Friday, May 14, 2010

மீண்டும் சாம்பு

ஹாய் ! எல்லோரும் நலமா? அட நான் தான் பரண் சாம்பசிவம். இமா பாட்டி, அதிரா பாட்டி, ஆசியா ஆன்டி, சந்தனா ( இவருக்கு என் வயது தான் இருக்கும் ) , குமார் மாமா, மாவீரன் ஜெய்லானி, மேனகா ஆன்டி, மற்றும் எல்லோரின் ஆசிகளால் நான் நன்றாக நடக்க ஆரம்பித்து விட்டேன். இருங்கள் நடந்து காட்டுகிறேன். எப்படி ஸ்டைலாக நடக்கிறேனா?

நான் நடக்கத்தொடங்கினால் நிறைய கதவுகள் திறக்கும் என்று எண்ணினேன். ஆனால், அம்மா எல்லாக் கதவையும் பூட்டுகள் போட்டு பூட்டி வைத்திருக்கிறார்கள். அதோ அங்கே பாருங்கள் ஒரு கூடை தெரியுதா? கிட்ட வந்து பாருங்கள்.

வெங்காயம். அட நான் உங்களை சொல்லவில்லை. கூடையில் இருப்பதைச் சொன்னேன். இந்த வெங்காயங்களை நோண்டுவதிலேயே என் பொழுது போய் விடும். அரிசி, பருப்பு என்று பிற பொருட்களை எல்லாம் அம்மா அந்த கப்போர்டில் வைத்து பூட்டுப் போட்டிருக்கிறார் பாருங்கள்.

கிருஷ்ணா இந்த பூட்டுக்களை எல்லாம் லாவகமாக திறந்து விடுவான். போன வாரம் வந்த போது அவனுக்கு உடம்பு சரியில்லை. இந்த வாரம் வந்து கட்டாயம் உதவி செய்வதாக வாக்கு கொடுத்து இருக்கிறான்.

இன்று கிருஷ்ணா வந்து சமையல் அறை கப்போர்ட் எப்படி திறப்பது என்று விளக்கமாக சொல்லிக் கொடுத்தான். என்னையும் நன்றாக ப்ராக்டீஸ் பண்ணச் சொன்னான். நல்ல பொறுமை அவனுக்கு.

நீ எதில் வேண்டும் என்றாலும் தலையை, கையை விடலாம். ஆனால் இந்த மின்சார விடயத்தில் மட்டும் மிகவும் எச்சரிகையாக இருக்க வேண்டும் என்று சொன்னான். ப்ளக் சொருகி டி.வி, பாட்டு என்று பிற வேலைகள் எல்லாம் செய்ய உதவும் மின்சாரம் வரும் இடத்தினையும் காட்டினான். நீண்ட நாட்களின் முன்பு அவன் அம்மா அசந்த நேரம் அதில் ஆணியோ ஏதோ ஒரு பொருளை உள்ளே விட்டு, பெரிய அசம்பாவிதம் நடக்க முன்பு மயிரிழையில் தப்பிய கதையும் சொன்னான்.

மதியம் அம்மா அசந்த நேரம் பார்த்து பூட்டை திறந்து விட்டேன். விதம் விதமாக அரிசி, பருப்பு வகைகள். இரண்டு பெரிய டப்பாக்களில் இருந்த அரிசிகளை எடுத்து, வேறு அரிசி இருந்த டப்பாவில் போட்டேன். பருப்பு வகைகளை கலக்கும் முன் அம்மா வந்து விட்டார். அவர் கண்களில் தெரிந்த அதிர்ச்சி, கோபம் ஆகியவற்றை பார்த்து பயந்து போனேன். அம்மா தூக்கிக் கொண்டு போய் என்னை தொட்டிலின் உள்ளே விட்டார்கள். இந்த தொட்டிலில் இருந்து கீழே இறங்குவது பெரிய மேட்டரே கிடையாது. அம்மாவின் கோபம் ஆறும் வரை இங்கேயே இருப்பது பாதுகாப்பு.

