Friday, February 18, 2011

இரண்டு பெண்கள்

சூப்பர் மார்க்கெட் போயிருந்தேன்.
" ஹேய் ! யாரு என் கார் மேலை அழுக்கு பண்ணியது ", என்ற குரல் கேட்டு திரும்பினேன்.
அங்கு ஒரு பெண், அவரின் 2 வாரிசுகள் நின்றார்கள்.
என்ன அழுக்காக இருக்கும் என்று பார்த்தேன். குக்கியோ அல்லது ஏதோ ஒரு சாப்பாட்டு பொருளை காரின் முன் ( car bonnet ) பாகத்தில் கொட்டியிருந்தார்கள்.
என்னைப் பொறுத்தவரை அது ஒரு பெரிய குற்றம் போல தெரியவில்லை. ஆனால், அந்த அம்மா குழந்தைகளை திட்டித் தீர்த்தார்.
சும்மா ஒரு பேப்பரினால் துடைச்சா வந்திட்டு போவுது. இந்த உயிரில்லாத பொருளுக்காக ஏன் உயிருள்ள ஜீவன்களை வதைக்கிறார் என்று ஆத்திரம் வந்தது.
பின்னர் கடையினுள்ளும் அவரின் அர்ச்சனை ஓயவேயில்லை. மகனுக்கு 10 வயசும், மகளுக்கு 8 வயசும் இருக்கலாம். திட்டு வாங்கிய போது இருவரின் முகமும் வாடிப் போய் இருந்தது. சிறிது நேரத்தில் இயல்பு நிலைக்கு மாறி, ஓடி ஓடி தாய்க்கு உதவிகள் செய்தார்கள்.
மகன் மீண்டும் ஏதோ தவறு செய்ய, மீண்டும் மகனுக்கு திட்டு, திட்டு,.. இப்படியே தொடர்ந்து கொண்டே இருந்தார்.
சிலர் புன்முறுவலுடன் கடந்து போனார்கள், சிலர் முகம் சுழித்தார்கள்.
இப்படிக் கூட தாய் இருப்பாளா என்று நினைத்துக் கொண்டேன்.
எனக்கு மட்டும் ஆண்டவன் இன்விஸிபிளா மாறும் சக்தியை குடுத்திருந்தா அந்த அம்மாவின் கன்னத்தில் பளார் என்று ஒரு அறை விட்டிருப்பேன்.


**********************
பொருள் வாங்கிய பிறகு காசு குடுக்கோணும் அல்லவா? அதுக்காக போய் லைனில் நின்றேன். அங்கு ஸ்டான்டில் இருந்த புத்தகங்களை சும்மா மேலோட்டமா ஒரு பார்வை பார்த்தேன். பில் கிளின்டனின் மகள் கணவரை விட்டுப் பிரியப் போவதாக ஒரு கிசுகிசு மாகஸினில் போடிருந்தார்கள். அடடா! 6 மாசம் கூட இல்லையே அதற்குள் கசந்திடுச்சா.....

பின்னாலிருந்து ஒரு குரல், " இந்த பால் பாட்டிலை இங்கு வைக்கவா ?", என்று கேட்டது. ஒரு வெள்ளைக்கார அக்கா நின்று கொண்டிருந்தார்.
நான் என் பொருள்களே மூவிங் பெல்ட்டில் இன்னும் வைக்கவில்லை.
" சரி. அதுக்கென்ன வையுங்களேன்", என்றேன்.
அந்தப் பெண்மணியின் கைகளில் வேறு பாட்டில்கள், சாமான்கள் என்று வைத்திருந்தார். ஏன் ஒரு ஷாப்பிங் கார்ட் அல்லது கூடை எடுத்திருக்கலாமே என்று நினைத்துக் கொண்டேன்.
" கொஞ்ச சாமான்கள் சமாளிக்கலாம்ன்னு நினைச்சேன். முடியலை. இப்ப பால் பாட்டிலை எடுத்திர்றேன் ", என்றார்.
" பரவாயில்லை. நீங்கள் முதலில் போங்கள். நான் பின்னாடி வர்றேன்", என்று சொல்லி என் பொருட்களை எடுத்துக் கொண்டு அவருக்கு வழி விட்டேன்.

