Sunday, September 13, 2015

நானும் பள்ளிக்கு போறேன்....

நீண்ட நாட்களின் பின்னர் மீண்டும் வந்திருக்கிறேன். அஞ்சு, இமா இருவரும் என்னை ஃபேஸ் புக்கில் தேடி மெயில் அனுப்பினார்கள். அவர்களுக்கு பதில் அனுப்பியதோடு சரி. பிறகு எனக்கு ஒரு ப்ளாக் இருக்கு என்ற ஞாபகம் அப்ப அப்ப வரும். பிறகு மறந்தும் விடும். சரி இப்ப விஷயத்திற்கு வருவோம். என் நாடோடி வாழ்க்கையில் நான் கற்றவை எதுவும் என்னை அமெரிக்காவில் வேலை தேட அனுமதிக்கவில்லை/கிடைக்கவில்லை. அதோடு நீண்ட நாட்களாக வீட்டில் இருந்து பிள்ளைகளை வளர்த்தபடியால் வேலைக்கு போக வேண்டும் என்ற எண்ணம் ஏற்படவில்லை. பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டாச்சு. என் மகள் பள்ளி போகத் தொடங்கியதும், நானும் அதே பள்ளியில் வாலண்டியராக சேர்ந்தேன். சும்மா பேருக்கு... அதாவது எங்கம்மாவும் சந்தைக்குப் போகின்றா, என்று இல்லாமல் முழு மனதுடன் என் பங்களிப்பினை செய்தேன்.

சுமார் ஒரு வருடங்களுக்கு மேலாக என் பங்களிப்பினை பார்த்து வியந்து, என்னை வேலைக்கு சேர்த்துக் கொண்டார்கள். வாலண்டியராக மிகவும் சிறப்பாக பணி புரிந்த நான், ஒரு வேலை கிடைத்ததும் இன்னும் சிறப்பாக பணி செய்தேன். உதவி ஆசிரியை பணி. மிகவும் ரசித்து, அனுபவித்து செய்கிறேன். அப்போது தான் என்னுள் தூங்கிக் கொண்டிருந்த  சிங்கத்தினை யாரோ உசுப்பி எழுப்பி விட்டார்கள். நீ மீண்டும் கல்லூரிக்கு போய் படித்து, ஆசிரியை ஆக வர வேண்டும் என்றார்கள். இதெல்லாம் நடக்கிற காரியமா? என் பிள்ளைகளை யார் பார்த்துக் கொள்வார்கள் என்றேன். நீ கல்லூரிக்கு போ, நாங்கள் இருக்கிறோம் உதவி செய்வோம் என்றார்கள். நானும் அதை நம்பி, தேவையான சாஸ்திர சம்பிரதாயங்களை எல்லாம் முடித்து, முட்டி மோதி கல்லூரிக்கு சேர்ந்தாயிற்று. மிகவும் பெரிய ப்ராஸஸ் அது. அதை எழுத நான்கு பதிவுகள் வேண்டும்.

முதல் நாள் வகுப்பு, எனக்கு கண்களை கட்டி காட்டில் விட்டாற் போல ஒரு உணர்வு. எழுந்து ஓடி விடலாமா, என்று நினைத்து பிறகு ஒருவாறு அமர்ந்து பாடத்தினை கவனித்தேன். நிறைய படிக்க வேண்டும், அஸைன்மென்ட், பரீட்சைகள் என்று ஒரே டென்ஷன். எனக்கு உதவி செய்வேன் என்றவர்கள் யாரையும் காணவில்லை. வின்டர் ஆரம்பித்தால் அடிக்கடி சளித் தொல்லையால் அவதிப்படும் பிள்ளைகளையும் கவனித்து, பாடத்தினையும் படித்து, ஒருவாறு தேறினேன். பிறகு அடுத்த செமஸ்டர். மீண்டும் டென்ஷன். வின்டர் முடிந்து வசந்த காலம். மீண்டும் சளி, காய்ச்சல் என்று ஒரே அக்கப்போர் தான். இந்த முறை என்னையும் சேர்த்து சளி பிடித்துக் கொண்டது. அதற்கு மருத்துவரைப் பார்த்து, மருந்துகள் உட்கொண்டு... ஒரு நாள் மிகவும் உடைந்து போய் வேலையில் அழ ஆரம்பித்து விட்டேன்.

நீ முற்பிறவியில் செய்த பலனை இப்பிறவியில் அனுபவிப்பாய் என்று சொல்வார்கள். அது முற்றிலும் உண்மை. என்னுடன் வேலை பார்த்த நாடலி, லீசா இருவரும் என்னை அணைத்து ஆறுதல் சொன்னார்கள். அதோடு எனக்கு அஸைன்மென்ட் செய்ய உதவி செய்வார்கள். நீ எதற்கும் கவலைப்படாதே நாங்கள் இருக்கிறோம் என்று சொல்வார்கள். இந்த லிஸ்டில் இன்னும் நிறைய நட்புக்கள் இருக்கிறார்கள்.

என்ன நடந்தாலும் படிப்பதை மட்டும் விட்டு விடாதே என்பார்கள். இதற்கெல்லாம் என்ன கைமாறு செய்யப் போகிறேன் என்று அடிக்கடி நினைப்பேன். தற்போது இரண்டு பாடங்கள் எடுப்பதால், வேலையில் இரண்டு நாட்கள் விடுப்பு எடுக்க வேண்டிய கட்டாயம். நான் வேலையினை விட்டு நின்றுவிடுகிறேன், உங்களுக்கு சிரமம் கொடுக்க விரும்பவில்லை. வேறு யாராவது முழு நேர உதவி ஆசிரியை இருந்தால் உங்களுக்கு உதவியாக இருக்கும் என்றேன். அதெல்லாம் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்றார்கள். அதன்படி வேறு ஒருவரை பகுதி நேர பணியாளராக சேர்த்திருக்கிறார்கள்.  பள்ளி அதிபரிடம் மிகவும் போராடி நடந்த ஒரு நிகழ்ச்சி. உற்ற நண்பர்கள் இருந்தால் மலையும் கூட கடுகளவு என்பார்கள் என்பதை என் அனுபவத்தின் ஊடாக அறிந்தேன். அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

மீண்டும் சந்திப்போம்....