மாலை அப்பா வந்த பின்பும் அம்மாவின் புலம்பல் ஓயவேயில்லை. " இன்று உங்கள் மகன் செய்த காரியத்தைப் பாருங்கள். பொன்னி அரிசி, இட்லி அரிசி, பாஸ்மதி அரிசி என்று எல்லா அரிசி வகைகளையும் ஒன்றாக கலந்து விட்டான். " என்றார்.

என்னது? அரிசியில் இவ்வளவு வகைகளா? எனக்கு எப்படித் தெரியும். எல்லாமே ஒரே நிறத்தில் தானே இருந்திச்சு.

அப்பா எப்போதும் என் பக்கம் தான். " சாம்பு கலந்த அரிசியை வைத்து சோறாக்கி சாப்பிடுவோம்", என்றார். அம்மாவின் பார்வையின் வெப்பம் தாங்காமல் என்னைத் தூக்கிக் கொண்டு வெளியே போனார் அப்பா. ம்ம்ம்.... நல்ல அப்பா.

நான் தவழத் தொடங்கிய போது கிருஷ்ணா நடந்தான். நான் நடந்து பழகிய போது அவன் வேகமாக ஓடத் தொடங்கி விட்டான். இப்படி அவன் என்னை விட எல்லாவற்றிலும் வேகமாகவே இருந்தான்.உங்களுக்கு மட்டும் ஒரு ரகசியம் சொல்கிறேன். கிருஷ்ணா என்னை விட 9 மாதங்கள் பெரியவன். அவன் பிறந்தநாள் ஜனவரியில் என் பிறந்தநாள் அக்டோபரில். எப்படி சரியா கணக்குப் பார்த்து சொல்லிவிட்டேனா?.

இவனால் நான் மிகுந்த கஷ்டப்பட்டேன். சாப்பிட்டு விட்டு சிவனே என்று படுத்திருக்க முடியாது.

அம்மா என்னை ஓடி விளையாட பார்க் கூட்டிக் கொண்டு போய் விடுவார். இப்போது கூட தூக்கம் சொக்குது. ஆனால் படுக்க முடியவில்லை. அம்மா வீசியெறியும் பந்தைப் பிடிக்க வேண்டும்.

நீங்கள் எல்லோரும் கதை கேட்டது போதும் வந்து இந்த பந்தைப் பிடித்து உதவி செய்யுங்கள். இந்த பெருத்த தொப்பையுடன் ஓடவே மூச்சு வாங்குது. ஹலோ! என்ன இது ? யாரையுமே காணவில்லை. உதவி என்று கேட்டது ஓடி விட்டீர்களா? என்ன விசித்திரமான உலகமடா இது.

19 comments:

  1. நான் சனவரி... அவன் அக்டோபர் நல்லாயிருக்கு சாம்பு மாப்பிள்ளை கணக்கு...

    நல்ல அழகா எழுதியிருக்கீங்க வானதி. வாழ்த்துக்கள்.

    அறுசுவை கதை படித்து பின்னூட்டமிட்டாச்சு. நல்ல கதை.

    ReplyDelete
  2. குழந்தைகள் அட்டகாசங்கள் இனிய சந்தோஷம். அதை படிக்கும் போதும் அப்படியே!!! பழைய அனுராதா ரமணன் சாயல் தெரிகிறது கதைகளில்...

    ReplyDelete
  3. சாம்பு வ‌ள‌ர்ந்துட்டானா?... க‌தை வேற‌ சொல்லுறானா?... பேஸ் பேஸ் ந‌ன்னா இருக்கு..

    ReplyDelete
  4. குழந்தையின் குறும்புகளைப் பற்றி ஒரு குழந்தையே சொல்வதுப்போல் உள்ளது அழகாக இருக்கு. மிகவும் ரசிக்கும் படி இருக்கு!

    ReplyDelete
  5. ஆ.. வாணி கதைக்கு முதல் இதுக்கு ஒரு முடிவு கட்டிப்போட்டுத்தான் மிச்ச வேலை...
    இமா பாட்டி,: இது ஓக்கை.. பூட்டி என்றாலும் எனக்கு ஓக்கைதான்:).
    ஆனால்// அதிரா பாட்டி// கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. ஒரு பேபியைப் பர்த்து இப்பூடிச் சொல்லலாமோ? அதிராவுக்கும் உங்கட கிருஸ்ணனுக்கும் ஒரே வயதுதான் வாணி ரண்டுபேருமே நல்லா ஓடுவம்:):).

