Friday, May 28, 2010

நாங்களும் அகதிகள் தான்..

காலை 7 மணி இருக்கும் முற்றத்தில் பேச்சுக் குரல்கள் கேட்டன. வெளியே வந்து பார்த்தேன். ஊர்ப் பெரியவர் தாமு அண்ணா நின்றார். அவருடன் ஒரு கும்பல். தாமு அண்ணா சொன்னார், " பூங்கோதை, இவர்களெல்லாம் இங்கே உன் வீட்டில் தங்கப் போகிறார்கள். இவர்களின் வீடு வாசல் எல்லாமே குண்டு வீச்சினால் தரை மட்டமாகி விட்டது. தங்க இடம் இல்லாமல் அலைந்து கொண்டிருந்தார்கள். நான் தான் இங்கே கூட்டி வந்தேன். இரவு பகலாக நடந்து வந்திருக்கின்றார்கள். "

நான் அந்த கும்பலை கலக்கத்துடன் பார்த்தேன். ஆண்கள், பெண்கள், வாண்டுகள் என்று ஒரு 30 பேராவது தேறுவார்கள். என் பதிலை எதிர்பாராமல் அந்த கும்பல் வீட்டினுள் சென்றார்கள்.

தாமு அண்ணா அங்கேயே நின்று கொண்டிருந்தவர் கேட்டார், " சொப்பனாங்குட்டி எங்கே? " என்றார்.

" அவனுக்கு கல்யாணம். அதான் ஊருக்கு போய் விட்டான். இந்த வாரம் வந்து விடுவதாக சொன்னான். காணோம்.", என்றேன் நான்.
" ம்ம்... அவனுக்கு கல்யாணமா? கலிகாலம் " , என்று முணுமுணுத்து விட்டு போய் விட்டார்.

நான் வீட்டிற்குள் போனேன். இந்த வீடு என்னுடையதல்ல. 50, 60 வருடங்களின் முன்பு இந்த காணி வாங்கி, பெரிய வீடு கட்டியவர் சொக்கான் சாமியார். பின்னாளில் ஆன்மீகத்தில் நாட்டம் ஏற்பட இந்த வீட்டை ஆசிரமம் ஆக்கி விட்டார்.

நானும் கணவரும் இங்கே அண்டிப் பிழைக்க 15 வருடங்களின் முன்பு வந்தவர்கள். சாமியார் உயிரோடு இருந்த வரைக்கும் பூசை, அன்னதானம் என்று ஒரே அமர்களமாக இருந்தது. அவர் இறந்த பின்னர் அவரின் இறுதி ஆசைப்படி இங்கேயே அவரை அடக்கம் பண்ணிவிட்டார்கள்.

என் கணவரும் 5 வருடங்களின் முன்பு இறந்துவிட்டார். நானும் வேறு போக்கிடம் இல்லாதபடியால் இங்கேயே தங்கி விட்டேன். காலப் போக்கில் ஆசிரமத்திற்கு மக்கள் வருவது அறவே நின்று விட்டது. சாமியாருக்கு வாரிசு என்று சொல்ல யாருமே இல்லை. நானே எல்லாவற்றையும் அனுபவித்து வருகிறேன். சொப்பனாங்குட்டி என் உதவியாள்.

பரந்து விரிந்த இந்த நிலத்தில் மா, வாழை, தென்னை, பலா, கத்தரி என்று பல விதமான மரஞ்செடிகள் இருக்கின்றன. அவற்றை எல்லாம் பொறுப்பாக பார்த்துக் கொள்வது சொப்பனாங்குட்டியின் ( சுருக்கமாக சொப்பு ) வேலை.

சொப்பனாங்குட்டி - கறுத்த, தடித்த உருவம். காலை இழுத்து இழுத்து நடப்பான். கட்டைக் குரலில் அவன் கத்தினால் இந்த ஏரியாவே நடுநடுங்கும். அண்டை அயலாரின் வாண்டுகளிடமிருந்து பழங்கள், பூக்களை பாதுகாப்பது இவனின் வேலை. பொருட்களை சந்தைக்கு கொண்டு போய் விற்று, நிறைய இலாபம் கொண்டு வருவான். அவனுக்கு 40% பங்கு கொடுப்பேன்.

