Friday, November 4, 2011

குறட்டைப் புலி


இதில் வரும் கதை நாயகன் பெயர் தான் குறட்டைப் புலி. அவனுக்கு அவன் பெற்றோர் ஆசையாக வைத்த பெயர் குணசீலன். இவன் விடும் குறட்டையால் மனைவி வைத்த பெயர் " குறட்டைப் புலி ". மனைவி ரோகிணிக்கு இவனின் பட்டப்பெயர் சொல்லி அழைப்பது என்றால் கொள்ளை விருப்பம். அதுவும் மிகவும் கோபமாக இருக்கும் நேரத்தில் வரும் குறட்டைப் புலி என்ற பெயருக்கும், மகிழ்ச்சியாக இருக்கும் போது அழைப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருப்பதை அறிய முடியும்.

ஐயா, குறட்டைப் புலியே, என்ன யோசனை என்று குரல் வந்ததும் விளங்கியது ஏதோ அர்ச்சனை நடக்கப்போகிறது என்பது.

என்ன சொல்லுங்க மேடம்?, என்றான் குணசீலன்.

ராத்திரி முழுக்க உங்க குறட்டையால் படுக்க முடியவில்லை. எழுந்து போய் டீ போடுங்க. நான் கொஞ்ச நேரம் படுக்கணும், என்று உத்தரவு வந்தது. இவன் புரண்டு படுத்தான்.

என் அப்பாவுக்கு கல்யாணம் பேசும் போதே கண்டிஷனா சொன்னேன் குறட்டை விடும் மாப்பிள்ளை வேண்டாம் என்று. அவர் கேட்டாத்தானே. இப்ப பாரு ஒவ்வொரு நாளும் நான் படும் பாடு, என்று தொடர்ந்த ரோகிணியை இடைமறித்தான் குணசீலன்.

மாப்பிளையை தூங்க வைச்சு, பக்கத்தில் இருந்து பார்த்திருக்க வேணும் என்று சொல்கிறாயா? என்றுவிட்டு பெருங்குரலில் சிரித்தான்.
இங்கை பாரு ரோகிணி, குறட்டை ஒரு வியாதி. குறைட்டை விடுபவர்கள் நிம்மதியாக படுப்பதில்லை. அவர்களுக்கு ஆயுளும் குறைவாம், என்று காரணங்கள் சொன்னான்.

இதையே எவ்வளவு நாட்களுக்குத் தான் சொல்வீங்க. second hand snoring
என்ற நோயால் நான் பாதிச்சுப் போய் இருக்கிறேன். இந்த மருத்துவ உலகம் இதையெல்லாம் ஆராய்ச்சி பண்ணவே மாட்டார்களா? என்றாள் ரோகிணி.

ம்ம்... கண்டு பிடிச்சு உன் பெயரையே வைக்கப் போறாங்களாம் என்று இடை மறித்தவனை முறைத்தபடி தொடர்ந்தாள். என் பாட்டிக்கு 95 வயசு. இப்பவும் குறட்டை விட்டுட்டு சந்தோஷமா இருக்கிறார்கள். ஆனால், எங்க தாத்தா பாருங்க 40 வருடத்துக்கு முன்னாடி போய் சேர்ந்துட்டார்.

ஓ! அப்படியா, என்றான் குணசீலன்.

என்ன நொப்படியா? எத்தனை முறை சொல்றது மருத்துவரிடம் போய் ஏதாவது தீர்வு கேட்கச் சொல்லி. நீங்க கேட்டாத் தானே, என்று அலுத்துக் கொண்டாள்.

தாயே! அது மட்டும் முடியவே முடியாது. போன வாரம் தொலைக் காட்சியில் ஒரு பொருள் காட்டினார்களே அதை வாங்கலாமா என்று யோசனை சொன்னான்.

போன மாசம் ஒரு பொருள் வாங்கினோமே அதுக்கு என்ன ஆச்சு?, என்று கேட்டாள் ரோகிணி.

ஓ! பந்து போல ஒரு பொருளை முதுகில் ஒரு பை தைச்சு, அதனுள் பந்தை வைச்சு படுக்கச் சொன்னாங்களே? அந்தப் பொருளா? , என்றான் குணா. எங்க வீட்டு டாமி போன வாரம் வைச்சு விளையாடிட்டு இருந்திச்சே என்றான்.

அதுக்கு 30 டாலர்கள் தண்டமாக அழுதோமே. அதை டாமிக்கு குடுத்துட்டு பேச்சைப் பாரு என்றாள்.
இன்னும் இரண்டு மாதத்தில் குழந்தை பிறக்கப் போகிறது. உங்களை வைச்சுட்டு நான் என்ன செய்யப் போறேனோ தெரியவில்லை என்று நொந்து கொண்டாள். என்னை மட்டும் இல்லை பிறக்க போகிற குழந்தையைக் கூட உங்கள் குறட்டை பாதிக்கத் தான் போகிறது என்றாள் ரோகிணி.

