Wednesday, May 4, 2011

அன்பளிப்புகள் பற்றி...

மற்றவர்களுக்கு அன்பளிப்பாக ஏதாவது கொடுப்பது என்பது சிலருக்கு கடுப்பாகவும், சிலருக்கு மகிழ்ச்சியாகவும், சிலருக்கு போனா போகுது என்று பல விதமான உணர்ச்சிகள் ஏற்படுவதுண்டு.

உனக்கு எப்படி இருக்கும் என்று கேட்கிறீங்களா? அன்பளிப்புகள் வாங்கும் போது ஏற்படும் எக்ஸைட்மென்ட் கொடுக்கும் போது ஏற்படுவதில்லை என்பதே உண்மை. முதல் கவலை, அன்பளிப்பு வாங்குபவருக்கு அது பிடித்திருக்க வேண்டும் என்பதே பெரிய கவலை. கடைசிக் கவலையும் அதே தான்.
சிலர் அன்பளிப்பு என்ற பெயரில் மட்டமான பொருட்களையும் தலையில் கட்டி விடுவார்கள். சிலர் விலைமதிக்க முடியாத பொருளைத் தந்து திக்குமுக்காடச் செய்வார்கள். சிலரின் அன்பான விசாரிப்புகளே அன்பளிப்புகளை விட இனிமையாக இருக்கும்.

நான் கனடாவில் இருந்தபோது யாரோ அன்பளிப்பாக கொடுத்த ஒரு மணிக்கூடு, அதை மணிக்கூடு என்று சொல்வதை விட மண்கூடு என்று சொல்லலாம். மண் ( களி மண்ணா அல்லது வேறு மண்ணா தெரியவில்லை ) கொண்டு செய்யப்பட்ட மணிக்கூடு. இரண்டு கரடிகள் குந்திக் கொண்டிருந்தன அந்த மணிக்கூண்டில். தொட்டால் கையில் மண் அப்பிக் கொண்டது. என் சகோதரன் அப்போது தான் வேலை செய்ய ஆரம்பித்து இருந்தார். ஏழைக்கேத்த எள்ளுருண்டை என்பது போல ஒரு சவுன்ட் சிஸ்டம் புதிதாக வாங்கியிருந்தார். நான் மண்கூண்டினை அவரின் ஸ்பீக்கர் செட்டில் வைச்சு அழகு பார்த்தேன். வேலையால் வந்து, அவரின் ஸ்பீக்கர் பெட்டிக்கு நடந்த கொடுமையை பார்த்ததும் பொங்கி விட்டார் என் சகோ. இந்த வீட்டில் நீ இருக்கணும். இல்லை இந்த மண்கூடு இருக்கணும். நீயே முடிவு செய்து கொள், என்று கண்டிப்பா சொல்லிவிட்டார்.

அதன் பிறகு அந்த மண்கூண்டினை பால்கனிக்கு இடம் மாற்றி விட்டேன். வெய்யில், மழை, பனி எல்லாத்தையும் தாங்கி, தாங்கி சிறிது சிறிதாக நொருங்கிப் போனது மண்கூண்டு. ஒரு நாள் சிறிது மண் குன்று மட்டும் மிஞ்சி இருந்தது.

அமெரிக்கா வந்த புதிதில் ஒரு பெண்மணி வீட்டுக்குப் போனோம். அவருக்கு நண்டும் சிண்டுமாக இரண்டோ, மூன்று குழந்தைகள் இருந்த ஞாபகம். நாங்கள் கொண்டு போன அன்பளிப்பை வேண்டா வெறுப்பா வாங்கி, அந்தப் பக்கம் தூக்கிப் போட்டார் அந்தப் பெண்மணி. நாங்கள் கொண்டு போன பொருள் மட்டமான பொருள் கூட இல்லை.

