Saturday, July 23, 2011

கடலைப் பருப்பு ( பால் ) கறி




கடலைப்பருப்பு - 1/2 கப். தண்ணீரில் குறைந்தது 3 மணி நேரங்கள் ஊற வைக்கவும். இதை அடி கனமான சட்டியில் போட்டு, மூழ்கும்படி நீர் விட்டு, வெங்காயம் ( 1 டேபிள் ஸ்பூன் ), பச்சை மிளகாய் ( 4, அல்லது விரும்பிய அளவு ), பூண்டு ( 5 பல் ), உப்பு சேர்த்து நன்கு வேக விடவும். நன்கு வெந்ததும் மஞ்சள் தூள் சேர்க்கவும். தண்ணீர் வற்றியதும் பால் ( விரும்பினால் தேங்காய்ப் பால் ) விடவும். கரண்டியால் சிறிது மசித்து விடவும். பால் ஓரளவுக்கு வற்றியது ( நன்கு வற்ற விட வேண்டாம் ) இஞ்சி ஒரு துண்டு பொடியாக அரிந்து போடவும். 2 நிமிடங்களின் பின்னர் வெந்தயம், பெருஞ்சீரகம் பொடி, சிறிதளவு நெய் சேர்த்து, கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
இறுதியில் தாளித்து ( வெங்காயம், கறிவேப்பிலை ( நிசமா கறிவேப்பிலை தான் ), காய்ந்த மிளகாய், கடுகு, சீரகம் ) போடவும். சுவையான கடலைப் பருப்பு கறி தயார். இது சப்பாத்தி, சோறு, புட்டு, இடியப்பத்திற்கு ஏற்ற பக்க உணவாகும்.

நான் எப்போதும் Evaporated பால் தான் பாவிப்பேன். விரும்பியவர்கள் தேங்காய்ப் பால் சேர்க்கலாம்.
இது என் அம்மாவின் ரெசிப்பி. ஊரில் அம்மன் கோயில் திருவிழா சமயங்களில் 15 நாட்களுக்கு மாமிசம், மீன் வீட்டில் சமைக்க மாட்டோம். கடலைப்பருப்பு கறி, வெந்தயக் குழம்பு, அப்பளம், வடகம், சொதி, பால் பழம் என்று ஒரே அமர்க்களமாக இருக்கும். 15 நாட்களும் கோயிலுக்கு போய்ட்டு வந்து ஒரு வெட்டு வெட்டுவோம்.




*****************************************
2. அமெரிக்காவின் அலாஸ்கா கடற்பகுதியில் ஒரு விநோதமான கடல் வாழ் உயிரினத்தினை மீனவர்கள் கண்டு பிடித்திருக்கிறார்களாம். குறைந்தது 20 அடி நீளம், பெரிய கண்கள், குதிரை போன்ற கழுத்துடன் காணப்பட்டதாம். அதை வீடியோவில் பதிவு செய்திருந்தார்கள். ஆனால் வழக்கம் போலவே வீடியோ தெளிவாக இல்லாமல் பழைய கால த்ரில்லர் படங்களில் ( கறுப்பு வெள்ளை ) வரும் உருவம் போலவே மங்கலாகத் தான் தெரிந்தது. இந்த நூற்றாண்டில் செல் போன் கமராக்களில் கூட அழகா, தெளிவா படங்கள் வரும் போது இவர்களுக்கு எங்கிருந்து இந்தக் காமரா கிடைச்சதோ தெரியவில்லை.

இந்த மாதிரி நியூஸ்களில் கீழே வரும் வாசகர்கள் கருத்துக்கள் தான் எனக்கு மிகவும் பிடிக்கும். பல கமன்ட்கள் சிரிப்பை வரவழைத்தன. அதில் சில

வாசகர் 1 : இதை விட பயங்கரமான மிருகங்களை wal mart aisle களில் பார்த்திருக்கிறேன்.
வாசகர் 2 : பெரிய கண்கள், குதிரை போன்ற நீண்ட கழுத்து.... என் மாமியாராக இருக்கலாம் ( It sounds like my mother in-law ).

Monday, July 18, 2011

ஆங்! இது தான் ஸ்டைலாம்

( Image : Google. Thanks )

