Thursday, July 29, 2010

சமையல் போட்டி

வாணி : சமையல் போட்டிக்கு வருகை தந்திருக்கும் அனைவருக்கும் வந்தனங்கள். சமையல் போட்டியில் பங்கேற்கப் போறவங்களை அறிமுகப்படுத்தப் போறேன்.

இதோ, முதலாவதாக வருபவர் திருமதி. அதிரா.

அதிரா, வாங்கோ. நல்வரவு.
இன்று என்ன சமையல் செய்யப் போறீங்க? இந்த மூட்டையில் என்ன இருக்கு?
அதிரா : நன்றி. இது மிளகாய்த்தூள்.

வாணி : கடவுளே! ஏன் அதீஸ் ? ஒரு 4 டேபிள்ஸ்பூன் பத்தாதா?
அதிரா : 4 மேசைக்கரண்டியா? எந்த மூலைக்கு ???
வாணி : சரி. இந்த மூட்டையை தூக்கிக் கொண்டு அப்படி ஓரமா போய் நில்லுங்கோ.

வாணி : இரண்டாவது போட்டியாளர் திரு. ஜெய்லானி.
ஜெய், வாங்கோ. நல்வரவு. என்ன இது ஒரு அண்டா மட்டும் கொண்டு வறீங்க?
ஜெய் : ஏன் அண்டா கொண்டு வரப்படாதா?
வாணி : சரி. இந்த அண்டாவையும் கொண்டு போய் அதிராவின் பக்கத்தில் அமருங்க.

வாணி : மூன்றாவதாக வருபவர் திருமதி. இமா கிறிஸ். நல்வரவு. அது சரி. இவர் யார்?
இமா : இவர் கிறிஸ்.
வாணி : இமா, போட்டி விதிமுறைகள் தெரியுமல்லவா? ஒருவருக்குத் தான் அனுமதி. உதவியாளரை அனுமதிக்க மாட்டோம்.
இமா: நான் விண்ணப்ப படிவத்தில் இமா கிறிஸ் என்று இவர் பெயரையும் சேர்த்து அல்லவா போட்டேன்.
வாணி : கடவுளே! கிறிஸ் அண்ணாச்சி, நீங்கள் போய் அப்படி பார்வையாளர்களுடன் இருந்து உங்கள் மனைவிக்கு கை தட்டுங்கோ.
இமா, நீங்கள் போய் ஜெய் பக்கத்தில் இருங்கோ.

இமா: ( மனதினுள் ) எங்களைப் பிரிச்சு... இது பெரிய சதி வேலையாக் கிடக்கு.

வாணி : அடுத்து வருபவர் இட்லி மாமி.
வாங்க! நலமா. அப்படி போய் உட்காருங்கள்.

இதோ! அடுத்து வருபவர் திவ்யாம்மா. நல்வரவு.

இட்லிமாமி : ( மைன்ட் வாய்ஸ் ) இது என்ன கூத்து ? திவ்யாம்மா என்றால் பெண் அல்லவா? எப்படி எல்கே பெண் பெயரில் ஆள்மாறாட்டம் செய்யலாம்.
( சத்தமாக ) ஏன்பா அறிவிப்பாளர், இது என்ன அக்கிரமம்? இதெல்லாம் கண்டிக்கவே மாட்டீங்களா?
எல்கே : நான் தான் அப்படி என் பெயரை பதிவு செய்தேன்.
இட்லிமாமி : பெயரை மாத்தினா மட்டும் சமையல் செஞ்சு கிழிச்சிடுவியாக்கும் ஹாஹா..

எல்கே : உன் இட்லியை விட நான் நல்லாவே சாதம் வடிப்பேன்.
இ. மாமி : ம்ம்.. பார்க்கலாம்.

வாணி : அடுத்து வருபவர் மகி. வணக்கம். இன்று என்ன சமையல் செய்யப் போறீங்க? உங்கள் பின்னாடி மறைஞ்சு நிற்பது யாரு?

மகி : வணக்கம். அது வந்து.... தண்ணி

வாணி : ஏம்பா நாங்கள் தண்ணீர் கொடுப்போம் என்று விண்ணப்படிவத்தில் இருந்திச்சு அல்லவா? இவங்க பெயர் என்ன?
மகி : ஹிஹி.. சந்தனா. நான் அப்பவே சொன்னேன் நீ கேட்கலை. இப்ப நல்லா உனக்கு வேணும், தண்ணி.
தண்ணி : ஏதோ நம்ம அண்ணி புண்ணியத்திலை சமையல் கற்றுக் கொள்ளலாம் என்றால் விடமாட்டார்கள் போல இருக்கே. நான் எப்ப கேக், பன் எல்லாம் செய்யப் பழகுவது...சரி வரட்டா.