அந்த நாளும் வந்தது....

( தொடரும் )

பின்குறிப்பு: இந்தக் கதை இன்னும் முடியவில்லை. இது எங்களுக்குத் தெரியாதா என்று நீங்க முணு முணுப்பது விளங்குது. நான் கொஞ்சம் அவசர வேலையாகப் போவதால் கதையினை முடிக்க நேரம் இல்லை. எனவே நீங்க இந்தக் கதையின் முடிவு என்னவாக இருக்கும் என்று ஊகித்தால் பரிசெல்லாம் கொடுக்கமாட்டேன். ஆனால், கண்டிப்பாக பாராட்டு மழை உண்டு. குறட்டைப் புலி திருந்தினாரா? மருத்துவரைப் பார்க்கப் போனாரா? முடிவு எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், குறட்டைப் புலியை கொல்லவோ அல்லது சித்ரவதை செய்வதாகவோ கண்டிப்பாக முடிவு இருக்கப்படாது. உங்கள் வீட்டில் கூட ஒரு குறட்டைப் புலி இருக்கலாம். அல்லது நீங்கள் கூட ஒரு குறட்டைப் புலியாக இருக்கலாம். உங்கள் கற்பனைக் குதிரையை கன்னாபின்னாவென்று ஓட விடுங்கள் பார்க்கலாம்.





******************************************************

இது நான் தைச்ச Honey Comb Smocking . கொஞ்சம் கடுப்பு பிடிச்ச வேலை தான். ஆனால், அழகோ! அழகு!!!!

Thursday, November 3, 2011

மூழ்காத கப்பலே....



எனக்கு நண்பிகள் தான் இருந்தார்கள். நண்பர்கள் என்று யாரும் இருந்ததில்லை. 3 ஆம் வகுப்பு தொடக்கம் 5 வரை மட்டுமே ஆண்கள், பெண்கள் சேர்ந்து பயிலும் பள்ளியில் கல்வி கற்றேன். பெரிதாக யார் முகமும் ஞாபகம் இல்லை. ஒரே ஒரு பொடியன் மட்டும் பிள்ளையார் ஸைஸில் இருந்தான். அவன் முகம் மட்டும் இன்னும் ஞாபகம் இருக்கு. காரணம், ஊரில் அம்மன் கோயில் திருவிழாவின் போது பிள்ளையாரின் தேரில் அவனும் ஏறி ( அவன் அப்பா ஐயர் ) அமர்ந்திருப்பான். மோதகம், கொழுக்கட்டை என்று உள்ளே தள்ளியபடி இருப்பான். இடைக்கிடையில் சாமிக்கு தீபமும் காட்டுவான்.
நண்பிகள் என்றால் எனக்கு நிறைய இருந்தார்கள். பள்ளியில் ஒரு கூட்டம், ட்யூசனில் இன்னொரு கூட்டம். என்னை விட வயசு குறைந்த, கூடிய வகுப்புகளிலும் நண்பிகள் என்று ஏகப்பட்ட நண்பிகள்.
ட்யூசனில் ஆண்களும் இருந்தார்கள். அநேகம் பேர் இரட்டை வால்கள் தான். என் நெருங்கிய தோழியின் ஒன்றுவிட்ட அண்ணனும் எங்களோடு படித்தார். அவரின் குரல் சிம்மக்குரல் சிவாஜி கணேசன் போல அவ்வளவு கூர்மை. காது இரண்டும் டமால் ஆகி விடும் அளவுக்கு இருக்கும் அவரின் குரல். அவருக்கு நாங்கள் வைத்த பட்டப்பெயர், வீரையா சூரையா. இந்தப் பெயர் இலங்கை கடற்படையின் அதிவேக படகின் பெயர். கடலில் நின்றால் பல மைல்கள் தாண்டியும் அதன் இரைச்சல் காதுகளில் விழும்.

பெண் நண்பிகள் நிறைய இருந்தாலும் எல்லோரும் வீட்டுக்கு வருவதோ அல்லது நான் அவர்களின் வீடுகளுக்குப் போவதோ இல்லை. என் அப்பா இதில் மிகவும் கண்டிப்பானவர். அப்படியே போவதெனிலும் என் பாட்டியோடு தான் அனுப்புவார். பாட்டியோடு வருவதை விட நீ வராமல் இருப்பது மேல் என்று என் நண்பிகள் சொல்வார்கள்.

