Saturday, June 14, 2014

அம்மாவின் புருஷன்


தூரத்தில் எங்கோ குண்டுகள் விழும் சத்தம் கேட்டது.
அந்தக் குண்டுகளில் ஒன்று என் தலையில்...இல்லை இல்லை என் அம்மாவின் புருஷன் தலையில் விழுந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று ராகவி நினைத்துக் கொண்டாள்.
அம்மாவின் புருஷன் என்கிற நபர் அம்மாவின் இரண்டாவது கணவர். ராகவியின் அப்பா இறந்து 5 வருடங்கள் ஆகிவிட்டது. அவர் குண்டு துளைத்து இறந்த பிறகு நிற்கதியாக நின்ற குடும்பத்தை காப்பாற்ற அம்மா மிகவும் கஷ்டப்பட்டார். அம்மாவின் வருமானம் பத்தவில்லை. அதோடு இடைக்கிடை இடம்பெயர வேண்டிய கட்டாயம். எல்லாவற்றையும் அள்ளிக் கட்டிக் கொண்டு கிளம்ப வேண்டி இருக்கும். ஒரு மாதம் அல்லது 2 மாதங்கள் கழித்து மீண்டும் வீட்டிற்கு வந்தாலும் எதுவும் நிரந்தரமாக இருக்கவில்லை. அம்மாவின் தோசை வியாபாரமும் படுத்துக் கொண்டது. அம்மா மளிகைப் பொருட்கள் வாடிக்கையாக வாங்கும் கடையின் உரிமையாளர் தான் சந்திரன். அந்த சந்திரன் தான் பின்னர் அம்மாவின் புருஷன் ஆனான்.
ராகவிக்கு அவனை எப்போதும் பிடிப்பதில்லை. ஏதோ ஒரு வகையான, வெளியே சொல்லக் கூடாத  அல்லது சொல்ல முடியாத  உறவாகிப் போனது. இரவு வந்தாலே பயந்து நடுங்க தொடங்கினாள் ராகவி. அப்பா மகள் என்ற உறவு இல்லாமல் போனது. இவன் என் அம்மாவுக்கு புருஷனா அல்லது... ராகவியின் பிறகு இரண்டு தங்கைகள். இவளை விட அழகாக இருப்பார்கள்.
அரசாங்கத்தின் பழி வாங்கும் மின்சார நிறுத்தம் அவனுக்கு சாதகமாகிப் போனது. யாரிடம் முறையிட, என்ன சொல்லி முறையிட என்று எதுவும் விளங்கவில்லை ராகவிக்கு. கொல்லைப் புறம் போய் அங்கிருந்த பெரிய மரத்தின் குச்சிகளை ஒடித்து அதை ஒரு மூளையில் சேர்த்து தன் ஆத்திரத்தினை அந்த மரத்தின் மீதும், அதன் கிளைகள் மீதும் காட்ட ஆரம்பித்தாள். மரம் நோஞ்சானாகி ஒரு நாள் பட்டுப் போய்விட்டது. இந்த மரம் போல நானும் மரித்து விட்டால்... நேற்று இருந்த மரம் இன்றில்லை. அதே போல நானும் நாளையே இறந்துவிட்டால். இல்லவே இல்லை. கூடாது. அந்த மிருகம் என் தங்கைகளை தின்ன ஆரம்பித்துவிடும்.
இவளின் கெஞ்சல்கள் இறைவன் காதில் விழுந்ததோ தெரியவில்லை ஆனால், இலங்கை விமான ஓட்டியின் காதில் விழுந்திருக்க வேண்டும். அம்மாவின் புருஷன் கடைக்கு பொருள் வாங்கச் சென்ற போது விமானத்தில் இருந்து விழுந்த குண்டினால் இவனின் இரண்டு கால்களும் போய்...அதன் பிறகு ஒரு ஆறு மாதங்கள் அவன் தொந்தரவு அறவே நின்று போனது. அவன் செத்து விடுவானா? அல்லது பிழைப்பானா என்று எல்லோரும் காத்திருக்க அவன் பிழைத்து வந்தே விட்டான்.

