Monday, June 25, 2012

குழப்பவாதிகளா? சிந்தனைவாதிகளா?

காரினை எங்காவது பார்க்கிங்கில் விட்டுட்டு போய் இருக்கிறீங்களா?.பார்க்கிங்கில் விடாமல் உன் தலையிலா விடுவார்கள் என்று கேள்வி கேட்கப்படாது & இது என்ன கேள்வி என்று முறைக்கப்படாது.  இப்ப இது பற்றி தான் நான் சொல்லப்போகிறேன்.

 சில மாதங்களின் முன்னர் கடைக்கு சென்றபோது என் ஆ.காரர் எங்கள் காரினை குறிப்பிட்ட இடத்தில் நிற்பாட்டிய பிறகு உள்ளே குரோசரி வாங்கச் சென்றுவிட்டார். நான் கொஞ்சம் தலைவலி காரணமாக காரில் இருந்துவிட்டேன். வின்டர் மற்றும் நான் எடுத்த டாப்லட்டின் வீரியத்தினால்  ஒரு குட்டி தூக்கம் போட நினைத்து... அப்படியே தூங்கியும்விட்டேன்.
ஏதோ  சத்தம் கேட்டு தூக்கம் கலைந்தது. ஒரு ஆசாமி எங்கள் கார் கதவினை திறக்க மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார். எனக்கு பயத்தில் அஞ்சும் கெட்டு அறிவும் கெட்டு , நாக்கு வறண்டு போனது. செல் போனை தேடினால் கையில் அகப்படவில்லை. என் ஆ.காரர் எப்போதும் திட்டுவார் செல் போனை மறக்காமல் கையில் வைத்திருங்கோ என்று. இப்ப தான் அவரின் அறிவுரை மூளைக்கு எட்டியது. ஆசாமி இன்னும் வேகமாக கதவினை திறக்க முயற்சி செய்தார். வின்டர் நேரமாகையால் வெள்ளனவே இருட்டிக் கொண்டுவிடும். பாஸஞ்சர் சீட்டில் நான் இருப்பதை அவர் கவனிக்கவில்லை.

ஐயோ! என் ஆ.காரர் வருமுன்னர் இவர் என்னை கடத்திக் கொண்டு போயிடுவார் போலிருக்கே. சே! கடத்திக் கொண்டு போறதுக்கு ஏற்ற முகமா எனக்கு என்று ஒரு சந்தேகம் வந்தது. அவர் காரைத் தான் கடத்தப்போகிறார் போல என்று எனக்கு நானே தைரியம் சொல்லிக் கொண்டேன்.


இப்ப வேகமாக நான் இருந்த பக்கம் வந்தார் அந்த ஆசாமி. பெரிய ஆஃபிஸர் போல கோட், சூட், டை எல்லாம் போட்டிருந்தார் அந்த அமெரிக்கர்.
அடச்சே இவருக்கு ஏன் புத்தி இப்படிப் போகுது என்று நினைத்துக் கொண்டேன்.
இப்ப  என் பக்க கதவினை பலம் கொண்ட மட்டும்  திறந்தார். காரின் கதவினை லாக் செய்து இருந்தாலும் நான் கதவினை திறக்காமல்  கெட்டியாக பிடித்துக் கொண்டேன். அவர் கையில் இருந்த ரிமோட்டின் பொத்தானை அழுத்துவதும், பிறகு டென்ஷன் ஆவதுமாக இருந்தார்.
திடீரென்று அவரின் செய்கைகள் ஒரு முடிவுக்கு வந்தது. என்னை அப்போது தான் முதன்முறையாக பார்த்தவர் கொஞ்சம் மிரண்டு பின் வாங்கினார். என் காரினுள் இவள் எப்படி என்று அவரும்? இவர் மட்டும் என் கையில் மாட்டினால், மகனே! சட்னிதான் என்று நானும் நினைத்துக் கொண்டோம்!!!!.

திரும்பி பக்கத்தில் இருந்த காரினை பார்த்தார். நானும் அப்போது தான் கவனித்தேன் பக்கத்தில் நிறுத்தப்பட்டிருந்த காரும் எங்கள் காரினைப் போல அதே கலர், அதே நிறுவனம்... இப்படி பல ஒற்றுமைகள். இப்ப தான் எனக்கு நெஞ்சுக்குள் கொஞ்சம் தண்ணீர் வந்தது. ஆனால், ஆசாமி எங்கும் போகாமல் அங்கேயே நின்றார். என்னிடம் மன்னிப்பு கேட்க நிற்கிறாராம் அவர். அவர் பம்மிய பம்மில் நான் அறிந்து கொண்டாலும் கதவினை திறக்கும் தைரியம் வரவில்லை. பரவாயில்லை என்று கைகளினால் சைகை செய்தேன்.  குலதெய்வத்தினை கும்பிடுவது போல என்னை கையெடுத்துக் கும்பிட்டுவிட்டு ஒரே ஓட்டமாக ஓடிவிட்டார்.
நான் எப்பவும் பார்க்கிங்கில் காரை நிப்பாட்டினால் இடத்தினை மனதினுள் குறித்துக் கொள்வேன். அதோடு காரின் நம்பர் எப்பவும் மனப்பாடமாக வைத்திருப்பேன். நேற்றுக்கூட குரோசரிக் கடையினுள் இருந்து வேகமாக வந்த ஒருவர் ரிமோட்டினை கையில் எடுத்து, பொத்தானை அழுத்தியபடி 2 தரம் சுற்றி வந்தார்.  நான் காரின் பக்கம் போனதும் அவரின் காரினை நோக்கி வேகமாக நடந்தார். அதே கோல்ட் கலரில் அவரின் கார் தெரிந்தது. 

இப்படி இவ்வளவு குழப்பவாதிகளா இந்த நாட்டில் என்று வியந்து போனேன். ஆனால், பாருங்கள் இப்ப என் ஆ.காரரும் இந்த லிஸ்டில் சேர்ந்துவிட்டார். கையில் ரிமோட்டினை வைத்து அது கதறும் வரை அழுத்துவது அல்லது ஏதோ ஒரு கட்டத்தின் பின்னர் இது நம்முடைய பொருள் இல்லை என்று விலகிப்போவது. குழப்பவாதிகள் அல்ல சிந்தனைவாதிகள் என்று இப்ப நினைத்துக் கொள்வேன். அதாவது சதா சர்வகாலமும் எதையாவது பற்றி சிந்தித்துக் கொண்டே இருப்பதால் தான் இவர்கள் இப்படி ( குழப்பவாதிகளாக) இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். 


இதுக்கு ஒத்துப் போறாப்போல என் மகன் வரைந்து தந்த படம். கலர் கொடுத்தது என் மகள்.