Showing posts with label எனக்குப் பிடித்த பத்து படங்கள். Show all posts
Showing posts with label எனக்குப் பிடித்த பத்து படங்கள். Show all posts

Tuesday, June 8, 2010

எனக்குப் பிடித்த பத்து படங்கள்

வலைப்பூ நாகரீகம்
***************
படங்களைப் பற்றி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கருத்து இருக்கலாம். எனக்குப் பிடித்த படம் என் கணவருக்கோ அல்லது தோழிக்கோ பிடிக்க வேண்டிய கட்டாயம் இல்லை. படத்தைப் பற்றி விமர்சனம் எழுதுபவர்களுக்க்கும் அந்த படம் ஏதோ ஒரு வகையில் பிடித்திருக்கலாம். அதற்காக விமர்சனம் எழுதிய நபரை தாக்கி பேச வேண்டாமே. சமீபத்தில் அப்படி ஒரு பதிவு பார்த்தேன். அந்த நபர் மற்றவர்களை சிரிக்க வைக்க வேண்டும் என்ற நோக்கத்தினால் விமர்சனம் எழுதிய நபரை தாக்கி எழுதியிருந்தார். இதனால் யாருக்கு என்ன லாபம். சபை நாகரீகம் போன்று வலைப்பூ நாகரீகத்தையும் கடைப்பிடிக்கலாமே.
இதை யார் மனதையும் காயப்படுத்தும் நோக்கத்திற்காக எழுதவில்லை. மற்றவர்களை நேரடியாகவோ, மறைமுகமாகவோ விமர்சிப்பதில் நமக்கு என்ன லாபம். சிந்தியுங்கள்!

எல்கே என்னை பிடித்த 10 படங்கள் தொடர் பதிவுக்கு அழைத்துள்ளார். என்னைப் போய் படங்கள் பற்றி எழுதச் சொன்னால் நான் என்ன செய்வேன். ஆகவே மக்களே நான் பல வருடங்களின் முன்பு பார்த்த, கேட்ட படங்கள்(!) பற்றி எழுதப் போகிறேன். ஏதும் தவறு இருந்தால் பொறுத்தருளுங்கோ.



அபியும் நானும்
************
எனக்கு பிரகாஷ் ராஜ் மிக மிக பிடிக்கும். அபியும் நானும் - இல் பிரகாஷ் ராஜின் நடிப்பு அசத்தல்.
அப்பாவாக வெளுத்து வாங்கியிருப்பார். ஏனோ த்ரிஷாவின் நடிப்பு எனக்கு எப்போதும் பிடிப்பதில்லை. ஆனால் பிரகாஷ் ராஜ் படம் என்பதால் யுடியூப்பில் பார்த்தேன்.
அப்பாவிற்கும் மகளுக்கும் இடையேயான பாசத்தை அழகாக சொல்லும் படம். பார்த்ததும் அப்பாவின் நினைவு வந்தது உண்மை. இதெல்லாம் கல்யாணமாகி ஒரு பெண் குழந்தை பிறந்தால் தான் புரியுமோ என்று யோசித்தேன். இது வரை சொல்லப்படாத கோணத்தில் அழகாக கதை சொல்லப்பட்டிருக்கின்றது.
அப்படத்தில் ஒரு காட்சி.

சார், உங்களுக்கு ஹிந்தி புரியுமா?
ம்ம்.. மற்றவங்க பேசும் போது ஹிந்தி பேசுறாங்கன்னு புரியும் - இது பிரகாஷ் ராஜின் பதில்.


The God must be crazy
***********************

இந்தப் படம் பார்த்து பல வருடங்கள் ஆனாலும் இன்னும் பசுமையாக நினைவில் இருக்கும் படம். பழங்குடி இனத்தவர், ஒரு இளைஞன், ரௌடி கும்பல் ஆகியோர் கதையில் வருகின்றனர். பழங்குடி இனத்தவரின் கைகளில் ஒரு பாட்டில் ( பிளேனில் இருந்து யாரோ தூக்கி வீசிய சோடா பாட்டில் ) கிடைக்கிறது. நாகரீகத்தின் சுவடே இல்லாமல் இருக்கும் அவர்கள் கடவுள் தான் அதைக் கொடுத்தார் என்று மகிழ்கிறார்கள். அந்த பாட்டில் வந்ததில் இருந்து அவர்களுக்கு இடையில் ஒரே சண்டை. கடைசியில் அந்த இளைஞன், ரௌடி கும்பல் , பழங்குடியினர் எல்லோரையும் அழகாக கதையில் புகுத்தி, கதையை அருமையாக முடித்துள்ளார்கள். இறுதியில் அந்த பாட்டிலுக்கு என்ன நடந்தது, பழங்குடியினர் எப்படி மீண்டும் ஒன்று சேர்கிறார்கள் என்று அழகான முடிவு. இப்படி கூட படம் எடுக்கலாமா என்று வியந்து போனேன். குறைந்த பட்ஜெட், தெளிவான கதை, நல்ல நகைச்சுவை என்று மிகவும் நல்ல படம்.



