Monday, April 12, 2010

நட்பு

நானும் சந்துருவும் இணைபிரியாத நண்பர்கள். நான் சந்துருவை முதலில் பார்த்தது பேருந்து நிறுத்தத்தில். நான் பேருந்துக்கு காவல் நின்ற ஒரு இனிய காலைப் பொழுது. ஒரு 20 வயது மதிக்கத்தக்க ஆண் பேந்த பேந்த முழித்துக் கொண்டு நின்றான். ஏதோ ஒரு இனம் புரியாத கலவரம் அவனிடத்தில். நான் மெல்ல புன்னகை செய்தேன். அருகில் வந்தவன், " அண்ணா, நீங்கள் எங்கே போகின்றீர்கள் ? " என்று தயங்கியபடி கேட்டான். நான் அவனைக் கேள்விக்குறியுடன் நோக்கினேன். அவன் தொடர்ந்தான், " நான் கனடாவிற்கு புதிது. இங்கு எனக்கு எல்லாமே புதிதாக இருக்கு. ஒன்றுமே விளங்கவில்லை. கல்லூரிக்கு போக வேண்டும். எந்த பஸ்ஸில் ஏறுவது, எங்கு இறங்குவது என்று கொஞ்சம் விளக்கமாக சொல்வீர்களா ?" என்று கேட்டான். எங்கே போக வேண்டும் என்று கேட்டேன். அவன் ஒரு கல்லூரியின் பெயர் சொன்னான்.

" அட நானும் அங்கே தான் போகிறேன். என்னோடு நீங்கள் வரலாம் " என்று சொன்னதும் அவன் முகத்தில் ஒரு நிம்மதி. என் பெயர் சுரேஷ் என்று அறிமுகம் செய்து கொண்டேன். கனடா வந்து சில மாதங்களே இருக்கும் என்று தொடங்கி சித்தப்பா வீட்டில் தங்கியிருப்பது வரை எல்லாமே சொன்னான்.

கல்லூரி வந்தது. சந்துரு சொன்னான், " நான் சில விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்ய வேண்டும். நீங்கள் தவறாக நினைக்காவிட்டால் எனக்காக காத்திருக்க முடியுமா? இன்று மட்டும் தான் இனிமேல் உங்களை தொல்லை பண்ணமாட்டேன் ."

"இதிலென்ன தொல்லை எனக்கு. நீங்கள் உங்கள் வேலைகளை முடித்து விட்டு அறை எண் 100 க்கு வாருங்கள். நான் காத்திருக்கிறேன். " என்று சொல்லிவிட்டு நடந்தேன்.

சந்துரு அலுவலக அறையை நோக்கி நடந்தான். ஒரு அரை மணிநேரம் கடந்திருக்கும், நான் ஏதோ ஒரு வேலையாக சந்துரு நின்ற பக்கம் போனேன். அங்கு பெரிய சிரிப்பொலி கேட்டது. எட்டிப் பார்த்தேன். வரவேற்பறை பெண் கையில் விண்ணப்ப படிவத்தை வைத்துக் கொண்டு சந்துருவிடம் ஏதோ விளக்கம் கேட்டுக் கொண்டிருந்தார். இவன் முழித்தபடி நின்றான். நானும் போய் என்ன விடயம் என்று பார்த்தேன். விண்ணப்படிவத்தில் ஒரு கேள்விக்கு சந்துரு எழுதிய விடையே அந்த பெண்ணின் சிரிப்புக்கு காரணம். அந்த கேள்வி உங்கள் பிஸினஸ் தொலைபேசி இலக்கம் என்பதை ஆங்கிலத்தில் சுருக்கமாக Bus No என்று குறிப்பிடுவார்கள். அதாவது அலுவலக தொலைபேசி இலக்கம் என்ன என்பதே கேள்வி. நாட்டிற்கு புதிதாக வந்த சந்துரு கல்லூரிக்கு வரும் பஸ் நம்பரை கேட்கிறார்கள் என்று எண்ணி, " எப்போதும் நடைராஜா ( always walk ) " என்று பதிலளித்து இருந்தான்.

