Thursday, March 17, 2011

ஆச்சரியங்கள் ( பாகம் 4 )

ஜப்பானில் வந்த நிலநடுக்கம், சுனாமி பற்றி எல்லோருக்கும் தெரியும். ஜப்பானில் ஒரு மூதாட்டி ( வயது 70 க்கு மேல் ) சுனாமி சைரன் கேட்க தொடங்கியதும் வேகமாக சைக்கிளில் மிதிக்க ஆரம்பித்தாராம். இவர் குடியிருந்த வீடு தண்ணீரோடு போய் விட, இவர் மட்டும் சைக்கிளை மிதிச்ச மிதியில் தப்பி பிழைத்து பாதுகாப்பான இடத்திற்கு போய் சேர்ந்து விட்டார். இப்போது அரசாங்கம் வழங்கிய ஷெல்டரில் பாதுகாப்பாக இருந்தாலும் எதிர்காலம் பற்றிய பயம் இவர் கண்களில் தெரிந்தது. இவர் ஒரு விவசாயி. தோட்டத்தில் கடுமையாக வேலை செய்ததால் இவருக்கு இந்த உடல் தைரியம், மன தைரியம் இயற்கையாகவே அமைந்திருக்கும் போல. இரண்டு பிள்ளைகள் இருந்தாலும் அவர்களுக்கு தொல்லையாக இல்லாமல் தனித்து வாழ்ந்து வந்தவர் கண்களில் வெறுமை தெரிய, இனிமேல் என்ன செய்யப் போகிறேனோ தெரியவில்லை என்றார் கலக்கத்துடன்.
***********************

சமீபத்தில் ஒரு சேர்வே ( survey ) எடுத்தார்களாம், ஆண்களா பெண்களா வேலைகளை ஒழுங்கா செய்து முடிப்பது, நேர்த்தியாக செய்வது இப்படி பல விடயங்கள் ஆராய்ச்சி செய்யப்பட்டன. முடிவு என்னவென்று உங்களுக்கு/எல்லோருக்கும் தெரியுமே! எடுத்த வேலைகளை செய்து முடிப்பதில் பெண்கள் கில்லாடிகள் என்பது தான் முடிவாம்.
உதாரணமாக, இடியோடு கூடிய மழை வரப் போகிறது என்று வானிலை ஆராய்ச்சி நிலையம் கதறினால் பெண்கள் எச்சரிக்கையாக இருந்து கொள்வார்களாம். ஆனால், ஆண்கள் கூரை மீது ஏதாவது ஃபிக்ஸ் பண்ணப் போறேன்னு ( கூரையில் ) ஏறி நிற்பார்களாம் அல்லது golf விளையாடப் போறேன்னு கிளம்பி விடுவார்களாம்.
இதுக்கு எல்லாம் எதுக்கு survey. எங்களை கேட்டா நாங்களே சொல்லியிருப்போமே!!!!

**********************

ஒரு கிழிந்த டாலர் நோட்டு. என் ஆ.காரர் தலையில் யாரோ கட்டி விட்டார்கள். ஒரு ஓரமா கிழிச்சிருந்தா கூட பரவாயில்லை. 1/8 பகுதி மிஸ்ஸிங். என் ஆ.காரர் சொன்னார் இதை இனிமேல் பாவிக்க முடியாது தூக்கி கடாசிட வேண்டியது தான். அவர் சொல்றார் என்பதற்காக கடாசிட முடியுமா? யாசிப்பவர்களுக்கு குடுக்கலாம். ஆனால் குடுத்தா ஒழுங்கா, நல்ல நோட்டா குடுக்கணும் என்பது எங்கள் பாலிஸி. இரண்டு நாள் டைம் குடுங்க யார் தலையிலாவது கட்டிட்டு தான் மறு வேலை என்று சபதம் எடுத்தேன். ஏதோ ஒரு பொருள் வாங்கிய பின்னர் நோட்டினை மடித்து குடுத்தேன். ஆனால், கடைக்காரர் ஒரு பார்வை பார்த்திட்டு திரும்ப தந்து விட்டார். அங்கேயே நின்றால் அடித்து விடுவாரோ என்று பயத்தில் வந்து விட்டேன்.