வந்த கும்பல் வீட்டின் பெரிய ஹாலை ஆக்கிரமித்து இருந்தார்கள். நடந்து வந்த களைப்பினால் எல்லோரும் படுத்திருந்தார்கள். நான் எல்லோரையும் வெறித்துப் பார்த்தபடி உள்ளே போனேன். மதியம் சாப்பிட்டு விட்டு, ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும்போது ஏதோ சத்தங்கள் கேட்டன.


எழுந்து பார்த்தேன் 7, 8 வாண்டுகள் சமையல் அறையில் ஏதோ ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தார்கள். " ஏய் குட்டிச் சாத்தான்களே... ஓடிப் போங்கள்", என்று விரட்டினேன். அவர்கள் இரைந்தபடி தோட்டத்திற்கு ஓடினார்கள். நானும் பதறியபடி பின்னே ஓடினேன். ஒரு பிரிவினர் மாமரத்தில் ஏறிக் கொண்டிருந்தார்கள். மற்ற பிரிவினர் தோட்டமெங்கும் ஓடிக் கொண்டிருந்தார்கள். சொப்பனாங்குட்டி இல்லாமல் சமாளிக்க முடியாது போலிருந்தது. நானும் சளைக்காமல் ஓடி, எல்லோரையும் பிடித்து ஓரிடத்தில் நிப்பாட்டினேன். மிரட்டும் குரலில் எச்சரிக்கை செய்து அனுப்பினேன்.

அன்றைய பகல் பொழுது ஒரு வழியாக முடிந்தது. இரவு வாண்டுகளின் கூச்சல், குழப்பம் எனக்கு பழக்கமில்லாத ஒன்றாக இருந்தது. முடிந்தவரை விளக்கை அணைத்து விட்டு, ஆசிரமத்தை இருட்டினில் மூழ்கடித்தேன். வாண்டுகளின் கூச்சல் ஒரு வழியாக ஓய்ந்தது.

காலையில் மீண்டும் அவர்களின் அலறல். தோட்டத்திற்கு ஓடினேன். பலாமரத்தை சுற்றி நின்று, நன்கு கனிந்த பழத்தை நோக்கி கம்பை வீசியெறிந்தார்கள். பழம் கீழே விழுந்தது. அவர்கள் எடுத்துக் கொண்டு வந்த பழத்தை வலுக்கட்டாயமாக பிடுங்கிக் கொண்டேன்.

சொப்பனாங்குட்டி மீது எரிச்சல் வந்தது. இவன் திருமணம் செய்யவில்லை என்று யார் அழுதார்கள் என்று மனதினுள் திட்டித் தீர்த்தேன்.

தோட்டத்திலிருந்து பறித்த காய்கறிவகைகள், தேங்காய் என்று வந்திருந்த கும்பல் எந்த பொருட்களையும் விட்டு வைக்கவில்லை. முற்றத்தில் அடுப்பு மூட்டி ஆனந்தமாக சமையல் செய்து சாப்பிட்டார்கள்.

வாண்டுகள் கொய்யா மரத்தில் ஏற, நான் விரட்டிக் கொண்டு போனேன். அவர்கள் ஆசிரம வாசலை நோக்கி ஒடினார்கள். ஒடிப்போனவர்கள் எதையோ பார்த்து விட்டு மீண்டும் அலறி அடித்துக் கொண்டு எதிர் திசையில் ஓடினார்கள். அட சொப்பனாங்குட்டி வந்து விட்டான். மிகவும் ஆறுதலாக இருந்தது.

" என்ன நடக்குது இங்கே ?" , என்று அதட்டினான். நான் அவனை உள்ளே கூட்டிக் கொண்டு போய் எல்லாவற்றையும் சொன்னேன்.

" இவர்களை விரட்ட வேண்டும் ஆனால் எப்படி என்று தெரியவில்லை " , என்றேன்.