வீட்டிற்கு போகும் வரை புலம்பிக் கொண்டே வந்தான். " நான் அவர்கள் கல்லூரிக்கு வரும் பஸ் நம்பரை கேட்கிறார்களே எதற்காக இருக்கும் என்று ஒரு சில கணங்கள் குழம்பி விட்டேன். நிறைய மாணவர்கள் அந்த பஸ் ரூட்டில் வந்தால் ஏதோ இலவச பஸ் பாஸ் தருவார்கள் என்று நினைத்தேன். ஆனால் பஸ் நம்பர் ஞாபகம் வரவில்லை. அது தான் அப்படி எழுதி தொலைத்துவிட்டேன். "

அன்றிலிருந்து ஆரம்பமானது எங்கள் நட்பு. முதலில் அண்ணா என்று தொடங்கிய அவன் நட்பு ஒரே மாசத்தில் வாடா போடா என்று அழைக்கும் அளவுக்கு வந்தது. ஆங்கில அறிவு, எப்படி பேசுவது போன்ற அடிப்படை விஷயங்கள் கற்க கல்லூரியில் ஆங்கில வகுப்பில் சேர்ந்து கொண்டான்.

கனடாவில் கார் ஓட்டத்தெரியாவிட்டால் வேலைக்கு ஆகாது என்று அடிக்கடி சொல்வான். அதற்கான முயற்சியிலும் தீவிரமாக ஈடுபட்டான். கல்லூரி முடிந்ததும் கார் ஓட்டப்பழகுவதாக சொன்னான்.
ஊரில் அவன் பெற்றோருக்கு பணம் அனுப்ப வேலைக்கும் சென்றான். இரவு 7 மணியிலிருந்து நள்ளிரவு 12 மணி வரை வேலை. அதன் பிறகே வீட்டுப்பாடம் செய்து, படுத்து எழும்பி, காலையில் கல்லூரிக்கு வருவான். ஆனால் முகத்தில் அலுப்பு, கவலை எதையுமே வெளிக்காட்டமாட்டான். எப்போதும் ஒரு புன்சிரிப்பு.

ஒரு நாள் வழக்கம் போல நான் பேருந்துக்காக காத்து நின்றேன். ஒரு பழைய டப்பா கார் என் அருகில் வந்து நின்றது. சந்துரு ஓட்டுநர் இருக்கையில் இருந்தான். நான் ஆச்சரியமாக பார்க்க, அவன் ஓட்டுநர் உரிமத்தை எடுத்து காட்டினான். லைசென்ஸை காட்டும்போது அவன் முகத்தில் அப்படி ஒரு பெருமை. "இனிமேல் நீயும், நானும் பஸ்ஸூக்காக காத்திருக்க தேவையில்லை. காரிலேயே போகலாம் "என்றான் சந்துரு.

பேசிக்கொண்டே கார் ஓட்டினான். ஊரில் இருக்கும் வரை அவன் அப்பாவின் பழைய டப்பா கார் ஓட்டிய அனுபவத்தை விலாவாரியாக சொன்னான். " ஊரில் இருக்கும் வரை ஆக்ஸிலேட்டரில் காலை வைத்து ஒரு மிதி மிதித்தால் யாழ்பாணம் வந்த பின்பு தான் பிரேக் போடுவேன். இங்கு பத்தடிக்கு ஒவ்வொரு சிக்னல் " என்று அலுத்துக் கொண்டான்.

" ஊரில் கார் ஓட்டியது போல இங்கு ஓட்டித் தொலைத்து விடாதே. பிறகு கம்பி எண்ண வேண்டியது தான் " என்று அவனுக்கு அறிவுரை சொன்னேன்.

" ம்ம்ம்..." என்று தலையாட்டியவன் , " ஏண்டா போலீஸ் பின்னாடியே வருகின்றான் " என்று கேட்டான். நானும் அப்போது தான் கவனித்தேன். " காரை நிப்பாட்டுடா. உன்னைத்தான் ஏதோ கேட்கவருகிறார். என்ன மாட்டிவிடாதே...."

போலீஸ் அதிகாரி அருகில் வந்தார். " கணவான்களே எங்கே செல்கின்றீர்கள்? " என்றார்.

சந்துரு பயத்தில் உளறத்தொடங்கினான். " நோ இங்கிலீஸ். யெஸ் டமில் " என்றான்.
அந்த அதிகாரி சொன்னார், " இது ஒரு வழிப்பாதை. நீங்கள் இதில் வந்திருக்க கூடாது. சட்டப்படி தவறு."
சந்துரு விளங்காதவன் போல லுக் விட்டான். அதிகாரி இவனுக்கு எப்படி விளங்கவைப்பேன் என்று குழம்பி பிறகு தெளிவு வந்தவர் சொன்னார், " ஒன்லி கமிங் . நோ கோயிங்."
ரோட்டில் இருந்த அம்புக்குறியிட்ட பலகையை காட்டி விளக்கம் சொன்னார்.
சந்துரு அப்பாவி போல முகத்தை வைத்துக் கொண்டு மண்டையை ஆட்டினான்.
நான், " அடப்பாவி, இப்படியா நடிப்பது?" என்று சந்துருவை பார்த்து முணுமுணுத்தேன்.