நேற்று கடைக்கு போனேன். இங்கே சூப்பர் மார்க்கெட்டில் பொருள்கள் வாங்கிய பின்னர் நாங்களே ஸ்கான் பண்ணி, பில் போட்டு வரக் கூடிய ஷெல்ப் செக் அவுட் ( self check out ) வசதியும் இருக்கு. இதை விட்டா வேறு சந்தர்ப்பம் வராது என்று அந்த டாலர் நோட்டை உள்ளே தள்ளி விட்டேன். மெஸின் அதை வெளியே துப்பிவிட்டது. நான் விடுவேனோ பார் என்று மீண்டும் கிழிஞ்ச பக்கம் முதல் போகும்படி உள்ளே தள்ளினேன். குறைஞ்சது 2 நிமிடங்கள் மெஸின் மவுனம் சாதிச்சது. சரி! காசு அவ்வளவு தான் என்று எண்ணிக் கொண்டேன். சில நிமிடங்களின் பின்னர் பச்சை சிக்னல் வந்தது. மெஸின் வேறு வழி இல்லாமல் என் காசை எடுத்துக் கொண்டதன் அடையாளம் அது. இனி மெஸினின் சாமர்த்தியம் அதை வேறு யாராவது தலையில் கட்டுவது.

******************

Sunday, March 13, 2011

பனி விழும் இரவு

அமெரிக்காவின், வெர்ஜீனியா மாநிலத்தில் ஒரு உணவகம். வின்டர் நேரமாகையால் 4 மணிக்கே இருள் சூழ்ந்திருந்தது. உணவகத்தில் பெரிதாக கூட்டம் இல்லை. ஒரு சில வெள்ளையர்கள் மட்டும் அமர்ந்திருந்தனர். சிலர் புகைப்பிடித்தபடி, சிலர் மது அருந்தியபடி காணப்பட்டனர். கேத்தரின் அந்த உணவகத்தில் கடந்த 15 வருடங்களாக வேலை செய்பவர். சில நேரங்களில் மேற்பார்வையாளராகவும், சில நேரங்களில் உணவு பரிமாறுபவராகவும், மேசைகளை சுத்தம் செய்பவராகவும் பல அவதாரங்கள் எடுப்பார். வயது 40 களின் இறுதிப் பகுதி. உணவகத்தின் உரிமையாளர் வெள்ளையர். பெயர் ஸ்டீவ். கறுப்பர்களுக்கு உரிமைகள் இல்லாத காலம் அது. கறுப்பர்கள் அங்கு வருவதையே விரும்பாதவர். உணவகத்தின் முன் வாயிலில் வெள்ளை இனத்தவர்கள் மட்டும் உள்ளே வரவும் என்று கொட்டை எழுத்துகளில் எழுதி வைத்திருந்தார்.

வீட்டில் தாய், தந்தை, குறிப்பாக பாட்டி ஆகியோருக்கு கறுப்பர்களை கண்டாலே வெறுப்பு.
தீண்டத்தகாதவர்கள் என்று ஒதுக்கி வைத்து விடுவார்கள். சின்ன வயதிலிருந்து இந்த அறிவுரைகளைக் கேட்டு வளர்ந்தமையால் கேத்தரினின் மனதில் ஓரத்தில் இனவெறி சின்ன வயதில் இருந்தது உண்மை. ஆனால், வளர வளர அவர் அதிலிருந்து வெளியே வந்து விட்டார் என்பதும் உண்மை. இந்த உண்மை அவருக்கு மட்டும் தெரியும். வெளியே சொன்னால் எங்கே தான் ஓரம் கட்டப்பட்டு விடுவேன் என்று நினைத்துக் கொண்டார். கறுப்பர்களை காணும் போது மனம் முழுவதும் இரக்கம், பச்சாதாபம் ஏற்படும். இதெல்லாம் முதலாளி ஸ்டீவுக்கு தெரிந்தால் வேலைக்கு வேட்டு வைத்து விடுவார் என்பதால் வெளிக்காட்டாமல் இருந்து விடுவார்.

