Tuesday, October 11, 2011

இரண்டு பயங்கள்

நான் பயப்படும் விடயங்கள் இரண்டு. 1. பாம்புகள் 2. ....
முதல்ல இதைப் படியுங்கள். பிறகு இரண்டாவது சொல்றேன். வீட்டினை சுத்தம் செய்து கொண்டிருந்த போது வெளியே சிறுவர்கள் எதையோ ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்தார்கள். நான் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. வேலை முடித்த பின்னர் ஓய்வாக இருந்தபோது இரண்டு இளைஞர்கள் மீண்டும் அதே இடத்தில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றார்கள். அட! என்னவாக இருக்கும் என்று யோசித்துக் கொண்டே இருந்தேனே ஒழிய போய் பார்க்க வேண்டும் என்று எண்ணம் எழவேயில்லை. மாலை நேரம் தபால் பெட்டியில் அன்றைய தபால்களை எடுக்க சென்ற போதும் நினைவுக்கு வரவில்லை. தபால்களை எடுத்து விட்டு நிமிர்ந்த போது நீளமாக ஏதோ ஒன்று கண்ணில் பட்டது. முதலில் மனப் பிரமையாக இருக்குமோ என்று நினைத்தேன். மீண்டும் பார்த்த போது மனப்பிரமை அல்ல உண்மை என்று விளங்கியது. பக்கத்து வீட்டு கார் பார்க்கிங் செய்யும் இடத்தில் ஒரு ஓரடி நீள பாம்பு அடிபட்டுக் கிடந்தது. உடல் நடுங்கத் தொடங்கியது. சாவுக்கிராக்கி! இது சாக வேறு இடம் கிடைக்கவில்லையா? என் வீட்டருகில் தான் வந்து சாகணுமா? எனக்கு ஈரக் குலையே நடுங்கத் தொடங்கியது. பக்கத்து வீட்டு ஆசாமி காரை பார்க் செய்துவிட்டு இறங்கினார். செல் போனில் பயங்கர பிஸியாக இருந்தார். என் மிரண்ட விழிகளைப் பார்த்ததும் என்னாச்சு என்றார்.
பாம்...பு என்றபடி கைகளைக் காட்டினேன். ஓ! அதுவா நான் தான் கொன்றேன் இப்ப என்ன அதுக்கு, என்றபடி அதை மிதித்துக் கொண்டே கடந்து சென்றார்.
வேறு இரு வாண்டுகள் வந்து பக்கத்தில் நின்று வேடிக்கை பார்க்க ஆரம்பித்தார்கள். இதுங்களுக்கு பாம்பு என்றால் பயம் இல்லையா?
அன்று என் மகன் பள்ளியில் இருந்து வந்ததும் பாம்புக் கதையை சொன்னேன். இதென்ன பிரமாதம் அம்மா. எங்க ஸ்கூல் விளையாட்டு மைதானத்தில் நாங்க விளையாடிக் கொண்டிருந்த போது ஒரு ஸ்நேக் வந்திச்சு. எங்க கேம்ஸ் டீச்சர் காலினால் தள்ளிக் கொண்டு போய் ஓரமா விட்டாங்க. அது ஓடியே போயிருச்சு, என்றார்.
மனிதர் எங்கேயும் நிம்மதியா இருக்கவே முடியாது போலிருக்கே. இப்பெல்லாம் வெளியே இறங்கு முன்னர் பாம்பு ஏதாவது தென்படுகிறதா என்று பார்த்த பின்னர் தான் கீழேயே இறங்குவேன்.