வாணி: இப்ப போட்டி விதிமுறைகளை நான் மீண்டும் சொல்றேன்.
போட்டி சரியாக 11 மணிக்கு ஆரம்பமாகும். 3 மணி நேரம் டைம் தருவோம். ஒரு மெயின் டிஷ், பக்க உணவு, ஒரு டிசர்ட் செய்து அழகா அலங்கரித்து வைக்கணும். சுவை, அலங்கரிப்பு, நேரம் இப்படி எல்லாமே கவனிக்கப்படும். போட்டி நடைபெறும்போது யாரும் பெருஞ்சீரகம், பெருங்காயம் கடன் வாங்கப் போறேன்னு கிளம்பிடக்கூடாது. இடையில் பேசுவதோ, மற்றவரைக் காப்பி பண்ணுவதோ கூடாது.


ஜெய் : அப்ப கடுகு வாங்கலாமா?
அதிரா : கர்ர்... ஜெய், நீங்கள் என்னிடம் மிளகாய் பொடி வாங்கலாம் என்று கனவு கூட காண வேண்டாம்.
ஜெய் : அது சரி. இங்கு என்ன போட்டி நடக்குது?
அதிரா : சரியாப் போச்சு. இது சமையல் போட்டி.
ஜெய் : இது என்ன அக்கிரமம்? நான் என் பெயர் குடுக்கவே இல்லையே....

வாணி: அங்கு என்ன அரட்டை? போட்டி ஆரம்பமாகப் போகுது எல்லாரும் உங்கள் இடங்களுக்குப் போய் ரெடியாக நில்லுங்கோ.


ஜெய் : ( மனதினுள் ) 3 மணி நேரமெல்லாம் ரொம்ப ஓவர். எனக்கு ஒரு அரை மனி நேரம் போதும். நான் சொல்லி யார் கேட்பா. இந்த அண்டாவில் தண்ணியை நிரப்பி வைச்சா முடிஞ்சுது வேலை.
அதிரா : ( மனதினுள் ) டிசர்ட்டும் செய்யணுமாமே. எனக்கு இனிப்பு பிடிக்காது என்று எத்தனை முறை சொல்வது. மிளகாய்த்தூள் போட்டு கேக் செய்து, மேலே மிளகாய் பொடி ஐஸிங். சூப்பர் ஐடியா!!

இமா: ( மனதினுள் ) பெரிய ஐடியா போட்டு, ஆளையும் கூட்டி வந்தேன். எல்லாமே போச்சு. என்ன சமையல்ன்னு யோசிக்கணும்.

எல்கே : ( மனதினுள் ) அடச்சே! ஒரு ஐடியாவும் தோணமாட்டுதாம். பேசாம தயிர் சாதம், அப்பளம், இனிப்பு தயிர் சாதம் டிசர்ட். ஆகா! சூப்பரா ! இந்த இட்லி மாமி என்ன பண்றா? அதுக்கு இட்லியை விட்டா வேறு கதி. பாவம்.

3மணி நேரம் கடந்த பின்னர்.
வாணி : எல்லோரும் நீங்கள் சமைச்சதை டேபிளில் அழகா பிரசன்ட் பண்ணுங்கோ. இந்த முறை பார்வையாளர்கள் மத்தியிலிருந்து ஒருவரை தீர்ப்பு சொல்ல தெரிவு செய்து இருக்கிறார்கள்.

இப்ப உங்கள் நடுவர் மேடைக்கு வந்து, தன்னை தானே அறிமுகம் செய்து கொள்வார்கள்.

நாட்டாமை : என் பெயர் ஆஹா பக்கங்கள்! அப்துல் காதர். எதைச் சொல்ல? எதை விட? நான் பாட்டுக்கு ( சிவெனேன்னு ) ஒருவரை தேடி இந்தப் பக்கம் வந்தேன். கூப்பிட்டு நாட்டாமை பதவி குடுத்து, கொடுமையா....

வாணி : சிறப்பான அறிமுகம். நன்றி.
முதலில் அதிராவின் சாப்பாட்டினை ருசி பார்ப்போமா.
நாட்டாமை : என்ன கலர் இது? எல்லாவற்றிலும் செங்கல் பொடியை தூவி இருப்பாங்களோ?. மேடம், பார்க்கவே நல்லா இருக்கு. அந்தகேக் பீஸ் ஒண்ணு மட்டும் குடுங்க.
அதிரா : முழுவதும் உங்களுக்கே.
நாட்டாமை : கடவுளே! இது என்ன கண்ணெல்லாம் எரிகின்றது. மயக்கம் வருது. .....

