Thursday, March 29, 2012


ஐ பூரி





இந்த ரெசிப்பி எனக்கு மிகவும் பிடிக்கும். ஊரில் இருந்த போது, என் அம்மாவின் தூரத்து உறவினர் ஒருவர் இருந்தார். அவர் எங்கள் வீட்டுக்கு வரும் போது சாப்பிடச் சொன்னால், இல்லைம்மா இப்ப தான் அய் பூரி சாப்பிட்டேன், என்பார்.
என் அம்மாச்சி அவரிடம் ரெசிப்பி கேட்டார். அவரும் சொன்னார். வீட்டில் அய் பூரி செய்தார்கள் செய்து அடுத்த நொடி எல்லாமே முடிந்துவிட்டது.
இப்ப இது என் பிள்ளைகளின் பேவரைட் உணவு. தேங்காய் சட்னியோடு அல்லது  சைட் டிஷ் இல்லாமல் சாப்பிட சுவையாக இருக்கும்.
சரி இப்ப இந்த பெயர் வந்த காரணத்தை பார்ப்போமா?
ஊரில் என் உறவினர் சூடிய பெயர் " அய் பூரி". என் மகன் சூட்டிய பெயர்   " ஐ பூரி".
ஏன் இந்தப் பெயர்?, இது நான்.
அதுவா ஐ போன், ஐ பாட் போல இதுக்கு பெயர் ஐ பூரி, என்றார்.

தேவையான பொருட்கள்:

மா - 2 கப்
வெங்காயம் - 1/4
காய்ந்த மிளகாய் - 1 அல்லது 2
சீரகம் - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
காரட் - துருவியது 1/4 கப்
உப்பு
கறிவேப்பிலை

செய்முறை:
முதலில் வெங்காயத்தை மிகவும் பொடியாக வெட்டவும். பொடியாக வெட்ட மாட்டேன் என்று அடம் பிடிக்க கூடாது. பொடியாக வெட்டினால் தான் மாவோடு சேர்ந்து இருக்கும். இல்லாவிட்டால் தனியாக பிரிந்து போய்விடும். சட்டியில் கொஞ்சம் எண்ணெய் விட்டு, கடுகு, சீரகம் போடவும். பின்னர்
பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் போட்டு, லேசாக வதக்கவும். வதங்கியதும் தட்டில் பரவி ஆற விடவும்.

மாவுடன் உப்பு, காரட், வெங்காய கலவை கலந்து கொள்ளவும். குளிர்ந்த தண்ணீரை விட்டு சப்பாத்தி மா பதத்திற்கு பிசையவும். பிசைந்து  முடிந்ததும் எண்ணெயில் தொட்டு பூரி சைஸில் உருட்டி, எண்ணெயில் பொரித்து எடுக்கவும். இப்ப சுவையான ஐ பூரி ரெடி.

மா - கோதுமை மா, மைதா மா இரண்டும் மிக்ஸ் செய்து பூரி செய்யலாம். நான் மைதா மா மட்டும் பாவித்தேன். குட்டீஸ்களுக்கு மிகவும் பிடிக்கும் உணவு. பெரிசுகளும் சாப்பிடத் தொடங்கினால் நிப்பாட்ட மாட்டார்கள்.