இந்தியாவில் இருந்த போது தோழிகள் அதிகம். குறிப்பிடத்தக்கவர்கள் மஞ்சுளா, ஜெயசிறீ இருவருமே. ஜெயசிறீ - இவர் நல்ல வசதியான குடும்ப பெண். என் மீது மிகவும் பிரியமாக இருப்பார். நான் கொண்டு போகும் சாப்பாட்டினை அவரும், அவருடைய சாப்பாட்டினை நானும் சாப்பிடுவதுண்டு. அவருக்கு நான் கொண்டு போகும் வாழைப்பழ தோசை என்றால் கொள்ளை விருப்பம். லஞ்ச் நேரம் வருவதற்கு முன்பே பெட்டி காலியாகி விடும். ஏன்டி! இப்படி பறக்கிறே. நான் ரெசிப்பி சொல்றேன் உங்க அம்மாவிடம் சொல்லி செய்து சாப்பிட வேண்டியது தானே, என்பேன்.


இல்லைடி. உங்க அம்மா செய்யுறது சூப்பரோ சூப்பர் என்பாள். ஒன்றாக சேர்ந்து படிப்பது, கடலை போடுவது என்று நன்றாகவே போனது. கல்லூரிக்கு போன பின்னர் இவரை நான் பார்க்கவே இல்லை. போன் நம்பர் வாங்கி வைத்திருக்கலாம் என்று இப்ப அடிக்கடி நினைப்பதுண்டு.
அடுத்தவர் மஞ்சுளா. இவர் மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர். மிகவும் நன்றாக படிப்பார். பள்ளி ஹாஸ்டலில் தங்கிப் படித்து வந்தார். அவரின் அம்மா ஊரிலிருந்து கொண்டு வரும் நொறுக்குத் தீனிகள் எதுவாக இருந்தாலும் எனக்கும் கொண்டு வந்து தருவார். நான் வேண்டாம் என்று மறுத்து விடுவேன். காரணம் - பள்ளி விடுதியில் சாப்பாடு மிகவும் மோசமாக இருக்கும் என்று நண்பிகள் சொல்லக் கேட்டிருக்கிறேன். மஞ்சுளாவே என்னிடம் அடிக்கடி சொன்னதுண்டு. அம்மா கொண்டு வரும் உணவுகளை அவரே வைத்து உண்ணச் சொன்னாலும் காதில் போட்டுக் கொள்ளவே மாட்டார். சில நேரங்களில் கைகளை பொத்தியபடி வேகமாக வருவார். மூடிய கையினுள் மைசூர் பாகு இருக்கும். என் மேசையில் வைத்து விட்டு, வேகமாக ஓடி விடுவார்.

இப்ப நினைத்தாலும் மனது நிறைவது போல இருக்கும் மஞ்சுளாவின் நட்பு. பள்ளிப் படிப்பினை முடித்த பின்னர் இவரின் தாய்மாமனுக்கு இவரை கட்டாயமாக திருமணம் செய்து கொடுத்து விட்டார்கள் என்று பின்னர் அறிந்து கொண்டேன். கல்லூரியில் சேர்ந்திருக்கலாமே என்று ஒரு நாள் அவரிடம் கேட்டேன். வாணீ, நான் எங்கே போவேன் பணத்திற்கு என்றார் கண்கள் குளமாக. என் கைகளை சிறிது நேரம் பிடித்துக் கொண்டிருந்தவர் எதுவும் சொல்லாமல் போய் விட்டார். அதன் பிறகு நான் அவரை சந்திக்கவேயில்லை.

கனடா, அமெரிக்கா வந்த பிறகு எந்த நட்பும் நிலையாக இருக்கவில்லை. அமெரிக்கா வந்த புதிதில் ஃபர்கானா என்ற பங்களாதேஷ் தோழி இருந்தார். இவரைப் பற்றி நான் எழுதிய ஒரு பதிவு கூட இங்கே இருக்கு. அவரின் மின்னஞ்சல் முகவரிக்கு மெயில் அனுப்பினாலும் பதில் இல்லை. மற்றும்படி அறுசுவையின் மூலம் அறிமுகமான அதிரா, இமா, மகி ஆகியோரை நேரில் பார்த்ததே இல்லை. எல்லோரையும் நேரில் பார்க்க வேண்டும் என்பதே என் ஆசை.
அதிரா சில மாதங்களின் முன்னர் எழுதச் சொன்ன பதிவு. எழுதி முடிச்சுட்டோம்ல்ல.

( மூழ்காத ஷிப்பே ப்ரெண்ட் ஷிப் என்பதை தமிழ் படுத்தி தலைப்பு போட்டிருக்கிறேன். )