Saturday, August 14, 2010

விருதுகள்!

ஆசியா அக்கா கொடுத்த விருது.


நன்றி, அக்கா.

ஃபாயிஜா கொடுத்த விருது.


நன்றி, பாயிஜா.
***********************
இவள் தான் என் கடையில் ரகளை பண்ணியது என்று கடைகாரர் சாட்சி சொன்னார்.

1 2 3... சே! சரியாக எண்ணவில்லை போல இருக்கே. போன முறை எண்ணிய போது 30 வந்திச்சு. இந்த முறை 28 தான் எப்படிக் கூட்டினாலும் வருது. மீண்டும் எண்ணுவோமா 1 2 3....
இது கனவே தான். நான் சிறையில் இருந்து கம்பி எண்ணும் காட்சி கண் முன்னே விரிந்தது. அடடா! காரணம் இன்னும் சொல்லவில்லையா...தொடர்ந்து படித்து விட்டு, ஒரு தீர்வும் சொல்லிட்டுப் போங்கள்.
**********

போன மாசம் ஒரு நாள் இந்தியன் கடை போயிருந்தோம். போனதும் என் மகள் ஒரு சிப்ஸ் பாக்கெட் தூக்கி வைத்துக் கொண்டார். நான் பெரும்பாலும் சிப்ஸ்கள் வாங்குவது குறைவு. வீட்டிலும் பொரியல் வகைகள் மாசத்துக்கு ஒரு தடவை தான் இருக்கும்.
மகள் தூக்கி விட்டதால் மறுப்பு சொல்ல முடியவில்லை. வாங்கியாச்சு. வீட்டிற்கு வந்து பாக்கெட்டை திறந்த நொடி ஒரு வித நெடி நாசியை தாக்கியது. எடுத்து வாயில் வைக்க முடியாமல் ஒரே கசப்பான/அருவருக்கத்தக்க சுவை. பணம் வீணாகி விட்டதே என்று எரிச்சல் ஏற்பட்டது. என் சொத்தையே குடுத்து வாங்கவில்லை என்றாலும் பணம் பணம் தானே.
கணவர் வேலையால் வந்ததும் ஒரு பாட்டம் புலம்பல்.
தூக்கி குப்பையில் போடுங்கள் - என்று சொல்லிவிட்டு கணவர் போய் விட்டார்.
சரி, தூக்கி போடலாம் என்று போனேன். பாக்கெட்டில் போன் நம்பர், தொடர்பு கொள்ள மின்னஞ்சல் முகவரி போட்டிருந்தார்கள்.
கடையில் போய் ரிட்டன் செய்வது என்பது முடியாத/ நடக்காத காரியம். ரசீதில் சும்மா குரோசரி 1, குரோசரி 2 என்றே விலை போடுவார்கள்.
யு.பி.சி கோட் ஸ்கேன் பண்ணினாலும் ரசீதில் அந்த தகவல்கள் வராது.
அதோடு, முன்பொரு முறை ஒரு வயதான தம்பதிகள் ஏதோ ஒரு பொருளை ரிட்டன் செய்ய முயன்ற காட்சி கண் முன்னே ஓடியது.

கடைகாரர் : இது என்ன?
தம்பதிகள் : இங்கே வாங்கிய பொருள் தான். வாயில் வைச்சாலே கப்படிக்குது. திரும்ப காசு குடுங்க!
க.காரர்: முடியாது.
தம்பதிகள் : அப்ப நாங்க போக மாட்டோம்.
க.காரர் : போலீஸை கூப்பிடவா..
( இந்த காட்சி தான் நினைவில் வந்து... மேலே கனவில் வந்து...)

இதற்கு மேல் நான் அங்கு நிற்க விரும்பாமல் வீடு வந்து விட்டேன். போலீஸ் வந்தாலும் கடை காரருக்கு தான் ஆபத்து. இது அவருக்கு தெரிந்தாலும் அந்த வயசான தம்பதிகளை மிரட்டவே அப்படி செய்தார்.
இந்த சம்பவங்கள் எல்லாம் கண் முன்னே விரிந்து, கடைப் பக்கம் போகாதே என்று எச்சரிக்கை செய்தது.