வேறு ஒருவருக்கு ஒரு மணிக்கூடு வாங்கி குடுத்தோம். ஒரு நாள் அவரின் வீட்டுக்கு போன போது, அந்த மணிக்கூட்டினை மேசையில் அழகா வைத்திருப்பதை பெருமையுடன் காட்டினார். விருந்தினர் அறையில் வைத்திருந்தார் எங்கள் அன்பளிப்பினை. மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

சில மாதங்களின் முன்னர் இந்தியன் கடை வாசலில் காத்திருந்த போது ஒரு வட இந்தியப் பெண்மணி வந்தார். சில நொடிகளில் பேசவும் ஆரம்பித்துவிட்டார். கைகளில் ஏதோ ஒரு பொதி வைத்திருந்தார். அதை திறந்து ஒரு ஆடையினை வெளியில் எடுத்தார். அது ஒரு பேன்ட்( pant ). லேசான ப்ரௌன் நிறத்தில் இருந்தது. இது நல்லா இருக்கா என்று தூக்கிப் பிடித்துக் கேட்டார். அந்த ஆடையின் ஊடாக அடுத்த பக்கம் நின்றவர்கள், போனவர்கள், வந்தவர்கள், இப்படி எல்லாமே தெரிந்தது. அவ்வளவு மெல்லிய துணியில் தைத்திருந்தார்கள். இது உங்களுக்கு வாங்கியதா, என்று தயங்கியபடி கேட்டேன்.
சேச்சே! நான் இதெல்லாம் போட மாட்டேன். என் சொந்தக்கார பயலுங்க இந்தியாவில் இருக்கிறானுங்க அவனுங்களுக்குத் தான் வாங்கினேன், என்றார்.

பக்கத்தில் நின்ற நபர் சிரிப்பை அடக்க கஷ்டப்பட்டார். நான் பதில் சொல்லாமல் தயங்கி நின்றேன்.
இதுக்கு எவ்வளவு பணம் செலவு செய்தேன் என்று சொல்லு பார்க்கலாம் என்றார். 2 டாலர்களுக்கு வாங்கினேன். நல்ல பார்கெயின் ( bargain ) இல்லை என்று சிரித்தார்.
இப்படிக் குடுப்பதை விட குடுக்காமல் இருப்பதே மேல் அல்லவா?

அமெரிக்கர்களுக்கு ஏதாவது அன்பளிப்பா குடுத்தால் உடனேயே பார்சலை பிரித்து, பொருளை வெளியில் எடுத்து நன்றி சொல்வார்கள். பிறகு நன்றி சொல்லி ஒரு கார்டும் அனுப்புவார்கள். முடிந்தால் அந்தப் பொருளை படம் பிடிச்சு, என் வீட்டுச் சுவர் உன் அன்பளிப்பினால் இன்னும் அழகா மின்னுது என்று வரியும் சேர்த்து இருப்பார்கள்.

எதை எதையோ காப்பி பண்ணுகிறோம் அவர்களிடம் இருந்து இந்த நல்ல பண்பினையும் பழகினால் நல்லது என்பது என் அபிப்பிராயம். என்ன சொல்றீங்க?




30 comments:

  1. கட்டாயம் அமெரிக்கர்களின் நன்றி சொல்லும் பழக்கத்தினை பின்பற்றலாம்..

    ReplyDelete
  2. இந்த மாதிரி பிரச்சனைக்குதான் அன்பளிப்புக்கு பதில் அவர்களுக்கு புத்தகம் படிக்கும் பழக்கம் இருந்தால் புத்தகம் வாங்கி கொடுத்துவிடுவேன். அதேபோல் திருமணங்களில் காசாகக் கொடுத்து விடுவேன்

    ReplyDelete
  3. அன்பளிப்பு வாங்குபவருக்கு அது பிடித்திருக்க வேண்டும் என்பதே பெரிய கவலை

