Monday, April 11, 2011

பூரணியின் முதல் வோட்டு!

கிர்கிர்... என மணிக் கூடு தலையில் அடிப்பது போல சத்தம் எழுப்பியது. படுக்கையில் இருந்து எழாமலே அதன் தலையில் கையினை வைத்து அழுத்தினாள் பூரணி.
இது அலாரம் வைச்சா ஊரே எழும்பிடும். ஆனால், இது மட்டும் எழும்பவே எழும்பாது என்று அண்ணன் திட்டும் முன்னர், தம்பி கடுப்பாகும் முன்னர் மணிக் கூட்டினை அமர்த்தி விட்டாள்.
அலுப்பாக இருந்தாலும் பரீட்சைக்கு படிக்க வேண்டும் என்ற எண்ணம் அவளை படுக்கையை விட்டு எழச் செய்தது.
அம்மாவைத் தவிர அனைவரும் தூங்கிக் கொண்டு இருந்தார்கள்.
வெளிப்படியில் புத்தகத்துடன் அமர்ந்தாள்.
கொஞ்ச நேரம் தூங்கி விழுந்தவள், யாரோ அழைக்கும் சத்தம் கேட்டு விழித்தாள்.
மூன்று பேர் அங்கு நின்றார்கள்.
" ஏம்மா, வோட்டுப் போட வருகிறாயா?", என்றான் ஒருவன்.
அட! நம்மளைக் கூட மதிச்சு, வோட்டுப் போட கூப்பிடுறாங்களே என்ற ஆனந்தத்தில் அழுகையே வந்து விட்டது பூரணிக்கு.
அம்மா, நான் வோட்டுப் போடப் போறேன் என்று உள்ளே குரல் குடுத்தாள். அம்மாக்கு காதில் எப்படி, என்ன விழுந்ததோ தெரியவில்லை.
" போய்ட்டு வா, பூரணி", என்றார் உள்ளிருந்தபடி.
இருங்க! பல்லு விளக்கிட்டு வரேன் என்றாள்.
அட! வாம்மா. நீ என்ன மேடையிலா பேசப் போறே என்றான் இன்னொருவன்.
அவன் சொல்வதும் சரிதான். அதுக்காக அப்படியே போயிட முடியுமா?
" வெளியே ஆட்டோ காத்திட்டு இருக்கு. சுருக்கா வா", என்றான் இன்னொருவன்.
ஆட்டோ என்ற சொல்லைக் கேட்டதும் ஓடிப் போய் ஏறிக் கொண்டாள்.
இவளின் அண்டை அயலார் இருவர் இவளுடன் ஒட்டிக் கொண்டார்கள்.
அந்த இரு பெண்மணிகளும் சிரித்து, பேசியபடியே வந்தார்கள்.
பூரணி வாயே திறக்கவில்லை. ஆமாம், இல்லை என்பது போல கேட்ட கேள்விகளுக்கு மட்டும் தலையாட்டினாள். வாயை திறந்தால் நாறிடும் என்ற உண்மை அவர்களுக்கு எங்கே விளங்கப் போவுது.
தூக்கம் தாலாட்டியது.
போய் இறங்கியதும், ஒருத்தன் சொன்னான், " பானை சின்னத்தில் ஓட்டு போடும்மா"

சரி. போட்டுட்டா போச்சு என்றாள் பூரணி. பெரிய லைனில் காத்திருந்து, அவன் சொன்ன சின்னத்தில் குத்தி விட்டு, வெளியே வந்து பார்த்த போது ஆட்டோ, இவளைக் கூட்டி வந்த மூவர் எல்லோரும் மாயாமாகி இருந்தார்கள்.
அடப்பாவிங்களா! ஒன்லி one way தான் சவாரி என்று சொல்லியிருந்தா கட்டாயம் வந்திருக்கவே மாட்டேன் என்று நினைத்தபடி நடக்க ஆரம்பித்தாள்.
வீட்டினுள் நுழையும் போது சிரிச்ச முகமாகவே போகணும் என்று நினைத்துக் கொண்டாள். அந்த இரண்டு குரங்குகளுக்கும் நான் அவல் ஆயிடக் கூடாது என்று நினைத்துக் கொண்டாள்.
வீட்டினுள் நுழைந்ததும், " அம்மா! பூரணி வந்துட்டா. யாருக்கு வோட்டுப் போட்டே ? " , என்றான் அண்ணா.
பானைக்கு என்றாள். இதை விட அவளுக்கு விபரமாக சொல்லத் தெரியவில்லை.

பூரணியின் முதல் வோட்டு இப்படி அநியாயமாகி விட்டதே என்று அண்ணன் சொன்னான். அவன் சொன்னது நக்கலா, அனுதாபமா என்று பூரணிக்கு இன்னும் விளங்கவேயில்லை.
உன்னைப் போல அண்டா, ஆட்டோ என்று இலவசமாக எது கிடைச்சாலும் வோட்டு போடுபவர்களால் இந்த நாடு இப்படி சீரழிஞ்சு போய் கிடக்கு. அடுத்த முறையாவது சொந்த புத்தியை பாவித்து, வோட்டுப் போடு என்று முடித்துக் கொண்டான்.
சும்மாவே விளாசித் தள்ளுபவன் மேடை, மைக் கிடைச்சதும் பூந்து விளையாடுறான் என்று மனதினுள் நினைத்தபடி புத்தகத்தை கையில் எடுத்துக் கொண்டாள் பூரணி. அடுத்த முறை கவனமா வோட் போடணும் என்று சபதம் எடுத்துக் கொண்டாள் மனதினுள்.