இரண்டவாது பயம்... ஊசி.
சமீபத்தில் என் மருத்துவரைப் பார்க்கப் போயிருந்த போது வழமையான செக்கப் முடித்த பின்னர் ஒரு ஊசியின் பெயரைக் குறிப்பிட்டு அந்த ஊசி உனக்கு சிறு வயதில் போட்டதா என்றார்.
ம்ம்ம்... அதெல்லாம் போட்டாச்சு என்று அவசரமாக பதில் சொன்னேன்.
அதுக்கு ஆதாரம் இருக்கா, என்றார் மருத்துவர்.
ஊசி போட்ட மருத்துவரை கூட்டிட்டே அலைய முடியுமா? என்று நினைத்துக் கொண்டே, வாட் யூ மீன்?, என்றேன்.
இல்லை ஊசி போட்ட பிறகு ஒரு கார்ட் தருவார்களே அது இருக்கா என்றார்.
நல்லாக் கேட்டார் பாருங்க ஒரு கேள்வி. இலங்கையில் எங்க வீட்டின் மீது குண்டு போட்டவன் தலையில் இடி விழ என்று சாபம் போட்டுக் கொண்டே... இப்ப எதுக்கு அதையெல்லாம் கேட்கிறார் என்று யோசனை வந்தது.
இவ்வளவு நாட்களாக நான் இந்தியப் பெண் என்று நினைத்திருப்பார் போல என் மருத்துவர். அவருக்கு நான் என் சொந்தக் கதையினை நீட்டி முழக்காமல் சொன்னேன். அதாவது இலங்கையில் பிறந்து, இந்தியாவில் வளர்ந்து, பின்னர் கனடாவில் வளர்ந்து, இப்ப அமெரிக்காவில் ....
ஓ! ரியலி. அப்ப ஊசி போட்டுடலாம் என்று மீண்டும் ஊசி போடுவதிலேயே குறியாக இருந்தார்.
இப்ப எதுக்கு ஊசி, பூசின்னுட்டு. நான் நல்ல ஆரோக்கியமாக இருக்கிறேன், என்றேன்.
பெண்ணே! இது பத்து வருடங்களுக்கு ஒரு முறை போட வேண்டிய ஊசி. இப்ப போடுறியா அல்லாவிட்டால் அடுத்த தடவை..... இல்லை இப்பவே போடலாம் என்று அவரே பதில் சொல்லிய பின்னர், என் முதுகில் மெதுவாக தட்டி, Every thing is going to be alright என்றபடி போய் விட்டார்.

அவர் போன பின்னர் இரு நேர்ஸ்கள் உள்ளே வந்தார்கள். இரண்டும் ஆண்கள். எதுக்கு இரண்டு பேர் வரணும். ஒருவர் என்னைப் பிடிக்க, மற்ற ஆசாமி ஊசியால் குத்தப் போகிறாரோ..
நான் சமர்த்தாக இருப்பேன் என்று புலம்பிய என்னை விளங்காமல் பார்த்துக் கொண்டே மற்றைய ஆசாமி ஓரமாக நிற்க, அடுத்த ஆசாமி ஊசியை என்கையில் குத்திய பின்னர், இரண்டு நாட்களுக்கு வலி இருக்கும். ஹெவியான பொருட்கள் எதையும் தூக்காதே என்றபடி விடை பெற்றார்.
அடப்பாவிகளா! இப்பவே வலி உயிர் போகுதே. இன்னும் இரண்டு நாட்களில் கையே போயிடும் போலிருக்கே என்று புலம்பியபடி வீடு வந்து சேர்ந்தேன்.
கையை நகர்த்தவோ அல்லது வேறு எந்த வேலையும் செய்ய முடியாதபடி வலி பின்னி எடுத்தது.
விளையாடிக் கொண்டிருந்த மகனிடம் தண்ணீர் எடுத்து தரும்படி கேட்டேன்.
ஏன் உங்களுக்கு என்னாச்சு, என்றார் மகன்.
ஊசி போட்டார் மருத்துவர், என்றேன்.
அம்மா, உங்களுக்கு ஒரு ஊசி போட்டதுக்கே இவ்வளவு வலின்னா எங்களுக்கு எத்தனை ஊசி குத்தினாங்க. எவ்வளவு பெய்ன், நோவு இருந்திருக்கும்...
ராசா! தண்ணி எங்கே?
இருங்க. நான் இன்னும் பேசி முடிக்கவில்லை .....
சரி. தப்பு தான். ராசா, பழி வாங்கிற நேரமாய்யா இது. போய் தண்ணி கொண்டு வாங்க... என்றேன்.
இருங்க. போன வருடம் கூட நான் அழ அழ ஒரு ஊசி போட்டாங்களே ஞாபகம் இருக்கா அம்மா....
சே! இதுக்கு நானே போய் தண்ணியை எடுத்து குடிச்சு தொலைக்கலாம் என்று நினைத்தபடி சமையல் அறை நோக்கிப் போனேன்.