    கரெக்ட் தான் வானதி

    நல்ல பண்பினை கற்று கொள்வதில் தயக்கமென்ன

    ReplyDelete
  4. ரொம்ப சரியா சொன்னீங்க வானதி. அமெரிக்கர்களிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய சிலவற்றில் இதுவும் ஒன்று.
    எனக்கு அன்பளிப்பு கொடுப்பதுதான் பிடிக்கும் . பிறரிடம் இருந்து வாங்கும் போது அவர்கள் அன்புக்கு நாம் தகுதியானவரான்னு ஏனோ எனக்கு உறுத்தும். இதுவரை எனக்கு வந்த அன்பளிபுகளில் மட்டம் என்று எதுவும் இல்லை.
    ஆனால் என் வீட்டு பொடுசுகளுக்கு நான் அமெரிக்காவில் இருந்து வாங்கி வந்த பொருட்களால் ஏற்பட்ட சலசலப்பை அடக்க, இன்னொரு ரவுண்டு பர்சஸ் போனேன். இது அன்பளிப்பு கொடுக்கும் போது எனக்கு ஏற்பட்ட சின்ன சிரமம்.
    அங்கு கற்று கொண்ட நன்றி பாராட்டும் பண்புகளை எங்களை அறியாமல் இங்கு பிரயோகிக்கும் போது, 'படிச்ச புள்ளைங்க. எவ்வளவு தன்மையா நடந்துகுதுக-ன்னு' பேசிக்கறாங்க.

    ReplyDelete
  5. http://reap-and-quip.blogspot.com/2011/02/blog-post_17.html

    இதில கொஞ்சம் கிப்டி கொடுப்பது பத்தி கொஞ்சம் சொல்லி இருக்கேன். நீங்க பார்த்த பதிவு தான். எனக்கு கிப்ட் கொடுக்கறதுக்கு ரொம்பவே பிடிக்கும். கிட்ட வாங்க எப்படி சிக்ஸர் அடிக்கறேன் என்று சொல்லுறேன். ஒருத்தருடைய பிறந்த நாள் வருது என்றால் ஒரு கிழமைக்கு முதல் தான் போய் கிப்ட் வாங்கும் பழக்கத்தை மாற்றிவிடுங்கள். சும்மா அப்பிடி இப்பிடி என்று நடக்கும் போது வேறு சாமான் வாங்கும் போது கண்ணில் நல்லது பட்டால் ஓரிரண்டு பொருட்களை வாங்கி வையுங்கள். விசேசங்கள் வரும் போது அவற்றில் ஒன்றை எடுத்து கொடுக்கலாம். சில வேளைகளில் சிலருக்கு சில உடைகள் நன்றாக இருக்கும் போல தோன்றும். அவற்றை பார்க்கும் போதே வாங்கி வைத்துவிட்டு, அவர்கள் பிறந்த தினத்திற்கோ வேறு தினத்திற்கோ கொடுக்கலாம். ஒரு முறை பெப்ரவரியிலேயே ஒரு டொப் நன்றாக இருப்பதால் வாங்கிவிட்டேன். நண்பியுடைய பிறந்த தினம் ஜூனிலேயே வருகிறது. ஆனாலும் பெப்ரவரியிலேயே கொடுத்துவிட்டேன். அட்வான்ஸ் பிறந்த நாள் பரிசு என்று சொல்லி கொடுத்தேன். கம்பசில் இப்படி எல்லாம் செய்யலாம். குடும்பத்தில் செய்வது கடினம். ஆனால் கொஞ்சம் ட்ரை பண்ணி பார்க்கலாம்.

    ReplyDelete
  6. நல்ல பழக்கத்தை கற்றுக்கொள்வதில் தவறில்லை...இங்கயும் இதேதான் வானதி.ப்ரெஞ்சு மக்களை ரொமப் பிடிக்கும் எனக்கு!!

    ReplyDelete
  7. நல்ல இடுகை வான்ஸ்.. என்ன வாங்குவது என்ற குழப்பத்தினாலேயே பெரும்பாலும் யாருக்கும் வாங்குவதில்லை.. முடிந்தளவு கிப்ட் கார்ட்கள் தான்.. நம்மை விட அவர்கள் நல்லதாக தேவையானதாகப் பார்த்து வாங்கிக் கொள்வார்கள் என்ற எண்ணத்தில்..