    கற்பனை அருமை. அலுப்பில்லாமல் வாசிக்கக்கூடியதாக இருக்கு. நீங்களும் ரொம்ப ஸ்பீட்டு.... எங்கட.... இம்.. இல்லையில்லை அதிராவைப்போல:).

    ReplyDelete
  6. ஹாய் ! பரண் குட்டி. நான் நலம். கேட்டதுக்கு தாங்க்ஸ். ;)
    //இமா பாட்டி// ம்.. என் கடைசிப் படுக்கையில ப்ளேன்ல வந்து இறங்கவேணும், மூச்சைப் பிடித்துக் கொண்டு காத்திருப்பன் செல்...லம். ;) இப்ப ஒரு கிஸ். ;))

    //ஸ்டைலாக நடக்கிறேனா?// போட்டோ போட்டு இருக்கலாம்.

    //நான் நடக்கத்தொடங்கினால் நிறைய கதவுகள் திறக்கும் என்று எண்ணினேன்.// வீட்டில எலெக்ட்ரோனிக் கதவு பூட்ட வையுங்கோ.

    //நீ எதில் வேண்டும் என்றாலும் தலையை, கையை விடலாம். ஆனால் இந்த மின்சார விடயத்தில் மட்டும் மிகவும் எச்சரிகையாக இருக்க வேண்டும்// ஆண்டவர் ஆதாமுக்கும் ஏவாளுக்கும் சொன்னது மாதிரி இருக்கு. ;)

    You made my day Paran. ;) x 64646...

    நேரம் கிடைச்சால் தொடரட்டா வாணி??

    ReplyDelete
  7. வானதி - ஆரம்பத்துலயே சிரிக்க ஆரம்பிச்சுட்டேன்.. :)))))) பரண் சாம்புவோட வயசு தான் எனக்குமா? அப்ப, நான் பிறந்த அதே மாதத்தில அவனும் பிறந்திருக்கான், அப்படித்தானே கணக்காகும்? :))

    பையன் லொள்ளு தாங்க முடியல :) தொட்டில்ல படுத்துட்டு இருக்கற வயசுலேயே இப்படி குறும்பா? கண்டிப்பா இதை இன்னமும் தொடரனும்..

    இதுக்கு முன்கதை ஒன்னு இருக்கும் போல? அதை இப்போவே படிச்சிடறேன்.. குட்டியோட குறும்ப ரசிக்கணும் :)

    ReplyDelete
  8. நல்ல குறும்புக் கதை...

    ReplyDelete
  9. சாம்பு பூட்டை திறந்து அரிசியை தானே கலந்து வைத்தான்,என் வீட்டு பெண் வாண்டு இருக்கிறாளே அவள் எண்ணெய் பாட்டிலை கொட்டி அதில் விழுந்து விழுந்து, நான் அவளை எடுக்கப்போய் நானும் விழுந்து அந்த நேரத்தில் வேலைக்காரி மூக்கம்மா வந்து கை கொடுத்து ஏதோ புதைகுழியில் இருந்து தூக்கியது போன்று எங்கள் இருவரையும் இழுத்து போட்டது 1997 -லில்,சாம்புவின் சேட்டைகளை இன்னமும் எழுதுங்கள் வானதி.ரசிக்கும் படி உள்ளது.

    ReplyDelete
  10. பரவால்லையே, சாம்பு வாரக் கணக்கிலேயே வருஷக் கணக்கில் வளர்ந்துட்டான்!! :)
    துப்பறியும் சாம்பு மாதிரி உங்க கற்பனை சாம்பு வளர வாழ்த்துக்கள் வானதி!

    ReplyDelete
  11. குமார், மிகவும் நன்றி. உங்கள் பின்னூட்டம் அறுசுவையில் பார்த்தேன். மெம்பராகி பின்னூட்டம் கொடுத்து இருக்கிறீர்கள். உங்கள் நட்பிற்கு மிக்க நன்றி.

    ஜெய்லானி, மிகவும் நன்றி. எனக்கு அனுராதா ரமணன் மிகவும் பிடிக்கும். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கு உங்கள் பின்னூட்டம்.