ஆங்! இது தான் ஸ்டைலாம்

கனடாவில் நிறைய துணிக் கடைகள் இந்த முறை கண்டேன். கடைகள் அங்கு தான் முன்பும் இருந்தன. நான் இந்த முறை தான் உள்ளே போனேன். கண்ணாடி வளையல்கள், புடவைகள், சல்வார் கமீஸ், சிறுவர், சிறுமிகளுக்கான ஆடைகள். புடவைகள் எல்லாம் மினு மினுங்கும் லேட்டஸ்ட் வகைகள். உறவினர் புடவைக்கு ப்ளவுஸ் தைக்கச் சென்றார். அங்கே வேலை செய்த பெண் சொன்னார், இப்பெல்லாம் குட்டியூண்டு ப்ளவுஸ் கைகள் தான் ஸ்டைலாம். அதோடு புடவை எவ்வளவு மினு மினுங்குதோ அவ்வளவு டிமான்டாம். ஒரு முறை திருமணம் போன்ற விழாக்களுக்கு உடுத்திய ஆடைகளை மீண்டும் அணிய மாட்டார்கள் என்றும் சொன்னார். திருமணம் போன்ற விஷேசங்களுக்கு குறைந்தது 500 டாலர்களாவது செலவு செய்தால் தான் பெண்களுக்கு நிம்மதியாக இருக்குமாம். இப்படி ஏகப்பட்ட நியூஸ்கள் அவரின் மூலம் அறிந்து கொண்டேன்.
ஷோ கேஸில் இருந்த கண்ணாடி வளையல்கள் புது விதமாக இருந்தன. முத்துக்கள் தொங்கியபடி பல விதமான நிறங்களில் வளையல்கள். கடைப் பெண்மணி வளையல்களை வெளியே எடுத்தார். முத்துக்கள் சரமாக கோர்க்கப்பட்டிருந்தன. அதோடு இரண்டு வளையல்களையும் இணைத்து பாலம் போல முடிச்சுப் போட்டிருந்தார்கள். எப்படி அணிவது ஒரே குழப்பமாக இருந்தது. முதலில் முத்துக்கள் கோர்க்கப்பட்ட ஒரு வளையலை அணிந்து, பிறகு ப்ளையின் கண்ணாடி வளையல்கள் குறைஞ்சது 15 அணிந்து, இறுதியாக மற்றைய முத்துக் கோர்க்கப்பட்ட வளையலை அணிய வேண்டுமாம். சிலர் முழங்கை வரை இருக்குமாறு அணிவார்களாம். அடேங்கப்பா! இதெல்லாம் அணிய எவ்வளவு பொறுமை வேண்டும் என்று வியந்து தான் போனேன்.
இதெல்லாம் எங்களுக்கு எப்பவோ தெரியும் நீ என்ன பட்டிக்காட்டிலா இருக்கிறாய் என்று யாரும் நினைத்தாலும் காரியமில்லை. இந்த லேட்டஸ்ட், ஃபாஷான்( Fashion ) என்று வகை வகையாக உடைகள், வலையல்கள், சல்வார்கள் என்று புது ட்ரென்ட் கொண்டு வருபவர்கள் யார்???

உறவினர் பெண்ணுக்கு திருமணம். என்னிடம் 10 வருடங்களுக்கு முன்னர் இருந்த பட்டுப் புடவைகளுக்கு ( அன்பளிப்பாக கிடைத்தவை ) ப்ளவுஸ் துணி எடுக்க ( இருக்கும் ப்ளவுஸ் எல்லாமே இத்துப் போயிருச்சு ) வேணும் துணிகள் காட்ட முடியுமா என்று கேட்டேன். கடைப் பெண்மணி என்னையும், என் புடவைகளையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு, வேண்டா வெறுப்பாக சில துணிகளை எடுத்து முன்னாடி போட்டார். நீயெல்லாம் சுத்த வேஸ்ட் என்று சொல்லாமல் சொல்கிறாரோ!!!


******************************
வேறு கல்யாணம்!
இந்த முறை விடுமுறையில் போன போது என் உறவினர்கள் சிலரை பார்க்க போயிருந்தேன். நாங்கள் போகும் போது ஒவ்வொரு முறையும் பார்க்க வருவார்கள். இந்த முறையாவது நாங்கள் போயே ஆக வேண்டும் என்று நினைத்துப் போனோம். இந்தியாவில் இருந்த போது பாம்புகள் நிறைய வலம் வந்தன. பாம்புகள் பற்றிய பேச்சு வந்தது.
நாங்கள் இருந்த வீட்டுப் பக்கம் கொஞ்சம் அல்ல நிறையவே திரியும் பாம்புகள். அதுவும் நாக பாம்புகள் அதிகம். வேப்ப மர நிழலினை அதிகம் விரும்பும் போல தெரிந்தன.
ஒரு முறை ஒரு பாம்பு எங்கள் வீட்டில் குடியிருக்கவும் ஆரம்பித்து விட்டது. குட்டி போடவோ அல்லது வேறு என்ன அவசரமோ தெரியவில்லை சுவரில் இருந்த பொந்தில் பதுங்கி இருந்தது.
அக்கம் பக்கம் போய் டெரர் குடுத்து விட்டு மீண்டும் எங்கள் வீட்டுக்கு வந்து விடும். வாண்டுகள் அதிகம் நடமாடும் இடத்தில் பெற்றோர்கள் கவலையுடனே இருந்தார்கள். விரட்டிப் பார்த்தும் பயனில்லை.
கடுப்பான எங்கள் அயலார் எல்லோரும் ஒன்று கூடி பாம்பினை நையப்புடைத்து கொன்று விட்டார்கள். காலியாக இருந்த இடத்தில் அதை புதைத்தார்கள். எனக்கு கனவில், நினைவில் எல்லா நேரமும் பாம்பு தான். நீயா படத்தில் வரும் பாம்பு போல பழி வாங்கப் போகிறது என்று நினைச்சு உதறல் தான்.

சில நாட்கள் கழித்து மீண்டும் ஒரு நாக பாம்பு. ஆனால், அது எங்கள் வீட்டிற்குள் வராமல் வெளியே சுற்றித் திரிந்தது. முன்பு பாம்பினை அடித்து புதைத்த இடத்தில் அடிக்கடி காணப்பட்டதாக அயலார்கள் கூறினார்கள்.

நாக பாம்புகள் ஜோடியாகவே இருக்கும் என்று சொல்வார்கள். அதன் துணையைப் புதைத்த இடத்தில் இதனைக் கண்டதும் பயந்து, இந்தப் பாம்பினையும் அடித்துக் கொன்று விட்டார்களாம்.
அடப்பாவமே! பிறகு என்ன நடந்தது? அதனை எங்கே புதைத்தார்கள் என்று நான் கேள்வி எழுப்பினேன்.
அதன் துணைக்கு பக்கத்திலேயே புதைத்து விட்டதாக அயலார்கள் சொன்னார்களாம்.
( சே! அந்தப் பாம்பு வேறு யாரையாவது கல்யாணம் பண்ணி இருந்தா இப்படி அநியாயமா செத்திருக்காதே என்று புலம்பியபடியே வீடு வந்து சேர்ந்தேன். )
******************************