சிறிது தயங்கியவர். பிறகு புன்முறுவலுடன் என்னைக் கடந்து போய் லைனில் நின்று கொண்டார்.
நன்றி என்று குரல் வந்தது.
அட! நன்றி என்று தமிழில் சொன்னவர் யாராக இருக்கும் என்று யோசித்தேன். லைனில் முன்னுக்கு போய் நின்றவர் புன்முறுவலுடன், " நான் தான் நன்றி என்றேன்", என்றார்.
தமிழ் எப்படி? நீங்க? யாரிடம்? என்று அடுக்கடுக்காக கேள்விகள் கேட்டேன்.
" நான் ஒரு வயசான இலங்கை பாட்டியை பார்த்துக் கொள்கிறேன். அவங்க எனக்கு தமிழ் சொல்லிக் குடுத்தாங்க", என்றார்.
குளிக்க வாங்கோ, சாப்பிட வாங்கோ, புறா... இப்படி பல தமிழ் வார்த்தைகளை அடுக்கிக் கொண்டே போனார்.
தமிழ் அழகான மொழி. இனிமேல் எழுதப் பழக வேண்டும் என்றார்.
போகும் முன்பு சொன்னார், " இலங்கை, இந்தியா, சைனா போன்ற நாடுகளில் வயசான பெற்றோர்களை முதியோர் காப்பகத்துக்கு அனுப்பாமல் பிள்ளைகளே வைச்சு பொறுப்பா பார்த்துக் கொள்கிறார்கள். ஆனால், அமெரிக்காவில் தான் மூலை முடுக்கெல்லாம் முதியோர் காப்பகங்கள். அங்கு போய் அதிகபட்சம் 18 மாதங்கள் உயிரோடு இருப்பார்கள். பிறகு இறந்து போகிறார்கள். நான் என் ( 74, 78 ) தாய், தந்தை
இருவரையும் அவர்களின் இறுதிக் காலங்களில் வைச்சு கவனமா பார்த்துக் கொள்ளப் போகிறேன். இதை என் அம்மாக்கும் உறுதியா சொல்லியாச்சு ", என்றபடி விடை பெற்றார்.
இவர் எங்கே, தொட்டதற்கெல்லாம பிள்ளைகளை திட்டிய மற்றப் பெண்மணி எங்கே என்று நினைத்துக் கொண்டேன்.

Thursday, February 17, 2011

நாங்கள் செய்த வாழ்த்து அட்டைகள்



Valentine's day க்கு ( அது தான் முடிஞ்சு போச்சே இப்ப ஏன் இந்தப் பதிவு என்று திட்டாதீங்க ) என் மகன் பள்ளியில் சக மாணவர்களுக்கு வாழ்த்து அட்டை, அல்லது வேறு ஏதாவது ( விரும்பினால் ) வாங்கி வரும்படி நோட் அனுப்பியிருந்தார்கள்.

அடப்பாவிங்களா! அனுப்புறது தான் அனுப்பினீங்க ஒரு இரண்டு நாள் முன்னாடி அனுப்பியிருந்தா வசதியா இருந்திருக்கும் என்று நினைத்தேன்.
சனிக்கிழமை கழுத்து வரைக்கும் வேலை, ஞாயிற்றுக் கிழமை தலைக்கு மேல் வேலைகள். அதோடு க்ராஃப்ட் ஸ்டோரில் கூட்டம் அலைமோதும். பார்க்கிங் அவ்வளவு சுலபம் அல்ல. பக்கத்தில் புத்தக கடை, சூப்பர் மார்க்கெட், பார்மஸி இப்படி ஏகப்பட்ட கடைகள். மக்களுக்கு ஏதாவது ஒரு கடைக்குள் ஏறி இறங்காவிட்டால் தலை வெடித்து விடும் போல.

ஞாயிற்றுக்கிழமை மதியம் என் மகனிடம் சொன்னேன், " ராசா, இந்த முறை வாங்க முடியவில்லை. அடுத்த முறை கண்டிப்பா வாங்கி தர்றேன். "
சரி அம்மா, என்று சொன்னாலும் முகம் வாடிப் போய் இருந்தது.

சிறிது நேரத்தின் பின்னர் தானாகவே ஒரு பேப்பர் எடுத்து ஏதோ எழுத ஆரம்பித்தார்.
" என்ன பண்றீங்க ? ", என்று நான் கேட்க.
நானே எல்லோருக்கும் கிரீட்டிங் கார்ட் செய்யப்போறேன் என்றார்.
அட! இது கூட நல்ல ஐடியாவா இருக்கே என்று நினைத்தபடி, சமையல் முடித்த பிறகு 22 கார்டுகள் செய்து முடித்தோம்.
அம்மா! டீச்சருக்கும் ஒரு அட்டை வேணும் என்று சொல்ல, நான் பிள்ளைகள் படுத்த பிறகு செய்த அட்டை தான் இது. அவசரமாக செய்த படியால் நான் எதிர்பார்த்தது போல வரவில்லை.

காலையில் வாழ்த்து அட்டைகளை பையில் போட்டு குடுத்த போது என் மகனின் முகத்தில் தெரிந்த சந்தோஷத்தை பார்க்க கண்கள் கோடி வேணும்.
சிறுவர்களுக்கான அட்டையில் lollipop வைத்தது என் மகனின் ஐடியா. ஆனால், அதை படமெடுக்கவில்லை.