28 comments:

  1. wow...enjoyd reading ur post..
    Am scared to go to my native place..coz of snake fear...oooooooooooooh...really scary..!
    Tasty Appetite

    ReplyDelete
  2. வான்ஸ் இப்படி பிஸ்கோத்து சமாச்சாரங்களுக்கு எல்லாம் பயப்படுவதா?ஷேம் ஷேம் பப்பி ஷேம்,

    ReplyDelete
  3. தோழி உங்க வேதனையை இப்படி சுவாரசியமா சொல்லி ரசிக்க வைத்துவிட்டீர்கள்...மீண்டும் இன்னொரு முறை படிக்க சொல்கிறது உங்க எழுத்து நடை !!

    சமயம் பார்த்து பழி வாங்குவதில் நம்ம பசங்களை அடிச்சிக்க ஆளே இல்ல...ம்...எல்லாம் ஒரு அனுபவம்தான் !! :))

    ReplyDelete
  4. //அட! என்னவாக இருக்கும் என்று யோசித்துக் கொண்டே இருந்தேனே ஒழிய போய் பார்க்க வேண்டும் என்று எண்ணம் எழவேயில்லை.//

    இதுக்கு பேரு தான் சோம்பேறி தனமா ஹி...ஹி...ஹி...

    ReplyDelete
  5. பாம்புன்னா படையே நடுங்கும்.வாணி மட்டும் விதிவிலக்கா ...என்னது..இறந்த பாம்பை பார்த்து பயமா .. ஊசின்னா பயமா ...அப்படின்னா கதாசிரியர் வாணி,பிளாகர் வாணி,இனிமே குழந்தை வாணி..:))

    ReplyDelete
  6. mmm .. very interesting to read dear.Ungalidam Nalla Ezhuthu Nadai Irukirathu.Luv ur narrative writing style.Scared to read abt snacks...Luv it.

    ReplyDelete
  7. ஹா, ஹா உங்க அனுபவம் சூப்பர்.

    ReplyDelete
  8. அடடா... நம்ம வான்ஸ்ஸ்.. காணாமல் போயி மீண்டும் வந்திட்டாங்கோ:)).

    எதுக்கு இப்ப போய் ஊசியெல்லாம் ஏதும் விஷேசமோ?:))) சரி சரி முறைக்கப்பிடாது.

    இப்போ இங்கு ஃபுலூ இஞெக்‌ஷன் போடுகிறார்க?ள், நான் போய் எடுக்கவில்லை இன்னமும்:)).

    ReplyDelete
  9. உங்கள் வெதருக்கு பாம்பு அங்கிருக்கு என நினைக்கிறேன், கடவுள் புண்ணியத்தில் நம் நாட்டில் பாம்பு தேள் எல்லாம் இல்லையாம், வெதர் அவர்களுக்குச் சாதகமாக இல்லை... எனக்கும் ம்ம்ம்ம்பு என்றால் யம்ம்ம்ம் பயம்ம்ம்ம்.

    நான் ஊசிக்கெல்லாம் பயப்புட மாட்டனே:)). பயந்தாலும் பயப்புடாதமாதிரி பில்டப் குடுக்கோணும் வான்ஸ்ஸ்ஸ்:))) அப்பத்தான் இந்தக் குட்டீஸிடமிருந்து தப்பலாம்:)))).

    ReplyDelete
  10. ஜெய், உங்களுக்கு பயமா?
    மிக்க நன்றி.
    ஸாதிகா அக்கா, கர்ர்ர்ர்ர்ர்...
    மிக்க நன்றி.
    கௌஸ், எல்லோர் வீட்டிலும் நடக்கும் கதை போலும்.
    மிக்க நன்றி.
    ஆமி, சோம்பேறித் தனம் என்றும் சொல்லலாம். பார்த்து என்ன ஆகப் போவுது என்ற எண்ணமாகவும் இருக்கலாம் இல்லையா??
    மிக்க நன்றி.
    ராதா ராணி, இந்த பாம்பு கர்மத்துக்கு மட்டும் தான் பயம். மற்றும் படி சிலந்தி, கரப்பான், பல்லி எதுக்கும் பயப்படும் ஆள் இல்லை.
    மிக்க நன்றி.

    ReplyDelete
  11. பதிவு சுவாரஸ்யம் எழுதிச் சென்றவிதம் அருமை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. MyKitchen Flavors,
    மிக்க நன்றி.