இறுதியில் இனிமேல் கவனமாக ஓட்டுங்கள் என்று எச்சரிக்கையுடன் விடுவிக்கப்பட்டோம்.

"ஊரில் அப்பாக்கு உடம்பு சரியில்லை. பணம் அனுப்ப வேண்டும். அது தான் இப்படி நடிக்க வேண்டியதா போச்சு. " என்று சிரித்துக் கொண்டே சொன்னான்.



இப்பெல்லாம் சந்துரு என்னிடம் பேசுவெதே குறைவு. ஏன் என்று தெரியவில்லை?. நானே வலிந்து போய் கேட்டாலும் பதில் பேசாது நழுவி விடுவான். எனக்கு அவன் ஏன் பேசவில்லை என்று ஆராய்ச்சி செய்ய நேரமில்லாமல் வேறு வேலைகள், படிப்பு என்று நாட்கள் ஓடியது. அவன் ஒரு பெண்ணை காதலிக்கிறான் என்று எனக்கு அவன் வகுப்பு தோழன் சொன்னான்.
அதற்கு ஏன் ஓடி ஒழிய வேண்டும். முன்பே சொல்லியிருந்தால் நானும் வாழ்த்தியிருப்பேன் அல்லவா?.
ஒரு நாள் சந்துருவின் சித்தப்பாவை எதேச்சையாக கடையில் சந்தித்தேன். சந்துரு அவன் பெற்றோருக்கு பணம் அனுப்புவதில்லை என்று சொன்னார். அவன் அந்த பெண்ணை திருமணம் செய்து விட்டான் என்றும் சொன்னார்.

ஒரு நாள் மாலில் சந்துருவை சந்தித்தேன். ஒரு பெண்மணி அவன் அருகில். இவனை விட வயதில் மூத்தவராக தெரிந்தார். " என்னடா உன் சித்தியா?" என்று கேட்டேன். என்னை எரித்து விடுவது போல பார்த்தவன் சொன்னான், " இல்லை. மனைவி."
நான் வாயடைத்து போனேன்.
இந்த பெண்மணியை எங்கோ பார்த்திருக்கிறேன். நினைவு வரமாட்டுதாம். ஆ இப்போது ஞாபகம் வந்து விட்டது. இவர் சாம் என்கின்ற சாம்பசிவம் அண்ணாவின் மனைவி அல்லவா. சாம் அண்ணா தாடியோடு அலைவதன் காரணம் இப்பொது விளங்கிவிட்டது.

அந்த பெண்மணி கையில் ஐ-பாட் வைத்து தட்டிக் கொண்டிருந்தார். மிகையான அலங்காரம், விலையுயர்ந்த ஆடைகள் என்று பகட்டாகவே இருந்தார்.
அப்போது ஒரு 5 வயது மதிக்கத்தக்க குழந்தை வந்து அப்பா என்று இவனைக் கட்டிக் கொண்டது.

அதற்குள் பிள்ளை பிறந்து 5 வயது ஆகிவிட்டதா? எப்படி?.
நான் குழம்பி நிற்க அவன் சொன்னான், " இது என் மனைவியின் குழந்தை....." இதன் பிறகு அவன் சொன்னது எதுவுமே என் காதில் விழவில்லை.
அதிர்ச்சியுடன் அவனை திரும்பி பாராமல் நடந்தேன்..

15 comments:

  1. கடகடவென்று முன்னேறிக் கொண்டே வருகிறீர்கள். வாழ்த்துக்கள் வாணி. ;)

    எனக்கும் சில விஷயங்கள் என் இப்படி நடக்கிறது என்று புரிவதில்லை. ஆனால் நடப்பதெல்லாம் தன் பாட்டுக்கு நடக்கிறது. ;)
    ம்.. ஆரம்பத்தில் நானும் இந்த 'பஸ் நம்பர்' பார்த்துக் குழம்பி இருக்கிறேன். ;D

    ReplyDelete
  2. அன்புள்ள வானதி!