" இரவு வரட்டும் அது வரை பொறு ", என்றான் சொப்பு.

அன்று அமாவாசை இரவு. பூட்டியிருந்த சாமியாரின் சமாதி அறை கதவைத் திறந்து, நான் தலைவிரி கோலமாக ஏறி அமர்ந்து கொண்டேன். வாயில் எனக்கு தெரிந்த மந்திரங்களை எல்லாம் வேகமாக முணுமுணுத்தேன். அறை நெடுநாட்கள் பூட்டி இருந்தமையால் வௌவால்கள் சடசடத்துப் பறந்தன. சொப்பு சமாதியின் மறுபக்கம் ஒளிந்திருந்து வித்யாசமாக சத்தங்கள் எழுப்பினான். என் முன்னே ஒரு விளக்கு எரிந்து கொண்டிருந்தது

அந்த வழியாக வந்த வாண்டுகள் என் கெட்டப், விசித்திரமான சத்தங்களை கேட்டதும் அலறி அடித்துக் கொண்டு ஓடிவிட்டார்கள். பெற்றோர்களும் வந்து பார்த்து விட்டு போனார்கள்.

காலையில் வாண்டுகள் எல்லோரும் அடங்கி ஒடுங்கியே இருந்தார்கள். பெற்றோர்கள் மிரட்சியுடன் என்னைப் பார்த்தார்கள்.

" ஆகா! நல்லா வேலை செய்யுதே" , என்று நானும் சொப்பும் பேசிக் கொண்டோம். சொப்புவின் சம்பளத்தை அதிகரித்தேன்.

ஒவ்வொரு நாளும் இந்த கூத்து தொடர்ந்தது.

ஒரு நாள் காலை எழுந்து பார்த்த போது அந்த கும்பல் பெட்டி படுக்கைகளுடன் கிளம்பி போய் விட்டார்கள்.

ஏதோ இரையும் சத்தம் கேட்டது. " சொப்பு, அது என்ன சத்தம் " , என்றேன்.

" அக்கா, குண்டு வீச்சு விமானம் வருது ஓடுக்கா " , என்றான் சொப்பு.

வேகமாக வந்த விமானம் தொடர்ந்து குண்டுகளைத் தள்ளி விட்டு, பறந்து சென்று விட்டது. எங்கும் ஒரே புகை மண்டலம். ஆசிரமம், தோட்டத்தின் பெரும் பகுதி சேதமாகியிருந்தது.
சமாதி அறை மட்டும் சேதமில்லாமல் தப்பியது. குழந்தைகளை மிகவும் நேசித்த சொக்கன் சாமியார் எங்களை தண்டித்து விட்டது போல உணர்ந்தேன். என்ன உணர்ந்து என்ன பயன். எல்லாமே காலம் கடந்த ஞானோதயம்.

நாங்களும் புறப்பட்டாச்சு. எங்கே என்கிறீர்களா? இனிமேல் நாங்களும் அகதிகள் தான்.

20 comments:

  1. மிக அருமை.. முடிவை எதிர்பார்க்கவில்லை. நல்ல திருப்பம். வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. ம். சீரியஸாக ஒரு கதை சொல்லி இருக்கிறீங்கள் வாணி. நல்லா இருக்கு.

    ReplyDelete
  3. க‌தை ந‌ல்லா இருக்குங்க‌... இய‌ல்பான‌ ந‌டை..

    ReplyDelete
  4. பழசை மறக்ககூடாது சொல்ற நல்ல கதை...

    ReplyDelete
  5. வித்தியாசமான கதை. நல்ல முடிவு. அருமையான நடை!

    ReplyDelete
  6. கதை அருமை . பாராட்டுகள்

    ReplyDelete
  7. எதிர்பாராத முடிவு,நல்ல கதை!!

    ReplyDelete
  8. உண்மை நிகழ்வு போலவே எழுதும் ஆற்றல் உங்கள் எழுத்தில் உள்ளது.இருக்கும் பொழுது தெரியாது அதன் அருமை என்பார்களே.