முதலாளி எங்கோ சென்று விட அன்று கேத்தரின் தான் எல்லா வேலைகளையும் செய்ய வேண்டி இருந்தது. மாலை 6 மணியளவில் ஒரு வெள்ளை மனிதர் உள்ளே வந்தார். வந்தவரின் கண்களில் ஒரு இனம் புரியாத பதட்டம் இருந்தது. சுற்றும் முற்றும் பார்த்தபடி தயங்கி நின்றார். பேசலாமா வேண்டாமா என்று ஒரு போராட்டம் அவரின் மனதில் இருந்ததை அவரின் செய்கைகள் உணர்த்தின. கேத்தரின் மேசைகளை சுத்தம் செய்தபடி மெதுவாக புன்னகைத்தார். அந்த மனிதரும் ஓரளவு இயல்பு நிலைக்கு வந்தவர் போல கேத்தரின் பக்கம் வந்தார். அவரின் ஜாக்கட், தொப்பி, சப்பாத்துகள் அவர் வசதியானவர் என்று விளம்பரம் செய்தன. நன்கு கல்வி கற்றவர் போல ஒரு பணிவு, கணிவு கண்களில் தெரிந்தன.
"நான் உங்களுக்கு எப்படி உதவி செய்ய ? ", என்று கேட்டார் கேத்தரின்.

அவர் நாலா புறமும் பார்வையினை ஓட்டியபடி மீண்டும் தயங்கி நின்றார்.
" மிகவும் பசியாக இருக்கு. இங்கே சாப்பிடலாமா ? " என்றார் அந்த மனிதர்.
" அதுக்காக தானே இந்தக் கடையே இருக்கு. தாராளமா சாப்பிடலாம்", என்றார் கேத்.
" என் மனைவி காரில் இருக்கிறார் அவரை அழைத்து வரலாமா?", என்று தொடர்ந்தார்.
" கண்டிப்பா ", இது கேத்தரின்.
" இல்லை....அவர் கறுப்பர் இனப் பெண்மணி. நாங்கள் தொலைதூரத்தில் இருந்து வருகிறோம். எல்லா உணவகங்களிலும் கறுப்பர்களை உள்ளே விடமாட்டேன் என்று சண்டைக்கே வந்து விட்டார்கள். காலையிலிருந்து எதுவுமே சாப்பிடலை. ரொம்ப பசியா இருக்கு. ", என்றார் தயங்கியபடி.
" உள்ளே கூட்டிட்டு வாங்க. தாராளமா சாப்பிடலாம்", என்றார் கேத்.
அந்த மனிதரின் கண்கள் பனித்ததை கேத்தரின் கவனித்தார்.
இருவருக்கும் சுவையான உணவு இவரே பரிமாறினார்.
கோபம் கொண்ட சில வெள்ளையர்கள் உணவகத்தை விட்டு வெளியேறினார்கள்.


எதைப் பற்றியும் கவலைப் படாமல் அவர்களை உபசரிப்பதில் கவனத்தை செலுத்தினார்.
சாப்பிட்டு முடிந்ததும் அதற்குரிய பணத்தை செலுத்தி விட்டு எழுந்தார்கள் இருவரும்.
அந்த மனிதர் கேத்தரினின் கையை பற்றிக் குலுக்கினார். அதில் ஒரு அழுத்தம், நன்றி உணர்வு எல்லாமே இருந்தது.
கேத்தரினின் கண்களில் ஈரம் கசிந்தது. கறுப்பர் இனப் பெண்மணியை கட்டியணைத்து கன்னத்தில் மெதுவாக முத்தம் இட்டார். வெண்மை நிறப் பற்கள் பளிச்சிட சிரித்தார் அந்தப் பெண்மணி.
வாசலில் சிலர் கும்பலாக கூடி நின்று ஆரவாரம் செய்தனர். அந்த ஆடவரும் பெண்ணும் வாசலில் இறங்கி நடக்க, முதலாளி உள்ளே வந்தார். சில நொடிகளில் என்ன நடந்திருக்கும் என்று அனுமாணித்துக் கொண்டார். கண்களில் கோபம் தாண்டவமாட, கேத்தரினை நோக்கி ஓடினார்.

கேத்தரின் தானாகவே உணவு விடுதியின் வாசலை நோக்கி நடக்க ஆரம்பித்தார். இனிமேல் இங்கு வேலை செய்வது மடத்தனம் என்பது மட்டும் தெளிவாக விளங்கியது.

கும்பலில் நின்ற யாரோ ஒரு வெள்ளை இளைஞன் வீசிய பொருள் கேத்தரினின் தலையில் பட்டு குருதி வடிந்தது. வழிந்தோடிய குருதியை துடைத்தபடி நடக்க ஆரம்பித்தார். பூத் துவாலைகளாக பனி விழத் தொடங்கியது. இருட்டின் பின்னணியில் அந்தக் கறுப்பின பெண்ணின் சிரிப்பு போலவே அழகாக இருந்தது பனி.