Saturday, March 6, 2010

வாழைப்பழ பணியாரம்


தேவையான பொருட்கள்:


வாழைப்பழம் ‍ - 1
மைதா மா -1 1/2 கப்
பால் - 1 1/4 கப்
சீனி -1/2 கப்
உப்பு - சிறிது
வெல்லம் - கொஞ்சம்
பேக்கிங் பவுடர் -1/4 டீஸ்பூன்
எண்ணெய் -பொரிக்க‌

ஐஸிங் சுகர் ‍ - 1/2 கப்
சினமன் பவுடர் -1 டேபிள்ஸ்பூன்


ஐஸிங் சுகர், சினமன் பவுடரை ஒன்றாக கலந்து வைக்கவும்.

வாழைப்பழத்தை கரண்டியால் நன்கு மசித்துக் கொள்ளவும்.
இதனுடன் பால், உப்பு, சீனி, பேக்கிங் பவுடர், பொடித்த வெல்லம் போட்டு கலந்து கொள்ளவும்.
சிறிது சிறிதாக மா சேர்த்து, கலக்கவும். கேக் மா போல் பதம் வர வேண்டும். அப்போது தான் பணியாரம் softஆக இருக்கும்.
சட்டியில் எண்ணெய் விட்டு சூடானதும் மாவை கரண்டியால் எடுத்து சிறு உருண்டைகளாக போட்டு பொரிய விடவும்.
பொன்னிறமானதும் எடுத்து சினமன் ஐஸிங்சுகர் கலைவையில் போட்டு, நன்கு படும்படி பிரட்டி விடவும்.
வாழைப்பழ பணியாரம் தயார்.


குறிப்பு: மா கேக் மா போல தளர்வாக இருக்க வேண்டும். பாலின் அளவை தேவை எனில் அதிகரிக்கலாம்.

இடியப்ப பிரியாணி



தேவையான பொருட்கள்:


இடியப்பம் ‍ -15
சிக்கின்(விரும்பினால்) -1/2 கப்
முட்டை - 2
காரட் -3
உருளைக்கிழங்கு - 1
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 3
கறிவேப்பிலை -சிறிது
மிளகாய்தூள் - 3 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள் தூள் -சிறிது
சின்ன சீரகம் தூள் -1 டீஸ்பூன்
மிளகு தூள் -1/2 டீஸ்பூன்
உப்பு

இடியப்பத்தை கைகளினால் பிய்த்து வைக்கவும்.
வெங்காயம், காரட், உருளைக்கிழங்கு ஓரளவு சிறிய துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
சிக்கனில் இஞ்சி பூண்டு விழுது, உப்பு, மிள‌காய்த்தூள், மஞ்சள் தூள்.பச்சை மிளகாய் போட்டு பிரட்டி, சட்டியில் எண்ணெய் சூடானதும் இறைச்சி சேர்த்து பொரிய விடவும்.
சிக்கன் ஓரளவு பொரிந்ததும் உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கவும். கிழங்கு பொன்னிறமானதும் காரட், வெங்காயம், கறிவெப்பிலை சேர்க்கவும். வெங்காயம், காரட் சேர்த்த பின்பு அதிக நேரம் சமைக்கத் தேவையில்லை.
முட்டைகளை உடைத்து ஊற்றவும். சின்ன சீரகம் தூள், மிளகு தூள் சேர்க்கவும்.
அடுப்பை சிம்மரில் விடவும். இடியப்பத்தை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து நன்கு கிளறவும். கொஞ்சம் தண்ணீர் தெளித்து கிளறி, சூடானதும் அடுப்பை நிப்பாட்டவும்.
சுவையான இடியப்ப பிரியாணி தயார்.



குறிப்பு: சிக்கன் விரும்பாதவர்கள்(இமா,மகி) முட்டை மட்டும் சேர்த்து செய்யலாம்.
முட்டையும் சாப்பிட மாட்டேன் என்று சொல்பவர்கள் இடியப்பத்தை பால் ஊற்றி சாப்பிடவும். நன்றி.

Friday, March 5, 2010

வண்ணத்துப்பூச்சி

இதைப் பார்த்துக் கொண்டிருங்கள். விளக்கம் பிறகு.....