    ReplyDelete
  8. நல்லா இருக்கு.
    என்னைப் பொறுத்தவரையில் பெரும் செலவு செய்துதான் அன்பளிப்பு வழங்கவேண்டும் என்பது இல்லை.
    //சிலரின் அன்பான விசாரிப்புகளே அன்பளிப்புகளை விட இனிமையாக இருக்கும்.//
    இதையும் ஏற்கிறேன்.
    ஆனாலும் நாம் யாருக்கு வழங்குகிறோமோ அவரை பிரம்மிக்கவைக்கும் வித்தியாசமான பொருட்களை வழங்கக்கூடியவாறு அவர் பற்றிய புரிந்துணர்வு நமக்கு இருக்க வேண்டும்.

    ReplyDelete
  9. மணிக்கூடு என்று சொல்வதை விட மண்கூடு

    ஏழைக்கேத்த எள்ளுருண்டை

    நண்டும் சிண்டுமாக இரண்டோ, மூன்று குழந்தைகள்

    தூக்கிப் பிடித்துக் கேட்டார். அந்த ஆடையின் ஊடாக அடுத்த பக்கம் நின்றவர்கள், போனவர்கள், வந்தவர்கள், இப்படி எல்லாமே தெரிந்தது


    சிரிப்பு சிரிப்பா வருது நகைச்சுவை இழையோடிய நல்ல படைப்பு

    ReplyDelete
  10. கராக்டாக சொன்னீங்க வனி...

    இப்ப எல்லாம் யார் வீட்டிற்கு சென்றால் எதாவது ஒரு ஸ்வீட் செய்து எடுத்து கொண்டு + Gift கார்டுடன் தான் சென்றுவிடுவது...

    ரொம்ப ரிலக்ஸாக இருக்கு..அவங்களுக்கு என்ன பிடிக்கும் என்று ரொம்ப யோசிக்க தேவையே இல்லை...

    ReplyDelete
  11. பரிசு வாங்குவதுதான் பெரிய சிரமமான வேல. பிடிச்சதா இருக்கணும், பயன்படவும் செய்யணும், பட்ஜெட்டுக்கும் சரிவரணும். நல்லாச் சொல்லிருக்கீங்க

    ReplyDelete
  12. ஆஹா.... ஒரே புலம்பலா இருக்கே...:)).

    என்னில ஒரு பழக்கம்... நான் ஆரோடும் அதிகமாக ஒட்டிப் பழகினால் அவர்களுக்கு அடிக்கடி எதையாவது வாங்கிக்கொடுக்கவேணும் என மனம் அடம்பிடிக்கும். கடையில எதையாவது பார்த்தாலும் அதை வாங்கிக் கொடுக்கலாமே என மனம் எண்ணும். அதே நேரம் கொடுத்த கையோடு அது எப்பூடி இருக்க்கு பிடிச்சிருக்க இல்லையா என்றெல்லாம் அறிய மனம் துடிக்கும்.... இது என் புலம்பல்:):).

    இங்கு பெரும்பாலும் கிஃப்ட் கார்ட்... அல்லது என்ன பொருள் வாங்கினாலும் கிஃப்ட் ரிசீட் கேட்கலாம்... அதாவது விலை இருக்காது அதில் ஆனால் ரிசீட் தருவார்கள், அதையும் சேர்த்துக் கொடுத்துவிடுவேன், பிடிக்கவில்லையாயின் அவர்கள் போய் மாற்றிக்கொள்ளலாம்...அல்லது பணத்தைக் கூட பெற்றுக்கொள்ளலாம்.