    நாடோடி, வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி.

    ReplyDelete
  12. ப்ரியா, மிக்க நன்றி. வருகைக்கும் கருத்துக்கும்.


    அதீஸ், மிகவும் நன்றி. அடடா அதிராவை பாட்டி என்று கைதவறி டைப் பண்ணி விட்டேன். எனவே மக்கள்ஸ் எல்லோரும் அதிரா பூட்........டி... என்று படியுங்கோ. நானும் நல்லா ஒடுவேன் அதீஸ்.

    இமா, மிக்க நன்றி.
    //ம்.. என் கடைசிப் படுக்கையில ப்ளேன்ல வந்து இறங்கவேணும், மூச்சைப் பிடித்துக் கொண்டு காத்திருப்பன் //
    ஹஹா.... .

    இமா பாட்டியின் முத்தம் ஸோ ஸ்வீட்.
    //நேரம் கிடைச்சால் தொடரட்டா வாணி??//

    தொடருங்கோ இமா.

    ReplyDelete
  13. சந்தனா, மிக்க நன்றி. நான் நீங்களும் பரணும் பிறந்த மாசத்தை சொல்லவில்லை. வருடத்தை சொன்னேன் ஹிஹி.....
    ம்ம்... நீங்கள் எல்லோரும் ரசிக்கும் வரை தொடரும். மிகவும் போர் என்றால் நிப்பாட்டி விடலாம்.

    ஜெயா, மிக்க நன்றி.

    ஆசியா அக்கா, மிக்க நன்றி. குழந்தைகள் என்றாலே கொண்டாட்டம் தான். ஒரு துளி எண்ணெய் கீழே சிந்தினாலே வாழ்க்கையே வெறுத்து விடும். ஒரு பாட்டிலா???? சுத்தம் செய்தாலும் போகாதே.

    மகி, வருகைக்கு மிக்க நன்றி. எனக்கு துப்பறியும் சாம்பு மிகவும் பிடிக்கும்.

    ReplyDelete
  14. /////எல்லோரும் கதை கேட்டது போதும் வந்து இந்த பந்தைப் பிடித்து உதவி செய்யுங்கள். இந்த பெருத்த தொப்பையுடன் ஓடவே மூச்சு வாங்குது. ஹலோ! என்ன இது ? யாரையுமே காணவில்லை. உதவி என்று கேட்டது ஓடி விட்டீர்களா? என்ன விசித்திரமான உலகமடா இது. ///////

    எங்கேயும் ஓடவில்லை இங்கேதான் இருக்கிறோம் . பகிர்வுக்கு நன்றி !

    ReplyDelete
  15. ஒரு வாரம் ஊர்ல இல்லை. அதுக்குள்ள இவ்ளோ நடந்து இருக்கு. பரண் ரொம்ப சுட்டி போல . எங்க திவ்யா மாதிரி. அவ அரிசிய எடுத்து சாப்பிடுவா . அருமை வானதி

    ReplyDelete
  16. பனித்துளி சங்கர், பரண் நன்றி சொல்ல சொன்னார். நீங்கள் செய்த உதவியை ஒரு போது மறக்க மாட்டேன் என்று சொல்ல சொன்னார்.

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    எல்கே, உங்கள் பயணம் இனிதாக முடிந்ததா?. குழந்தைகள் உலகமே தனிதான்.

    மிக்க நன்றி.

    ReplyDelete
  17. மழலை மொழிலயே நல்லா குழந்தையோட கோணத்துல இருந்து அழகா எழுதி இருக்கீங்க வானதி. சாம்பு குட்டி இன்னும் நெறைய குறும்பு செய்ய வாழ்த்துக்கள்... அப்போ தானே எங்களுக்கு நெறய கதை கெடைக்கும்...ஹா ஹா ஹா... நன்றி பகிர்ந்து கொண்டதற்கு

    ReplyDelete
  18. தங்கமணி, ம்ம்... சாம்பு மீண்டும் வருவான். மிக்க நன்றி.

    ReplyDelete
  19. வீ வாண்ட் சாம்பு ..

    நல்ல நடைங்க...

    ReplyDelete

படிச்சுட்டு ஏதாவது சொல்லிட்டு போங்கள்!!!