    உங்களுக்கு எனது இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  3. இந்த கதை துபாயிலும் நிறைய நடக்குது . யாரை குறை சொல்ல . அழகா ஒரு உண்மைய கதை போல எழுதி இருக்கீங்க ,இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  4. 'ஏன்' என்பதுதான் 'என்' ஆகிவிட்டது. மன்னிக்கவும். ;)

    ReplyDelete
  5. இமா, நன்றி. நேற்று உங்கள் பின்னூட்டம் பார்த்தேன். பதில் போட இப்போது தான் நேரம் வந்தது. நானும் நிறைய குழம்பி இருக்கிறேன். இப்பெல்லாம் நான் ரொம்ப தெளிவாகி விட்டேன்.

    ReplyDelete
  6. மனோ அக்கா, நன்றி. உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. ஜெய்லானி, தனிமை தான் எல்லாவற்றுக்கும் காரணம் என்று நினைக்கிறேன். பெற்றோரை விட்டுப் பிரிந்து வரும் இளம் வயதினர் அதிகம் தடம் மாறி போக வாய்புகள் அதிகம்.
    உங்களூக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. Nice story vanathy!
    Recently one of my hubby's colleague got married to a lady,ten years elder than him.Then he resigned his job and started a nu business here.:)
    GC and PR-card plays a vital role in these happenings.

    ReplyDelete
  9. கதையை ரொம்ப நல்ல எழுதி இருக்கீங்க. என்ன சொல்வது, நிறையபேர் இபப்டி ஒரு கால கட்டத்தில் மாறி விடுகிறார்கள்.

    ReplyDelete
  10. கதையை மிக யதார்த்தமாகவும் சுவாரஸ்யமாகவும் பதிந்திருக்கிறீர்கள்..... அருமை!!! வாழ்த்துக்கள் வானதி.

    ReplyDelete
  11. மகி, எங்களுக்கு தெரிந்து இங்கு ஒருவரும் GC க்காக கல்யாணம் செய்து கொண்டார். வருகைக்கு நன்றி.
    ஜலீலா அக்கா, வருகைக்கு நன்றி. நீங்கள் சொல்வது சரி தான் அக்கா.
    கவிதன், கருத்துக்கு நன்றி. கதையை ரசித்துப் படித்து இருகின்றீர்கள். அடிக்கடி வாங்கோ.

    ReplyDelete
  12. வாணி.... திரும்பிப் பார்ப்பதுக்குள் பதிவுகள் போடுறீங்கள்... முடியவில்லை என்னால்...

    ஊரில் இருக்கும் வரை ஆக்ஸிலேட்டரில் காலை வைத்து ஒரு மிதி மிதித்தால் யாழ்பாணம் வந்த பின்பு தான் பிரேக் போடுவேன்//// இது ரொம்ப ஓவர்... யாழ்ப்பாணம் போகும்வரை பிரேக்கிலதான் கால் இருக்கோணும் இல்லாவிட்டால் அதோஓஓஓஓ கதிதேஏஏஏஏன்.

    ஆமாம் வெளிநாட்டில் எம்மவர்களின் கூத்துக்கள் சொல்லி முடியாதவை....அழகாக இருக்கு.. நான் கதையைச் சொன்னேன்.

    ReplyDelete
  13. அதிரா, நீங்கள் நிதானமா வந்து பின்னூட்டம் போடுங்கோ. இந்த தள்ளாத வயதில் ஏன் ஓடி, விழுந்து வேண்டாத வேலை.

    அதீஸ், நன்றி.

    ReplyDelete
  14. //நோ இங்கிலீஸ். யெஸ் டமில் // ஹாஹ்ஹா..

    //. இந்த தள்ளாத வயதில் ஏன் ஓடி, விழுந்து வேண்டாத வேலை// இது அத விட ஹாஹ்ஹ்ஹா :))

    ம்ம்.. முடிவு ஒரு மாதிரியாகத் தான் இருக்கு.. நன்றாக வாழ்ந்தால் சரி தான்..

    ReplyDelete
  15. சந்தனா, அதீஸ் பார்க்க மாட்டார் என்று தைரியத்தில் போட்டேன். வந்தால்... நினைக்கவே நடுங்குது. ஆனால் (பேபி) அதிரா 2000 ஆம் ஆண்டு பிறந்தவராம். வந்தால் மிட்டாய் குடுத்து சமாளிக்கலாம்.

    ReplyDelete

படிச்சுட்டு ஏதாவது சொல்லிட்டு போங்கள்!!!