    ReplyDelete
  9. பாராட்டுகள் நல்ல கதை

    ReplyDelete
  10. அன்புள்ள வானதி!

    சிறப்பாக சிறுகதைகள் எழுதி வரும் உங்களுக்கு- இதோ இந்த அன்பு விருதைப் பெற்றுக்கொள்ளுங்கள்!!

    http://www.muthusidharal.blogspot.com/

    ReplyDelete
  11. ஆஹா..எவ்வளவு அழக்காக எழுதி இருக்கின்றது..உண்மை தான்...எப்பொழுது நாம் கடந்து வந்த பழைய பாதையினை மட்டும் மறந்துவிடகூடாது...

    ReplyDelete
  12. நல்லாயிருக்கு வானதி.. யோசிக்க வைத்த கதை!!

    ReplyDelete
  13. உண்மையை முகத்திலடித்தாற் போல சொல்லிருக்கீங்க..குட் வானதி!

    ReplyDelete
  14. ஆஹா... கால் வச்ச வனியையும் அகதியாக்கிவிட்டாயே ஆண்டவனே??? அதுசரி... எங்கெயிருந்து உந்தப் பெயரெல்லாம் சுடுகிறீர்கள்? சொப்பனாங்குட்டி..... நல்ல பெயர்.

    இந்த நிலைதானே எம் நாட்டில் எல்லா இடத்திலும் நடந்த உண்மை.

    பி.கு:
    வாணி என் பரிசை கெதியாத் தரச் சொல்லுங்கோ நான் போகவேணும்....சொன்னசொல்லைக் காப்பாத்தத் தெரியவேணும் எனவும் சொல்லிடுங்கோ.. யாரிடமோ? பெஸ்ட்(1st)ஆக வந்திருப்பவர்களிடம்.... மீ எஸ்ஸ்ஸ்ஸ்

    எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...
    நல்லாயிருக்கு வானதி.. யோசிக்க வைத்த கதை!!// எல்போர்ட் சந்தூஊஊஊஊஉ ... எதை யோசிச்சிட்டீங்க இப்போ?:).

    ReplyDelete
  15. நகைச்சுவை பாணியில் இருந்தாலும், எதார்த்தத்தை உணர்த்தும் கதை.

    ReplyDelete
  16. எல்கே, வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
    இம்ஸ், நன்றி.
    நாடோடி, மிக்க நன்றி.
    ஜெய், மிக நன்றி.
    அநன்யா, மிக்க நன்றி.
    கௌசல்யா, நன்றி.
    மேனகா, நன்றி.
    யாதவன், நன்றி.

    ReplyDelete
  17. ஆசியா அக்கா, தொடர் வருகைக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி.
    மனோ அக்கா, விருதுக்கு மிக்க நன்றி.

    கீதா ஆச்சல், வருகைக்கு மிக்க நன்றி.
    சந்து, மிக்க நன்றி.
    மகி, நன்றி.

    அதீஸ், மிக்க நன்றி.
    இப்படி நிறைய பெயர்கள் கைவசம் இருக்கு. தரட்டே அதீஸ்?
    யாருப்பா அது அதிராவின் பரிசை வைத்திருப்பது??? தயவு செய்து கொடுத்து விடுங்கள்.
    //ஸ்ட்(1st)ஆக வந்திருப்பவர்களிடம்.... மீ எஸ்ஸ்ஸ்ஸ்//
    அது எல்கே வா?????????

    ஹூசைனம்மா, மிக்க நன்றி. ம்ம்..அறுசுவையில் உங்களோடு நீண்ட நாட்களின் முன்பு கடலை போட்டு இருக்கிறேன். நலமா?

    தக்குடுபாண்டி, மிக்க நன்றி.

    ReplyDelete
  18. இப்படி நிறைய பெயர்கள் கைவசம் இருக்கு. தரட்டே அதீஸ்? ///பப்ளிக்கில வாணாம் வாணி, மேசைக்குக் கீழால தாங்கோ..

    ReplyDelete

படிச்சுட்டு ஏதாவது சொல்லிட்டு போங்கள்!!!