Monday, May 10, 2010

முற்பகல் செய்யின்..

என் பெயர் சுதாகர். வெளிநாடு வந்து 5 வருடங்களாகி விட்டது. அம்மா, அப்பா, தங்கை மூவரும் ஊரில். ஊரில் இருக்கும் போது நான் எவ்வளவு அட்டகாசம் பண்ணினேன். நாட்டில் நிலவிய போர்ச் சூழலினால் அப்பா என்னை மட்டும் வெளிநாட்டிற்கு அனுப்பி விட்டார். வெளிநாடு வந்த பின்னர் தான் உறவுகளின் அருமை விளங்குது. அம்மாவின் பரிவான வார்த்தைகள், அப்பாவின் கண்டிப்பு கலந்த அன்பு இப்படி நிறைய இழந்துவிட்டேன். வெளிநாட்டில் பனியிலும், குளிரிலும் நடுங்கும் போது ஊருக்கு போய் விடமாட்டோமா என்று மனம் ஏங்கும்.

எல்லாவற்றினும் மேலாக மைதிலி - என் அன்புத் தங்கை. இப்போது எப்படி வளர்ந்திருப்பாள். போனில் பேசுவதே வருடத்துக்கு ஒரு முறை தான். ஒன்றாக ஊரில் இருக்கும் போது நாயும் பூனையும் போல சண்டை போடுவோம். நான் அவளுக்கு செய்த கொடுமைகள் ஒன்றா ? இரண்டா?

மைதிலி : அம்மா, இங்கே வந்து பாருங்களேன் இந்த லூசு பண்ணிய காரியத்தை.
அம்மா : என்ன ? ஆரம்பித்து விட்டீர்களா? நாட்டாமை வேலை செய்து எனக்கு வாழ்க்கையே வெறுத்து விட்டது.
மைதிலி : பென்ஸில், பேனா வைக்கும் பாக்ஸில் வெங்காயத்தை நிரப்பி வைச்சுட்டான். தோழிகளின் முன் இதை திறந்து நான் பட்ட அவமானம்.
சுதாகர் : ஐயே.. நீதானே இன்று ஹோம் சயன்ஸ் கிளாஸில் வெங்காயம் உரிப்பது எப்படி என்று செய்முறை விளக்கம் இருப்பதாக சொன்னாயே?
மைதிலி : போடா லூசு.

***********
மைதிலி : அண்ணா, போகும் போது என்னையும் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு போக முடியுமா?
சுதாகர் : ஏன் மகாராணி நடக்க மாட்டீங்களோ.
அப்பா : சுதாகர், போற வழிதானேப்பா மைதிலியை இறக்கி விடு. என்ன சரியா?
சுதாகர் : சரி வந்து தொலை.
( 5 நிமிட பயணத்தின் பின் )
ம்ம்... சவாரி போதும் இறங்கி நட.

மைதிலி: ஆனால், நான் போக வேண்டிய இடம் இன்னும் வரவில்லையே?
சுதாகர் : அது தெரியுமே. ஓசி சவாரி என்றால் போதுமே. இறங்கடி.
மைதிலி வாடிய முகத்துடன் இறங்கி நின்று கொண்டது இன்னும் என் கண்களில் நிழலாடுகிறது.

*************

நான் என் ந ண்பனிடம் அடிக்கடி புத்தகங்கள் இரவல் வாங்கி படிப்பேன். ஆனால் மைதிலிக்கு குடுக்க மாட்டேன். அவள் கேட்டால் நான் பண்ணும் அலப்பறையை பார்த்தால் உங்களுக்கு வாழ்க்கையே வெறுத்து விடும்.

சுதாகர் : என்ன புக்ஸ் வேணுமா?
மைதிலி : ம்
சுதாகர் : சரி தாரேன். முதலில் போய் ஒரு டீ கொண்டு வா. பிறகு என் ஆடைகளை அயர்ன் பண்ணு சரியா?
மைதிலி : எனக்கு புக்ஸ் வேண்டாம். நீயே வைத்துக் கொள்.
சுதாகர் : அப்ப போ. என் முன்னே நிற்காதே.
நான் வெளியே போனதும் மைதிலி புத்தகத்தை எடுத்து திருட்டுத்தனமாக படித்திருக்கிறாள். புத்தகத்தின் அட்டையின் ஓரத்தில் மெதுவாக கிழிபட்டிருந்தது. எனக்கு ஆத்திரம் வந்தது. அவளைக் கூப்பிட்டு கன்னத்தில் ஒரு அறை விட்டேன். என்னை முறைத்துப் பார்த்து விட்டு சொன்னாள், " இதற்கெல்லாம் வட்டியும் முதலுமாக சேர்த்து உனக்கு கிடைக்கும்."

" ஆகா ! பெரிய விசுவாமித்ரை சொல்லிப் போட்டா நடந்திடும் ", என்று அவளை நக்கல் அடித்தேன். மைதிலி அழுது கொண்டே ஓடிவிட்டாள். என்னோடு பேசுவதையும் அறவே நிறுத்திவிட்டாள். நானும் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.

அதன் பின்னர் நானும் வெளிநாடு வந்துவிட்டேன். முட்டி மோதி பள்ளிப் படிப்பை முடித்து, இப்போது கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கிறேன். அப்பா வேண்டாம் என்று மறுத்த போதும் பார்ட் டைம் வேலை பார்க்கிறேன். ஊருக்கு பணம் அனுப்ப மற்றும் என் செலவுகளுக்கும் பணம் வேண்டுமே.

