Friday, December 24, 2010

நானும் செல்போனும்!

செல்போன் - ஊரில், உலகத்தில் இது இல்லாமல் யாரையும் காண்பது அரிதிலும் அரிது. காரில், பஸ்ஸில், நடந்து செல்கிறவர்களின் கைகளில், காதுகளில் இது ஒட்டியபடியே இருக்கும். அப்படி என்னதான் பேசுவார்களோ தெரியவில்லை?
சமீபத்தில் நாங்கள் இருந்த மாநிலத்தில் கார், பஸ், ட்ரெயின் ஓட்டுபவர்கள் செல் போன் பாவிக்க தடை விதிக்கப்பட்டது. குறிப்பாக டெக்ஸ்ட் ( text ) மெஸேஜ் அனுப்பக் கூடாது என்பது விதி. மக்கள் உடனே ஓடிப்போய் நீலப்பல்லு ( blue tooth ) வாங்கி, அதை தயாரிப்பவன் நெஞ்சில் பால் வார்த்தார்களாம்.

எனக்கு இந்த செல்போன் மட்டுமல்ல வேறு எந்த பொருட்களிலும் பெரிதாக ஈர்ப்பு ஏற்படுவதில்லை. அமெரிக்கா வந்து பல வருடங்களின் பின்னரே செல் போன் எனக்கென்று சொந்தமாக கணவரின் வற்புறுத்தலின் பின்னர் வாங்கிக் கொண்டேன். முதலில் ப்ரீபெய்ட் ( pre paid )போன் வாங்கினேன். ஆனால், அதை பாவிப்பதே குறைவு. இப்படித் தண்டமாக எதற்கு பணத்தை செலவு செய்ய வேண்டும் என்று எண்ணிக் கொள்வேன்.

ஒரு முறை என் மகனின் பள்ளியில் என் செல் நம்பர் கேட்டார்கள். எனக்கு என் நம்பர் தெரியவில்லை என்ற உண்மை அப்போது தான் விளங்கியது.
அடடா! நம்பரை மனப்பாடம் செய்து வைக்கவில்லையே என்று முழித்தேன்.
அடி! அசட்டுப் பெண்ணே என்பது போல பார்த்தார் அங்கு வேலை செய்த பெண்மணி.
என்னைத் தூக்கத்தில் எழுப்பிக் கேட்டால் கூட என் நம்பர் தலைகீழாக, தலை மேலாக சொல்வேன் என்று தம்பட்டம் அடித்துக் கொண்டார் பக்கத்தில் நின்ற டீன் ஏஜ் பெண்.

இருங்க வரேன் - என்று சொல்லி விட்டு, என் கைப் பையினைக் குடைந்து போனை வெளியே எடுத்தேன்.
போன் உயிரை விட்டிருந்தது.
அவசரமாக கணவரின் செல் நம்பரை சொல்லி, சமாளித்துவிட்டு வீடு வந்தேன்.
வீட்டில் குளிர்சாதனப் பெட்டியில் நம்பரை எழுதி வைத்து, போகும் போது, வரும் போது நம்பரை மனப்பாடம் செய்தேன்.
முதல் மூன்று நம்பர்கள் மட்டுமே மனப்பாடம் ஆகியது. இறுதி 4 நம்பர்கள் கொஞ்ச நேரம் உயிரை வாங்கிய பின்னர் நினைவில் வந்தது.
இப்ப தூக்கத்தில், விழித்து இருக்கும் போது யார் கேட்டாலும் நம்பர் தெரியும்.
ஆனால், யாருக்கும் என் நம்பரைக் குடுப்பதில்லை.

நம்பர் குடுக்காமல் இருப்பதன் காரணம்
சோம்பேறித்தனமே முதல் காரணம் என்று நினைக்கிறேன். செல்போனில்,
1. என்னத்தை பேசுவது?
2. அதை என் கைப்பையில் குடைந்து எடுக்க வேண்டும்
3. அது உயிரை விடும் தருணங்களில் மறக்காமல் அதன் வயரை செருகி உயிர் கொடுக்க வேண்டும்

இப்படி சில காரணங்களினால் நான் பெரும்பாலும் செல்போனை சுவிட்ச் ஃஆப் பண்ணி வைத்துவிடுவேன்.

சமீபத்தில் என் உறவினர் பெண் ஆப்பிள் ஐ போனை வைத்து பெருமை பேசிக் கொண்டே இருந்தார்.
இது என்னப்பா? என்று நான் கேட்டேன்.
இது தெரியாதா? இது தான்... இங்கே பாருப்பா ஸ்கிரீனில் எல்லாமே தானாகவே நகரும். விரலை வைச்சுப் பாரு...

சரி! கிடக்கட்டும். டீ குடிக்கிறியா? என்று கேட்ட என்னைக் கடுப்புடன் பார்த்து விட்டு, போனை கைப்பையில் வைத்துக் கொண்டார்.

மற்றவர்கள் வைத்திருக்கிறார்கள் எனக்கும் வேணும் என்ற எண்ணம் எனக்கு ஒரு போதும் வந்ததில்லை. நடுத்தர குடும்பத்தில் பிறந்து வளர்ந்தமையால் இப்படி இருக்கிறேனோ தெரியவில்லை. அல்லாவிட்டால் இதெல்லாம் வைத்திருக்கும் அளவிற்கு என் தகுதியை நான் இன்னும் உயர்த்திக் கொள்ளவில்லை என்றே நினைக்கிறேன்.