தொடரும்...
( தொடரும் என்று போட்டிருப்பதால் மீதி வரும் பிறகு படிக்கலாம்ன்னு பகல் கனவு காணப்படாது. இதிலிருந்து தொடருமாறு எங்கள் மாவீரன் ஜெய்லானியை அழைக்கிறேன். ஜெய்லானி, உங்களுக்கு நேரமில்லை, நேரமிருக்கு என்றெல்லாம் சாக்கு சொல்லாமல் எழுதணும். அப்படி முடியாத பட்சத்தில் இன்னொருவரை நோக்கி கையை காட்டணும். உங்களுக்கு ஒரு வாரமே அவகாசம். )

Wednesday, July 28, 2010

உன்னைத் தேடி...

உன்னைத் தேடி...


தேவனுக்கு ஏதோ உறுத்தலாக இருந்தது. இராணும் இவனுடன் மேலும் 50 பேரை கைது செய்து இருந்தார்கள்.

இரவு வந்த பின்னர் விடுதலை செய்து விடுவார்கள் என்று எல்லோரும் நம்பினார்கள்.
இரவு 8 மணி அளவில் இராணுவத்தினர் ஏதோ கூடிப் பேசினார்கள். எல்லோரையும் எழுந்து வரிசையாக பக்கத்தில் இருந்த நூல் நிலையத்தினுள் போகச் சொன்னார்கள். தேவனுக்கு ஏதோ புரிந்தது போல இருந்தது. யாரும் தப்ப முடியாதபடி இராணுவம் சுற்றி நின்று கொண்டது.

உள்ளே ஒரே இருட்டாக இருந்தது. கனவில் வந்த இடம் போல தோன்றியது தேவனுக்கு. கைகள் பின்னோக்கி கட்டப்பட்டன. எல்லோரையும் வரிசையாக நிற்கச் சொன்னார்கள். எங்கும் மரண ஓலங்கள் கேட்டன. தேவன் அழவில்லை. நர்மதாவின் முகம் மட்டுமே நினைவில் வந்தது. சில நிடங்களின் பின் இயந்திர துப்பாக்கிகள் சட சடத்தன.

தேவனுக்கு கனவா, நிஜமா என்று சொல்ல முடியாத ஒரு நிலை. பின் மண்டையில் ஏதோ பிசுபிசுத்தது. தான் இறக்கவில்லை என்பது மட்டுமே அவனுக்கு உறுதியாக விளங்கியது. இராணுவத்தினரின் பூட்ஸ் சத்தங்கள் கேட்ட வண்ணம் இருந்தன. இறந்தவன் போல ஆடாமல் அசையாமல் கிடந்தான்.

நன்கு இருட்டிய பிறகே தேவனுக்கு சுயநினைவு வந்தது. கைகள் பின்னால் கட்டப்பட்டிருந்ததால் எழுந்து நிற்க சிரமமாக இருந்தது. ஊர்ந்து செல்ல எத்தனித்தான். பக்கத்தில் நகரவே முடியாதபடி பிணக்குவியல்.
அதிகாலை சூரிய ஒளி முகத்தில் விழுந்தது. இராணுவத்தின் நடமாட்டம் இல்லை என்று உறுதி செய்த பின் மெதுவாக அமர்ந்து கொண்டான். தலை பாரமாக இருந்தது. கணவனைத் தேடி ஓடி வந்த நர்மதா இந்தக் காட்சியைக் கண்டதும் ஸ்தம்பித்து நின்றுவிட்டாள்.

நர்மதாவை மட்டுமல்ல வேறு யாரையுமே தேவனுக்கு இனங்காண முடியவில்லை. நர்மதா தன் சக்திக்கு மீறி தேவனுக்கு செலவு செய்து விட்டாள். ஆனால், தேவன் மீண்டும் பழைய நிலைமைக்கு வருவது சாத்தியமே இல்லை என்று உறவினர்கள் நம்பினார்கள்.
ஒரு நாள் வேலையால் வந்து பார்த்தபோது தேவனைக் காணவில்லை. ஊர் முழுவதும் தேடிக் களைத்துவிட்டாள் நர்மதா.
பல மைல்கள் தொலைவில் தலையை ஒரு பக்கம் சாய்த்தபடி, சூனியத்தை வெறிக்கும் கண்களுடன் வலம் வந்த தேவனை ஊரார் " பைத்தியம்" என்று அழைத்தது நர்மதாக்கு தெரிய வாய்ப்பில்லை.

( இது உண்மையில் நடந்த சம்பவம். முடிவை சிறிது மாற்றி எழுதியிருக்கிறேன். )
முற்றும்.