    ReplyDelete
  13. மலிஞ்ச விலையில் பொருட்கள் வாங்கி பிரசெண்ட் பண்ணுவது பற்றி:::::

    அவர்கள் என்ன கேட்டார்களா? அதைவிடக் கொடுக்காமலே இருக்கலாமே... அடுத்தவர்களிடம் இல்லை என்றா அல்லது அவர்களால் வாங்க முடியாதென எண்ணியா நாங்க கொடுக்கிறோம்.. இல்லையே... ஒரு அன்பினால்தானே... அது நல்ல பொருளாக இருப்பின் அன்பு இரட்டிப்பாகுமே.... கொஞ்சப் பணத்தை மிச்சம் பிடிக்க வெளிக்கிட்டு இருக்கும் அன்பையும் இழக்கவேண்டியும் வரலாம்....

    இன்னும் நிறையப் புலம்பலாம்:)... ஆனால் என்னைப் பார்த்து.. இதுக்கு விசர்:) என ஆரும் சொல்லுமுன் மீ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:))).

    ReplyDelete
  14. //அன்பளிப்புகள் வாங்கும் போது ஏற்படும் எக்ஸைட்மென்ட் கொடுக்கும் போது ஏற்படுவதில்லை என்பதே உண்மை. முதல் கவலை, அன்பளிப்பு வாங்குபவருக்கு அது பிடித்திருக்க வேண்டும் என்பதே பெரிய கவலை. //

    அதே! அதே!!

    // இங்கு பெரும்பாலும் கிஃப்ட் கார்ட்... அல்லது என்ன பொருள் வாங்கினாலும் கிஃப்ட் ரிசீட் கேட்கலாம்... அதாவது விலை இருக்காது அதில் ஆனால் ரிசீட் தருவார்கள், அதையும் சேர்த்துக் கொடுத்துவிடுவேன், பிடிக்கவில்லையாயின் அவர்கள் போய் மாற்றிக்கொள்ளலாம்...அல்லது பணத்தைக் கூட பெற்றுக்கொள்ளலாம். // இது நல்ல யோசனையாத்தானிருக்கு. ஆனால் யாரும் எதிர்மறையா நினைக்க மாட்டார்களென்றால் ...!!

    வான்ஸ் நல்லா பதிவு. நல்லா யோசிச்சிருக்கீங்க!!

    ReplyDelete
  15. அன்பளிப்புகள் பற்றி சொல்ல வரும்போது, அதற்கு நீங்கள் தேர்வு செய்து போட்டிருக்கும் படம் என்ன கருத்தை சொல்லவருது வான்ஸ் # டவுட்டு.. ஹி.. ஹி..

    ReplyDelete
  16. உங்களை பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன்... நேரம் உள்ள போது பாருங்கள்... நன்றி... சுட்டி இதோ... http://blogintamil.blogspot.com/2011/05/blog-post_06.html

    ReplyDelete
  17. அன்பளிப்பு குறித்த அலசல்கள் அருமை
    அன்பு.அளிப்பாக எண்ணிக் கொடுத்தால்
    மிகச் சரியாகச் செய்வோம்
    அதையே மொய் போல எண்ணிச் செய்வதற்கு
    செய்யாது இருப்பதே சாலச் சிறந்தது
    பயன்படுகிற பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  18. This comment has been removed by the author.

    ReplyDelete
  19. அருமையாக சொல்லி இருக்கீங்க வானதி.அநெகருக்கு பயனுள்ளதாக இருக்கும் உங்கள் பகிர்வு.பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  20. உனக்கு எப்படி இருக்கும் என்று கேட்கிறீங்களா? அன்பளிப்புகள் வாங்கும் போது ஏற்படும் எக்ஸைட்மென்ட் கொடுக்கும் போது ஏற்படுவதில்லை என்பதே உண்மை. முதல் கவலை,//