    லஷ்மி ஆன்டி, மிக்க நன்றி.
    அதீஸு, விஷேசம்- இனி வின்டர் காலம் வரப் போவுது.
    ப்ளூ ஊசி- அதுவும் போன வருடம் போட்டேன். என் பிள்ளைகளுக்கு நேஷல் ஸ்பிரே தான் மருத்துவர்கள் போடுவார்கள்.
    என் மருத்துவரிடம் எனக்கும் அது போல இருந்தா ஸ்பிரே பண்ணி விடுங்கோ என்று சொன்னேன். அவர் ஒரு பெரிய சிரிப்பை உதிர்த்து விட்டு ஊசி எடுத்துக் குத்திவிட்டார். இந்த முறை அந்தப் பக்கமே தலை வச்சு படுக்க மாட்டேனே.
    இங்கேயும் குளிர் வெதர் தான் இருந்தாலும் சில வகை பாம்புகள் இருக்கு. இனிமே நேரே கனடா தான். அங்கே இருக்கோ என்ன இழவோ தெரியவில்லை???
    மிக்க நன்றி.

    ReplyDelete
  13. வானதி நலமா? நீண்ட நாட்கள் கண்டு பார்த்து மகிழ்ச்சி.பயத்தை பகிர்ந்த விதம் அருமை.

    ReplyDelete
  14. வானதி, நீங்க சொல்லிருக்க முதல் விஷயத்தை நான் படிக்கவே இல்ல!அவ்வளோ பயம்ம்ம்ம்ம்ம்ம்! ;)

    இப்போ இங்கே சிலவகை புழுக்கள் (மண்புழுவோ??!) நடைபாதையெல்லாம் கிடக்கு..அதைப் பாத்தாலே ஒரு மாதிரியா இருக்கு..நேத்து இது தெரியாம வாக் போய் மான்மாதிரி துள்ளித்துள்ளி குதிச்சு வீடுவந்து சேர்ந்தேன்..ஷூ கழட்டி வைக்கப்போனேன், ஷூ ஸ்டான்ட்டுக்கடியிலே ஒரு புழு!!நான் போட்ட அலறல்ல இவர் பயந்துட்டார்,ஹிஹிஹ்..ஹி!

    ஊசி கதை காமெடியா இருக்கு. S நல்லாவே டைமிங் பாத்து பேசறார்!:)

    ReplyDelete
  15. நீங்க பாம்பை பார்த்துதானே பயப்படுவீங்க..?? நான் பாம்பு'ன்னு சொன்னாலே காத தூரம் ஓடிருவேன் ம்ஹும்...!!!

    ReplyDelete
  16. இருங்க. போன வருடம் கூட நான் அழ அழ ஒரு ஊசி போட்டாங்களே ஞாபகம் இருக்கா அம்மா....//

    ஹா ஹா ஹா ஹா செமையா பழி வாங்கிட்டான்....

    ReplyDelete
  17. பாம்புக்கு பயப்பட்டால் பரவாயில்லை.... ஊசிக்குமா... சின்னப்பசங்க கூட சிரிச்சிக்கிட்டே ஊசி போட்டுக்கிறாங்க.

    -சே.குமார்

    ReplyDelete
  18. எனக்கும் இந்த இரண்டினை கண்டாலும் பயம்..

    எங்க வீட்டிற்கு பக்கத்தில் ரோட்டில் ஒரு பாம்பு செத்து கிடந்தது...காலை நேரத்தில் வாக்கிங் செல்லும் பொழுது அதனை பார்த்துவிட்டு பயந்தே போய்விட்டேன்...அதில் இருந்து ஒரு வாரம் அந்த பக்கமே போகாமல் வேறு பக்கம் போக ஆரம்பித்துவிட்டேன்...