நான் கமல் ரசிகை. எனக்கும் மேகத்திற்கும் இடையில் பிரிவு வந்த போதும் எனக்கு கமலில் கோபமோ, வெறுப்போ வந்ததில்லை ( சரி! நோ டென்ஷன். மேலே படிங்க ) . கமலின் 10 படங்கள் என்று தலைப்பு வைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

சலங்கை ஒலி
************

கமல் படத்தில் என் பேவரைட் இந்தப் படம். எப்போதும் மிகவும் பிடிக்கும். பரதநாட்டியம் ஆடி அசத்தி இருப்பார். அழகான கதை, அழகான கமல், சோகமான முடிவு. அடிக்கடி யுடியூப்பில் பார்த்து ரசிக்கும் பாடல் சலங்கை ஒலி பாடல்.

சதிலீலாவதி
**********
கமல் படம். ஆனால் கோவை சரளா தான் மிகவும் அசத்தி இருப்பார். கமலுக்காக பார்த்தாலும் கோவை சரளா தான் கமலை டாமினேட் பண்ணுவது போல இருந்தது. அழகிய கோவை தமிழில் பேசி, சிரிக்க வைப்பார். நான் கோவை சரளாவின் விசிறி ஆகிவிட்டேன் என்றே சொல்லலாம். ஆனால் இப்பெல்லாம் அவரை படத்தில் காண்பதே அபூர்வமாகி விட்டது.

அவ்வை சண்முகி
**************
கமல், மணிவண்ணன் கூட்டணி நல்லா இருக்கும். கமல் மாமியாக வரும் காட்சிகள் சூப்பர். மணிவண்ணன் ஒரு பக்கம் ஜொள்ளு விட, ஜெமினி ஒரு பக்கம் ஜொள்ளு விட இடையில் கமல் மீனாவிடம் ஜொள்ளு விடும் காட்சிகள் நல்ல நகைச்சுவை. கமல் வீசியெறியும் பூ மணிவண்ணன் மீது விழ, அதை மணிவண்ணன் கமலிடம் காட்ட, கமலின் ரியாக்ஷன் செம காமடி.

தெனாலி
********
கமல் இலங்கைத் தமிழில் பேசும் அழகே அழகுதான். ஜெயராமும் கமலுக்கு இணையாக நல்ல காமடி. அப்பாவி போல் முகத்தை வைத்துக் கொண்டு கமல் ஜெயராமை டென்ஷன் ஆக்கும் காட்சிகள் செம சிரிப்பு. கமல் அவரின் அம்மாவைப் பற்றி சொல்லும் காட்சியில் எல்லோரையும் அழ வைக்கிறார்.

கன்னத்தில் முத்தமிட்டால்
*********************
மணிரத்னம் படம். எனக்கு மிகவும் பிடித்த படம். பல காட்சிகள் நான் இலங்கையில் இருந்த போது நிகழ்ந்ததை ஞாபகம் ஊட்டியது. குறிப்பாக அகதிகள் கூட்டமாக செல்லும் போது ஹெலிகாப்டர்கள் சுற்றி வட்டமிட்ட காட்சி, படகில் ஏறிச் செல்லும் காட்சி இப்படி பல. சில காட்சிகளில் நான் அழுதேன். மாதவன், சிம்ரன், கீர்த்தனா, நந்திதா தாஸ் எல்லோரும் அருமையாக நடித்து இருக்கிறார்கள். நந்திதா தாஸின் நடிப்பு என்ன ஒரு தத்ரூபமான நடிப்பு. மிகவும் அழகிய எனக்கு மிகவும் பிடித்த நடிகை.

அபூர்வ சகோதரர்கள்
*****************
குட்டைக் கமலின் நடிப்பு தூள். நல்ல பாடல்கள், திரைக்கதை என்று எல்லாமே அருமை. வழக்கமான பழிவாங்கும் கதை தான். ஆனால் கமல் அதை வித்தியாசமாக, அழகாக செய்து பாராட்டுக்களை அள்ளிக் கொள்கிறார். அதில் வரும் " உன்னை நினைச்சேன்... " எஸ். பி. பி பாடல் மிகவும் பிடிக்கும்.

Up
**
இது டிஸ்னி படம். ஒரு தாத்தா, பொடியன் இருவரும் தான் படத்தில் ஹீரோக்கள். அழகான கிராபிக்ஸ், கதை என்று ஒரே அசத்தலாக இருக்கும் படம். டிஷ்னி படம் என்றால் கம்யூட்டர் சும்மா பூந்து விளையாடும். அந்த தாத்தாவின் முகத்தில் தோன்றும் எக்ஸ்பிரஷன்ஸ் அவ்வளவு அழகாக காட்டுவார்கள். தாத்தாவின் பழைய வீட்டில் எப்படி உலகம் சுற்றி பார்க்க போகிறார் என்று கதையை அழகா சொல்லியிருப்பார்கள்.

வைஜெயந்தி ஐ.பி.எஸ்.
*******************
விஜயசாந்தி பெண் போலீஸ் அதிகாரியாக நடித்து அசத்தி இருப்பார். சின்ன வயதில் எனக்கு போலீஸ் ஆக வேண்டும் என்று விருப்பம். அது நிறைவேறாமல் போய் விட்டது. விஜயசாந்தி படம் பார்த்த போது ஒரு அற்ப சந்தோஷம். ஏதோ நானே போலீஸ் ஆனது போல ஒரு மிதப்பு. அவர் எதிரிகளை அடித்து, துவைக்கும் காட்சி, காயம் பட்டு மீண்டும் பணிக்கு செல்லும் காட்சி என்று பல காட்சிகள் நினைவில் இருக்கு. இந்தப் படம் பார்த்து 15 வருடங்களுக்கு மேலாகி விட்டது, ஆனால் இன்னும் பசுமையாக நினைவில் இருக்கு.