Friday, April 30, 2010

குழந்தையின் உலகம்!

எல்லோரும் எப்படி இருக்கிறீர்கள் ? என் பெயர் பரண் சாம்பசிவம். வயது 1 மாதம். அட நில்லுங்க! எங்கே போறீங்க. ஒரு மாதக் குழந்தையிடம் என்ன புதினம் இருக்கப் போவுது என்று தானே யோசனை. இருங்க ஒவ்வொன்றாக எடுத்து விடுகிறேன்.

நான் பிறந்ததும் எனக்கு பெற்றோர் வைத்த பெயர் பரண் சாம்பசிவம். பரண் யாருக்காவது அர்த்தம் தெரியுமா?. சரி அதை விடுங்க. சாம்பசிவம் என்பது என் கொள்ளு/எள்ளு தாத்தாவின் பெயராம். சாம்பு சாம்பு என்று எல்லோரும் என்னைக் கூப்பிட, நான் கதறி அழுது விட்டேன்.

பிள்ளைக்கு பசி போல இருக்கு என்று தூக்கி பால் குடுத்தார்கள். அழுதால் தூக்குவார்கள் என்ற சிம்பிள் லாஜிக் விளங்கியது. எனக்கு பொழுது போகாவிட்டால் அழுவேன். அதோ பாருங்கள் என் அம்மாச்சி ஒடி வருகிறார். வீட்டில் இவ்வளவு ஆட்கள் இருக்கும் போது எனக்கு என்ன கவலை.

அம்மாச்சி பிஸியாக இருந்தால் பெத்தா அல்லது இரண்டு மாமாக்கள் தடியன்கள் போல இருக்கிறார்கள். ஆகா! நான் எவ்வளவு அதிஷ்டசாலி. ஒரு நாள்
காலை எழுந்து பார்த்தேன். என்னைத் தூக்கி திரிந்தவர்கள் யாரையும் காணவில்லை. அம்மாவிடம் என் பாஷையில் கேட்டேன். அவருக்கு ஒன்றுமே விளங்கவில்லை.

இப்போது வீட்டில் அப்பா, அம்மா, நான் ஆகிய மூவருமே இருக்கிறோம். என் தொல்லை பொறுக்காமல் அப்பா காலையில் எங்கோ பையை தூக்கிக் கொண்டு கிளம்பி விடுவார். மாலை நேரம் தான் வருவார். அம்மா பாவம் எங்கேயும் போகவில்லை. நான் தொட்டதற்கெல்லாம் அழுது அம்மாவை ஒரு வழி பண்ணி விடுவேன்.

இன்று என் சகா கிருஷ்ணா வருகிறான். எனக்கு யாருமே சொல்லவில்லை. காற்று வாக்கில் என் காதுகளில் விழுந்த செய்தி. அவன் போன தடவை வந்த போது ஏதோ ஒரு விளையாட்டு சாமானால் என் தலையை பதம் பார்த்து விட்டான். இன்று அவன் வருவதற்குள் எல்லா பொருட்களையும் எடுத்து ஒளிக்க வேண்டும். அது தான் காலையிலிருந்து நான் கொஞ்சம் பிஸியாக இருக்கிறேன். அவன் வந்து போகும் வரை ஒரே கலக்கமாக இருக்கு. ஆனால் கிருஷ்ணா வந்தால் இலவசமாக நிறைய ஐடியாக்கள் தருவான்.

கிருஷ்ணா நடக்க ஆரம்பித்து விட்டானாம். அவன் அம்மா பண்ணும் அலப்பறை தாங்க முடியவில்லை. குறைந்தது ஒரு பத்து தடவையாவது தொலைபேசியில் என் அம்மாவிடம் சொல்லி பெருமைப் பட்டுக் கொண்டார். கிருஷ்ணா எங்கள் வீட்டிற்கு வந்து எனக்கு நடந்து காட்டி விட்டுப் போனான். அவன் முகத்தில் தெரிந்த பெருமையை நீங்கள் பார்க்கணுமே. " நீ ஏன்டா இன்னும் நடக்கவே ஆரம்பிக்கலை " , என்று ஒரு நக்கல் கேள்வி வேறு.

இனிமேல் நானும் நடக்க பழகப் போகிறேன். இப்போது எல்லோரும் ஆசிகள் வழங்கி விட்டுப் போய் வாருங்கள். நான் நடக்கத் தொடங்கியதும் நிறைய கதைகள் சொல்வேன். மீண்டும் சந்திப்போம்.

17 comments:

  1. அய்ய‌யோ.. சாம்பு இன்னும் ந‌ட‌க்க‌லியா?.. அட‌டே!!!ஆச்ச‌ரிய‌குறி.. ந‌ட‌க்க‌ ஆர‌ம்பித்த‌வுட‌ன் க‌தை சொல்ல‌ சொல்லுங்க‌ள்.. ந‌ல்லா இருக்குங்க‌..