அடுத்த நாள் அந்த மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு மெயில் அனுப்பினேன். இப்படி சரியில்லாத பொருளை அடுத்தவர் தலையில் கட்டுவது சரியா, நியாயமா, அடுக்குமா... என்ற ரீதியில் தட்டி விட்டேன் ஒரு மெயில்.
மெயில் அனுப்பியதோடு அதைப் பற்றி மறந்தும் விட்டேன். இந்த உலகத்தில் நல்லதா நாலு வார்த்தை புகழ்ந்து எழுதினாலே கண்டு கொள்ளமாட்டார்கள். இந்த லட்சணத்தில் இப்படி திட்டி மெயில் அனுப்பினால், படிப்பவர்களுக்கு கடுப்பு வந்து, படித்த உடனே கிழித்து குப்பையில் எறிந்துவிட்டு தானே மறுவேலை பார்ப்பார்கள்.
கிட்டத்தட்ட 2 நாட்களின் பின்னர் ஒரு மின்னஞ்சல் அந்த நபரிடமிருந்து. தயக்கத்துடனே திறந்தேன். என்ன அர்ச்சனை நடந்திருக்கோ என்று யோசனை.
அந்த நபர் மன்னிப்பு கேட்டு எழுதியிருந்தார். பாக்கெட்டில் இருந்த நம்பர், மேலும் சில தகவல்கள் தேவை என்று குறிப்பிட்டிருந்தார். அதோடு என் வீட்டு முகவரியும் தந்தால் புதிதாக ஒரு சிப்ஸ் பாக்கெட் அனுப்புவதாகவும் எழுதியிருந்தார்.

என் ஆத்துக்காரரிடம் சொன்னேன். அவர் சொன்னார், " இந்த பிசாத்து காசுக்கு இவ்வளவு நேரத்தை ஏன் செலவு செய்ய வேண்டும் ."

ஆனால், எனக்கு அவர்கள் செய்வது சரி என்றே படவில்லை. அந்தக் கடையில் குறைந்தது 20 சிப்ஸ் பாக்கெட்டுகள் இருந்தன. எத்தனை பேர் வாங்கி ஏமாந்து போயிருப்பார்கள். யார் என்னைப் போல ( வேலையில்லாதவள்ன்னு முணு முணுப்பது கேட்குது ) இப்படி மெயில் அனுப்பி கேள்விகள் கேட்கப் போகிறார்கள்.

Wednesday, August 11, 2010

மறக்க முடியாத நபர்!

எங்கள் முறை வந்தது. வரவேற்பாளினி, " உங்கள் மகளின் ஹெல்த் கார்ட் எங்கே?" என்றார்.
அது வரை அதைப் பற்றி எண்ணமே இல்லாமல் இருந்த எனக்கு திடீரென்று பயம் உண்டானது.
கனடா வாசிகளுக்கு மட்டுமே இலவசமாக சிகிச்சை அளிக்கப்படும். மற்றவர்கள் பணம் செலுத்த வேண்டும்.

வரவேற்பு பெண் தொடர்ந்தார், " உங்கள் குழந்தையை அட்மிட் செய்ய $500 டாலர்கள். பிறகு டாக்டர் செக் பண்ண பணம், ஆஸ்பத்திரி செலவு.... " இப்படி சொல்லிக் கொண்டே போனார்.
" உங்களுக்கு 10 நிமிடங்கள் டைம் தருகிறேன். யோசித்து செய்யுங்கள் " என்றார்.
" இது யோசிக்க வேண்டிய விடயம் அல்ல. குழந்தையின் உயிர் சம்பந்தப்பட்டது. எவ்வளவு பணம் செலவானாலும் பரவாயில்லை" என்றார் அப்பா.

அப்பா கிரடிட் கார்ட் எடுத்து, அந்தப் பெண்ணிடம் நீட்டவும், வாசலில் ஏதோ சலசலப்பு எழுந்தது.
வாசலில் காவலுக்கு நின்ற செக்கியூரிட்டி எல்லோரையும் தள்ளி நிற்கும் படி எச்சரிக்கை செய்தபடி உள்ளே வந்தார்.