Monday, February 14, 2011

நானும் கூகுளும்

( image from google )

ஒரு இடத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் எனக்கு. என் ஆ.காரர் தானே கூட்டிச் சென்று காட்டுவதாக வாக்கு கொடுத்தார். ஆனால், பிறகு அதை நிறைவேற்றவில்லை. நானும் கேட்டுக் களைத்தே போய் விட்டேன். ஒரு நாள் வேலையால் வந்த பிறகு கேட்டேன்.
ஏதோ கடுப்பில் இருந்தவர், " There is such thing called Google. Just print a map & GO."
( கூகிள் என்று ஒரு தளம் இருக்கு. அதில் தேவையான map ஐ பிரின்ட் பண்ண வேண்டியது, போக வேண்டியது... என்று தமிழாக்கம் செய்தால் பொருள் வரும்.)

எனக்கு ரோஷம், கோபம், ஆத்திரம் இப்படி எல்லாமே வந்தது. அடுத்த நாள் map பிரின்ட் பண்ணி, அதை மனப்பாடம் செய்தேன்.
பொதுவாக பிள்ளைகளின் மருத்துவர், நூலகம், வெளியில் சென்று முடிக்கும் வேலைகள் எல்லாவற்றையும் நானே செய்து விடுவேன். இதென்ன பெரிய வேலையா என்று நினைத்துக் கொண்டேன்.
மகனை பள்ளியில் விட்ட பிறகு, வீட்டுக்கு வந்து, கொஞ்சம் கண்ணுக்கு குளிர்ச்சியா ஆடை மாற்றி புறப்பட்டேன்.

பயம் ஒரு பக்கம். ரோஷம் மறுபக்கம். ஒரு வழியா ஹைவேக்கு போற ராம்பில் போயாச்சு. இனிமேல் திரும்ப முடியாது.
கூகிளாரை பக்கத்தில் வைத்துக் கொண்டேன். ஏற்கனவே மனப்பாடம் செய்தாலும் ஒரு பதட்டம். ஹைவேயில் வேகமா போனாலும் பிரச்சினை, மெதுவா போனாலும் பிரச்சினை. ஒரளவு நிதானமாக கார் ஓட்டி, நான் எடுக்க வேண்டிய எக்ஸிட் எடுத்தாச்சு. பிறகு ஒரு ரைட் turn . பிறகு ஒரு லெஃப்ட்....
கூகிளார் சொன்ன பக்கம் திருப்பி ஒரு வழியா அந்த இடத்தினை அடைந்து விட்டதா நினைச்சேன். ஆனால், நான் மிதிச்ச மிதியில் கார் நான் போக வேண்டிய இடத்தினைக் கடந்து, வெகு தூரம் போயிருந்தது. கூகிளார் சொன்ன 1/2 மைல் தூரம் 1 மைல் ஆனபோது தான் ஏதோ மிஸ்டேக் என்று விளங்கியது.
பிறகு ஒரு u turn அடிச்சு, மீண்டும் அந்த இடத்தை மிஸ் பண்ணி. அழுகை மெதுவா எட்டிப் பார்த்தது. கலங்கிய கண்களின் வழியா அந்தக் கட்டிடம் மங்கலா தெரிந்தது. நான் நின்ற ரோட்டில் இருந்து அந்தக் கட்டிடத்திற்கு இடது புறம் திரும்ப வேண்டும். ஆனால், நான் நின்றதோ வலது புறம் மட்டும் திரும்பு சாலை.

வலது புறம் திரும்பி, ஒற்றை வழிப் பாதையில் ஓடினேன் ஓடினேன்..... . விரக்தி ஏற்பட்டது. இப்படியே போனால் எங்கே போய் முடியுமோ தெரியவில்லை என்ற யோசனையில் ஒரு நாற்சந்தியில் மீண்டும் ஒரு u turn அடிச்சேன். நான் காரினை திருப்பவும் ஒரு போலீஸ் கார் வரவும் சரியாக இருந்தது. திருவிழா போல லைட், காதுகளை செவிடாக்கும் சைரன், நான் வின்டர் குளிரிலும் வியர்வை ஆறாக பெருகி ஓட ....

( ஏதோ இடம் இடம்ன்னு அடிக்கடி புலம்பலா இருக்கே என்ன இடம் பைத்தியக்கார ஆஸ்பத்திரியா இருக்குமோ என்று லானி, அதீஸ், இன்னபிற ஆட்கள் நினைப்பார்கள். அந்தளவுக்கு இன்னும் முத்தவில்லை. )

தொடரும்....

என் பிக்காஸா ஆல்பத்தில் இந்த ஆளை ( 465 views ) நிறையப் பேர் போய் பார்த்திருக்கிறார்கள். எல்லோரும் இவரை தேடித் திரியுறீங்க போல. Great job!!!