    ReplyDelete
  2. உங்க அனுபவமா ? கதையா ? சூப்பர்...

    ReplyDelete
  3. வாணி.. என்ன அனுபவம் பேசுதோ?? நடக்கமுதலே இவ்வளவும் கதைக்கிறீங்கள், இனி நடக்கத் தொடங்கினால்:) சொல்லவே தேவையில்லை.... கடவுளே.. யாரங்கே.... ஓ இமா ~கொட்டின்~ பெரியது ரண்டு பிளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ் மீ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.

    ReplyDelete
  4. அட...

    பரண் நல்லா கதை சொல்லுறானே...

    நல்லாயிருக்கு.

    ReplyDelete
  5. ;)))))))))
    ரசித்தேன் வாணி. ;) எப்புடி இப்புடீ!!!!!! எங்கயோ போய்டீங்க. கண்ணில தண்ணி வந்துட்டுது. ;)
    ~~~~~~~~~~~~~
    நீங்க வளர்ந்து.... நடந்து.... ஓடி, காரோடி, ராக்கட் விட்டு சாதனை படைக்க என் ஆசிகள்.

    ReplyDelete
  6. @வானதி

    அருமை.. ரொம்ப ரொம்ப இயல்பா சொல்லி இருக்கீங்க,.
    //ன் தொல்லை பொறுக்காமல் அப்பா காலையில் எங்கோ பையை தூக்கிக் கொண்டு கிளம்பி விடுவார். மாலை நேரம் தான் வருவார்////
    இந்த இடம் நான் ரொம்ப ரசிச்ச ஒன்னு
    //அழுதால் தூக்குவார்கள் என்ற சிம்பிள் லாஜிக் விளங்கியது. எனக்கு பொழுது போகாவிட்டால் அழுவேன்.//
    எங்க வீடு சின்ன அம்மணி கூட இததான் பண்றா

    ReplyDelete
  7. வித்தியசாமாக இருக்கின்றது...எவ்வளவு அழகாக 1 மாத குழந்தையின் கதையினை எழுதி இருக்கின்றிங்க...வாழ்த்துகள்...

    ReplyDelete
  8. வானதி எழுத்தாளர்களின் சிந்தனையை மதிப்பிடுவது இயலாத காரியம்,மதிப்பெண் கூடிக்கொண்டே போகிறது.தொடர்ந்து இப்படி வித்தியாசமாய் எதிர்பார்க்கிறேன்.குழந்தைக்கதை அருமையோ அருமை.

    ReplyDelete
  9. நாடோடி, நன்றி. சாம்பு நடக்கத் தொடங்கட்டும் பார்க்கலாம். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  10. மேனகா, வருகைக்கு நன்றி.
    ஜெய்லானி, மிக்க நன்றி.
    இது கதை தான்.

    ReplyDelete
  11. அதீஸ், இந்தாங்கோ கண்ணைத் துடையுங்கோ. இமா பாவம் அவரிடம் துணிகள் இருக்காது. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
    குமார், மிக்க நன்றி.

    ReplyDelete
  12. இமா, மிக்க நன்றி. உங்கள் ஆசிகளுக்கு நன்றி. பரணும் நன்றி சொல்ல சொன்னார்.

    எல்கே, உங்கள் வீட்டு அம்மிணி... ம்ம் நல்லா ரசியுங்கள். அவர்கள் விரைவாக வளர்ந்து விடுவார்கள்.
    தொடர் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
    கீதா ஆச்சல், மிக்க நன்றி.

    ReplyDelete
  13. ஆசியா அக்கா, உங்கள் ஊக்கத்திற்கு நன்றி. என் மேல் வீடு காலியாகி கொண்டே வருகிறது. புதுக் கதையுடன் வருகிறேன்.

    ReplyDelete
  14. வானதி.. இதையும் படிச்சாச்சு :) குட்டிப் பயல் ஒரு மாதத்திலிருந்தே பேச ஆரம்பிச்சுட்டானா? கதை சொல்லும் பாணி புதியதாக இருக்கிறது - குழந்தை தன்னுடைய உலகத்தை தன் பார்வையில் சொல்லுவதென்று.. ரசிக்கும் படியாக இருக்கிறது!!

    ReplyDelete
  15. சந்தனா, மிக்க நன்றி. பரண் 1 மாசத்திலை அல்ல பிறந்து ஒரு நாளில் பேச ஆரம்பித்து விட்டான். சரி முறைக்கப் படாது.

    ReplyDelete
  16. குழந்தையின் உலகம் அட வித்தியாசமான முறையில் சொல்லி அசத்தி இருக்கீங்க.

    ReplyDelete

படிச்சுட்டு ஏதாவது சொல்லிட்டு போங்கள்!!!