Wednesday, March 3, 2010

தக்காளி ஜாம்




தேவையான பொருட்கள்:


தக்காளி சாறு - 1 கப்
சீனி - 1/2 கப்
ஆரஞ்ச் தோல்(orange zest) - 2 டீஸ்பூன்
லெமன் சாறு -1 டீஸ்பூன்
தக்காளிகளை கழுவி வைத்துக் கொள்ளவும்.
ஆரஞ்ச் தோலின் மேற்பகுதியை மட்டும் சுரண்டி வைத்துக் கொள்ளவும்.
இட்லி பானையில் தண்ணீர் விட்டு கொதி வந்ததும் தக்காளிகளை வைத்து 6, 7 நிமிடங்கள் வேக வைக்கவும்.
தக்காளியின் தோல் வெடித்து, பிரிய ஆரம்பிக்கும் போது இறக்கி விடவும்.
சிறிது சூடு ஆறியதும் தோல் நீக்கி, உள்ளே இருக்கும் தண்டுப் பகுதி நீக்கி, கையினால் நன்கு பிசைந்து கொள்ளவும்.
அடி கனமான சட்டியில் தக்காளி சாறு, சீனி போட்டு, சிம்மரில் விடவும். இடையிடையே கிளறி விடவும்.
கலவை ஓரளவு இறுக ஆரம்பித்ததும் ஆரஞ்ச் தோல் (zest)போடவும்.
சிறிது நேரம் கழித்து லெமன் சாறு சேர்த்து இறக்கவும்.
சுவையான தக்காளி ஜாம் தயார்.


குறிப்பு: தக்காளி ஜாம் ஓரளவு கொழ கொழப்பாக இருக்கும் போதே லெமன் சேர்த்து, இறக்க வேண்டும். நன்றாக சீனிப் பாகு இறுகினால் ப்ரெட்டில் தடவ முடியாது.

Tuesday, March 2, 2010

முடி திருத்தகம்

சனிக்கிழமை காலை 8 மணிக்கு( மற்றைய நாட்களில் 6 மணிக்கு) சூரியன் கிழக்கு வானில் மெல்ல எழும்பியது!! அன்றைய தினம் மகனுக்கு முடி வெட்ட சலூன் போக வேண்டும் என்பதே நேர்த்திக்கடன்.

சலூன் போய், என் மகனின் பெயரை கணிணியில் பதிந்து.......

எங்களுக்கு முன்பு 2 பேர் காத்திருந்தார்கள். ஒரு டீன் ஏஜ் பெண்ணும் அதில் அடக்கம்.
நாங்கள் போய் 10 நிமிடங்கள் கழித்து, 35 வயது மதிக்க தக்க பெண் ஒருவர் வந்தார். வந்தவருக்கு அவரின் பெற்றோர் வைத்த பெயர் என்னவோ தெரியாது....நான் அவருக்கு வைத்த பெயர் "குடைச்சல்".

குடைச்சல் வந்ததும் ஏதோ ஒரு பொருள்( சலூனில் வாங்கியது) ரிட்டன் பண்ண முயற்சித்தார். ரசீது இல்லாமல் ரிட்டன் பண்ண முடியாது என்ற அடிப்படை விஷயமே தெரியாமல் சண்டை போட ஆரம்பித்தார். சலூனில் வேலை செய்த பெண்மணி முடியாது என்று மறுத்து விட ஆரம்பமானது இவரின் குடைச்சல்.

குடைச்சல்: எங்கே உன் மானேஜர்?
பெண் : இந்தா நம்பர்? கூப்பிட்டுக்கோ? என் பெயர் மேரி என்றும் சொல்லிக்கோ?

குடைச்சல் போய் நாற்காலியில் அமர்ந்தார். நம்பரை குத்தத் தொடங்கினார். எதிர் முனையில் சாதகமான பதில் வரவில்லை என்பது அவரின் செய்கையில் தெரிந்தது. விடாமல் மீண்டும் மீண்டும் முயற்சி செய்து கொண்டிருந்தார்.

இப்போது டெனிஸ் அண்ணாச்சி வந்தார். மிகவும் உயரமாக இருந்தார். வந்து பெயரை சொல்லி கம்யூட்டரில் பதிந்து விட்டு, அமர்ந்தவர், கண்களை மூடிக் கொண்டார். தூங்கினாரா? அல்லது இந்த குடைச்சல் பெண்மணியிடம் இருந்து தப்பிக்க அப்படி செய்தாரா தெரியவில்லை.
போனை வைத்து விட்டு எழும்பி போய் இன்னும் எவ்வளவு நேரம் வெயிட் பண்ண வேண்டும் என்று மேரியிடம் திரும்ப சண்டை போடத் தொடங்கினார் குடைச்சல்.

மீண்டும் வந்து அமர்ந்தவர். அப்போது தான் என்னைக் கண்டவர் போல எழும்பி ஓடி வந்தார்.

குடைச்சல்: ஏனுங்கோ அம்மிணி, எவ்வளவு நேரம் வெயிட்டிங்?
நான் : 30, 40 நிமிடங்கள் இருக்கும்.
குடைச்சல்: என்னது அம்புட்டு நேரமா இருக்கியா?

என் பதிலை எதிர் பாராமல் மீண்டும் மேரியுடன் சண்டைக்கு போய் விட்டார்.
மேரி என்னை பார்த்து விட்டு, " ஓ இந்த பெண்மணி இவர் கணவருடன் வந்துள்ளார். கணவருக்காக வெயிட்டிங்" என்று சமாதானப்படுத்தினார்(அங்கு என் கலரில் யாருமே இருக்கவில்லை. யாரை என் கணவர் என்று சொன்னாரோ தெரியவில்லை).
நான் தலையை ஆட்டி விட்டு, என் மகனின் தலையை காட்டினேன்.