வெள்ளி, சனிக் கிழமைகளில் இரவு 10 மணியிலிருந்து காலை 6 மணி வரை வேலை. நள்ளிரவு 12 மணியளவில் தூக்கம் சொக்கும். கோக், காஃபி என்று எதையாவது உள்ளே தள்ளிக் கொண்டே வேலை பார்ப்பேன்.
ஒரு நாள் அதிகாலை 3 மணி போல இரண்டு தடியன்கள் கடைக்குள் நுழைந்தார்கள். ஒருவன் கையில் கத்தி வைத்திருந்தான். கத்தி வைத்திருந்தவன் பணம் முழுவதையும் தரும்படி மிரட்ட, மற்றவன் என் கன்னத்தில் சப்பென்று அறைந்தான். நான் ஆடிப் போனேன். பணம் முழுவதையும் எடுத்துக் கொடுத்தேன். இருவரும் ஓடி விட்டார்கள். அவன் அடித்தது காதுகளில் இன்னும் ரீங்காரமிட்டது. ஆகா! என் தங்கை விட்ட சாபம் பலித்து விட்டதே. இப்போது என் கண்களில் கண்ணீர். என் தங்கைக்கு எப்படி வலித்திருக்கும் என்றெண்ணி.

16 comments:

  1. நல்ல நீதிக்கதை வானதி! :)

    ReplyDelete
  2. நன்றாக ஆரம்பித்த கதையின் முடிவு எதிர்பார்த்தது போல் இல்லாதது போல் தெரிகிறது. பரவாயில்லை நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. இன்னும் கொஞ்சம்
    நல்லா
    எழுதியிருக்கலாம்.

    ReplyDelete
  4. அழகான பதிவு வானதி... பழைய நாட்களை நினைவுபடுத்தியது... எத்தனை சண்டை ரகளை... ஆனா எல்லாமும் இப்போ நெனைச்சு பாத்தா ஸ்வீட் memories தான்

    ReplyDelete
  5. வானதி சுதாகரை இப்படி தண்டித்திருக்க வேண்டாமே,ஒரு தாயின் பதபதைப்பு இப்ப எனக்கு,என் பிள்ளைகளும் இப்படியே தான்,இதை அவர்களிடம் வாசிக்க சொல்ல வேண்டும்.நல்ல அனுபவ எழுத்து தொடர்ந்து எழுதி இன்னும் கொஞ்சம் கதையை நீட்டி எழுத துவங்குங்கள்.

    ReplyDelete
  6. இன்னும் கொஞ்சம் நிறைய எழுதியிருக்கலாம்.

    ReplyDelete
  7. எல்லார் வீட்டிலேயும் ந‌ட‌ப்ப‌து தான்.. ஆழ‌காக‌ ப‌திந்துள்ளீர்க‌ள்..

    ReplyDelete
  8. மகி, நன்றி.
    குமார், வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
    மேனகா, நன்றி.
    மதுமிதா, நன்றி.

    ReplyDelete
  9. அப்பாவி தங்கமணி, சரியா சொன்னீங்கள். இப்போது அந்த நாட்கள் திரும்பி வராதா என்று ஏக்கமாக இருக்கு.
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  10. ஆசியா அக்கா, மிக்க நன்றி. இது என் தோழியின் சகோதரனுக்கு நடந்த சம்பவம். தொடக்கத்தில் இருப்பது என் கற்பனை. கதையை நீளமாக எழுதினால் படிப்பவர்களுக்கு பொறுமை போய் விடும் என்றெண்ணி குட்டியாக எழுதுகிறேன்.

    மிக்க நன்றி அக்கா.

    ReplyDelete
  11. ஜெய்லானி, மிக்க நன்றி. படிப்பவர்களுக்கு போர் அடிக்குமே என்று நிறைய எழுதவில்லை.
    நாடோடி, சரியாச் சொன்னீங்கள். வருகைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  12. நல்ல நீதிக் கதை வானதி.. உண்மை தான்.. அவனுக்கு விளங்குகிறது... ஆனால் நிறைய பேருக்கு இது விளங்குவதேயில்லை..

    எங்களுக்கு போரெல்லாம் அடிக்காது... அடிக்கும் போரை விரட்டத் தான் இங்க வாறது :))))) அதனால, தைரியமா நீட்டி முழக்குங்கோ.. சம்பவங்களை மட்டும் எழுதாமல் வர்ணனைகள், எண்ணங்கள் இதையெல்லாம் சேருங்கோ (சொல்லுதல் எனக்கு எளியவாம்.. :) )

    ReplyDelete
  13. வாணியம்மா,

    இது எப்படி இருக்கு என்று சொல்ல வரவில்லை. ஆனால் வாணி எழுதின வேற கதை ஒன்று இப்ப வாசிச்சன். மனசு கனத்துப் போச்சு. தாங்க முடியேல்ல.

    நல்லா வருவீங்கள் வாணி. உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கு.

    வாழ்த்துக்கள்.

    அன்புடன் இமா
    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
    மற்றவங்களும் போய் வாசிச்சுப் பாருங்க. அப்படியே கருத்தையும் அங்கேயே சொல்லி விட்டு வாருங்கள்.
    http://www.arusuvai.com/tamil/node/14959#comment-95599

    ReplyDelete
  14. என்னோட சேலம் நாட்களை எண்ண வைத்து விட்டீர்கள். இப்பொழுது அக்காவுடன் சண்டைதான் (அடுத்த தெருவிலே இருப்பதால்)

    ReplyDelete
  15. எல்கே, ம்ம்.. இப்பவும் சண்டைதானா. என் சகோதரியை நான் பார்த்தே 6 வருடங்கள் ஆகிவிட்டது. முன்பு நிறைய சண்டை போட்டு இருக்கிறோம்.
    மிக்க நன்றி.

    ReplyDelete

படிச்சுட்டு ஏதாவது சொல்லிட்டு போங்கள்!!!