போலீஸ் ஒரு குடிகாரியை கைகளில் விலங்கிட்டு அழைத்து வந்தார்கள். பயங்கர மப்பில் இருந்த அந்தப் பெண் கெட்ட வார்த்தையில் ஏதோ திட்டியபடியே வந்தார். போலீஸூக்கு காலால் எட்டி உதைப்பதும், திட்டுவதுமாக இருந்தார். இவரிடமிருந்து நோயாளிகளைக் காக்கவே எல்லோரையும் தள்ளி நிற்கும்படி எச்சரிக்கை செய்தார்கள்.

நாங்கள் ஓரமாக அமர்ந்து கொண்டோம். வரவேற்பறை பெண் குடிகாரியை கவனிப்பதில் பிஸியாகி விட, நாங்கள் நாற்காலிகளில் அமர்ந்து கொண்டோம்.
அப்போது ஒரு பெண். 35, 40 வயதிருக்கும். ஆஸ்பத்திரி சீருடை அணிந்திருந்தார். கழுத்தில் ஸ்தெதஸ்கோப் மாட்டியிருந்தார்.
என் மகளின் நாடித்துடிப்பு, கண்கள், சுவாசம் என்று எல்லாவற்றையும் செக் பண்ணினார். " உங்கள் மகளுக்கு ஒரு பிரச்சினையும் இல்லை. நல்ல ஆரோக்கியமாக இருக்கின்றார். இது சளியால் வந்த பிரச்சினை. நான் சொல்லும் மருந்தை வாங்கி கொடுங்கள். நாளை காலை எல்லாமே சரியாகி விடும்", என்றார்.

வரவேற்பறை பெண் என் அப்பாவை நோக்கி வருமாறு சைகை காட்டினார்.

" நான் சொல்கிறேன்னு தப்பா நினைக்காதீர்கள். இது போல நிறைய குழந்தைகளை என் வாழ்வில் பார்த்திருக்கிறேன். பணத்தை சும்மா உறிஞ்சி எடுப்பார்கள். வீணாக நேரத்தை இங்கு வீணடிக்காமல் நான் சொன்ன மருந்தை வாங்கி குடுங்கள் ", என்று அடிக்குரலில் சொல்லிவிட்டு, என் தோளில் மென்மையாக தட்டி விட்டு, உள்ளே போய் மறைந்து விட்டார்.

எனக்கு அவர் சொன்னதில் நல்ல நம்பிக்கை ஏற்பட்டது. என் அப்பாவையும் கூட்டிக் கொண்டு வெளியே வந்தேன். டாக்ஸியில் திரும்பி போகும் வழியில் மருந்துக் கடையில் அவர் சொன்ன மருந்து வாங்கி கொண்டோம்.
வீடு வந்து சேர அதிகாலை 4 மணி. நான் என் மகளை மடியில் வைத்து, மருந்தினை கொஞ்சம் கொஞ்சமாக கரண்டியால் வாயில் ஊற்றினேன். படுக்க வைத்தால் எங்கே மீண்டும் வாந்தி எடுத்து விடுவாரோ என்று பயத்தினால் தூங்காமல் விழித்திருந்தேன்.
ஏதோ குளிரான பொருள் என் மீது பட திடுக்கிட்டு விழித்தேன். மீண்டும் என் மகளுக்கு பிரச்சனையா என்று யோசனை ஓடியது.
என் மகள் என் அம்மாவின் கைகளிலிருந்து என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார். இந்த சிரிப்பிற்காக எதையும் செய்யலாம் என்று தோன்றியது.

அந்த டாக்டரின் முகம் இன்னும் நினைவிருக்கு.
அவருக்கு நான் முறையாக நன்றி சொல்லவில்லையோ, ஏதாவது நன்றி/வாழ்த்து அட்டை அனுப்பி இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொள்வேன். ஆனால், அன்று இருந்த பதட்டத்தில் அவரின் பெயரைக் கூட கவனிக்காமல் இருந்துவிட்டேன்.

கனடா போகும் போது அவரைப் போய் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் எழும். ஆனால், பெயர் தெரியாமல் எப்படித் தேடுவது, யாரைக் கேட்பது என்று அந்த எண்ணத்தை செயல்படுத்தாமல் இருந்துவிட்டேன்.

அவர் எப்போதும் நலமே இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொள்வேன்

Tuesday, August 10, 2010

மறக்க முடியாத நபர்!