குடைச்சல் சண்டை ஆரம்பிக்க, நான் பேசாமல் இருக்க, மேரி அவரின் கஸ்டமருக்கு அலுமினியம் ஃபாயிலை தலையில் சுற்றத் தொடங்கினார்.
மிகவும் மனமுடைந்து போன குடைச்சல் நான் ஒருத்தியா இருந்து உங்கள் உரிமைக்காக போராடுகிறேன். உங்களுக்கு எல்லாம் சூடு/சொரணையே இல்லையா? என்பது போல் ஒரு லுக் விட்டார்.
நான் வேறு பக்கம் பார்வையை திருப்பிக் கொள்ள, அது வரை கண்களை மூடி இருந்த டெனிஸ் எழும்பி விறுவிறு என்று போய் மறைந்து விட்டார்.

என் மகனின் முறை வந்தது. நான் என் மகனை கூட்டிக் கொண்டு உள்ளே போனேன். வரவேற்பறையில் குடைச்சல் பெண்மணி ஓயாது சண்டை போட்டு, வாக்கு வாதம் பண்ணிக் கொண்டே இருந்தார். நான் அங்கிருந்து வரும் வரை அவரின் சண்டை ஓயவில்லை.
இந்த டென்ஷனில் என் மகனுக்கு முடி வெட்டியவர் திருப்பதி ஸ்டைலில் மொட்டை அடித்து விட்டார்.

இதன் பிறகு நான் எடுத்த முக்கியமான முடிவு:
1.வீக்கென்டில் சலூன் போக கூடாது.
2.குடைச்சல் பெண்மணியின் கணவரை வாழ்வில் ஒரு தடவை மீட் பண்ண வேண்டும். எப்படித் தான் சமாளிக்கின்றாரோ தெரியவில்லை?

கீரை சுண்டல்


தேவையான பொருட்கள்:

கேல்(kale) கீரை - 1/2 கட்டு
வெங்காயம் - பாதி
மிளகாய் - 4
தேங்காய் பூ - 2 டேபிள்ஸ்பூன்
சீரகம், கடுகு -தலா 1/2 டீஸ்பூன்
உப்பு
மஞ்சள் - 1/4 டீஸ்பூன்
கீரையை சுத்தம் செய்து, தண்ணீர் வடிய காய வைக்கவும். தண்ணீர் வடிந்ததும் மிகவும் பொடியாக அரிந்து வைக்கவும்.
சட்டியில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, சீரகம் போட்டு தாளிக்கவும்.
பின்னர் பொடியாக வெட்டிய வெங்காயம், மிளகாய் சேர்த்து வதக்கவும். வெங்காயம் லேசாக வதங்கியதும் மஞ்சள் சேர்க்கவும்.
பின்னர் கீரையை சிறிது சிறிதாக சேர்க்கவும். கீரையை அதிக நேரம் சமைக்காமல் தேங்காய் துருவல் சேர்த்து கிளறி இறக்கவும். அடுப்பிலிருந்து இறக்கிய பிறகே உப்பு போட வேண்டும்.

குறிப்பு:
கேல், கொலார்ட் போன்ற கீரை வகைகளில் இந்த ரெசிப்பி செய்யலாம். கீரை அடுப்பில் இருக்கும் போது உப்பு சேர்ப்பதை தவிர்க்கவும்.

Monday, March 1, 2010

உளுந்துக் களி


தேவையான பொருட்கள்:

உளுந்து மா - 1/2 கப்
சீனி - 1/3 கப்
உப்பு - 1 பின்ஞ்
பால் - 3/4 கப்
பட்டர் - 1/2 டேபிள்ஸ்பூன்
ஒரு நான் ஸ்டிக் பாத்திரத்தில் பாலை விட்டு காய்ச்சவும். பால் மெதுவாக சூடேறியதும் உப்பு போட்டு, உளுந்து மாவை சிறிது சிறிதாக போட்டு கிளறவும். கைவிடாமல் கிளற வேண்டும். மா திரண்டு வரும் போது சீனியை கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்கவும். இறுதியில் சிறிது பட்டர்(விரும்பினால்) சேர்த்து, சூடாக சாப்பிடவும்.

குறிப்பு:
இந்த ரெசிப்பி எங்கள் வீட்டில் எல்லோருக்கும் மிகவும் விருப்பமான ஒன்று. பிள்ளைகளுக்கு பட்டர் சேர்த்து செய்வேன். நானே உளுந்து வறுத்து, அரைத்து, மாவாக்கியே களி செய்வேன். மிகவும் சத்தானதும், செய்வதற்கு ஈஸியானதும் ஆகும்.