    ReplyDelete
  19. பூனைய பாத்தாலே புசு புசுனு அழுவற கேஸ் நானு...பா....பா.....பாம்பா... அவ்வ்வ்வ்... நான் வல்ல விளையாட்டுக்கு...அதுக்கு பதிலா இன்னும் ரெண்டு ஊசி வேணா போட்டுக்கறேன்.... ஆனா உங்க வாண்டு செம வாண்டு போல இருக்கே...ஹா ஹா ஹா...:)

    ReplyDelete
  20. ஹா ஹா ஹா. ;))) உங்களுக்கு நல்ல ஆள் வந்து அமைந்திருக்கிறார். ;)))

    //ஒருவர் என்னைப் பிடிக்க, மற்ற ஆசாமி ஊசியால் குத்தப் போகிறாரோ..// ;)

    வான்ஸ் நானும் நல்லா ஊசி போடுவன். அடுத்த முறை போகேக்க சொல்லுங்கோ, கூட வாறன். ;)

    ReplyDelete
  21. பயத்தின் பதிவை பயப்படாமல் படித்தேன் .. அருமை தோழி ...

    ReplyDelete
  22. எனக்கு பாம்பை விட ஊசிக்குதான் பயம் அதிகம் . 10 கிலோக்கு டேப்ளட்டா குடுத்தாலும் பரவாயில்லை.:-)

    ஆனாலும் விசா ரினுவலுக்கு அழ அழ குத்திடறாலுங்க ..அவ்வ்வ்வ்வ் :-)))))))))

    ReplyDelete
  23. எங்க கோபாலுக்கும் பா** ன்னா பயம்தாங்க.
    எங்கமாமி வீட்டில் வாசல் கேட்டில் இருக்கும் மெயில்பாக்ஸில் பா** ஒரு நாள் வெயிலுக்குப் பயந்து சுருண்டு கிடந்துச்சுன்னு சொன்னநாள் முதல் அவுங்க வீட்டுக்கு விசிட் போறதைக்கூட நிறுத்திட்டாருன்னா பாருங்க:-)

    போகட்டும். கை வலி எப்படி இருக்கு இப்போ?

    ReplyDelete
  24. பாம்புக்கு படையே நடுங்கலாம்.ஆனா இவன் நடுங்க மாட்டான்...பாம்புலையே நல்ல பாம்புதான் ரொம்ப கெட்ட பாம்பு ஆமா...

    ReplyDelete
  25. ஆசியா அக்கா, மிக்க நன்றி.
    மகி, மண்புழுக்கு நான் பயப்படுவதில்லை. எஸ் இன்னும்நிறைய காமடி பண்ணுவார்.
    மிக்க நன்றி.
    மனோ, நீங்க வீரமானவர் என்றல்லா நினைச்சுட்டு இருந்தேன்.
    மிக்க நன்றி.
    குமார், எந்த சின்னப் பிள்ளை சிரிச்சுட்டே ஊசி போட்டுச்சு??? சும்மா அளந்து விடப்படாது ஓக்கை.
    மிக்க நன்றி.

    ReplyDelete
  26. கீதா, வெல்கம் டு பாம்பு க்ளப்.
    மிக்க நன்றி.

    அப்பாவி, உங்களுக்கும் பயமா??? வெல்கம்.
    மிக்க நன்றி.

    இம்மி, நல்லாப் போடுவீங்களா ஊசி??? எங்கை க்ரிஸ் அண்ணாச்சிக்கு ஊசி போட்டு படமெடுத்து அனுப்புங்க. அப்ப தான் நம்புவேனாக்கும் ஓக்கை.
    ஐயோ! க்ரிஸ் அண்ணாச்சி, ஓடாதீங்க. நில்லுங்கோ.
    மிக்க நன்றி.

    ஆனந்து, மிக்க நன்றி.
    ஜெய், ஏதாவது சந்தேகம் கேட்டிருப்பீங்க அதான் குத்திட்டாலுங்க போல.
    மிக்க நன்றி.

    ReplyDelete
  27. துளசி, எனக்கு கேட்கவே நடுங்குது. நானும் பாம்பு இருந்தா அந்தப் பக்கம் போகவே மாட்டேன்.
    கை வலி இப்ப போயே போச்சு.
    மிக்க நன்றி, துளசி.

    மழை, நீங்க ஒரு வீரன் தான்.
    மிக்க நன்றி, மழை.

    ReplyDelete
  28. //அண்ணாச்சிக்கு ஊசி போட்டு படமெடுத்து அனுப்புங்க.// ;))) ஊசியைக் கண்டாலே படம் எடுப்பார். ;)))

    ReplyDelete

படிச்சுட்டு ஏதாவது சொல்லிட்டு போங்கள்!!!