என் மகள் பிறந்திருந்த நேரம். என் பெற்றோருடன் போய் 1 மாசம் தங்கி வர கனடா போனோம். நானும், என் மகனும், மகளும். கணவர் வரவில்லை. என் அம்மா என் மகளை தூக்கி வைத்திருந்து விட்டு, என்னிடம் கொடுத்தார்கள். இரவு 9 மணிக்கு என் மகளுக்கு பால் குடுத்த பின்னர் படுக்க வைத்தேன். எப்போதும் முதுகில் தடவி படுக்க வைப்பது என் வழக்கம். குடித்த பால் செரிமானம் ஆகவே இது போல செய்வேன்.


சிறிது நேரத்தில் மகளின் வாயிலிருந்து பால் போன்ற வெண்மையான திரவம் வழிந்தோடியது. இதுவும் அடிக்கடி நடக்கும் நிகழ்வு. நான் மகளை துடைத்து, மீண்டும் படுக்க வைத்தேன். படுக்க வைத்த போது மீண்டும் வாயிலிருந்து அருவி போல் கொட்டியது. தூக்கி வைத்திருந்த போது அவ்வாறு நடக்கவில்லை. இப்படியே ஒரு மணி நேரம் வரை நானும் அம்மாவும் மாறி மாறி வைத்திருந்தோம். ஆனால், படுக்க வைக்க முடியவில்லை.

என் அப்பா அவசர வேலையாக வெளியே போயிருந்தார். இப்படியே 11 மணி வரை மகளை தூக்கி வைத்திருந்தோம். பிறகு மீண்டும் படுக்க வைக்க மீண்டும் அதே பிரச்சினை.

என் மகள் தூக்கத்தில் இருகின்றாரா அல்லது மயக்கமாகி விட்டாரா என்று தெரியாத ஒரு நிலை. என் அப்பா வந்ததும் எமெர்ஜென்ஸிக்கு கொண்டு போக முடிவு செய்தோம்.

கனடாவில் குளிர்காலம் தொடங்கிவிட்டிருந்தது. பனி ஒரு புறம், உடலையே ஊடுருவிச் செல்லும் குளிர் மறுபுறம். டாக்ஸி ஸ்டான்டுக்கு சிறிது தூரம் நடக்க வேண்டும். என் மகளுக்கு குளிர் தாக்காமல் லேயர் லேயராக போர்வைகள் சுற்றி, நடுங்கும் குளிரில், இரவு 1 மணிக்கு ஓடினோம். என் கண்களிலிருந்து தாரை தாரையாக கண்ணீர்.

டாக்ஸியில் போய் ஏறினதும் ஓட்டுநர் குளிருக்கு இதமாக ஹீட்டர் போட்டபடியே, என்ன ஆச்சு? என்றார்.
குழந்தைக்கு உடம்பு சரியில்லை - இது அப்பா.
கவலைப்படாதீங்க இந்த குழந்தைக்கு ஒண்ணுமே ஆகாது. நாளைக்கு காலையில் உங்களோடு சிரித்து விளையாடப் போறா பாருங்கள் - என்று சொல்லி மென்மையாக சிரித்தார்.
எனக்கு ஒரு வித நிம்மதி. இப்படி நல்ல வார்த்தைகள் சொல்ல ஒரு சிலராலேயே முடியும்.
நன்றி சொன்னேன் அவருக்கு.
அவர் பாகிஸ்தான் நாட்டவர் என்று கூறினார். ஆஸ்பத்திரி போகும் வரை குழந்தை எப்படி இருக்கு என்று இடைக்கிடையில் கேட்டபடியே காரை நிதானமாக ஓட்டினார்.
போய் இறங்கி பணம் குடுத்த போது முதலில் வேண்டாம் என்று மறுத்தார். பிறகு வலுக்கட்டாயமாக கொடுத்த போது வாங்கிக் கொண்டார். மனதார வாழ்த்திக் கொண்டே, அவரின் நம்பரை அவசரத்திற்கு தேவை எனில் பாவிப்பதற்கு கொடுத்து விட்டு சென்றார்.

இது வரை லேசான உணர்வுடன் இருந்த மனம் ஆஸ்பத்திரியின் உள்ளே போனதும் மீண்டும் படபடவென அடிக்கத் தொடங்கியது. மகளை அணைத்தபடி அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டேன். வேறு சிலரும் காத்திருந்தார்கள்.

மீதி பிறகு...