அதன் பிறகு அவன் ஊன்று கோல் உதவியால் நடை பழகி, இயல்பு வாழ்க்கைக்கு  திரும்ப பல மாதங்கள் ஆகிவிட்டது. ஆனால், வேலைக்கு போகாமல் வீட்டிலே இருக்க ஆரம்பித்தான். முன்பு பகலில்  தொல்லை இல்லாமல் இருந்தது. இப்ப பகலிலும் தொல்லை. அம்மா கடையை கவனிக்க சென்றுவிட, ராகவிக்கு தங்கைகள், அம்மாவின் புருஷனை கவனிக்கும் பொறுப்பு. அவன் கிட்ட வந்தால் அவனின் ஊன்று கோலினை இடறி அவனைத் தடுமாற வைத்தாள். அவன் இன்னும் மூர்க்கமாகிப் போனான்.


மாசத்தில் ஒரு நாள் டவுனில் இருக்கும் ஆஸ்பத்திரிக்கு சென்று வருவான் சந்திரன்.  யார் துணையும் இல்லாமல்  தனியாளாகவே செல்வான். அதுவும் ஒரு வகையில் நன்மைக்கே என்று  ராகவி நினைத்துக் கொள்வாள். பின் வரும் நாட்களில் இந்த ஆஸ்பத்திரி விடயமே அவனுக்கு எமனாக மாறும் என்று சந்திரன் கனவிலும் நினைத்திருக்க மாட்டான்.
அன்று வழக்கம் போல விடிந்தது. அம்மா கடைக்கு செல்ல ஆயத்தம் ஆனார்கள். அம்மாவின் புருஷன் அன்று ஆஸ்பத்திரிக்கு செல்லும் நாள். ஏனோ தெரியவில்லை சோம்பிக் கிடந்தான். அம்மா அவனின் வழிச் செலவுக்கு காசு கொடுத்துவிட்டு சென்றுவிட்டார்கள். கடை கூப்பிடும் தொலைவில் இல்லை. கிட்டத்தட்ட  10 மைல்கள் தொலைவில் இருந்தது.
அம்மா சென்ற பின்னர் ராகவி சமையல் செய்ய ஆரம்பித்தாள்.

அம்மாவின் புருஷன் ஏனோ சுரத்து இல்லாமல் இருந்தான். எழுந்து ராகவியின் அருகில் வந்தவன்  குண்டு வீச்சு விமானங்களின் இரைச்சல் சத்தம் கேட்டதும் கொஞ்சம் தயங்கி நின்றான். என்ன செய்வது என்று யோசனை செய்தான்? ராகவியின் அருகில் தவழ்ந்து வரும் போது ஊன்று கோலினை மறந்துவிட்ட தன் மடத் தனத்தினை எண்ணி நொந்து கொண்டான். இப்ப என்ன ஆச்சு? என் ஊன்று கோலினை எடுத்தால் பிரச்சினை முடிந்தது, என்று எண்ணியவாறே கட்டிலின் பக்கம் வேகமாக தவழ ஆரம்பித்தான். அங்கு ஊன்று கோல்களைக் காணவில்லை.
*******
ராகவி தன் இரு தங்கைகளை அழைத்துக் கொண்டு வேகமாக ஓடினாள். வழியில் அம்மாவின் கடை.
"ராகவி, அப்பா எங்கே?", என்றாள் அம்மா.
"ம்ம்ம்ம்... இன்று அவர் ஆஸ்பத்திரி செல்லும் நாள் மறந்துவிட்டதா?", என்றாள்.
வரும் போது அவனின் ஊன்று கோல்களை பலங்கொண்ட மட்டும் பனை மரத்தில் அடித்து நொறுக்கி, அவை உடையாமல் போக அருகில் இருந்த பாழும் கிணத்தில் மறக்காமல் கல்லைக் கட்டி எறிந்துவிட்டுத் தான் வந்தாள். அவள் இருந்த வீட்டுப் பக்கம் குண்டு வீச்சு விமானங்கள் ஆக்ரோசமாக குண்டுகள் வீசிக் கொண்டிருந்தன. சில நிமிடங்கள் நின்று பார்த்தவள் தன் தங்கைகளை அணைத்த வண்ணம் வேகமாக எதிர் திசையில் ஓட ஆரம்பித்தாள்.