    ஏன்னா....நாம கொடுக்கும் பொருட்கள் நம்ம காசில் இருந்து போகுதே எனும் ஓர் அங்கலாய்ப்பு மனதினுள் இருப்பதால் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  21. எம்மவர்கள் இன்றைய கால கட்டத்தில் பல விழாக்களை ஒழுங்குபடுத்துவதே இந்த அன்பளிப்புக்களை எதிர்பார்த்துத் தான்.
    வாழ்க்கையில் பிறர் கொடுக்கும் பொருட்களை வாங்கி, அவர்களின் உபசாரத்திற்கு நன்றி சொல்லப் பழக வேண்டும், ஆனால் தமிழர்கள் பொருட்களைப் பற்றி ஆராய்கிறார்கள் என்றால், எப்படி மற்றவர்களிடம் இருந்து சுறண்டலாம் எனும் பண்பில் இருந்து நாம் இன்னமும் மாறவில்லை என்பதனை அறிந்து கொள்ள முடிகிறது.
    உங்களுக்கு ஏற்பட்ட அதே அனுபவங்கள் எனக்கும் ஏற்பட்டுள்ளன.

    குழந்தைகள் உள்ள வீட்டிற்கு லெமன்பப் பிஸ்கட் பெட்டியோடு போனால், அந்தக் குழந்தைகளே என்னைக் கண்டு கொள்ள மாட்டார்கள், ஆனால்
    விளையாட்டுப் பொருட்களுடன் என்னோடு கூட வந்த நண்பரோடு சேர்ந்து குழந்தைகளும் குதுகலமாகி, கொண்டாடி மகிழ்வார்கள்.
    பின்னர் தான் ஒன்றைப் புரிந்து கொண்டேன், கண்டிப்பாக அன்பளிப்புகளை வாங்கும் போது வயதினையும், விருப்பங்களையும் கருத்திற் கொள்ள வேண்டும் என்று!

    நம்மவர்கள் பொருட்களின் தரத்தினை விட, பொருட்களின் பெறுமதியினைத் தான் அளவிடுகிறார்கள்!
    ஹி....ஹி..

    ReplyDelete
  22. சரியாக சொன்னிங்க வானிதி

    ReplyDelete
  23. வானதி,நீங்கள் சொல்வது மிகச்சரி.நல்ல பகிர்வு..எனக்கு இதில் நிறைய அனுபவங்கள்..

    ReplyDelete
  24. vanathi கரெக்டா சொன்னிங்க. என் கனவரும் இதை தான் சொல்வார்கள். அதிரா சொல்வது போல் தான் நாங்களும் செய்வோம். கிப்ட் ரெசிப்ட்டோட குடுத்துடுவோம். அது அவங்களுக்கு உதவியா இருக்கும்.
    சில தடவை கிப்ட்கார்ட்ஸ் குடுத்திடுவோம்.
    சில பேர் விலை+ பொருள் தரம் பார்த்து வாங்கி குடுப்பாங்க. அது சில நேரம் உடனேயே அது உடைட்ந்திடும் அல்லது கலர் போயிடும் அல்லது மட்டமா கூட இருக்கும். இந்த தொல்லையே வேண்டாம் என்று தான் கிப்ட்ரெசிப்டோட குடுப்பது என்று நாங்க பலோ செய்கிறோம்.
    நல்ல பதிவு வானதி.

    ReplyDelete
  25. பூவும்,பேக்ரவுண்டும் அடிக்கடி மாறுதே? திரு.வானதி ரெகுலரா ப்ளாக் படிக்கிறாரோ? ;)

    நல்ல பதிவு வானதி! அன்பளிப்பு அவஸ்தை தராமல் இருக்கும்வரை நல்லதுதான்.

    ReplyDelete
  26. கருத்து தெரிவித்த எல்லோருக்கும் மிக்க நன்றிகள்.
    அன்புடன்,
    வானதி

    ReplyDelete
  27. வான்ஸ், உங்கட புது ஹெடிங் என் பக்கத்தில் தெரியுது, ஆனா இன்னும் ஓபின் ஆகுதில்லையே???? எனி புரொப்ளம்?

    ReplyDelete

படிச்சுட்டு ஏதாவது சொல்லிட்டு போங்கள்!!!