேலுடன் வலியப் போய் பேசி நட்பு பாராட்டினான். மைக்கேல் ஒவ்வொரு நாளும் சிறையில் சேரும் குப்பைகளை சேகரித்து, ஒரு பெரிய கை வண்டியில் போட்டு, சிறைக்கு வெளியே போய் வைத்து வருவார். வாசலில் நிற்கும் காவலாளி ஈட்டி போன்ற கூரான முனை கொண்ட ஒரு கம்பியினால் கை வண்டிக்குள் இருக்கும் குப்பைகளை குத்திக் கிளறி ஒரு வழி பண்ணிய பிறகே வெளியே போக அனுமதிப்பார்.


மைக்கேல் ஒரு நாள் குப்பைகளை சேகரித்துக் கொண்டிருந்த போது அவரிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டே நடந்தான் மார்கஸ். அவர் அசந்த நேரம் கை வண்டிக்குள் ஏறி ஒளிந்து கொண்டான். கை வண்டி வாசலைக் கடந்தபோது  காவலாளி ஈட்டியினை எடுத்துக் கொண்டு வந்து குத்த ஆரம்பித்தார். ஆரம்பத்தில் மெதுவாக தொடங்கிய குத்துகள் பின்னர் வேகமெடுக்க ஆரம்பித்தன. லாவகமாக நழுவப்பார்த்தான் மார்கஸ். ஆனால், தோள்பட்டையில் சரமாரியாக விழுந்த குத்துக்களுக்கு வீரிட்டுக் கத்த நினைத்தவன் பற்களை கடித்துக் கொண்டே தாங்கிக் கொண்டான். ஒரு வழியாக சோதனை முடிந்ததும்  வெளியே வண்டியை அனுமதித்தான் காவலாளி.

கூரான ஆயுதத்தில் இரத்த்க கறையினை காவலாளி கவனிக்கவில்லையோ அல்லது அவனின் கவலையீனமோ என்று விளங்கவில்லை மார்கஸூக்கு. அந்த சிறைச்சாலையில் இருந்து யாரும் தப்பி போக மாட்டார்கள் என்று நம்பிக்கையாக கூட இருக்கலாம். 40 வருடங்களின் முன்னர் யாரோ ஒரு நபர் தப்பித்து செல்ல நினைத்து, கடலில் குதித்து உயிரை விட்டதாக ஜெயிலர் சொன்னது ஞாபகம் இருந்தது. இவனும் அப்படியே செத்து தொலையட்டும் என்று நினைத்தானோ என்பதும் புலப்படவில்லை.

எது எப்படியோ வெளியே வந்தாயிற்று. இருட்டும் வரை அங்கேயே இருந்தாக வேண்டும். கப்பல் இங்கிருந்து நகர இன்னும் சிலமணிநேரங்கள் இருந்தன. ஈட்டி குத்திய இடத்தில் இருந்து இரத்தம் ஓடியது. குப்பையிலிருந்த பழைய துணியின் மூலம் கட்டுப்போட்டுக் கொண்டான். நினைத்தது போல கப்பலில் ஓடிச் சென்று ஏறமுடியவில்லை. ஜெயில் அதிகாரிகளை ஏற்றிக் கொண்டு கப்பல் விரைந்து மறைந்தது.

மார்கஸ் சிறையில் இல்லை, தப்பிவிட்டான் என்று இரவு தான் பீட்டருக்கு விளங்கியது. இந்நேரம் எந்தக் கொடிய மிருகத்துக்கு இரையாகி இருப்பானோ தெரியவில்லை என்று நினைத்துக் கொண்டே எச்சரிக்கை மணியின் பொத்தானை அழுத்தினான். சிறைச்சாலை முழுவதும் அலாரம் அடித்தது. சிவப்பு விளக்குகள் மின்னின. அதிகாரிகள் துப்பாக்கிகளுடன் நாலா புறங்களிலும் விரைந்தோடினார்கள். மார்கஸ் இருந்த அறை சோதனை போடப்பட்டது.
மேலிடத்துக்கு தகவல் அனுப்பபட்டது.  காலையில் தான் நடவடிக்கை எடுக்க முடியும் என்று மேலிடத்திலிருந்து தகவல் வந்தது. அதிகாலையில் காட்டுக்குள் ஆட்கள் அனுப்பபட்டார்கள். மார்கஸின் உடலையாவது கண்டுபிடிக்க வேண்டும் என்பதே பீட்டரின் இலட்சியமாக இருந்தது. மார்கஸ் கடல் வழியாக தப்பிச் சென்றிருப்பான் என்ற கோணத்தில் ஒரு பக்கம் விசாரணை நடந்தது. பீட்டரின் தலைமையில் ஒரு குழு கடலின் மறுபக்கம் அனுப்பபட்டார்கள். அது பாறைகள் சூழப்பட்ட இடம். சிறு குழுக்களாக பிரிந்து தேடத் தொடங்கினார்கள். யாருக்கும் மார்கஸ் உயிரோடு இருப்பான் என்ற நம்பிக்கை வரவேயில்லை பீட்டர் உட்பட. தேடுதல் முடிந்து அனைவரையும் ஒரு இடத்தில் கூடுமாறு உத்தரவிட்டார் பீட்டர். ஏதோ பேச முற்பட்டவர் சிறிது தூரத்தில் நீல நிற குவளைப்பூக்கள் பாறைகளின் மேல் தெரிவதைப் பார்த்ததும் அருகில் ஓடினார். இது எப்படி இங்கே? ஒரு கொத்தாக பூக்கள் இருந்தன. யாரோ இவருக்காகவே வைத்திருந்ததைப் போல இருந்தது. இதை இங்கே வைத்தவன் மார்கஸ் தான் என்பது பீட்டருக்கு உறுதியாக விளங்கியது. எனக்கே சவாலா, என்று கருவியபடி, மார்கஸ் இன்னும் சாகவில்லை. அவன் உயிரோடு தான் இருக்கிறான். அவனை பிடிக்கும் வரை நான் ஓயப்போவதில்லை, என்று சபதம் பூண்டார். இதன் பிறகு கிட்டத்தட்ட 25 வருடங்கள் பணிபுரிந்து ஓய்வு பெற்றார் பீட்டர். அந்த 25 வருடங்களும் மார்கஸ் பற்றி நினைக்காத நாள் இல்லை. அவன் எப்படி தப்பித்துச் சென்றான், அவன் எங்கே இருக்கிறான் என்பதோ யாருக்கும் புரியாத புதிர்.